திங்கள், அக்டோபர் 17, 2005

Tsunami Relief & Anbumani

பா. ஏகலைவன்:: உலக நாடுகள் பலவும் மூலம் வந்த பணம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் , இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் சென்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய அந்தத் தொகை, கடந்த பதினொரு மாதங்களாக முடக்கப்பட்டே கிடக்கிறது.

அதற்குக் காரணம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மனாக இருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என்று குற்றம் சுமத்துகிறார் ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சுபாஷ் சந்திரன். இப்போது நீதிமன்றக் கதவையும் தட்டத் தயாராகி வரும் அவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

"சுனாமிப் பேரழிவு ஏற்பட்ட பிறகு, நான் விசாகப்பட்டினம் மச்சினிபட்டினம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றேன். அந்தப் பகுதிகளில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த ஏராளமானோரைச் சந்தித்தேன். அப்போதுதான் நாகலட்சுமி என்ற முப்பத்தைந்து வயதுப் பெண்மணியைப் பார்த்தேன். புருஷனோடு இரண்டு மகன்களையும் சுனாமிக்கு பறி கொடுத்துவிட்டு அனாதையாக நின்றவருக்கு, ஆந்திர அரசு போதிய நிதியுதவி செய்யாததைச் சொன்னார்.

பல நாட்களுக்குப் பிறகு அதே நாகலட்சுமியை ஐதராபாத் ரயில்வே நிலையத்தில் ஒரு பிச்சைக்காரியாகப் பார்த்தேன். 'சொந்த ஊரில் யாரும் கண்டுகொள்ளாததால், இங்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டே அதிகாரிகளைப் பார்த்து வருகிறேன் . இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் தாங்க முடியும். அதற்குமேல் வாழ முடியாது . தற்கொலை செய்து கொள்வதொன்றுதான் வழி' என்று கூறி அழுதார். அந்தச் சமயத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, டெல்லி சென்றுவிட்டேன்.

திரும்ப வந்து நாகலட்சுமியைத் தேடியபோது, அவரைப் பிணவறையில்தான் பார்த்தேன். சொன்னபடியே தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இந்த அவலத்தைத் தாங்க முடியாமல் ஐதராபாத்திலிருந்த பேரழிவு நிவாரண உதவி ஆணையரைச் சந்தித்தேன்.

அப்போது அவர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து போதிய நிவாரண உதவித் தொகை வந்து சேரவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் . அதன்பிறகு டெல்லியிலுள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வந்த நிதி பற்றி ஆராய்ந்தேன்.

  • செஞ்சிலுவைச் சங்க ஃபெடரேஷனிலிருந்து முப்பத்து மூன்று கோடி ,
  • ஹாங்காங் செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஒன்றரைக் கோடி,
  • கனடா செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து ஐந்து கோடியே ஐம்பது லட்சம்,
  • ஸ்பானிஷ் நாட்டிலிருந்து பத்துக் கோடி ரூபாய். இது தவிர,
  • இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கலெக்ஷன் செய்தது ஏழு கோடி
    என்று மொத்தம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் வந்து சேர்ந்திருக்கிறது.


  • இந்தத் தொகை, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவிற்கு மட்டுமே. அதுவும் சுனாமி நிவாரணத்திற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். பொதுவாக, இப்படி வரும் நிதியை சுமார் முப்பது நாட்களுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.

    நமது இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எந்தவிதத்தில் நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற விவரத்தையும் நிதி உதவி அளிக்கும் நாடுகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ தெரிவித்துவிட வேண்டும். அப்படி ஏதும் செய்யாததோடு, இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் குளறுபடிதான் நடந்துள்ளது.

    அரசு இயந்திரங்கள் மூலம் செலவிடப்படும்போது தாமதம், மெத்தனம், முறைகேடு.... என்று நடக்க வாய்ப்பிருக்கும் என்றுதான் செஞ்சிலுவைச் சங்கத்தை நாடுகிறார்கள். அதன் பணி விரைவாக இருப்பதோடு நேர்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இப்போது மண் விழுந்துவிட்டது.

    ஆரம்பத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் செகரட்டரி ஜெனரலாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த விமலா ராமலிங்கம் என்பவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த இடத்தில் புதிய நபரை நியமித்திருக்க வேண்டும்.

    ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு மாறாக, மத்திய அரசு சுகாதாரத் துறையின் மெடிக்கல் அன்ட் ஹெல்த் சர்வீஸின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால் என்பவரையே. இந்திய செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பை, கூடுதலாகக் கவனிக்கச் செய்திருக்கிறார் அன்புமணி. இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்பது, டாக்டர் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் அவரே அதற்கு சேர்மனாக இருப்பதாலும் அப்படிச் செய்துவிட்டார்.

    இதில் நிறைய உள்நோக்கம் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். அகர்வால் என்னவிதமாகச் செயல்பட்டார் என்பதைப் பார்ப்போம்.

    நிவாரண நிதியாக வந்த ஐம்பத்தேழு கோடி ரூபாயை எடுத்து வங்கியில் போட்டார். அடுத்து இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் என்ற ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்திடம் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள்.

    அந்த கம்பெனியோ 'மீனவர்களுக்கான மோட்டார் படகு, வலை, கட்டுமரம் போன்றவற்றை எங்களால் வழங்க முடியாது. இதில் எங்களுக்கு அனுபவம் இல்லை' என்று எழுதி அனுப்பிவிட்டது.

    ஆனாலும் டாக்டர் அன்புமணியும், அகர்வாலும் சேர்ந்துகொண்டு, 'நீங்களேதான் செய்ய வேண்டும்' என, போர்டில் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். ஏன் அந்த வலியுறுத்தல்?

    விசாரித்தபோதுதான் 'இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உயர் பதவியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரை புரமோட் செய்வதற்காகவும் அவர் மூலம் செயல்படுத்தப்படும்போது , 'வசதியாக'ச் செய்ய முடியும் என்பதாலும் அப்படிச் செய்திருக்கிறார் ' என்ற தகவல் கிடைத்தது!'' என்றெல்லாம் விவரித்த சுபாஷ் சந்திரன், தொடர்ந்து பேசினார்...

    "நடந்த இந்தச் சம்பவம் இறந்துபோன பல்லாயிரம் பேருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல; அவமானமும் கூட. ஐயோவென்று அலறி உலகத்தில் எங்கோ இருக்கிற மனிதாபிமானிகள் கொடுக்கும் பணத்தை, இங்கே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தாமலேயே முடக்கி வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்? இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான மீனவ மற்றும் தலித் சமூகத்திற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார். இதற்கு முழு பொறுப்பும் அவரே. பதினொரு மாதங்களாக நிதியை முடக்கி வைத்த பொறுப்பும் அவருடையதே. ஏன்? எதற்காகத் தாமதித்தார் என்பதற்கு பகிரங்கமாக மக்களிடம் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதில் மற்றொரு வேதனை. இந்த நிதியை முடக்கி வைப்பதற்கு முழு முதல் காரணமாக இருந்து உதவியவர் மத்திய சுகாதாரத்துறையின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால்தான். அப்படிப்பட்ட வரை, வரும் ஒன்றாம்தேதி முதல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கே நிரந்தர செகரட்டரி ஜெனரலாக நியமிக்கப் போகிறாராம் அன்புமணி. இதற்கான கோப்பு இப்போது ஜனாதிபதியிடம் இருக்கிறது .

    ஜனாதிபதி அந்தக் கோப்பில் கையெழுத்துப் போடுவதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடுமே என்பதுதான் எனது பயம்.

    மற்றொன்றையும் கூறியாக வேண்டும். ஒருவேளை பணிச்சுமை காரணமாக இவ்வளவும் அவர்களுக்குத் தெரியாமல் தான் நடக்கிறதோ என்று நினைத்து உண்மை நிலையை விவரித்து அகர்வாலுக்கும் , அன்புமணிக்கும் கடிதம் மற்றும் புகார் அனுப்பினேன். இன்று வரை ஒரு பதிலும் இல்லை. தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

    அடுத்து, ஆந்திராவிலுள்ள (மாநில ) செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான அந்த மாநில ஆளுநர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் புகார் அனுப்பினேன். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான அவர், நிலைமையின் விபரீதத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசிடெண்ட்டாக இருக்கும் ஜனாதிபதிக்கும் இதுபற்றி புகார் அனுப்பினேன். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.சி. லகோத்திக்கும் எழுதினேன். மேலும் உலக செஞ்சிலுவைச் சங்கங்கள் கொடுத்த நிதியையெல்லாம் ஏதோவொரு உள்நோக்கம் காரணமாக முடக்கியே வைத்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவாவிலுள்ள உலக செஞ்சிலுவைச் சங்க தலைமையகத்திற்கும் புகார் அனுப்பினேன்.

    அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத் தலைவரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கும் தமிழக கிளைச் செயலாளரான செல்வி பார்க்கவி தேவேந்திராவிற்கும் கடிதம் எழுதினேன். தமிழக செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரிடமிருந்து அந்தவித நிதியுதவி ஏதும் வரவில்லை' என்று பதில் கடிதம் மட்டும் வந்தது.

    இப்படி எல்லா கதவுகளையும் தட்டிவிட்டேன். கடைசியாகத் தட்ட வேண்டிய கதவு ஒன்று உள்ளது. அது உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குப் போடுவதுதான்! தமிழக மக்களுக்கு தமிழக அமைச்சரே, செய்த துரோகத்தின் உள்நோக்கம் எல்லாம் அப்போது வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?'' என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார் அவர்.

    தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழக செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சென்று செயலாளர் பார்க்கவி தேவேந்திராவை சந்தித்து கேட்டோம்.

    "ஆமாம். சுபாஷ் சந்திரன் அனுப்பிய கடிதம் எங்களுக்கு வந்தது . நாங்கள் மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து பணம் வராததை தெரியப்படுத்தியிருந்தோம். மற்றபடி எதுவும் பேச விரும்பவில்லை'' என்றார்.


    தொடர்ந்து நாம் முன்னாள் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம்.

    மத்திய செஞ்சிலுவைச் சங்கம் நிதி கொடுக்கவில்லையே என்பதற்காக மாநில செஞ்சிலுவைச் சங்கம் கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது. இதன் வேலையே உதவி வாங்கி , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதான். இதுவரை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பத்துக்கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உதவியிருக்கிறது .

    இதில் மற்றொரு வேதனையையும் சுட்டிக்காட்ட வேண்டும். கோகோ கோலா நிறுவனம் ஒரு கோடி ரூபாயை மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுத்திருக்கிறது. அந்த நிதியை கன்னியாகுமரி குளச்சல் பகுதி நிவாரணப் பணிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லியே கொடுத்தார்கள். அந்தப் பணமும் தமிழகத்திற்கு வரவேயில்லை. ஏதோ நிர்வாகச் சிக்கல் என்கிறார்கள்'' என்ற குண்டையும் போகிற போக்கில் தூக்கிப் போடுகின்றனர்.

    இவற்றிற்கெல்லாம் பதில் வேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவரது உதவியாளர் முத்துக்குமார், "அமைச்சர் ஜதராபாத்தில் இருக்கின்றார். கேட்டுச் சொல்கிறேன் '' என்ற பதிலையே சொன்னார்.


    வெளியான இதழ்: குமுதம் ரிபோர்டர்

    2 கருத்துகள்:

    'வேலியே பயிரை மேய்ந்த கதை' இதுதானா?

    ஏழையாப் பொறக்கரதே பாவமா?

    சிகரெட் பிடிப்பதற்கு தடை கொண்டு வருவதற்கும், ஆயுர்வேதா/சித்தாவை மருத்துவப் படிப்புக்குள் நுழைப்பதற்கும் செலவிடும் நேரங்களை கொஞ்சமாவது குறைத்துக் கொண்டு சுனாமி நிவாரண நிதிக்கு செலவிடலாம்.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு