வியாழன், டிசம்பர் 04, 2003


Wednesday, August 13, 2003





அடாவடித்தனமா? 'எதையும் தாங்கும் இதயமா'? நோ நான்சென்ஸ் நிர்வாகமா?

டாக்டர் புரட்சி தலைவியின் அரசு குறித்த கேள்விகள் இருக்கட்டும். சென்னையின் ஹைட் பார்க்
இடித்ததை எதிர்த்தும்
ஆதரித்தும் பல கருத்துகள் எனக்கும் தோன்றியது. ஆற்ற வேண்டியது எவ்வளவோ இருக்க, எதிர்கட்சிகள் எதிர்ப்பதும்,
ஆளுங்கட்சி ஆதரிப்பதும், நாம் மண்டை காய்வதும் ஏனோ இதை எனக்கு
அலசப்பட வேண்டிய விஷயமாக்கவில்லை.

குமரி அனந்தன் இனி திலகர் கட்டம் என அழைக்க வேண்டும் என்று
அறைகூவ மாட்டார். தினகரனும் வேறு இடத்தைத் தேட வேண்டும்.
ஆனால், சி·பி சொல்வது போல் இன்னும்
தமிழக அரசு இணைய தளத்தில் சீரணி அரங்கம் குறிப்பிடப் படுகிறது.

'ரமணா'வில் விஜய்காந்த் பிணத்துக்கு வைத்தியம் பார்க்கவைப்பது போல்,
சீரணி அரங்கத்தை அரசிடம் ஹீரோ முன்பதிவு செய்வது மாதிரி காட்சியமைத்து,
நீதிமன்றத்தின் உதவியுடன் கட்டி தரவும் வைப்பது மாதிரி
சங்கரோ, ரஜினியோ படமெடுத்தால் மெய்மறந்து கைதட்டுவேன்.



Posted by Bala Subra on 04:04 PM







---------------------------------------------


Friday, August 01, 2003





கொஞ்சம் விளம்பரம்... கொஞ்சம் ஆவணப் படுத்தல்...

என்னுடைய முதல் குறுநாவல் தமிழோவியத்தில் வெளிவருகிறது. எப்படி இருக்கு என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

இதுவரை நான்கு பகுதிகள் வந்துள்ளது.


Posted by Bala Subra on 11:04 AM







---------------------------------------------


Thursday, July 31, 2003





சிலோன் தமிழ்

இலங்கையின் தமிழ் பிரசன்னாவுக்கு பிடிக்குமாம்.

எனக்கும் கூட ரொம்ப விருப்பம். மனதைக் கவரும் சொல்லாட்சி நிறைந்தது.

மதியின் இந்த கட்டுரையை படித்தால் நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள்.

மதி இன்னும் நிறைய இந்த மாதிரி நடையில் எழுத வேண்டும். தமிழ் வலைப்பூக்கள் மாதிரியே, இலங்கைத் தமிழ்
இணையத்தில் தென்படும் இடங்களையும் தொகுக்கலாம்.


Posted by Bala Subra on 03:27 PM







---------------------------------------------


Tuesday, July 29, 2003






இருவர் - ஒரு பார்வை

பாஸ்கரும் சதாவும் தலைப்பில் இருக்கும் இருவர்.

சதா: பண வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டே
எழுத்துலகில் கால் வைக்க முயற்சிப்பவன். அவனுடைய
வங்கி சகி ப்ரியா.

பத்திரிகையில் வேர் ஊன்றிய பாஸ்கர், சினிமாவுக்கு தாவ
முயற்சிக்கிறான். பாஸ்கருக்கு கணினித் தாரகை ப்ரீத்தி
என்றால், சிம்ரனின் ரசிகனாய் சதாவுக்கு அனு இருக்கிறாள்.

இவர்கள் சந்திக்கும் நபர்களின் மூலம் வாழ்க்கையின்
வெற்றி அபத்தங்கள், திரை உலக ரகசியங்கள், சமூக
அவலங்கள் விவாதிக்கப் படுகிறது. வணிக பத்திரிகைகள் எவ்வாறு
இயங்குகிறது, ஒரு வெற்றி இயக்குனரின் படத்தின் முடிவில்
ஆறு பாயிண்ட் சாய்வெழுத்தில் வரும் பெயர்களின் பிண்ணனி
என்ன, குறுகிய காலத்தில் ஒளி ஓவியராவது எப்படி போன்ற
செய்முறை விளக்கங்களை கதை மாந்தர்கள் மேலாண்மை
விளக்கங்கள் அடிப்படையில் அள்ளித் தெளிக்கிறார்கள்.

பல இடங்களில் சினிமா, பத்திரிகை உலகங்கள் தோல்
உரித்துக் காட்டப்படுவது, ஆச்சரியக்குறிகளும், 'நெசமாவா'வும்
சொல்ல வைக்கும்.

சீரியஸ் பிரச்சனைகளை தத்துவ மருந்தாய் ஆராய்ந்து
கொண்டிருந்தாலும், அனுவின் காதல் பகுதிகள் ஜனரஞ்சகமாய்
வந்து செல்கிறது. இன்னொரு தென்றல், 'பார்த்திபன் கனவு'
மாடர்ன் ஸ்னேஹாவாக ப்ரீத்தி வந்து போகும் பகுதிகள்.

வருடத்துக்கு ரெண்டு ஹிட் கொடுக்கும் இசை சைக்ளோன்
ஆகட்டும், படத்துக்குப் படம் உருகி நடித்து கதாபாத்திரமாகவே
மாறும் புது ஸ்டார் ஆகட்டும், நூறு வித்தியாச படங்கள் கொடுத்த
பிறகும் திருப்தி இல்லாமல் தொலைக்காட்சியிலும் புதுமுகங்களை
அறிமுகபடுத்தும் இயக்குனர் அரசர் ஆகட்டும், கதையின் ஒரு
சீனில் வந்து போகும் மீடியா செய்தி நாயகர்கள் நிஜத்தை நினைவு
படுத்துகிறார்கள்.

தலித் இயக்கங்களின் வளர்ச்சி குறித்து பாராட்டும் சதா, பிராமணீய
எதிர்ப்புக் கொள்கைகளையும், திராவிட கட்சிகளின் மூன்று
மாமாங்க லாவண்யங்களையும் தொடாமல் விட்டது தொக்கி
நிற்கிறது. ஆசிரியர் பல வரலாறு நிகழ்வுகளில் வாசகருக்கு சாம்பிள்
மட்டுமே காட்டிவிட்டு, சக்கையை கழற்றி விட்டு விட்டார்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் மூட் அமைக்க மைலாப்பூர் முதல் வேப்பேரி
வரையிலான சென்னை பேட்டைகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்.
தனியாக ஒரு பகுதியை படித்தால் கூட ஒரு சிறுகதை உணர்வு
கிடைப்பது, நாவலின் பலமா, பலவீனமா என்பதை அறியேன்.

நெடுங்கதைக்காக படிப்பவர்கள் இதை தவிர்ப்பது நலம்.
விகடன் டெலிசீரியலாக அறுபது காரெக்டர், முந்நூறு திருப்பம்
என்று எல்லாம் கொடுத்து குழப்பாமல் செல்லும் நடை. கடைசி
அத்தியாயத்தில் சடக்கென்று ப்ரேக் போட்டு, 'முற்றும்' பலகைதான்
மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒட்டாத சியரா லியோன.

சில மேல்தட்டு நபர்கள் வந்து சென்றாலும், வெங்கடேஷ் நடுத்தர
வர்க்கம் என்னும் சூழலை விட்டு இன்ச் கூட நகரவில்லை.
நான் பார்த்த, வளர்ந்த மிடில் க்ளாஸ் தெளிவாக விவரிக்கப் படுகிறது.
உளவியல் காரணங்களுடன் அலசப்படுகிறது. தீர்வுகள்
தீர்மானிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி டாகுமெண்ட்
செய்யப்படுகிறது.

உலகம் விரும்பும் படி வாழ்வதா அல்லது மனம் சொல்லும் படி
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா என்னும் இரு தலை
எண்ண வெளிப்பாடுகளே பாஸ்கர் சதாவின் இருவர்.

அசை போட வேண்டிய பகுதி: பிள்ளையார் சதுர்த்தி - அத். 20
சினிமா சான்ஸ் கிடைத்தால் படிக்க வேண்டிய பகுதி: அத். 23

ரசித்த பன்ச் வரிகள்:
1. மக்களுக்குத் தேவை ஜில்லென்ற கனவு. எதார்த்தமல்ல.

2. தேவைக்கேற்ப உப்புமா கிளறும் வேலையைத்தான் அவன்
செய்து கொண்டிருந்தான்.

3. "இதத்தான் நான் மிடில் கிளாஸ்னு சொல்றேன்...
தைரியமா எந்த முடிவும் எடுக்க முடியாம, இது தப்பா அது
ரைட்டான்னு மண்டைய ஒடச்சிக்கற பாரு..."

4. எதுவும் பக்கத்தில் இருந்தால் அதன் சிறப்பு புலப்படுவதில்லை.

5. அர்த்தங்கள் உற்பத்தி செய்யப்படுவன. அந்த அர்த்த நம்பிக்கைத்
தூண்களின் மேல் கட்டப்படும் கோபுரங்களே வாழ்க்கை. இந்த
அர்த்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கேட்கும் பழக்கம்
உண்டானதே பெருந்தவறோ?
*------------*------------*------------*------------*
இருவர்: ஆர். வெங்கடேஷ்.
மதி நிலையம் - 222 பக்கங்கள் - ரூ. 55/-

*------------*------------*------------*------------*


Posted by Bala Subra on 10:11 PM







---------------------------------------------


Monday, July 28, 2003





நானும் வலைப்பூக்களும்

ஒரு வழக்கமான திங்கள் காலை. பத்து மணிக்கு அலுவலகத்திற்குள்
நுழைந்தவுடன் பார்த்தால், தொலைபேசியின் குரல்மடலுக்கான விளக்கு
மின்னி மின்னி காட்சியளித்தது. செய்தி என்னவென்று போட்டு பார்த்தால்
என்னுடைய பாஸ்; அவசர வேலையன்றை அன்றிரவுக்குள் 'முடிக்க
முடியுமா' என்ற அன்பு கட்டளை. அவரை அழைத்து, அந்த வேலையின்
கஷ்டங்களை விளக்கி, வாரயிறுதி வரை வாய்தா வாங்கிக் கொண்டேன்.

ஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக இணையக் குழுக்கள் பக்கம் தலை
நீட்டினேன். என்னுடைய சனி, ஞாயிற்றின் நிகழ்வுகளை பதிவு செய்து
அனுப்பித்தேன். வேறு சிலரின் குறிப்புகளுக்கு இரண்டு வரி பதில் கொடுத்தேன்.
உள்பேசி குறுகிட்டது. மீண்டும் என்னுடைய மேலாளர்.

'ஒரு நிமிடம் இங்கு வர முடியுமா?'

சென்றவுடன் அவரும் என்னுடைய வலைப்பதிவில் குடி கொண்டிருந்தார்.

'இதனால்தான் அவசர வேலை முடிக்க முடியாது என்றாயா?'

என் வேலைக்கு 'டாட் காம்' வைக்கும் கேள்வியை முன் வைக்க,
அவற்றை 'மேட்ச் ·பிக்ஸிங்'கில் மாட்டின கபில் தேவ்வாய் சமாளித்தேன்.

Web Blog எனப்படும் வலைப்பூக்கள், ஒருவரின் தனிபட்ட வலை பக்கம்.
ஒரு சிலர் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்; சிலர் தங்களின்
படைப்புகளை வெளியிட்டுக் கொள்கிறார்கள். சிலர் தாங்கள் மேயும் இணைய
தளங்கள், கண்ணுற்ற படங்கள், கேட்ட செவிவழி வதந்திகள், படித்ததில் பிடித்த
வரிகள், பார்த்த நிகழ்ச்சிகள், எனத் தொகுத்தளிக்கிறார்கள். பலர் தங்களை
படைப்பாளியாகவும், பத்திரிகையாளனகவும், தேர்ந்த விமர்சகராவுமே எண்ணுகிறார்கள்.
அடுத்தவரின் டைரியை படிக்க விரும்பும் அனைவரும், நேசித்து நுழைகிறார்கள்.

நய்பால் போன்ற பலர் டைரி குறிப்புகளை வைத்து சிறுகதை எழுதியுள்ளார்கள்.
அமெரிக்காவில் 'ரியாலிடி டிவி'யின் மோகம் ஆட்கொண்ட இந்நேரத்தில்,
வலைப்பூக்கள் புகழ் பெறுவது எளிதானது. மற்றவரின் அந்தரங்கங்கள் அறிவது முதல்
குறிப்பிட்ட கருப்பொருட்களில் ஆழ்ந்த அறிவை சீக்கிரம் பெறுவது வரை பல
உபயோகங்கள் உடையது இந்த வலைப்பூ.

வலைப்பூ, தமிழ் இணையக் குழுக்களில் நிறைய காணப்படுகின்றன.
பூக்களாய் இல்லாமல் பல சமயம் அனுப்புபவர்களுக்குக் தோட்டாக்களாக
மாறிய அனுபவங்கள் என் நண்பர்களில் பலருக்கு உண்டு. எங்களுடைய
12டிகூத்தாடிஸ் மடலாடற்குழுவில் பள்ளி தோழி, தனது காதலனின்
குணாதிசயங்களை விவரித்ததை, எங்கள் பக்கங்களுக்குள் தடுக்கி விழுந்த,
fiancee படித்துவிட, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது.

இணைய உலகில் கிட்டதட்ட முப்பது லட்சம் வலைப்பூக்கள் உள்ளன. இவற்றுள்
தமிழ் வலைப்பூ ஒரு கை விரல்களை நீட்டுவதற்குள் அடங்கி விடும். ஆங்கில
எழுத்தாளர்கள் மிக்கி கௌஸ், ஆண்ட்ரூ சலைவன் போன்றோரின் வலைப்பூக்களுக்கு
இணையத்தில் பலத்த ஆதரவும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவ்வாறே தமிழ் இணையக்
குழுக்களில் எழுதும் இரா. முருகன், மாலன், போன்றோருக்கும், அவர்கள் எங்கு
வலைப்பூக்கிறார்கள் என்று அறிந்தவர்களிடத்தில் வரவேற்பு உள்ளது. ஆனால்
ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் சில ஊடகங்களில் எழுதினாலும், முழுமையாக
பயன்படுத்துவதில்லை.

மற்றவர்களின் கவனத்தைக் கவர்வதாற்காகவே பலர் தங்கள் அபிப்ராயங்களையும்,
சிலர் தங்கள் படுக்கையறை விவரங்களையும் அனைவரும் படிக்க அனுப்புகிறார்கள்.
கலை தாகத்துக்காக படம் எடுக்கும் கமலுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள்
இல்லை.

கடந்த வருடத்தில், ஹார்வார்ட், எம்.ஐ.டி போன்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
அதிகாரபூர்வமாகவே வலைப்பூக்க விட்டன. அதிவிரைவில் தினபூமி படிப்பதை
நிறுத்திவிட்டு, வலைப்பூவில் நண்பர்கள் சொல்லும் தகவல்களும், பாதிக்கபட்டவர்களின்
நேரடி அனுபவங்களும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

தனி மனிதனின் குரல், பாரெங்கும் உரத்து ஒலிக்கக் கூடிய வாய்ப்பை பறை
சாற்றுகின்றன வலைப்பூக்கள். கேட்க வைப்போமா?

-பாலாஜி
பாஸ்டன்

வலைப்பூக்கள் பெயர் ஆக்கம் நன்றி: திரு. மணி மு. மணிவண்ணன்


Posted by Bala Subra on 03:56 PM






0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு