வியாழன், ஜூன் 02, 2005

அரசியல் அண்ணாசாமி

appusami.com - சாவி ::

காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு மாலையில் கூடும் அந்தப் பார்க் பெஞ்சு மாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால்தான் அங்கே கூடும் 'பென்ஷன்'களுக்கெல்லாம் தூக்கம் வரும்.

''அண்ணாசாமி ஸார், வாங்க வாங்க. நீங்க இல்லாமல் கான்பரன்ஸே 'டல்' அடிக்கிறது. ஏன் லேட்?''

''இதென்ன கேள்வி? ஆபீஸ் விட்டதும் சர்க்கார் பஸ்ஸைன்னா பிடிச்சு வந்து சேரணும்? லேட்டாகாமல் என்ன செய்யும்?'' என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே வந்து சேருவார் 'அரசியல்' அண்ணாசாமி.

அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.

அண்ணாசாமி வரும்போதே சற்றுக் கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்துவைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதிபலிக்கும். பெஞ்சு மீது அமர்ந்து ஒரு சிட்டிகையைத் தட்டி இழுத்துவிட வேண்டியதுதான். நகரசபை நிர்வாகத்திலிருந்து ஐ.நா.சபை நடவடிக்கை வரை எல்லா விஷயங்களையும் மட்டைக்கு இரண்டு கீற்றாக வெளுத்து வாங்கிவிட்டுச் செல்வார்.

''திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் 'கியூ'விலே நிக்கறாங்களாம். பக்கத்திலே காவேரி ஓடறது - என்ன பிரயோசனம்?'' என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான்; அண்ணாசாமிக்கு எங்கிருந்தோ ஓர் ஆவேசம் பிறந்துவிடும்.

''இது என்ன அக்கிரமம், ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப்போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ'வாம்! இந்த அழகிலே காவேரி வாட்டரை மெட்ராஸ¤க்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்!'' என்பார் அண்ணாசாமி.

''கிருஷ்ணா நதியைக் கொண்டுவரப் போறதா ஒரு 'ஸ்கீம்' இருந்துதே, அது என்ன ஆச்சு?'' என்று மெதுவாகக் காவேரியிலிருந்து கிருஷ்ணாவுக்குத் தாண்டுவார் சந்தனப் பொட்டுக்காரர்.

''ஸ்கீமுக்கு என்னங்காணும்? ஆயிரம் ஸ்கீம் போடலாம்! சி.பி.யும், சீனிவாசய்யங்காரும் போடாத ஸ்கீமா இவன் பெரிசா போட்டுடப் போறான்? பணத்துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம்! கன்னா பின்னான்னு கடனை வாங்கி, தண்ணி இல்லாத இடத்திலெல்லாம் டாமைக் கட்டிண்டிருக்கான். கேட்டா, 'இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்'புங்கறான். ஐக்கும், குருஷேவும் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன்! இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும். பார்த்துண்டே இரும். நான் இன்னிக்குச் சொல்றேன். குருஷ்சேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா, அசகாய சூரன்!''

''அதிருக்கட்டும்; எவரெஸ்ட் எவருக்கு சொந்தம்னு தீர்மானமாயிடுத்தா?''


''பரமசிவனுக்குத்தான்; போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம் விருந்து வெச்சுண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிபன்ஸ் வேறே! டிபன்ஸ் மினிஸ்டர் வேறே!''

''ஆடிட் ரிப்போர்ட் சந்தி சிரிக்கிறதே, பார்த்தேளா?''

''வெட்கக்கேடு: வெளியே சொல்லாதேயும்! அட்மினிஸ்ரேஷன்லெ ஒரே ஊழல். இதுக்குள்ள நாலு பைனான்ஸ் மினிஸ்டர் மாறியாச்சு. நேரு ஒண்டி ஆள். ஸின்ஸியர் மேன்தான். அவர் என்ன பண்ணுவார், பாவம்? சுத்தி இருக்கறவா சரியாயில்லையே! ஸெண்டர்லே ஒரு பாலிஸின்னா, ஸ்டேட்லே ஒரு பாலிஸி. ஒரு ஸ்டேட்லே ப்ரொகிபிஷன்ங்கறான். இன்னொரு ஸ்டேட்லே குடிக்கலாங்கறான். நம் ஊர் போலீஸ் குடிக்கிறவனையெல்லாம் விட்டுவிட்டு வெளியூர்லேருந்து வர பிரெடிரிக் மார்ச்சை அரெஸ்ட் பண்ணிண்டு இருக்கு. பிரெடிரிக் மார்ச் குடிச்சா என்னா? குடிக்காவிட்டா என்னா? அவனுக்காகவா புரொகிபிஷன் கொண்டு வந்தோம்? பர்ப்பஸையே மறந்துடறோம். இதைப்பத்தி நேருவே நன்னா டோஸ் கொடுத்திருக்கார் பார்த்தேளா? 'காமன்ஸென்ஸ்' இல்லைன்னு!''

''அது சரி; அசெம்பளிலே லாண்ட் ஸீலிங் அஞ்சு நாளா அமர்க்களப்படறதே!''

''நான் சொல்றேன், இதெல்லாம் டெமாக்ரஸியிலே ஒண்ணுமே நடக்காது, ஸார். இந்த கவர்மெண்டிலே எதையாவது உருப்படியாச் செய்ய முடியறதா பார்த்தேளா? எலெக்ஷனை எவன் நடத்தறான்; பணக்காரன்தானே நடத்தறான்!''

''ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சிலேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியலே. பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கறான். என்ன கவர்மெண்ட் வேண்டியிருக்கு? என்ன லாண்ட் ஸீலிங் வேண்டியிருக்கு? இதையெல்லாம் பார்த்தா கம்யூனிஸ்ட் கவர்ன்மெண்டே தேவலைன்னு தோண்றது.

''அதான் வந்துட்டிருக்கானே, சைனாக்காரன். மெதுவா பார்டர்கிட்டே வந்துட்டான். சூ என் லாய் வரான் பார்த்தயளா? வர சமயத்தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம் பஞ்சசீலம்னு இருக்கிறதையெல்லாம் கோட்டைவிடப் போறோம்!''

''என்ன அண்ணாசாமி ஸார், ஏன், இப்படி எதுக்கெடுத்தாலும் கவர்ன்மெண்டை அட்டாக் பண்றேள்? சர்க்கார் என்னய்யா பண்ணும்?''

''என்ன பண்ணுமா! தட்டிக் கேக்கறதுக்கு ஓர் ஆள் இருந்தா இப்படி நடக்குமா? சோஷலிஸ்டிக் பாட்டனாம் பேரனாம்? என்னய்யா சோஷலிஸம் வேண்டியிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்.

சோஷலிசம் பண்றாளாம்'' என்பார் அண்ணாசாமி.

''அதான் பெரியவர் ஆரம்பிச்சிருக்காரய்யா புது பார்ட்டி!''

''ஆமாம்; புது பார்ட்டி ஆரம்பிச்சு ஓயாமல் கவர்ன்மெண்டை கிரிடிஸைஸ் பண்ணிட்டா ஆயிடுத்தா? அப்கோர்ஸ், பெரியவர் இண்டலிஜெண்ட்தான். ஸ்ட்ராங்காதான் பேசறார். யார் இல்லேங்கறா? நேருவும் ரெஸ்பெக்ட் வெச்சுதான் மீட் பண்ணியிருக்கார். பாலிஸி கிளியரா இல்லியே!''

''ஸார், இந்த ஸெளத் ஆப்பிரிக்கன் ப்ரீமியர்!''

''அட, சரித்தான், ஸெளத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயுமாச்சு. அடேடே! மார்க்கெட்டுலே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக்காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்.''

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு