வெள்ளி, ஜூன் 11, 2004

கேள்வியும் நானே... பதிலும் நானே!

1. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ப்ளீஸ்.

அது சொன்னால் எனக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். தனியாகக் கேளுங்க சொல்றேன். கொசுறாக நெட்டில் படித்த ஒரு ஜோக்கில் காரெக்டர்களை மாற்றிப் பார்க்கலாம்.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜெயேந்திரர், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி மூவரும் குஜால்சாகத் தண்ணியடித்துவிட்டு எக்குத்தப்பாக சிறையில் விழிக்கிறார்கள். தாங்கள் எலெக்ட்ரிக் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. ஏன், எதற்கு, எப்படி ஒன்றும் புரியலை.

"நீங்கள் கடைசியாக என்ன கேட்க வேண்டுமோ சொல்லுங்கள்" என்னும் உத்தரவுடன் ஸ்விட்சில் கை வைத்திருக்கிறான் ஒருவன்.

முதலில் ஜெயேந்திரர் "நான் தெய்வங்களை வணங்கியதும், ஸ்லோகங்கள் சொன்னதும் உண்மையானால், நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது." என்கிறார். என்ன ஆச்சிரியம்... ஸ்விட்ச் திருகினதும் அவருக்கு ஒண்ணும் ஆகவில்லை. அவரின் கடவுள் நம்பிக்கை மெச்சப்பட்டு விடுவிக்கப் படுகிறார்.

அடுத்து ஜெயலலிதா "நான் மதிக்கும் சட்டங்களும், மக்களுக்கு செய்த தொண்டுகளும், உண்மையானால் தர்மதேவதை காப்பாள்.". இவரையும் எலெக்ட்ரிக் சேர் எதுவும் செய்யவில்லை. தர்மம் தலை காக்கிறது.

கடைசியாக சுவாமி, "அந்த ரெண்டு வொயரையும் சேர்த்து கனெக்சன் கொடுங்கோ... அதுவரைக்கும் யாரும் சாக மாட்டா" என்றார்.



2. சாயாசிங், சதா, கோபிகா, ப்ரியாமணி, அபர்ணா - யார் அடுத்த சிம்ரன்?

சதா - ஓவர் ஆக்டிங் ஜோதிகா.
ப்ரியாமணி - 'பாலு' மணம் மாறா லைலா
அபர்ணா - அடுத்த வீட்டுப் பெண் ரோஜா
கோபிகா - மலிவு விலை ஸ்னேஹா
சாயாசிங் - இடுப்பு ஒடிக்கும் சிம்ரன்


3. பின்னூட்டம் கொடுக்கும் உனக்கே, பாரா மாதிரி ஒன்பது கட்டளைகள் கொடுத்துக் கொள்ள முடியுமா?

அ. உங்களுக்குக் காமெண்ட் கொடுத்தார் என்பதற்காக, அவருடைய பதிவில் சென்று எதிர் மரியாதை புரிய வேண்டாம்.

ஆ. RBF, ஈஸ்வரி, ரமேஷ் கார் கொடுத்த வட்டிப் பணம் போல் மறுமொழி கொடுக்காமல், IOB, SBI, BOB போன்ற சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் ஏறும் சொல்ப தொகையாக கொடுத்தாலும், நீடித்த காலத்திற்கு, தொடர்ச்சியாக கொடுக்கவும்.

இ. காலையில் காபியுடன் ஆபீஸ் செல்லும் அவசரத்தில் பேப்பர் புரட்டுவது போல் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு மறுமொழிய வேண்டாம்.

ஈ. இதுவரை வந்திருக்கும் மறுமொழிகளை மட்டும் பார்த்துவிட்டு நீங்களும் அட்டெண்டன்ஸ் கொடுக்கக் கூடாது.

உ. நீங்கள் ஒரு முறை சொன்னால் பத்து மில்லியன் முறை சொன்ன மாதிரி! அதற்காக ஒரே விஷயத்தை பத்து தடவை பேஸ்ட் செய்து நூறு மில்லியன் முறை சொல்லாதீர்கள்.

ஊ. உங்கள் கிண்டல், நகைச்சுவை, வருத்தம், அங்கதம் எல்லாம் எழுத்தில் வரவேண்டும், முறையே :P, :), :(, ;) ஸ்மைலி மூலம் வந்தால் எங்கோ மிஸ்டேக்.

எ. ஸ்ரீராமஜெயம், 786, PTO மாதிரி அல்ல ஸ்மைலி பொம்மைகள். கொஞ்சம் கரிசனம் கொடுத்து உபயோகியுங்கள்.

ஏ. வீட்டு வாசலில் நின்று நலம் விசாரிப்பது போன்றவை பின்னூட்டங்கள். ஷேமலாபங்கள், குசலம் விசாரிப்பன போன்றவற்றிற்குத் தனிமடல் போடுங்கள்.

ஐ. 'தமிங்கிலத்துக்கு மன்னிக்க', 'விவரமாக பிறகு என் பதிவில் எழுதுவேன்', 'நான் எழுத நினைத்தேன்...', போன்றவை விஜய்காந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சியில் யார் ஜெயிப்பார் என்பது போல் ஊரறிந்த விஷயம். மீண்டும் மீண்டும் ரசித்துப் படிக்க முடியாது. தவிர்க்கவும்.


4. ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்கிறார்களே... ஏன்?

அது ஒரு பெரிய கதைங்க. குலோத்துங்க சோழ ராஜாவுக்குப் பெண் எடுக்க அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரிடம் தூது போகிறார். அங்கே தன்னுடைய அக்மார்க் குசும்பைக் கொண்டு வஞ்சப் புகழ்ச்சியில் பாண்டியனைத் தாளித்து விடுகிறார். பாண்டிய அரசவைப் புலவர் புகழேந்தியும் சளைக்காமல் எசப்பாட்டில் ஒட்டக்கூத்தரை கவுத்துடறார். 'சமயம் வரும்போது வெச்சுக்கலாம்' என்று சிரித்துப் பேசி நிச்சயதார்த்தம் நடந்தேறுகிறது. சோழனுடன் திருமணம் முடிந்தவுடன் பெண்ணுடன் அனுப்பும் சீராகப் புகழேந்தியைக் கேட்க சொல்கிறார். 'ஆகா... அங்கு பெண்ணை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று அறிவதற்கு சரியான ஆள்' என்று சந்தோஷத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார் பாண்டிய ராஜன். அந்தப்புரமே கதி என்று புது மாப்பிள்ளை சோழர் இருக்கிறார். சீதனமாக வந்த புகழேந்தியை சிறையில் தள்ளி குதூகலிக்கிறார் ஒட்டக்கூத்தர். மோகம் முப்பது நாள் கழிந்தவுடன், ராஜாவுக்கும் ராணிக்கும் நடுவில் ஊடல். ராஜாவை அந்தப்புரத்தை விட்டு வெளியேற்றி தாழ்ப்பாள் போட்டு விடுகிறார். சமயம் பார்த்துத் தோழிகளும் ஒட்டக்கூத்தரின் பழிவாங்கலை நினைவுறுத்துகிறார்கள். பாண்டிய அரசி 'ப்ரேக்கிங் பாயிண்ட்டில்' இருக்கும்போது 'அம்மா... குழந்தே' என்று வாயில் கதவை தட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கோபத்தின் உச்சியில், மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் எல்லாம் சேர்த்து 'இரட்டைத் தாழ்ப்பாள்' போட்டு விட்டதாக வெண்பா-டுகிறாள்.

(புகழேந்தியும் ஒட்டக்கூத்தரும் பாடிய வஞ்சப் புகழ்ச்சி பாடல்கள், சிறையில் இருந்து விடுதலையாகி பாண்டிய குமாரியை சாந்தப்படுத்திய புகழேந்தியின் பாடல் எல்லாம் மரபிலக்கியத்தில் கேளுங்க... சொல்லுவாங்க...!)


5. குறைந்த செலவில் வித்தியாசமான குறும்படம் எடுப்பது எப்படி?

வீட்டில் இருக்கும் உங்கள் மூன்று வயது செல்ல மகனை கூப்பிடுங்கள். ஆன் செய்யப்பட்ட ஹாண்டிகேமை கொடுத்து, ஒரு மணி நேரமாவது - ஊர் சுற்றி, விளையாட சொல்லுங்கள். படத்தொகுப்பை உங்கள் மனைவியிடம் ஒப்படையுங்கள். பிண்ணனிக்கு சிவமணியின் ஃப்யூஷன், எல். சுப்ரமணியத்தின் இசை இரண்டையும் போதிய அளவில் கலக்குங்கள். 'அனுதினம்', 'தரையில் ஒரு தாமிரம்' என்பது போல் இலக்கணமாய் பேர் சூட்டுங்கள். அருமையான ஆர்ட் ஃபிலிம் ரெடி.


6. Virus, Adware, Spyware, Hackware, இவர்களை நிறுத்துவதற்கு நாதியே கிடையாதா?

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல் இவர்களாய் நிறுத்தாவிட்டால், எதுவும் செய்யமுடியாது. இன்னும் சிலர் நாங்கள் ராபின் ஹுட் என்று வேறு பம்மாத்துகிறார்கள். 'இராமநாராயணன் படத்தைப் போட்டால் டிவியை ஆஃப் பண்ணு' என்பது போல் நாம் சிலவற்றை அறிவுறுத்தலாம். இப்போதைய நிலையில், கமல் ஸ்னேஹாவிடம் இதழ் பதிக்க ஆரம்பித்த பின்புதான் விழித்துக் கொண்டு, சேனல் மாற்ற ரிமோட்டைத் தேடுகிறோம். 'உங்கள் கணினியில் ட்ரோஜன் புகுந்துள்ளார்' என்றபின் சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினியை துவக்குகிறோம். இதற்கு பதிலாக தீநரி உலாவி, நோட்பேட், ஈ-கலப்பை தவிர வேறு எதையும் என் கணினியில் இயக்காதே என்று நாம் சொல்வதை கேட்டால் போதும். உத்தரவின்றி எதுவும் உள்ளே நுழையாது. இது போன்ற முயற்சியை பலர் ஆரம்பித்துள்ளார்கள். சாம்பிளுக்கு : Antivirus Software Turned Upside Down - Windows Developer Network


7. ஏன் இந்த விபரீத கேள்வி-பதில் பகுதி?

இது என்னுடைய நானூறாவது பதிவு. இது மட்டுமாவது சுத்தமான நெய்யில் வார்த்தது போல் சொந்தமாக எழுதியதாக இருக்கட்டுமே என்னும் ஆர்வக் கோளாறுதான்.

4 கருத்துகள்:

Isn't there a smiley for applause, or something? Oh wait...(trying out HTML)Nah, it didn't.

Ah well. You *know* that I'm clapping, of course.:-)

:) நன்றி இளவரசி :D

பாபா வாவ் 400 பதிவுகளை ஆரவாரம் இல்லாமல் போட்டு இருக்கிங்க. வாழ்த்துக்கள். கலக்குறீங்க தலைவா. எந்த ஒரு விளம்பரமும் இல்ல எப்படிங்க உங்களால மட்டும் இப்படி தன்னடக்கமா இருக்க முடியுது.
கேள்வி பதில் நல்லா வந்து இருக்கு பாபா. கடைசிவரைக்கும் யாரும் அந்த மெக்ஸிகன் சலவைகாரி ஜோக்கை மக்களுக்கு சொல்லமாட்டிங்களா? அப்படி ஏதாவது ஒண்ணு இருக்கா இல்ல தலைப்பு மட்டுமா? :)) Once again Hats off Baba.

am searching mexican salavaikaari joke for a long..
if u know pls mail me...
ramduraikumar@gmail.com

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு