செவ்வாய், பிப்ரவரி 03, 2004

ஆட்டோகிராஃப் - திரைப்பாடல் விமர்சனம்

இசை: பரத்வாஜ்
நட்சத்திரங்கள்: சேரன், கோபிகா, ஸ்னேஹா
இயக்கம் & தயாரிப்பு: சேரன்


1. ஞாபகம் வருதே - பரத்வாஜ் - 2.5 / 4

'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்களை'ப் பிடித்தவர்களுக்கு, இந்தப் பாடலும் பிடிக்கும். பட்டியலிடுவது கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், வரிகளை காயப்படுத்தாத இசை.

பிடித்த வரிகள்:
'முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்'

புளித்த வரிகள்:
'முதல் முதல் குடித்த மலபார் பீடி
முதல் முதலாக விரும்பிய இதயம்'


2. ஜகதோ தாரண - ஸ்ரீவித்யா, ரேஷ்மி - 3 / 4
என்ன ராகம் என்று தெரியாது. ஆனால் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. ஒரு மெல்லிய மாலையில் காபியை வைத்துக் கொண்டு பனி விழுவதை வேடிக்கை பார்க்கும்போது கேட்பதற்கு ஏற்ற பாடல். சரளி வரிசை வந்தாலும் போரடிக்காமல் உள்ளது.


3. கிழக்கே பார்த்தேன் - யுகேந்திரா, ஃபோனி - 1.5 / 4

எதற்காக பாடல் நடுவில் 'ராப்' நுழைந்தது என்று தெரியவில்லை. தோழியின் பெருமைகளை அடுக்கும் சாதாரணமான இசை கொண்ட பாடல். கேட்காமலும் விடமுடியாது; கேட்டாலும் மனதில் இடம் கேட்டு ஆக்கிரமிக்காது

பிடித்த வரிகள்:
'என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்
தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவருக்கும்?'


4. மனமே நலமா - பரத்வாஜ் - 2 / 4 (பிட் பாடல்)

கொஞ்சம் பீட்... கொஞ்சம் கொஞ்சல்...


5. மனசுக்குள்ளே தாகம் - ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி - 2 / 4

மெலடிக்கு மலையாளம் ரி-மிக்ஸ் கொடுத்த வார்த்தைகள். ஆங்காங்கே எட்டிபார்க்கும் ஸேக்ஸும், மலையாள வாத்தியங்களும் மெருகேற்றுகிறன. ஹரிஷும் ஏமாற்றவில்லை.

பிடித்த வரிகள்:
அனேகமாக மொத்தப் பாடலையும் சொல்ல வேண்டும்.

புளித்த வரிகள்:
'தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சோ...'


6. நினைவுகள் நெஞ்சில் - உன்னி மேனன் - 1.5 / 4

காதல் பிரிவில் வரும் துக்கப் பாடல். சோகரசத்தை விட தாலாட்டு போல் தெரிகிறது. இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இன்னும் கொஞ்சம் மனதைப் பிழிந்திருக்க வேண்டிய பாடல்.

'என்னை எனக்கேப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை'


7. ஒவ்வொரு பூக்களுமே - சித்ரா - 2.5 / 4

நெடுந்தொடர் முன் வரும் பாடல் போல் உள்ளது. (ஆனால், நன்றாகவே உள்ளது). சேரனுக்கு ஸ்னேஹா கொடுக்கும் அட்வைஸ் படலமாக இருக்கலாம். அதை நினைத்தால் பாடல் இன்னும் மெருகேறுகிறது.

பிடித்த வரிகள்:
'மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்'

புளித்த வரிகள்:
சில cliches இருந்தாலும் இனிமையான பாடல்.


8. மீசை வைச்ச பேராண்டி - கோவை கமலா, கார்த்திக் க்ரூப் - 3 / 4

'பார்த்திபன் கனவில்' கூட குத்தல் பாட்டு வைத்திருக்க வேண்டும். இங்கு பெணகளினால் ஏற்படும் சோகத்தை கூத்தாக சொல்லும் பாடல். ஜாலியாக ஆடிவிட்டு, தெருத்துவத்தை சிலாகிக்கவும் உள்ள 'பெப்ஸி' உங்கள் சாய்ஸ் பாடல். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டால் ஒலிப்பேழையோடு சத்தமாகப் பாடி 'டைம்பாஸ்' செய்யுங்கள்.

காதைக் கிழிக்காத இசையையும், திரைப்பாடல்களில் வைரவரிகளைத் தேடுபவர்களுக்கும் உருப்படியான சமாசாரம் நிறைய இருக்கு. அவசியம் கேளுங்க

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு