செவ்வாய், செப்டம்பர் 14, 2004

செல்லாத வோட்டு



இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.

அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), கவர்னர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் -- ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.

அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க 'எலெக்டோரல் காலேஜ்' என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 'மாகாண வோட்டுகள்' ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.

எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற -- வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலி·போர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.

ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. போன 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை 'ஆல் கோர்' வாங்கி இருந்தும், தேவையான 'எலெக்டோரல் வோட்டுகளை'ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார். இதே மாதிரி, இம்முறை, கெர்ரி செய்து பழிக்குப் பழி தீர்க்கக் கூடும் என்று வல்லுனர்கள் சொல்லி வருகின்றனர்.

(அதாவது 90 உலகக் கோப்பையில் மாரடோனாவின் அர்ஜெண்டைனா பெனால்டி கிக் போட்டே வென்று வந்தது. கால்-இறுதியில் யூகோஸ்லேவியாவை (இவங்க எத்தனை நாடாகப் பிரிந்தார்கள் என்று இன்னொரு அடைப்புக் குறிப் பொடலாம் ;-) 3-2 என்றும், அரையிறுதியில் இத்தாலியை 4-3 என்றும் வென்று கால்பந்து போட்டியின் இறுதியை அடைந்தார்கள். கடைசியில் 'வி.வி.வி.அறுப்பான்' கதையாக, மேற்கு ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கிக் கை அம்பையர்கள் போட்டுக் கொடுக்க, அவர்கள் கால்பந்து கோப்பையை வென்றார்கள்.)

'எலெக்டோரல் வோட்டுக'ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சியின் ஜான் கெர்ரிக்கும், குடியரசுக் கட்சியின் புஷ்ஷ¤க்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!

ஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் 'எலெக்டோரல் காலேஜ்' முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா?

இவ்வாறு 'மாவட்ட வோட்டுகள்', '144-வது வட்ட ஓட்டுகள்' என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.

மேலும் இதன் மூலம் 'பார்டர்லைனில்' இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் 35/34 மாநிலங்கல் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.

இந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் சென்ஸஸ் அடிப்படையில், 'எலெக்டோரல் வாக்குகள்' மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.

-பாஸ்டன் பாலாஜி



படங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்

ரெண்டு வரி நோட்:
அமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.

4 கருத்துகள்:

அமெரிக்காவில் நடப்பது போன்ற gerrymandering இந்தியாவில் எளிதாக நடக்க முடியாது. ஆனால் ஜனத்தொகையைக் காரணமாக்கி அதற்கு ஏற்றார்போல அதிகமான எண்ணிக்கையுள்ள பாராளுமன்றத் தொகுதிகள் ஒரு மாநிலத்துக்குக் கிடைக்கும். முழு விவரங்கள் கையில் இல்லை... அதாவது எவ்வளவு வருடங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற கணக்கெடுப்பு + புதுத் தொகுதிகள் என்று.

வேறொரு விஷயம் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெற இருப்பதாக அறிகிறேன். அதாவது 'reserved' தொகுதிகள் - ஷெட்யூல்ட் வகுப்பினர் மட்டும்தான் போட்டிபோட முடியும் - என்று சில தொகுதிகள் உள்ளனதானே? இதனால பாப்பாப்பாட்டி, கீரிப்பட்டியில் பெருத்த குழப்பம். இந்த ரிசர்வ்ட்/தனித்தொகுதி சுற்று முறைப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்னும் வெவ்வேறு தொகுதியில் போய் விழுமாம்.

பத்ரி, ரிசர்வ் தொகுதிகள் சுழற்சிமுறையா? இது எனக்கு விளங்கவில்லை. நான் சிறுவனாக இருந்ததில் இருந்து எங்களது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியும், காட்டுமன்னார்கோயில் நாடாளுமன்ற தொகுதியும் ரிசர்வ் தொகுதிகளாகவே இருந்து வருகிறது. நீங்கள் சொல்வது ஊராட்சிமன்ற, நகர மன்ற தேர்தலுக்கு மட்டுமா?

கேவிஆர்: ஆமாம். இந்தச் செய்தியைப் படிக்கவும்.இது நகராட்சி/பஞ்சாயத்து தேர்தல்களுக்கு மட்டும் என்றுதான் நினைக்கிறேன். வேறு விவரங்கள் என்னிடம் இல்லை.

மூர்த்தி,
ஒரே நாளில் பல தேர்தல்கள் (ஊராட்சி, எம்.எல்.ஏ., இத்யதி) நடப்பதால், மற்ற வேட்பாளர்களுக்காகவாவது வோட்டளிக்க வருகிறார்கள். அப்படியே ஜனாதிபதி தேர்தல் வாக்கும் விழும். இந்த அரசியல் அலட்சியத்தைப் போக்குவதற்காகத்தான், 'எலெக்டோரல் வாக்குகள்' என்னும் முறையையே மாற்ற வேண்டும் என்னும் பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு