புதன், டிசம்பர் 01, 2004

மாரோ மாரோ

தேர்தல் சுறுசுறுப்பின்போதுதான் அந்த வார்த்தையை கேட்டேன். 'ஸ்டெம் செல்' (Stem Cell). சென்ற வார நியு யார்க் கோவிலில் மீண்டும் அந்த வார்த்தையில் தடுக்கி விழுந்தேன்.

எதற்கு ஆராய்கிறார்கள், என்ன நன்மை என்று ஒரு இழவும் விளங்காமல், கெர்ரி 'எனக்கு அந்த ஆராய்ச்சி பிடிக்கும்' என்றும், அந்தப் பக்கம் புஷ், 'உம்மாச்சி கண்ணை குத்திடும்' என்றும் ஆழமாக விவாதித்தார்கள்.

ஸ்டெம் செல் என்றால் 'விளையும் அணு'. வெற்று வீடு போல் வாடகைக்கு ரெடியாக இருக்கும் மனை. நரம்பணு, கிட்னி அணு, என்று ரகம் ரகமாக பச்சோந்தித்தனம் செய்யவல்லது. இதய அணுவாக மாற்றிவிட்டால் டிக் சேனிக்கும் இன்ன பிற இதய நோய் உள்ளவர்களுக்கும் அணுக்களை நட்டுப் பயிரிட்டு விடலாம். இதய அணுவாக மாற்றுவதற்கு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

சர்க்கரை வியாதி முதல் கேன்சர் வரை தீர்வு காண ஸ்டெம் செல்கள் பயன்படும். ரத்த தானம் கொடுப்பது போல் ஸ்டெம் செல் தானம் தர முடியாது. ஆராய்ச்சிக்காக பணம் கொடுப்பதா அல்லது உயிரை காப்பதற்காக மட்டுமே ஆராய்வதா என்பதில்தான் (முன்னாள்) ஜனாதிபதி வேட்பாளர்களிடையே கருத்து வேறுபாடு.

2001-இல் புஷ் 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சியை சட்டமாக்கும் வரை அமெரிக்க அரசு இதற்கு நிதி வழங்கவில்லை. அதன்பிறகு கொஞ்சமே கொஞ்சம்தான் என்றாலும் ஆராய்ச்சியாளர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஸ்டெம் செல் கிடைக்கும் விதங்களில் மாற்றம் எதுவுமே இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல், கருவிலே தவறிப்போன சிசுக்களில் போன்ற அரிதான இடங்களின் மூலமே ஸ்டெம் செல்கள் கிடைக்கிறது.

TIME.com-இன் 2001-இல் வெளிவந்த கவர் ஸ்டோரியும் படிக்கலாம்.

நியு யார்க் ·ப்ளஷிங் கோவிலில்தான் அந்த அருமையான வாய்ப்பு கிடைத்தது. சங்கர மடம் செல்லும்போது கூப்பிட்டு சாப்பாடு போடுவார்கள். (இப்ப இருள்நீக்கியோ, நீக்காமலோ -- ஜெ.எஸ்.எஸ். ஹாட் டாபிக் அல்லவா ;-) ·ப்ளஷிங் கோயிலில் அன்போடு 'போன் மாரோ' (Bone Marrow)-விற்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நோயாளிக்கான போன் மாரோவும் நமதும் பொருந்தினால் ஸ்டெம் செல் வழியாகவும் தானம் கொடுக்கலாம் என்றவுடன் 'அத்தரிபாச்சா கொழுக்கட்டை' போல் கெர்ரி வந்து போனார்.

இருபதாயிரத்தில் இருவருக்குத்தான் ஒரே விதமான 'மாரோ' இருக்கும் சாத்தியங்கள் இருக்கிறது. நல்ல வேளை. ரத்த தானமாவது ஏழைந்து வகைக்குள் அடக்கி, எளிதில் கொடுக்கல்-வழங்கல் நடக்குமாறு கடவுள் அமைத்திருக்கிறார்!

இரண்டு விதமாக 'மாரோ' தானம் கொடுக்கலாம்.

முதல் வழி ரொம்ப காலமாக செய்யப்பட்டு வருகிறது. இடுப்பில் மேல் பகுதியில் நம் உடம்பில் விளையாடும் மூன்று சதவீதம் மாரோக்களை இறக்கிக் கொள்கிறார்கள். இரண்டு நாளைக்குப் பிள்ளை பெற்றவள் போல இடுப்பு வலிக்கலாம். ஆனால், பத்து நாளைக்குள் விட்ட மாரோக்களைத் திரும்பவும் சுரந்து விடுவோம்.

இரண்டாம் வழியில் பல்பு போட்டு பார்த்து எடுக்கிறார்கள். மாரோ தானம் கொடுப்பதற்கு நானகைந்து நாட்களுக்கு முன் ஊசி போடுகிறார்கள். அந்த மருந்து ஸ்டெம் செல்களை மட்டும் ஒளிரச் செய்கிறது. ஒரு கையில் எடுக்கும் ரத்தத்தில் இருந்து மாரோக்களை மட்டும் கீழிறக்கிக் கொண்டு, இன்னொரு கை வழியாக ஸ்டெம் செல் இல்லாத நமது ரத்தத்தை நமக்கே 'வைச்சுக்கோப்பா' என்று கொடுத்து விடுகிறார்கள். துளி வலி கூட கிடையாது.

நாம் தானம் கொடுக்கும் 'போன் மாரோ' ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே குணப்படுத்துகிறது. முதல் காரியமாக 'போன் மாரோ' கொடுக்க சம்மதம் என்று ஒரு வரி சொல்லி, எழுதிப் போட்டு, மின்னஞ்சல் செய்து, தொலைபேசி, ரத்தப் பரிசோதனைக்கு ஆவன ஏற்பாடு செய்து விடுங்கள்.

How To Help: எப்படி உதவுவது என்று சிறு குறிப்பு.
How to Arrange Drives: தெற்காசியர்களிடையே விழிப்புணர்வையும் மாரோ வங்கியையும் அதிகரிப்பது எவ்வாறு என்று சொல்லும் பதிவு.



குட்டிக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், Blind faith is dangerous என்று சொல்லும் இந்தக் கதை - இன்று என்னுடைய உள்ளம் கவர்ந்த வலைப்பதிவு:-)

1 கருத்துகள்:

பாலாஜி,

முதலில் இந்த தலைப்பை தொட்டதற்கு நன்றி. அதிலும், உயிரணு கொடை பதிவு பற்றிய விவரத்திற்கும் நன்றி. அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இருகைகூப்பி வணக்கம், பாராட்டுக்கள்.

ஸ்டெம் செல் என்றால் 'விளையும் அணு'
உயிரணு என்று சொல்லலாமே, அதுதான் பரவலாக பாவிக்கப்பட்டு வருகிறதுஆனாலும் ஸ்டெம் செல் கிடைக்கும் விதங்களில் மாற்றம் எதுவுமே இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல், கருவிலே தவறிப்போன சிசுக்களில் போன்ற அரிதான இடங்களின் மூலமே ஸ்டெம் செல்கள் கிடைக்கிறது.

நீங்கள் சொன்ன இருமுறையில் மட்டுமல்லாமால் தொப்புள்கொடி இரத்தத்திலும் (Cord blood) ஏராளமான உயிரணு இருப்பதாக கண்டுபிடித்து, இப்போது தொப்புள்கொடி வங்கி எல்லாம் வைத்து சேகரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கையில் கூட (http://www.cordlife.com/) இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வங்கிகள் வந்துவிட்டதாக சன் செய்திகளில் காட்டினார்கள் (இது போன்ற சிறப்பு செய்திகளும் சன்-னில் வருகிறது:)

ஓரிரு நாட்களுக்கு முன் இந்த தொப்புள்கொடி இரத்த உயிரணு மூலம், நீண்ட நாள் நடக்க இயலாது இருந்த ஒரு பெண்ணை நடக்க வைக்கும் முயற்சி பெரும்பகுதி வெற்றியடைந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.
இரண்டு நாளைக்குப் பிள்ளை பெற்றவள் போல இடுப்பு வலிக்கலாம்.
பிள்ளை பெற்றவளின் இடுப்பு வலி பற்றி (அனுபவிக்காததால்) அதிகம் தெரியாது. ஆனால், எலும்புமஜ்ஜை (bone marrow)கொடுத்ததால் அதன் வலி தெரியும். அந்த வலி லேசாக ஒருவாரம் வரை இருந்தது. முதலிரு நாட்களுக்கு ஒருவகையான மயக்கம் (அனெஸ்தீசியாவின் விளைவால்...) இருந்தது. இது தொடர்பாக இந்த வேண்டுகோளையும் பாருங்கள்:
http://www.araichchi.com/aram/marrow.htm

மேலும் எழுத நிறைய இருக்கிறது, பின்னர் எழுதுகிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு