புதன், ஜனவரி 05, 2005

கனவுவிமர்சனம் : மகா நடிகன்

நேற்று சத்யராஜ் என் கனவில் வந்து அடுத்த படத்தை காண்பித்தார். "நான் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டில் போடுவது போல் நீயும் அறிவிப்பு போடு" என்றார். "அதுதான் எல்லோருக்கும் வெள்ளிடை மலையாச்சே" என்றேன். "வெள்ளியங்கிரி எல்லாம் நம்பாதீங்கடா" என்று ஈசனை அழைத்தார். "ரொம்பப் பேசி கழுத்தறுக்காமல் பிட்டை ஓட்டுங்கண்ணே" என்று முடித்துக் கொண்டேன். அதன் விமர்சனமே இது!

ஒரே பதிவில் பத்து மணடை என்ற ரீதியில் ஒரே படத்தில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்ற அனைத்து தரப்பினரையும் தனக்கே உரிய லொள்ளால் விளாசித் தள்ளியிருக்கிறார் வலைப்பதிவாளர்.

விமர்சனம் செய்தால்தான் தன் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்ற ஆணித்தரமான கொள்கையுடைய 'வலைப்பதிவாளர்' முதலில் பின்னூட்டம் கொடுக்கிறார். ஏடாகூடமாக விவாதித்து, தானே ஒரு வலைப்பதிவைத் தொடங்குகிறார். வலைப்பதிவுக்கு அதிக வருகைகள் இல்லாத நிலையில் தன் பதிவில் எழுதிய கட்டுரை சுடப்பட்டது என்றும், தான் அதைத் தட்டி கேட்டதால் தரைமட்டம் ஆக்கப்பட்டதாகவும் செய்தியைப் பரப்புகிறார். விளைவு - வ.பதிவு ஓட்டமாய் ஓடுகிறது. முன்னணி வலைப்பதிவாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்.

இது இப்படியிருக்க, காபி-பேஸ்ட் மோசடியில் சிக்கும் 'வார்த்தைப்புலி' தனது வலைப்பதிவை மூடிவிட்டு அந்த இடத்தில் தனது வாரிசை இருத்த முயல்கிறார். இதை எதிர்க்கும் 'படைப்பாளி', 'ஜால்ரா' கோஷ்டி புதுக் கட்சித் துவங்குகிறார்கள். வலை கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க ஒரு 'ஒப்புக்கு சப்பாணி' வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளி, வலைப்பதிவாளரை தங்கள் கட்சியில் இணையுமாறு வருந்தி அழைக்கிறார். அரசியலில் இறங்குகிறார் வலைப்பதிவாளர். எதிர்பார்த்தபடியே படைப்பாளி வலை அதிக விருந்தினர்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மை அடையும்போது, நரித்தனமாய் வேலை செய்து படைப்பாளி பக்கம் உள்ள ஆட்களைத் தன் பக்கம் இழுத்து தானே முதல்வராகிறார் வலைப்பதிவாளர்.

ஆகா... இவர் முதல்வரா என்று நாம் வியக்கும் போது ஃபிளாஷ்பேக் எதுவும் இல்லாமல், முதல்வர் பதிவியேற்பு விழாவில் அதிரடி திருப்பமாய் தொண்ணூறு வயது 'மஹாபெருசு' போட்டி வலைப்பதிவு தொடங்குவதுடன் சுபம். இவர்களின் போட்டி ஒருவேளை 'மகாமக நடிகன்' என்று அடுத்த வெளியீடாகலாம்.

வலைப்பதிவாளர்கள் அரசியலுக்கு ஏன் வருகிறார்கள் - அல்லது வருவதைப் போல ஏன் அறிக்கை விடுகிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம் அப்ப்பா!!! தியாகி ஏன் கொதித்துப் போய் அறிக்கை விட்டார் என்பதற்கான பதில் படத்தைப் பார்க்கும்போது தெளிவாகக் கிடைக்கிறது. நக்கல் நக்கல் - இதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை வலைப்பதிவாளரின் எழுத்துக்களில்.

இதே ரேஞ்சில் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் வலைப்பதிவாளர். இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வலைப்பதிய முயலும் வலைப்பதிவாளரிடம் 'மறுமொழியாளர்' உலக வரைபடத்தில் இந்தியாவைக் காட்டச் சொல்லும் போது, "என்னோட தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சொல்றியா" என்று அறைகூவுவதிலிருந்து, "நடிகன் என்று ஒருவன். அரசியல்வாதியோ மகாநடிகன். ஆனா, இந்த சூப்பர்லேடிவ் இருக்கு இல்லியாம்மா... அவன் பேருதான் வலைப்பதிவாளன்! தெரியுமா?" என்று தொடர்ந்து சுயகிண்டலடித்து; "மறுமொழி ஒண்ணுமே வரலைன்னு கவலைப்பட்டான் அவன். உடனே இவனே முகமூடி போட்டு கொரலு வுட ஆரம்பிச்சுட்டான்!!" என்று வலைப்பதிவாளர் கூறுவது மிகை தோலுரிப்பு.

மேலும் ப்ளாஃக் தோற்றத்தை மாற்றச் சொல்லும் தலைவரிடம் "ஏண்டா! உங்க பேரு நல்லாயில்லைன்னு நாங்க மாத்த சொன்னா நீங்க மாத்துவிங்களா?" என்று கேட்பதாகட்டும் வலைப்பதிய முன்வரும் ஜால்ராவிடம் "ஏ.... தா... தே... பையா... ஓ... உ... பு.... சூ... ல... கா.... " என்று வலைப்பதிவாளரும் மறுமொழியாளரும் வசனம் பேச, அதைக் கேட்டு அவர் "யப்பா! இந்த வசனத்தைப் பேச எனக்கு 1 வாரம் டைம் வேணும்!" என்று கேட்பதன் மூலம் யார் யாரையோ நக்கலடிக்கிறார் வலைப்பதிவாளர். வலைப்பதிவு முழுக்க இதே மாதிரியான வசனங்கள் - நையாண்டிகள். வலைப்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளராக வரும் மறுமொழியாளர் இருவரும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

வலைப்பதிவு முழுக்க எதிர்க்குரலே ஆக்கிரமிப்பதால், நாயகிகள் -- 'இலக்கியம்' மற்றும் 'நேர்மறை' இருவருக்கும் கவர்ச்சி காட்டுவதைத் தவிர வேறு வேலை ஒன்றுமே இல்லை. சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நன்றாகப் பதியும் கேரக்டர் அப்பாவி. 'உள்மனசு' தன் மகனிடமிருந்து கொண்டு வர முடியாத நடிப்பை எப்படியோ வரவழைத்திருக்கிறார் வலைப்பதிவாளர். இதே மாதிரி அப்பாவித்தனமான கேரக்டர் 'புது-வரவு'. படத்தில் 'பெருசு'ம் இருக்கிறார். இவர் தான் வலைப்பதிவாளரைத் திருத்துகிறார். அவ்வளவே!! 'சாஹித்ய அகாடெமி', 'கமல்ஹாஸன்' என்று பல சர்ச்சைகளும் சர்ச்சைகளாகவே நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வலைப்பதிவின் மூலமாக வலைப்பதிவு ஆட்களையும் யாஹு குழு ஆட்களையும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் பொதுவில் மக்களுக்குத் தெரிந்தவைதான் என்றாலும் அதைத் துணிச்சலுடன் வலைப்பதிவாக கொடுத்ததற்காக நமது பாராட்டுக்கள்.

உல்டாவுக்கும் கண்டுபிடித்து மாற்றுவதற்கு உதவியதற்குமான ஆதிமூலம் : Tamiloviam

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு