சனி, ஜனவரி 21, 2006

MLK Day

"அப்பா... மார்டின் லூதர் கிங் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? 'எனக்கு ப்ரௌவுன் ஸ்கின்; உனக்கு வைட் ஸ்கின் என்று இருந்தால், நாம் இருவரும் தொட்டுக் கொள்ளக் கூடாது' என்று ஆரம்பித்திருக்கிறார். உனக்குத் தெரியுமா?"

பள்ளியில் என்ன நடந்தது என்று நான் கேட்டவுடன், அன்று வரைந்த ஓவியத்தையோ, உருவாக்கிய கலைப் பொருளையோ கொண்டு வ்ந்து காட்டுவாள். ஐந்து வயது மகளிடம் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்ன ஆல்ஃபபெட் படித்தாய், கூட்டல் போடலாமா என்று வீட்டுப் பாடம் திறக்க வேண்டாம். வரைந்ததைக் காட்டியவுடன் மகிழ்வுடன் தலையாட்டி, தாளில் என்ன வெளிவந்திருக்கிறது என்பதை சொன்னால் போதும்.

மார்ட்டின் லூதர் கிங் தினம் முடிந்த அடுத்த நாள், டாக்டர் கிங்கை குறித்து புத்தகம் படித்திருக்கிறார்கள். அதில்தான் அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் இடம் பெற்றிருக்கிறது.

"அப்படியா... அவர் அந்த மாதிரி சொலியிருக்க மாட்டாரே!"

காந்தியைக் குறித்தே நான் முழுவதாக அறிந்ததில்லை. Martin Luther King, Jr. குறித்து பிபிஎஸ்ஸில் சில விவரணப் படங்களும், ஆங்காங்கே படித்தும்தான் கேள்வியறிவு.

"ஃபர்ஸ்ட் அவர் அப்படித்தான் ஆரம்பித்தாராம். அதன் பிறகு தன் கருத்தை மாற்றிக் கொண்டாராம். அப்படித்தான் மிஸஸ் ரைஸ் சொன்னார்கள். நான் சஃபியாவைத் தவிர வேறு யாரையும் தொடக் கூடாதா அப்பா?"

கொண்டிருந்த கருத்துக்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்புடையதாக இருந்தாலும், எண்ணங்களை ஒருவர் மாற்றிக் கொண்டாலும், குழந்தைகள் மனதில் பதிவது என்னவோ 'காந்தி அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சாரா?' என்பது போல் எதிர்மறைகள் ஆர்வமாக ஆழமாக உள் அமர்கிறது.

அமெரிக்காவில் ஒளிவு மறைவில்லாமல் ஒருவரின் வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் முன் வைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

கார்ட்டூன் படங்கள் : Cartoonist Keith Knight | Links



| |

4 கருத்துகள்:

நல்ல பதிவு..

நன்றி ராம்கி

பாலா,
காந்தி அப்படியெல்லாம் செய்திருப்பாரா என்று நினைக்கக்கூடிய ('மகாத்மா' ஆவதற்குமுன் நிகழ்ந்த) தன்னைப் பற்றிய பல விஷயங்களை சத்திய சோதனையில் எழுதியிருக்கிறாரே. இப்போது மலர் மன்னன் எழுதுபவற்றையொட்டி நீங்கள் இப்படி நினைத்தால் அதற்கும் கிங் பற்றிய செய்திக்கும் முடிச்சு போட்டு பார்க்க முடியாது. மலர் மன்னன் செய்வது காந்தியை அல்பாத்மாவாக்கி, கோட்சேவை மகாத்மாவாக்கும் முயற்சி. கிங்கின் கதை பெருந்தலைவராக உயர்ந்த ஒருவரும் சாதாரண மனிதராகத் தான் ஆரம்பித்தார் என்ற யதார்த்தமான உண்மை.

பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தரமூர்த்தி.

இவ்விரு நிகழ்வு/பதிவுகளுக்கும் நான் தொடர்பாக கருதுவது - ஒருவரின் அல்லாத குணங்களே மனதில் எளிதில் தங்கி நிற்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

கோட்ஸே குறித்த பதிவுகள் முழுவதையும் (திண்ணை மற்றும் வலைப்பதிவுகள்) மேலும் ஏதாவது தோன்றலாம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு