சனி, பிப்ரவரி 07, 2004

விருமாண்டியோடு நாங்கள்

அன்னலஷ்மி

நாங்கள் வசதியான குடும்பம். ஜல்லிக்கட்டு பார்க்க செல்வேன். டூ-வீலரில் ஊர்
சுற்றுவேன். ரொம்ப ஜாலியாக இருந்தேன். எங்க கிராமத்தில் வெட்டு குத்து
கொஞ்சம் அதிகம். அப்படி அடிபட்டுக் கொண்ட விருமாண்டிக்கு மனிதாபிமானத்தில்
உயிரை காப்பாற்றினேன். அவனோ என்னைத் தொடர்ந்து பிட்டு போட்டுக்
கொண்டேயிருந்தான்.

சித்தப்பாவும் கல்யாணப் பேச்சை எடுக்காததால், பின்சீட்டில் பக்கத்தில் உட்காரும்
சித்தியும் கண்டுக்காத்தால் வேறு வழியின்றி நானும் காதலிக்க ஆரம்பித்தேன்.
சொந்த நிலத்தையும் ஊருக்குத் தாரைவார்த்துவிட்ட ஏமாளியை முன்னுக்குக்
கொண்டு வரும் எண்ணத்தில் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டோம். சித்தப்பாவின்
முன்னிலையில் தாலி கட்டாததால் அவருக்கு என் மேல் கோபம். நான் உயிரோடு
இருந்தால் தூக்கு தண்டனையின் அருமை பெறுமைகளை விவரிக்க முடியாது
என்பதால் தூக்கு தண்டனை கொடுத்துக் கொண்டேன்.

கோவில் பூசாரி

ஆண்டு பூஜையில் மட்டுமே எனக்கு சம்பாத்தியம் வரும். விருமாண்டி அன்னலஷ்மி
கல்யாணத்துக்கு அவர்கள் எனக்கு வாத்தியார் சம்பாதணைக் கொடுக்கவில்லை.
நான் வலிந்து கேட்டபிறகு தங்க மோதிரம் என்று சொல்லி, கல்யாணி கவரிங்
கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். தட்சிணைக் கொடுக்காதத் திருமணம் செல்லுபடியாகாது
என்பதால் கோர்ட்டில் அவர்களின் மணமுடிப்பை ரத்து செய்துவிட்டேன்.

ஜெயிலர்

எனக்கு ரொம்ப வேலை கிடையாது. பேய்க்காமனே எல்லாவற்றையும் திறமையாக
கவனித்துக் கொள்கிறான். சிறைச்சாலைக் கைதி இறந்ததற்கு ஆர்ப்பாட்டம்
நடந்ததால், ஜெயிலில் பரிசோதனை என்று கண்துடைப்பு வேலை ஆரம்பித்தேன்.
சரியாகப் புரிந்து கொள்ளாத சிறைவாசிகள் என்னைத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.
விருமாண்டிக்கு போலீஸ் ஆடை மேல் விருப்பம். ஜெயிலை முழுவதும் சுற்றி
பார்க்கவும் ஆசை. கொத்தாளத்தேவரைக் கொலை செய்யவும் விரும்பினான்.
அவனின் திட்டத்தில் என்னையறியாமல் மாட்டிக் கொண்டேன்.

ஏஞ்சலா என்ற ஏஞ்சலா ஜேம்ஸ் என்றழைக்கப்பட்ட ஏஞ்சலா காத்தமுத்து

பெயரை மாற்றினால் வெற்றி கிட்டும் என்று சொன்னதால் இது வரை மூன்று
முறை மாற்றிக் கொண்டுவிட்டேன். குறும்படத் தயாரிப்பில் பரபரப்புடன்
செயல்பட்டு வருகிறேன். தூக்குதண்டனையை ஒழிக்க செய்திச்சுருள்
தயாரிக்க சென்று, தூக்கு தண்டனையின் மகத்துவத்தைப் புரிய வைக்கும்
பதிவை செய்துள்ளேன். 'முதல்வன்' அர்ஜுன் மாதிரி எல்லாத் தொலைக்
காட்சியிலும் என்னை பேட்டி கண்டார்கள். இணைய பத்திரிகைகளில்
கூட என்னை முகப்பு செய்தியாக்கினார்கள். எனக்கு ஆஸ்கார் கிடைக்குமா?

ஏஞ்சலாவின் அஸிஸ்டெண்ட்

மரணதண்டனை குறித்த திரைப்பதிவுகளுக்கு எங்கள் தொலைகாட்சியில்
போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஏஞ்சலாவுக்கு எப்படியாவது அதை
பிராபல்யபடுத்தும் திட்டம். அப்பாவிக் கைதியிடம் திருட்டுதனமாகப்
படம் பிடித்து அவனை சாகடிக்க வைத்துவிட்டாள். அந்த குற்றவுணர்வு
எதுவும் இல்லாமல், பத்துக்கு மிகாமல் கொலை செய்த விருமாண்டிக்குத்
தூக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக என்னையும் இறக்க வைக்கிறாள்.

நல்லம்ம நாயக்கர்

விருமாண்டியிடம் கதை சொல்லும்போதே எனக்குத் தோன்றியது. அவனுடைய
பதிவுகளில் எனக்கு ஒரு மூலை மட்டுமே கொடுப்பான் என்று பட்டது. விருமனுக்கு
செல்பேசி கொடுத்ததுதான் நான் செய்த ஒரே குற்றம்.

பேய்க்காமன்

ஊர்ப் பெரியவரிடம் மட்டும் மஸ்கா போடாமல் கொத்தாளத்தேவரோடும் சகவாசம்
வைத்திருப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்
இளைஞன் நான். வெட்டு, குத்து, சாராயம், நிலத் தகராறு, பஞ்சாயத்து என்று
இருக்கும் கிராமங்களிலும் சமரசம் செய்து வைத்து அமைதிப் புறாவை பறக்க
விடுபவன். பொறுபற்ற காவலர்கள் நடுவே, கைதிகளுக்குள் கலவரம் வராமல்,
அதிகாரிகளுக்குத் தலைவலி கொடுக்காமல், கம்பிமேல் நடக்கும் பாலன்ஸ்
தெரிந்த வித்தகன். இந்த ஒழுங்கு பிடிக்காமல் சுயலாபத்துக்காக 'ரெய்ட்'
கண்துடைப்பு நடத்தித் தலவலி உண்டு செய்கிறான் ஜெயிலர். அதற்கும் மேல்
சென்று விருமாண்டியைத் தப்பிக்கவிட்டு, எதிர்சாட்சியான கொத்தாளனையும்
கொலை செய்யப்படும் நிலைமையை உண்டு செய்கிறான்.

அரிவாளோடு சுத்திக் கொண்டிருந்த பக்கத்து கிராமங்களின் பெருந்தலைகளை
கோர்ட்டு, நீதிபதி, வக்கீல், வாய்தா, தூக்கு தண்டனை என்று எதுவும் இல்லாமல்
காணாமல் போக்கியதையோ, சண்டியரை சாந்தபடுத்தியதையோ கண்டுக்காமல்
மரணதண்டனை குறித்து வீடியோ பிடிக்கறாங்களே!?

எங்க வீட்டு வீடியோ கேஸட்டு

என்னுடைய இதே இழைகளில்தான் 'படம் எடுப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறோம்;
நான் நடிக்க வருவதற்குமுன் சராசரியான படங்களை பார்த்துவிட்டு என்ன
படம் எடுக்கிறார்கள் என்று கமெண்ட் அடிப்பேன்; திரையரங்கிலேயே சத்தமாகக்
கிண்டல் செய்வோம்'. ஆனா, இப்பொழுதுதான் தெரிகிறது எவ்வளவு உழைப்பும்
நேரமும் ஆர்வமும் ஒவ்வொரு ·ப்ரேமுக்குள்ளும் செல்கிறது' என்று ஸ்னேஹா
சொன்னதை பதிவு செய்து வைத்திருந்தார்கள். ரிவ்யூ, விமர்சனம், பார்வை, எண்ண
அலைகள், பதிவுகள், குறிப்புகள், சிந்தனை, அலசல் என்று விருமாண்டியை (மட்டும்)
துவம்சம் செய்யாமல் இருக்க சொல்லுங்கள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு