புதன், ஏப்ரல் 21, 2004

திருவாசகம் - மாணிக்க வாசகர்

சிவபுராணம் :

புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்..........30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்;எம்பெருமான்,


ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள் உண்டு. அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும் வானுக்குப் புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும். ''பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிகப்பு வன்கால் கருமை, வளர்வான் தூமம்''என்பது உண்மை விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் உடையதாய் இருப்பதையும் இதுகுறிக்கும் என்பர்.

ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்; அகோரம்-கருநிறம்; வாமம்-குங்குமம் அல்லது செந்நிறம்;
சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம்.



சிவன் கோவில்களில் பள்ளியறை தீபாரதனையின் போதும், பிரதோஷ காலங்களிலும் சொல்ல கேட்டிருக்கிறேன். கலிவெண்பாவில் அமைந்தது, போன்ற தகவல்களுடன் வெ.சுப்பிரமணியன் என்பவர் அகத்தியரில் எழுதி வருகிறார். எளிமையான கருத்துள்ள பாடல். 'பிறந்திளைத்தேன்' போன்ற சொற்றொடர்கள் மனதைக் கவர்ந்தது. பிறந்து + இளைத்தேன் என்றால் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதாகவும், பிறந்து + திளைத்தேன் என்றால் வாழ்க்கையை ரசிப்பதாகவும் பொருள் வருவதாகத் தோன்றும்.


0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு