திங்கள், ஆகஸ்ட் 16, 2004

மறுமொழிக் கவியருவி

நடக்கும் ஐ.பி.கே.எஃப் விவாதம் (163) கஞ்சி சித்தர்களை (170) மறுமொழிகளில் மிஞ்சிவிடும் போல் இருக்கிறது. எட்ட நின்று பார்த்ததில் எனக்குத் தோன்றியவை சில:

1. தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு:

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ('கலைஞரின் கைது வைபவத்தின் போது... மனுஷ்யபுத்திரன்)

2. பலரும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட முடிவுரைகளை மனதில் வைத்துக் கொண்டுதான் மறுமொழியவே ஆரம்பிப்பது போல் தோன்றுகிறது.

3. ஒருவரின் எழுத்தை வைத்து, (கருப்பொருளை விட்டுவிட்டு) தனிமனிதரை குறித்த அபிப்ராயத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

4. மறுமொழிப் பெட்டியில் பதில் கொடுப்பதை விட சொந்த வலைப்பதிவில் எழுதுவதால், எழுத்துக்கள் கோர்வையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

5. ஈழ வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் களத்தில் இறங்கி, தங்களின் இரண்டு செண்டுகளை சொன்னார்கள். இந்தியத் தமிழர்களில் ஒரு சிலரே மௌனம் கலைத்தனர். ஏன் என்பது புரிவது போல் இருந்தாலும், 'நோநோ'க்களும், 'நேமில்லை'க்களும், 'அனானிமஸ்' திருவாய்மொழிகளும் முகம் கலைக்காதது ஏன் என்று குழப்பமாகவே இருக்கிறது.

6. அசிங்கமான வார்த்தை சொல்லி அழைத்தால், மறுத்துப் பேசுபவர்களும், கிட்டத்தட்ட அதே லெவலுக்கு இறங்குவது நாகரிகமா அல்லது 'விடாக்கண்டன் - கொடாக்கண்டன்'தனமா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி வருகிறேன்.

7. முகமூடி போட்ட ரியல் முகங்களுக்கும், அமைதி காத்தோரும், இட்லி-வடை போல பெரிய மனுஷத்தனத்தோடு கலந்துகொண்டவர்களை நான்கு வருடம் கழித்து 'சுட்டி'க்காட்டி உரல் கொடுப்பார்கள்.

8. கும்புடு போட்டு பேச்சு வெட்டியாகாமல், செயல்திட்டமாகவோ, ஒவ்வொருவரின் எண்ண முடிவுரைகளாகவோ இல்லாமல், அங்கும் இங்கும் சிதறலாகவே நின்று விடுகிறது. (இதற்கும் காரணம் ஓரளவு ஊகிக்க முடிகிறது: இந்த மாதிரி 'resolutions'களுக்கு பின்னூட்டங்களாக சில நக்கல், குத்தல் பதிவுகள் வந்து, தொடர்வதால் என்று நினைக்கிறேன்).

9. என்னதான் ஸ்மைலி, கண்ணடிப்பு போட்டாலும், இணையத்தில் எவர் பதில் பேசினாலும் 'preconceived notion' கொண்டே பார்க்கப்படுகிறது.

10. இந்தப் பதிவு, 'யார் மனதையும் புண்படுத்த அல்ல; புரிந்து கொள்ளவே!' என்று டிஸ்க்ளெய்மர் போட்டாலும்; இந்த மாதிரி போஸ்ட்களைப் போலவே எந்தப் பயனும் கொடுக்காதது.

தலைப்புக்கு நன்றி : மறுமொழிக் கவியருவி

2 கருத்துகள்:

இதை வைத்து நீங்களும் ஒரு பதிவு போட்டுவிட்டீர்கள் என்பதைத் தவிர இதனால் ஏதும் பிரயோசம உண்டா..??

வார்த்தை மடிப்புகள் வலிந்து அழுத்தியதைப் போல இருப்பதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என நம்புகிறேன்.

முதலில் இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று தோன்றுவதற்கே கொஞ்சம் "வேண்டும்". அது இல்லாவிடில் இப்படித்தான் ஏதாவது எழுதத் தோன்றும்.

அன்புள்ள பாலாஜி,
எந்த ஒரு விவாதமுமே திசை மாறிப் போகும் போது, சொல்லப்படும் கருத்துக்கள்
எல்லாம் வண்ணக் கண்ணாடி அணிந்து எதிர்பார்த்தபடி சொல்கிறார்கள் என்று
வண்ணமடிக்கப்படும் போது, பெரிய கும்பிடு போடுவதை விட என்ன செய்யச்
சொல்கிறீர்கள்?! ஒரு படைப்பாளிக்கு கருத்திருந்தும் சொல்லாமல் இருக்க உரிமை
இருக்கிறது என்கிறீர்கள், எல்லாப் பிரச்சினைகளிலும் கருத்தை சொல்ல வேண்டிய
அவசியமில்லை என்கிறீர்கள்..இப்படியாக உங்களுக்கு வசதிப்பட்ட விதிகளை நீங்களே
உருவாக்கிக் கொண்டு, அதைப் பதிவும் செய்யுங்கள், வேண்டாமென்று என்னால்
சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிடும் அதே படைப்பாளி இனத்துக்கு, விவாதம்
விதண்டாவாதமாகும் போது, பெரிய கும்பிடு போடவும் உரிமை இருக்கிறது என்பதையும்,
என் மூக்கு உன் மூக்கு என்று சொல்லி நட்பாய் பிரியும் உரிமை இருக்கிறது என்பதையும்
ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?! உங்களது பல கருத்தோடு ஒத்துப்போனாலும் எட்டாவது
விஷயமான 'கும்பிடு போட்டு பேச்சு வெட்டியாகாமல்' என்ற வாசகம், என்னை இந்த
மறுமொழி எழுதத் தூண்டுகிறது.

அழியா அன்புடன் அருண்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு