வியாழன், அக்டோபர் 07, 2004

காட்சிப்பிழை - சொக்கன்

டிவி என்னும் வஸ்து எனக்கு மிகவும் பிடித்தது. சரித்திர நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். சமகால அலசல்களை வியக்கலாம். செய்திகளை அறியலாம். கடவுளைக் கண்ணுறலாம். ஸ்னேஹா மாமியானதை வியக்கலாம். ரீமா ஹீரோயினானதை தெரிந்துகொள்ளலாம். மாமியார்-மருமகள் பிரச்சினை, பிறன்மனை நோக்கல், இல்லத்து உறவுகள் கொண்ட தொடர்களை நக்கலடிக்கலாம். மூடுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு பயன்கள்.

டிவி பார்க்காத வாரயிறுதிகள் போரடிக்காமல் பயமுறுத்தும். அமெரிக்காவின் 'உழைப்பாளர் தினத்தைக்' கொண்டாட நாங்கள் கொலராடோ சென்றபோது அன்னை தெரஸாவும், லேடி டயானாவும் அடுத்த அடுத்த நாளில் உயிரை இழந்திருந்தார்கள். செய்திகளை வெகுத் தாமதமாகத்தான் பார்த்தேன். நான் தெரிந்து கொண்டதும் எதுவும் செய்யவில்லை என்பது நீங்கள் அறிந்திருந்தாலும், 'அச்சச்சோ' என்று வருத்தப்பட காலவிரயமானது.

சித்தார்த்த பாசு இல்லாவிட்டால் க்விஸ் நிகழ்ச்சிகளிலும், துக்கடா ட்ரிவியாக்களிலும் ஆர்வம் பிறந்திருக்காது. ப்ரணாய் ராய் இல்லாவிட்டால் ஸ்விங் என்பது ஆட்சியாளரை மாற்றுகிறது என்று அறிந்திருக்க மாட்டேன். 'சுனௌதி' கல்லூரியினால் கிடைக்கப்போகும் ரம்மியமான தோழிகளை சொல்லித்தந்தது. 'மலரும் நினவுகளால்' சுயசரிதை படிக்கும் ஆர்வம் கிடைத்தது. மாலா மணியனும், ரத்னாவும், ஜேம்ஸ் வசந்தனும் திரைப்பட ஆர்வத்துக்கு நிறையவே தூண்டில் போட்டார்கள்.

பிற்காலத்தில் டிவி பேசும் என்பதை சில அறிவியல் கதைகள் சொல்லியிருக்கிறது. டிவி போன்ற பொருட்களே மக்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்று ஜீனோ பேசியிருக்கிறது. அந்த தொலைக்காட்சியை வைத்துக்கொண்டு சுவாரசியமான தற்கால சிந்தனைகளை எதிர்காலத்தின் மீது ஏற்றி யோசிக்கவைக்கும் கதையாக இருக்கிறது 'காட்சிப் பிழை'. எனக்கு என்னுடைய மனசாட்சியே இங்கு டிவியாக மாறினது போல் ஒரு பிரமை. சில சமயம் மனைவி போல். ஒரு சமயம் ஆட்சி மாற்றத்தை செய்ய விரும்பும் சமூகவீரனாக. அங்காங்கே சூழ்நிலைக் கைதியாக வாழும் நடுத்தர வர்க்கமாக. சில சமயம் தற்போது காணும் வழக்கமான தொலைக்காட்சியாக....

உண்மையில் எது என்பதை வாசகருக்கே விட்டிருக்கிறார். மரத்தடி-திண்ணை போட்டியின் சமயத்தில் மற்றுமொரு சாம்பிள் அறிவியல் கதை.

வெளிவந்த இதழ்: படித்துறை


  • அவன் கையிலிருந்த ரிமோட்டை அதன்மேல் எறிந்து, 'வாயை மூடு, முட்டாள் இயந்திரமே' என்றபடி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.

  • டிவி வழக்கமான விசாரணையை ஆரம்பித்தது, 'எங்கே போய்விட்டு வருகிறாய் ?'

  • இயந்திரம் மீண்டும் பேச ஆரம்பித்தது, 'என்ன பேச்சையே காணோம் ? வேலை பார்ப்பதாய் உத்தேசம் இல்லையா இன்றைக்கு ?'

  • அவன் பெரும்பாலான நேரங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் சும்மாவே உட்கார்ந்திருப்பான், அல்லது பதினான்காம் நூற்றாண்டு மன்னன் ஒருவனின் காதல்கதையை அவன் எழுதிக்கொண்டிருக்கிற சரித்திர நாவலுக்குள் சேர்ப்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பான்.

  • அந்த அறைக்குள் நுழையும்போதே அடுப்பில் ஏதோ தீய்ந்த வாடை அடிக்கும் அவனுக்கு.

  • "வேலையில்லாத சிறுபையன்களும், வேலைபார்த்துக் களைத்த நடுத்தர வயதினரும்தான் அதைப் பார்க்கிறார்கள், அவர்களைத் தூண்டிவிட்டால் ஏதும் பெரிதாய் நடந்துவிடாது"

  • 'தன்னால் இத்தனை முடியும் என்று தெரிந்தபிறகு, தன்னைக் கட்டிவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் தெரியுமா ?'

1 கருத்துகள்:

சொக்கனை எங்கே பாலா...? அவரை மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இன்னொரு பாலா GCT பற்றி எழுதியவுடன் பின்னூட்டமிட்டு வலைக்குள்தான் இருக்கிறார் என்பதையும் காட்டிக்கொள்கிறார். ஏதாவது தகவலிருந்தால் சொல்லுங்கள்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு