வெள்ளி, ஜூலை 15, 2005

அடிக்கற்கள - தமிழருவி மணியன்

ஊருக்கு நல்லது சொல்வேன்! ஒரு சொல் கேளீர்! ::

விண்ணைத் தொடுவது போல் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் பார்த்து விழிகள் வியப்பில் விரிய, பிரமிப்பும் பக்தியும் பிரவாகமாக இதயத்தில் பொங்கிப் பெருக, கைகூப்பி வணங்கும் மனிதர்கள், அந்த அழகிய கோபுரத்தைத் தாங்கு வதற்காக மண்ணில் மறைந்து நிற்கும் அடிக்கற்களை மறந்தும் நினைப்பதில்லை! விரிந்திருக்கும் கிளைகள் பரப்பும் மரத்தின் நிழலில் இளைப்பாறி, பழுத்திருக்கும் கனிகளைப் பறித்து உண்ணும் வழிப்போக்கர்கள் யாரும் அந்த மரத்தின் வேர்களுக்கு நன்றி சொல்வதில்லை.

அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள் இல்லை. இந்த உண்மை தெரிந்திருந்தும், மனிதர்கள் அவற்றை ஆராதிப்பதில்லை!

'உழைக்கும் காளை மாடு கொல்லைப் புறத்தில்; குரைக்கும் நாய் பட்டுப் படுக்கையில்!' என்பதுதான் இன்று சமூக நீதி.

1919 - ஏப்ரல் 13... ஞாயிற்றுக் கிழமை. நான்கு பக்கம் மதிற்சுவரும், ஒரு குறுகிய வழியும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திறந்தவெளி மைதானத்தில், ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமைதியாக ஒரு பொதுக் கூட்டம் நடந்தது.

திடீரென்று, கூட்டத்தில் ஜெனரல் டயர் தலைமையில் நுழைந்த பிரிட்டிஷ் காவல்படை, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. 1600 முறை குண்டுச் சத்தம். 379 பேர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் படுகாயம். நாட்டின் ஆன்மாவை நடுங்கச் செய்த இந்தச் சம்பவத்தால் மனம் உடைந்துபோனான் பகத்சிங்!

லாகூர் தேசியக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, புரட்சிகரமான சிந்தனைப் போக்கு உள்ள நண்பர்கள் சிலருடன் 'நவ ஜவான் பாரத் சபா' என்னும் அமைப்பைத் தொடங்கினான் பகத்சிங். காந்தியக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு புரட்சி இயக்கம் கட்டுவதற்கு முயன்று, சிதறிக்கிடந்த புரட்சியாளர் களை ஒன்று திரட்டி, சந்திர சேகர் ஆசாத் தலைமையில் 'இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஜனநாயக சங்கம்' உருவாக்கினான்.

1928 - அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் லாகூர் வந்தபோது, அதை எதிர்த்து மாபெரும் மக்கள் கூட்டம் லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மிருகத்தனமான போலீஸ் தாக்குதலில் லஜபதிராய் படுகாயமுற்று, பதினேழு நாட்களுக்குப் பின்பு மண்ணை விட்டு மறைந்தார்.

'பாரதத் தாய்க்கு நேர்ந்துவிட்ட இந்தக் களங்கம் துடைக்கப்பட வேண்டும்' என்று பகத்சிங் துடித்தான். பஞ்சாப் சிங்கம் கண் மூடி முப்பது நாள் முடிவதற்குள், லாகூர் தலைமைக் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.எஸ்.பி. சாண்டர்ஸை பகத் சிங்கும் அவன் தோழன் ராஜகுருவும் சுட்டு வீழ்த்தினர். அவர்களைப் பிடிக்க முயன்ற கான்சிங் என்ற தலைமைக் காவலரை ஆசாத்தின் துப்பாக்கி தீர்த்துக் கட்டியது. இதற்கு நான்கு மாதங்களுக்குப் பின், நாடாளுமன்றத்தில் தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கும் தொழில் தகராறு மசோதா, பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, பகத் சிங்கும் பட்டுகேஸ்வரதத்தும் பார்வை யாளர்கள் பகுதியிலிருந்து ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டு வீசினர். 'செவிடாகிப் போன அரசுக்கு எங்கள் குரல் கேட்கவேண்டும் என்பதைத் தவிர, யாருடைய உயிரையும் பறிக்கும் எண்ணம் இல்லை' என்ற அறிவிப்பைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு, 'தொழிலாளர் வர்க்கம் வாழ்க! ஏகாதிபத்தியம் ஒழிக! புரட்சி ஓங்குக!' என்று முழங்கினர்.பகத்சிங்கையும் புரட்சியாளர்கள் பலரையும் அரசு கைது செய்து சிறையில் தள்ளியது.

1931 - மார்ச் 23. இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத துக்க நாள். அன்றுதான் புரட்சிக் கொடி பிடித்து, லட்சியப் பயணம் நடத்திய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் மாலைப்பொழுதில் லாகூர் சிறையில் தூக்குக்கயிற்றில் மரணத்தை முத்தமிட்டனர்.

---சந்தா வழங்கி விகடனில் படிக்க வேண்டிய விடுபட்ட பகுதிகள்---

பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் மரணத்தைத் தழுவியபோது, 25 வயதைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை. அகிம்சை ஆயுதத்தை மறுதலித்து, வன்முறை சித்தாந்தத்தை வளர்த்து எடுத்ததால் விளைந்த விபரீதம் இது. சுதந்திரப் போரை வேகப்படுத்தும் முயற்சியில் தங்கள் வாழ்க்கையை விரும்பியே வேகமாக முடித்துக்கொண்ட வீரர்கள் இவர்கள். இந்த லட்சியவாதிகளின் தியாகத்துக்கு, இவர்களின் வன்முறையை ஏற்காத மகாத்மாவாலும் தலை வணங்காமல் இருக்க முடிய வில்லை. 'அரசியல் வன்முறையை எந்த வடிவத்திலும் ஏற்க மறுக்கும் காங்கிரஸ் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் செய்திருக்கும் தியாகத்தையும் அவர்களுடைய வீரத்தையும் வியந்து பாராட்டுகிறது' என்று காந்தியத் தலைமை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும், காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் கையப்பம் இடுமுன், காந்திஜியால் பகத் சிங்கைக் காப்பாற்ற முடிய வில்லை என்று நாடு முழுவதும் இளைஞர்கள் கோபம் கொண்டனர். கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அண்ணலுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டினர்.

மகாத்மா, அவர்களிடம் வன்முறையின் பலவீனத்தையும் அகிம்சையின் ஆற்றலையும் விளக்கினார். வன்முறை மூலம் ஏற்படும் சமூக மாற்றங்களைத் தொடர்ந்து பராமரிக்க வன்முறையே அவசியமாகிறது. எனவேதான், 'நிரந்தர நன்மைகளை வன்முறை ஒருபோதும் வழங்கமுடியாது' என்றார்.

'புரட்சியின் பலிபீடத்தில் ரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாதது' என்ற வன் முறைச் சித்தாந்தத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அதே சமயம், பகத்சிங் போன்ற இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற மற்றும் இடம்பெறாத எண்ணற்ற இளைஞர்களின் தியாக வாழ்க்கைதான், நம் சுதந்திர மாளிகையின் அடிக்கல். தங்களை முற்றாக எரித்துக்கொண்டு, அவர்கள் வழங்கிய வெளிச்சத்தில்தான் தேசத்தின் அடிமை இருள் விலகியது. அதை நாம் மறந்துவிடக்கூடாது. கோபுரங்களைக் கொண்டாடுபவர்கள், அடிக்கற்களை அவமதிக்கக்கூடாது.

இதோ, சர்தார் பகத்சிங் சொல்வதைச் செவி மடுப்போம்...

'வைரங்கள் மாளிகையின் அழகை அதிகரிக்கலாம். காண்பவரை வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால், நிறுத்தி வைக்க முடியாது. பல நூற்றாண்டுகள் தம் தோள்களில் சுமந்திருக்க முடியாது. நாம் இதுவரை வைரங்களைத் திரட்டினோம். அடிக்கற்களைத் திரட்டவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும், இன்னும் மாளிகையைக் கட்ட ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்குத் தேவை அடிக்கற்களே!'


அப்துல் ரகுமான் அழகாகச் சொல்வார்... 'ஏற்றப்பட்ட விளக்கைவிட ஏற்றிவைத்த தீக்குச்சியே உயர்வானது!'

6 கருத்துகள்:

நான் ஏன் நாத்திகனானேன் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய ச்சிறுநூலின் தமிழாக்கம் கிடைக்கிறது.தி.க வெளியீடு. சுப.வீரபாண்டியன் பகத்சிங் குறித்து ஒரு நூல் தமிழில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

விகடன் 'பகத் சிங்கின் பாராளுமன்ற முயற்சியை கேலிசெய்தும், காந்தியடிகள் போன்ற பீரங்கிக்கே அஞ்சாத பிரிட்டீஸார் பகத்சிங் போன்ற வெற்று துப்பாக்கி மிரட்டல்களைக் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணுவது சிறுபிள்ளைத்தனம் என்றெல்லாம் தலையங்கம் எழுதியிரூந்தது (நினைவில் இருந்து எழுதுவதால் சொற்களில் பிழையிருக்கலாம்; கருத்தில் பிழையில்லை).

பகத்சிங்கின் தூக்குதண்டனை காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பே நடத்தப்படவேண்டும் என்பதில் (இல்லாவிடில் காங்கிரஸ் மாநாட்டில் பகத்ச்சிங்கை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்பதாலும், நாடெங்கும் பகத்சிங்கின் வீரச்செயல் இளைஞர்களிடம் ஏற்படுத்தி இருந்த எழுச்சியின் காரணமாக அதை எதிர்கொள்வது சிரமாக இருக்கும் என்பது போன்ற காந்தீய அரசியற்கொள்கைகள் காரணாமாக) காந்தி முனைப்பயிருந்தார். அது குறித்து அவர் இர்வினுக்கு எழுதிய கடிதங்கள், அவசர மடல்கள் இன்று வாசிக்கக்கிடைக்கின்றன. காந்தி நினைத்திருந்தால் தண்டனையை மாற்றியிருக்கலாம்; அல்லது தலையிடாமல் இருந்திருந்தால் கிளர்ந்தெழுந்த மக்கள் சக்தி அதை மாற்றியிருக்கக்கூடும். ஆனால் பிறகு இந்திய சுதந்திரப்போரட்டத்தின் வடக்கயிறு வேறு கைகளுக்கு போயிருக்க சாதியங்கள் இருந்தன.

அதே போல காங்கிரஸ் மாநாட்டில் பகத்சிங்கின் மரணதண்டனையை கண்டிக்கும் வாக்கியங்களை நீக்குமாறு காந்தி தனது முழு அழுத்ததையும் கொடுத்தார். அது பிறகு வெறும் வருத்தம் தெரிவிப்பதாக மாற்றப்பட்டது.

சுப.வீயின் நூல் ஏராளமான சான்றுகள், ஆவணங்கள், தகவல்கள் நிரம்பியது.

நன்றி தங்கமணி. இதில் காந்தி செய்தது, செய்ததவறியது குறித்து சர்ச்சை இருக்கிறது. காந்தி பகத்சிங்கையும், பிறரையும் காப்பாற்ற முயன்றார் என்று ஒரு தரப்பார் கருதுகிறார்கள். ஏ.ஜி.நூரனி இது குறித்து எழுதியீருக்கிறார் என்று நினைவு

நன்றி ரவி, தங்கமணி.


தேடியபோது கிடைத்த புத்தகங்கள்:

* நான் நாத்திகன் - ஏன்? - மாவீரன் பகத்சிங் (சந்தியா)
* பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும் - சிவவர்மா (தமிழ்ப் புத்தகாலயம்)
* விடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும் - அறந்தை நாராயணன் (கவிதா)

ரவி, சுபவீயின் புத்தகத்தில் காந்தி இர்வினுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டே எழுதியிருப்பார். அக்கடிதங்கள் தேசிய ஆவணக்காப்பகங்களில் இருந்து பெறப்பட்டவைகள் என்பதற்கான சான்றுகளும் தரப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு