வெள்ளி, ஆகஸ்ட் 05, 2005

பாவண்ணன்

Thanks AnyIndian.comமுந்தாநாள் 'வணக்கம் தமிழக'த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார்.

எழுத்தாளர்களை சந்திக்க செல்லுதல் விபரீதமான நிகழ்வு. வேலைக்கு சேர்ந்திருந்த இளவயதுகளில் மாதாமாதம் மிச்சம் பிடித்து, டிக்கெட் எடுத்து, சிவராம் கரந்த்தை நேரில் பார்க்க செல்கிறார்.

'மாக்கோலம் போடுவதற்கு அவள் வரவில்லையே...
அவள் கோலம் காண்பதற்கு வழியில்லையே'
என்று ஏமாற்றம் அடையாமல், சாய்வு நாற்காலியில் நாளிதழ் படிப்பதை தூரக்க நின்று தரிசித்துவிட்டுத் திரும்பி விடுகிறார். ஏற்கனவே எங்கோ படித்த நினைவிருந்தாலும், அவர் வாயால் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி காலத்தில் பாவண்ணன் 'மண்ணும் மனிதரும்' படித்துவிட்டு பல காலத்துக்கு அதன் தாக்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.

வாசிப்பனுபவத்திற்கு மரம், கனி, சுவைக்கு நிகர் என்றார். மரம் போன்ற புத்தகத்தின் நிழலை அணுக வேண்டும். கிட்டப் போனால்தான் கனி என்னும் அனுபவம் கிடைக்கும். நாவில் நிற்கும் தனிச்சுவையாக வாசகனின் மனத்தை அது சென்றடைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாவண்ணன் விவரிக்கும்போது சுவையாக இருந்தது.

படிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தவர், விபத்தாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத்தின் வற்புறுத்தலின் பேரில் கன்னட நாடகத்தை முதன்முதலில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து அவருடைய ஆதர்ச சிவராம் கரந்த், கன்னட நாடகங்கள் என்று சாகித்ய அகாடெமி கிடைத்திருக்கிறது.

ராஜாஜியின் வியாசர் விருந்தில் மஹாபாபாரதப் போர் மிகவும் நேர்த்தியாக சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் வியூகங்களையும் குயுக்திகளையும் விவரிக்கும். பாவண்ணனுக்கு விருதைக் கொடுத்துள்ள 'பர்வா'வும் குருஷேத்திரப் போரை குறித்த படைப்பு. பெண் கதாபாத்திரங்களின் பார்வை மூலமே கதை சொல்லப் படுகிறது.

போர் தொடுக்கும்போது காரணங்கள் தேவையில்லை. சண்டை மூண்டபின்பே 'ஏன்... எதற்கு' என்பதெல்லாம் சமைக்கப் படுகிறது என்பது தற்காலத்துக்கும் (ஈராக்) பொருந்தும்வகையில் என்பதை நாவல் விவரிக்கிறது.


பாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.


சிறுகதை தொகுப்பு
வேர்கள் தொலைவில் இருக்கின்றன
வெளிச்சம்
தொலைந்து போனவர்கள்


நாவல்
பாய்மரக் கப்பல்
வாழ்க்கை ஒரு விசாரணை


கவிதை தொகுப்பு
குழந்தையைப் பின் தொடரும் காலம்

1986ஆம் ஆண்டில் மிகச்சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றது இவரது "முள்" சிறுகதை. 1981-இல் புதுவை அரசு நடத்திய குறுங்காவியப் போட்டியில் பரிசு பெற்றார். இலக்கிய வீதியின் சிறுகதைப்பரிசு, கணையாழி இதழ் நடத்தும் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு என்பவற்றைப் பெற்றுள்ளார். இவருடைய நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது.

anyindian.com::

  • அக்னியும் மழையும்(க்ரீஷ்கர்னாட்)
  • அடுக்கு மாளிகை
  • ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் தொகுப்பு: பாவண்ணன்
  • ஆழத்தை அறியும் பயணம்
  • எட்டுத் திசையெங்கும் தேடி
  • எனக்குப் பிடித்த கதைகள்
  • எழுத்தென்னும் நிழலடியில்
  • ஏழு லட்சம் வரிகள்
  • ஏவாளின் இரண்டாவது முடிவு
  • ஒரு மனிதரும் சில வருஷங்களும்
  • கடலோர வீடு
  • தீராத பசி கொண்ட விலங்கு
  • நூறுசுற்றுக் கோட்டை
  • நேற்று வாழ்ந்தவர்கள்
  • பொம்மைக்கு இடம் வேண்டும் (குழந்தைக் கவிதைகள்)
  • வலை




    பாவண்ணனின் கதைகள் பற்றி ஜெயமோகன்
    [நன்றி: சதங்கை ஏப்-ஜுன் '97]

    பாவண்ணனின் படைப்புலகின் முதல் சிறப்பு அதன் நேர்மையும் பாசாங்கின்மையும் ஆகும். வாழ்க்கையை முன்வைத்து படைத்தல் என்ற கடமையிலிருந்து இந்த பதினைந்து வருடக் காலத்தில் அவர் ஒரு முறைக்கூடப் பிறழ்ந்ததில்லை.

    தமிழிலக்கிய சூழலில் சீரிய படைப்பாளிகளிடம் கூட வணிக எழுத்தின் ஜாலங்களின் சாயம் ஒட்டியிருக்கும். குறிப்பாகக் கடைசித் தலைமுறைப் படைப்பாளிகளிடம். பாவண்ணனின் உண்மையுணர்வு கவசம் போல அவரைச் சூழ்ந்து அவர் படைப்புலகின் தனித்தன்மையைப் பாதுகாக்கிறது.

    பாவண்ணனுக்கு நன்றி கலந்த வணக்கம்


    | | | |

  • 8 கருத்துகள்:

    பாவண்ணன் குறித்த தகவல் அளித்தமைக்கு நன்றி.

    I have read' pavaNNan's enakkup pidiththa kathaikaL .. kathaiyOtu avar vaazvil nadantha sambavangaLai avar ezuthiyirukkum vitham padippathaRku suvaraSyimaaKa irukkum ...

    I think pavaNNan is working in Bangalore only ..

    Thanks for this post ...


    maravantu
    bangalore

    பாவண்ணன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 'சொத்தவிளை' கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் .என்னுடைய வீட்டிலிருந்து நீங்கள் குறிப்பிட்ட கடற்கரை வெறும் 200 மீட்டர் தான் .சின்ன வயதில் தினமும் விளையாடிய இடம் .நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.

    -ஜோ

    --கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் ---

    சமீபத்தில்தான் 'தீராத பசி கொண்ட விலங்கு' படித்தேன். புதுச்சேரி சுற்றுவட்டார மணம் வீசும் பதிவுகள். குறிப்பாக கடல் காற்று வீசத் தொடங்கும் அறிவியல் பின்புலத்தை, மணவாழ்வின் அடிநாதத்திற்கு முடிச்சுப் போடும் கட்டுரை ரொம்பப் பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். உங்களுக்கு மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற உணர்வு வரலாம்.

    ---suvaraSyimaaKa irukkum ---

    இதற்கு முன் இந்த மாதிரி நடையில் 'திருக்குறள் கதைகள்', சாலமன் பாப்பையா/புஷ்பவனம் போன்றவற்றையே பார்த்திருக்கிறேன். குறளோ, நீதி நெறி விளக்கமோ மனதில் நிற்பதற்காக கதை சொல்வார்கள். ஆனால், புனைகதைக்கு, நிகழ்கால நடப்பை ஒப்புமைப்படுத்தி - மனதில் நிறுத்திய 'எனக்குப் பிடித்த கதைகள்' உலக எழுத்தாளர்களையும், உள்ளூர் மாணிக்கங்களையும் ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய கட்டுரைகள்.

    You have honoured a tamil writer properly. you need not have given the quotations of Jeyamohan. like this he can write a hell lot of words on hell a lot of writers

    எஸ்.ராமகிருஷ்ணன் : பாவண்ணன், பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்துக் கூர்ந்த அக்கறை கொண்டவர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார்.

    அவரது ‘அடி’ என்ற கதை, புறக் கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக் குரலை வெளிப்படுத்துகிறது. பச்சை மரங்களில் விழுந்த வெட்டு போல, இக்கதை வாசகனின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடக் கூடியது. கதை, விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. திருமணமாகிச் சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லாமல் விலக்கி வைக்கப்பட்ட பெண் ஒருத்தி, தன் கணவனைத் திரும்பத் தேடி வருவதில் கதை துவங்குகிறது.

    திருமணமாகிச் சேர்ந்து வாழப் பிடிக்காமல், பெண்ணால் விலக்கி வைக்கப்பட்டவன் என்று ஏதாவது ஒரு ஆண் இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை! தங்கசாமி, ராதா இருவரும் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு நாள் ராதா, ஏதோ வீட்டு வேலையில் இருந்தபோது, குழந்தை தவழ்ந்து போய், புழக்கடை கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறது. அந்தச் சம்பவம் ராதாவைச் சித்தம் கலங்கச் செய்துவிடுகிறது.

    ஆனால், தங்கசாமி சில மாதங்களில் யாவையும் மறந்து, குடும்பம் நடத்த முயல்கிறான். ராதாவால் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. மேலும், குழந்தைச் சாவை தங்கசாமி மறந்துபோனதைத் தாங்க முடியாமல், வெறிகொண்டவளாகிறாள். சொந்தக்காரர்கள் ஏற்பாட்டின் பேரில், தங்கசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ராதாவைத் தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்கிறான். ராதா எப்போதாவது தங்கசாமி வீட்டின் முன்பு வந்து, மிகக் கொச்சையான வசைகளைத் திட்டி, அவனோடு சண்டையிடுவாள். பிறகு துரத்திவிடுவார்கள்.

    கதை துவங்கும்போதும் அப்படி ராதா வந்து தெருவில் நின்றுகொண்டு கத்துகிறாள். அதைச் சகிக்க முடியாமல் தங்கசாமி அவளை அடிஅடியென அடித்துவிடுகிறான். அடிபட்ட வலியுடன் தெருவில் புரண்டபடி அவனைப் பார்க்க வேண்டும் போல மனதில் இருந்ததாகவும், அதனால் சும்மா பார்த்துப் போகத்தான் வந்த தாகவும் சொல்கிறாள். அது பைத்தியத்தின் குரலாகத் தெரியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. அவிழ்ந்து கிடந்த தனது உடைகளைச் சரிசெய்தபடி, ராதா திரும்பவும் கல்லை எடுத்து தங்கசாமி மீது வீசியபடி கத்திக்கொண்டு தெருவில் நடந்து போகிறாள். யார் பைத்தியமாக நடந்துகொண்டது என்ற புதிர் கதையைச் சுற்றிலும் படர்ந்து விடுகிறது.

    கடலில் ஒரு துளி

    பாவண்ணன்

    2. மறக்கமுடியாத சூரியோதயம்

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரியின் பக்கமாக பயணம் சென்று திரும்பி வந்த நண்பர் சொத்தைவிளை என்னும் இடத்தில் உள்ள கடற்கரையைப்பற்றி மிகவும் உற்சாகமுடன் சொன்னார். அந்த இடத்தில் தான் கண்ட சூரியோதயம் ஒரு கவிதையைப் படிப்பதைப்போல இருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போதே மனத்தில் ஒரு திட்டம் விழுந்துவிட்டது. நாகர்கோயில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி என என்றைக்குக் கிளம்பினாலும் அந்த சொத்தைவிளைக் கடற்கரையில் காலார நடந்துவிட்டுத்தான் திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். பல நேரங்களில் என் அதிகாலை நடையை சொத்தைவிளைக் கடற்கரை நடையாகக் கற்பனைசெய்து மகிழ்ந்ததுண்டு. அந்த அழகான மணல்விரிந்த கடற்கரையும் தென்னந்தோப்பும் இனிய காலையும் சின்னச்சின்ன சித்திரங்களாக மலர்ந்துமலர்ந்து நெஞ்சை நிரப்பிவிடும்.

    குதணணூடிண்ஞு

    பல தருணங்களில் மதுரைவரைக்கும் செல்லநேர்ந்த பயணங்களை ஏதோ சின்னச்சின்னக் காரணங்களால் சொத்தைவிளைவரை நீட்டிக்க இயலாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆண்டும் என் குறிப்புப் புத்தகத்தை மாற்றும்போது, மேற்கொள்ளவேண்டிய பயணங்களில் முதலாவது இடமாக அந்த ஊரின் பெயர் நிரந்தரமாக இடம்பிடித்தபடி இருந்தது. ஒருமுறை அந்தப் பட்டியலை தற்செயலாகப் பார்க்க நேர்ந்த என் மகன் "என்னப்பா இது, சின்னப்புள்ளைங்க மாதிரி ஒன்னு ரெண்டு மூணுன்னு நெம்பர் போட்டு ஊரு பேருங்கள எழுதி வச்சிருக்கீங்க" என்று சிரித்துவிட்டான்.

    அவன் சிரித்து முடியட்டும் என்று அவன் முகத்தையே பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் அவனது அட்டகாசச் சிரிப்பைக் கேட்டு அமுதாவும் "என்ன? என்ன?" என்று கேள்வியோடும் நமுட்டுச் சிரிப்போடும் ஓடிவந்துவிட்டாள். ஊரின் பெயர்களைக்கொண்ட அந்தப் பட்டியலை அவளிடமும் அவன் காட்டிவிட்டான். "என்னங்க இது உப்பு புளி மொளகான்னு பலசரக்கு கடை லிஸ்ட் மாதிரி ஊரு பேருங்களை எழுதி வச்சிருக்கீங்க? இதவேற வேல மெனக்கிட்டு வருஷாவருஷம் ஒரு டைரியிலேருந்து இன்னொரு டைரிக்கு மாத்திமாத்தி எழுதுவிங்களா?" என்று ஆச்சரியத்தை அடக்க இயலாமல் கேட்டாள்.

    "பள்ளிக்கூடத்துல ஒரு கேள்விக்கு சரியா பதில் எழுதலன்னா மேடம் என்ன செய்வாங்க?" என்று என்னைக் கேள்வி கேட்ட மகனிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.

    "இம்பொஸிஷன் எழுதச் சொல்வாங்க?"

    "அப்படின்னா?"

    "எழுதத் தெரியாத ஒவ்வொரு பதிலயும் அஞ்சஞ்சி தரம் எழுத வைப்பாங்க. அதான் இம்பொஸிஷன்."

    "எதுக்கு அப்படி எழுதணும்?"

    "எழுத எழுத தெரியாத பதில்கூட தெரிஞ்சதாயிடும்."

    "இந்த ஊருங்க லிஸ்ட் கூட ஒருவகையில எனக்கு நானே கொடுத்துக்கற இம்போஸிஷன்தான்டா." நான் அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தேன்.

    "அப்படின்னா?"

    "ஒரு வருஷத்துக்குள்ள இந்த இந்த வேலைங்களையெல்லாம் செய்யணும்னு திட்டம் போடறன். ஒரு சில திட்டங்களை செய்ய முடியுது. ஒருசில திட்டங்களை செய்ய முடியலை. செய்ய முடியாத திட்டங்களை வருஷ முடிவுல அடுத்த வருஷத்துலயாவது செஞ்சிடணும்ன்னு தீர்மானிச்சி பட்டியல் போட்டு வச்சிருக்கேன். அதைப் பாக்கும்போதெல்லாம் சீக்கிரம் செஞ்சிடணும்னு ஒரு வேகம் வரும். ஞாபகத்திலேருந்து நழுவிடக் கூடாதில்லையா? அதுக்குத்தான் அந்தப் பட்டியல்."

    என் பட்டியலுக்கான ஆதார நோக்கத்தை அறிந்து கொண்டதில் அவன் முகம் திருப்தியைப் புலப்படுத்தியது. மறுபடியும் அந்தப் பட்டியலைப் பார்த்துக்கொண்டான்.

    "இது என்னப்பா எகிப்துலாம் எழுதியிருக்கீங்க?"

    "அங்கதானடா பிரமிட் இருக்குது."

    "சீனா?"

    "பெருஞ்சுவர் இருக்கிற இடமாச்சே"

    "நயாகரா?"

    "உலகத்துலயே பெரிய நீர்வீழ்ச்சி."

    "ஐயோ, அதெல்லாம் தெரியுதுப்பா, அந்த ஊரு பேருங்களையெல்லாம் எதுக்கு இந்த நோட்டுல எழுதிவச்சிருக்கிங்க?"

    "அதெல்லாம் பாக்கவேண்டிய இடங்கடா."

    "அப்பா, விளையாடறதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதெல்லாம் எந்த நாட்டுல இருக்குது? என்னமோ சென்னை, பாண்டிச்சேரிக்கு போய்வரமாதிரி திட்டம் போடறீங்க?"

    "உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரிடா, ஒருநாள் அதை போயி பாத்துடணும்."

    என் வார்த்தைகளில் தெரிந்த உறுதி அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தது. தொடர்ந்து அந்தப் பட்டியலைப் பார்த்தான்.

    "இது என்ன ரஷ்யா?"

    "அதுதாண்டா, நம்ம அன்னா கரினினா தல்ஸ்தோய் பிறந்த இடம்"

    மேற்கொண்டு அவன் அப்பட்டியலைப் பார்க்காமல் திருப்பிக்கொடுத்தான். "முதல்ல நெம்பர் ஒன்னுன்னு பேர்போட்டு சொத்தைவிளையோ அத்தைவிளையோ என்னமோ எழுதியிருக்கிங்களே, அங்க போயி திரும்பற வேலைய பாருங்க. அப்புறமா அமெரிக்கா, ரஷ்யா, எகிப்துன்னு பறக்கலாம்."

    அவன் சிரிக்கவில்லை. ஆனால் அவன் உதடுகளில் ஒரு பெரிய சிரிப்பு ஒளிந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

    "ஏன்டா, என்னால அங்கலாம் போகமுடியாதுன்னு நெனைச்சிகிட்டியா?"

    "மொதல்ல பாஸ்போர்ட் எடுங்கப்பா. போவறதபத்தி அப்பறமா யோசிக்கலாம்."

    "என்னால முடியாதுன்னு ஒனக்கு தோணுதா?"

    "அப்பா, மொதல்ல சொத்தைவிளைக்கு போவற வழிய பாருங்க. மத்ததை அப்பறமா பாத்துக்கலாம்."

    சொல்லிக்கொண்டே கிரிக்கெட் பேட்டையும் பந்தையும் எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டான். அந்த நடை என் ஆவலை மேலும் அதிகப்படுத்தியது. வந்த வேகத்துக்கு எல்லா வேலைகளையும் ஒருகணம் ஒதுக்கிவைத்துவிட்டு வண்டியேறிவிடவேண்டும் என்று வேகம் வந்தது. போகவும் வரவும் எப்படியும் மூன்று நாளாவது விடுப்பிருந்தால்தான் முடியும். ஏராளமாக விடுப்பிருந்தாலும் எடுக்கமுடியாத சூழல். அலுவகத்தில் வேலைச்சுமை. நாள்தோறும் ஏதாவது புதிய புதிய பிராஜெக்டுகள். அறிக்கைகள். செலவுக்கணக்கு. பவர்பாயின்ட் பிரஸன்டேஷன்கள். மாதாந்திர கூட்டங்கள். குறிப்புகள். கடிதங்கள். எண்ணங்களைச் செயல்படுத்தமுடியாத அளவுக்கு எல்லாமே பாரமாக அழுத்திக்கொண்டிருந்தன.

    ஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதும் தள்ளிப்போவதுமாகவே இருந்தது. எதிர்பாராத விதமாக கிறிஸ்துமஸை ஒட்டி இரண்டு நாள்கள் விடுப்பு அமைந்ததும் நானும் நண்பரொருவரும் கிளம்பிவிட்டோம். உண்மையாகவே பிரயாணச்சீட்டு வாங்கியாகிவிட்டது என்று நண்பர் தொலைபேசியில் சொன்னபோது அமுதாவால் நம்பமுடியவே இல்லை. "நெஜமாவே தனியா கௌம்பிட்டிங்களா?" என்று கேட்டாள். "ஆமாம், இந்த தரம் நான் போயி தனியா பாத்துட்டு வரேன். அடுத்த வருஷம் உங்களயெல்லாம் அழைச்சிகிட்டு போறேன்" என்றேன்.

    இரவுப் பயணம். ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி தூக்கமின்றி உட்கார்ந்திருந்தேன். வழக்கமாக எந்த ஊருக்குக் கிளம்பினாலும் குடும்பத்தோடு கிளம்புவதுதான் வழக்கம். அமுதாவும் மயனும் இல்லாமல் நான் பார்த்த இடங்கள் குறைவு. அவர்களும் அருகில் இருந்தால்தான் மனம் நிறைந்தமாதிரி இருக்கும். பத்தாவது வகுப்பைத் தாண்டிய பிறகு மயனுக்கு தினமும் ஏதாவது தேர்வுகள் அல்லது தனிப்பாடப் பயிற்சி என்று ஒன்றுமாற்றி ஒன்றாக வேலை முளைத்துவிடுவதால் சமீபத்திய பயணங்களில் அவர்களை இணைத்துக்கொள்ள இயலவில்லை.

    வெளியே முழுநிலா. மரங்கள்மீதும் தார்ச்சாலைமீதும் குன்றுகள்மீதும் அதன் அமுதம் பாய்ந்தபடி இருந்தது. குளுமையான காற்று. கூடவே ஓடிவரும் நிலவின் அழகில் மனம் பறிகொடுத்தபடி இருக்கையில் சாய்ந்திருந்தேன். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. விடிந்து நாகர்கோயில் சேர்ந்ததும்தான் விழிப்பு வந்தது. வெளியே நல்ல வெளிச்சம். எங்கும் இளம்தூறல். ஜன்னலைத் திறந்தபோது சாரலடித்தது.

    நானும் நண்பரும் இறங்கி விடுதியொன்றில் அறையெடுத்து தங்கினோம். அன்று பகல்முழுக்க எங்களுக்கு வேலை இருந்தது. சூரிய அஸ்தமனத்தையும் பௌர்ணமிநிலவின் எழுச்சியையும் காண சாயங்காலமாக கன்னியாகுமரியின் பக்கம் சென்றுவரலாம் என்று திட்டமிட்டிருந்தாலும் முடியவில்லை. இரவு விடுதிக்குத் திரும்பும்போதே வாடகை வாகனத்துக்குப் பேசி முடிவுசெய்தோம். காலையில் ஐந்தே காலுக்கெல்லாம் எழுந்து கால்மணிநேரத்துக்கெல்லாம் தயாராகிவிடவேண்டும் என்றும் ஐந்தரைக்கு வாகனம் வந்துவிடவேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்.

    இரவெல்லாம் ஒரே சிந்தனை. பல நாள்களாகப் பார்க்க ஆசைப்பட்டு தள்ளித்தள்ளிப்போன கடற்கரைக்கு வெகு அருகிலேயே நான் உறங்குகிறேன் என்பது ஒருவித பரவசத்தைக் கொடுத்தது. திசையும் வழியும் அறிந்தால் ஒருமுறை இரவிலேகூட சென்று பார்த்துவரலாம் என்று ஆவலெழுந்தது. கோவாவிலும் எர்ணாகுளத்திலும் மட்டுமே இரவு நெடுநேரம்வரை கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறோம். இளமையில் இரவு பன்னிரண்டுமணிக்கு வேலை முடிந்து காலார நடந்து புதுவைக் கடலைப் பார்த்த நாள்கள் நினைவில் எழுந்தன. இப்போதெல்லாம் இரவு வேளைகளில் எந்தக் கடலின் அருகிலும் யாரையும் அனுமதிப்பதில்லை என்று நண்பர்கள் சொன்னதையும் நினைத்துக்கொண்டேன். உறக்கம் வராமல் பெட்டிக்குள் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். ஒருமணிநேரம் படித்தபிறகு கண்கள் சோர்வடைய ஆரம்பித்தன. பிறகுதான் தூங்கினேன்.

    குறிப்பிட்ட நேரத்தில் காலையில் எழுந்து அரைமணிநேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு புதுஉடையுடன் வெளியே வந்தோம். ஏற்கனவே சொல்லிவைத்த வாகனம் வரவில்லை. பத்து நிமிடம் பார்த்தபிறகு வாகன உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டோம். வாகனம் கிளம்பிவிட்டதாகவும் ஓட்டுநரின் பெயர் பெருமாள் என்றும் சொல்லி வாகனத்தின் எண்ணையும் கொடுத்தார் அவர். அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்று தேநீர் பருகிவிட்டுத் திரும்பினோம். விடுதி வாசலில் வாகனம் வந்து நிற்பதை தொலைவிலிருந்தே பார்த்தோம்.

    அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்துக்குள் ஏறி அமர்ந்தோம். முதலில் சொத்தைவிளைக்குச் செல்லுமாறு சொன்னோம். என் மூன்றாண்டுக் கனவு நிறைவேறும் பரவசத்தில் நான் மூழ்கியிருந்தேன். பிரதான சாலையிலிருந்து விலகி சின்னச்சின்ன கிராமசாலை வழியாக ஓடிய வாகனம் சிறிது நேரத்தில் பெரிய தென்னந்தோப்புக்கிடையே இருந்த சின்னச்சாலை வழியாக ஓடத் தொடங்கியது. பாதை சரிதான் என்பதை அங்கங்கே இருந்த பெயர்ப்பலகைகள் காட்டின. சில நிமிடங்களில் வாகனம் கடற்கரையை அடைந்தது.

    மிகப்பெரிய ஓவியத்தைப்போல அந்தக் கடற்கரை காணப்பட்டது. யாருமற்ற கடற்கரை. நானும் நண்பரும் மட்டுமே இருந்தோம். ஏதோ ஒரு நடனத்துக்கான பயிற்சியைப்போல அலைகள் ஓயாமல் நெளிந்தபடி இருந்தன. நீண்ட மணற்பரப்பையும் தொலைவில் சுருண்டுசுருண்டு ஒடுங்கிய அலைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போலத் தோன்றியது. இந்நேரத்துக்கு என் மகன் பத்துக் குட்டிக்கரணம் போட்டு முடித்திருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.

    சூரியன் உதிக்கவிருக்கும் திசையைப் பார்த்து நாங்கள் நடக்கத் தொடங்கினோம். மணலில் கால்கள் புதைய நடப்பதும் ஒருவிதமான பௌடரை மிதிப்பதைப்போன்ற உணர்வை கரைமணல் கொடுப்பதும் விசித்திரமாக இருந்தது. வானமும் கடலும் இணையும் விளிம்பில் உருவான நிறக்கலவையின் வசீகரத்தில் மனம் பறிகொடுத்து அப்படியே நின்றுவிட்டேன். கடலின் மேற்பரப்பின் நிறம் மெதுமெதுவாக மாறத் தொடங்கியது. குழந்தைகள் துள்ளித்துள்ளி ஓடிவருவதைப்போல குறுக்கும் நெடுக்குமாக எண்ணற்ற அலைகள் கைவீசித் தாவின. எதைநோக்கி எங்கள் கவனத்தைக் குவிப்பது என்று ஒருகணம் தடுமாற்றமாக இருந்தது.

    ஆனந்தத்தில் எங்கள் மனம் தளும்பியது. கடலின் அடிவயிற்றிலிருந்து சூரிய உருண்டை புறப்பட்டுவருவதை பரவசத்துடன் பார்த்தோம். வெகுநேரமாக தேடிக்கொண்டிருந்த பொருளை மறைத்துவைத்திருக்கும் குழந்தை ஒருவித குதூகலத்துடன் மெதுமெதுவாக பையிலிருந்து வெளியே எடுத்துக் காட்டுவதைப்போல சூரியனை கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி கடலின் மடியிலிருந்து தூக்கிக் காட்டுவதைப்போல இருந்தது. கடவுளே. அது ஒரு செம்பழம். தங்கத்தட்டு. நெருப்புக்குடம். செம்பருத்திப் பூக்களால் நிறைந்த கூடை. அந்தப் பக்கமாக முகம் திரும்பி நிற்கும் பெண்ணின் பூக்கொண்டை. தூளியிலிருந்து முகத்தைமட்டும் நீட்டி எட்டிப் பார்க்கும் பிஞ்சுக்குழந்தை. நெற்றிக் குங்குமம். தேவமலர். செஞ்சாந்து பூசிய பாதம். ஒரு கணத்தில் மனம் எதைஎதையோ அடுக்கிப் பார்த்தது. எல்லாமே அந்த உண்மையான சூரியனுக்குப் பொருந்துவதைப்போலவும் பொருந்தாததைப்போலவும் இருந்தது.

    பைத்தியம் பிடித்ததைப்போல அந்த சூரியனையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த மேகத்தின் தடையும் இல்லை. பளபளவென்று ஒளியைச் சிந்தியபடி வானத்தில் அடியெடுத்துவைத்தது சூரியன். அதன் செந்நிறத்தில் ரத்தக்குழம்பாக மாறிய கடல் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிறத்தை அடைந்தது. வெண்சக்கரமாக உருமாறிய சூரியன் வானவீதியில் வலம்வரத் தொடங்கியது. அதன் ஒளிக்கதிர் மேனியில் பட்டபோது சிலிர்த்தது. வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப்போலே என்று ஆண்டாளைப்போல பித்தேறிப் பாடவேண்டும்போல மனம் துடித்தது. அந்த உதயம் மிகப்பெரிய எழுச்சியை எனக்குள் ஊட்டியது. இதைப்பற்றிச் சொன்ன நண்பரை நன்றியுடன் ஒருகணம் நினைத்தக்கொண்டேன்.

    கரைமணலில் சுற்றிஅலைந்தது போதாதென்று அலைகளை மிதித்தபடி வெகுதுநூரம் நடந்தோம். வந்துவந்து செல்லும் அலைகள் முழங்கால்வரை எம்பி ஒருகணம் எங்களைத் தடுமாறவைத்துவிட்டுத் திரும்புவதைக் காண சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஏழேமுக்கால்வரை நானும் நண்பரும் பேசியபடி அந்தக் கரையில் தனியாகவே திரிந்தோம்.

    பசிவேளை நெருங்கியது. குளித்து சிற்றுண்டி முடிந்தபிறகு மறுபடியும் வரலாம் என்று பேசியபடி வாகனம் நின்றிருந்த தார்ச்சாலைக்குத் திரும்பினோம். அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகையில் கன்னியாகுமரியைச் சுற்றி உள்ள ஆறு கடற்கரைகளின் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. வாகனத்தை அமர்த்தியிருந்ததால் குளித்துமுடித்த பிறகு வெகுதொலைவுள்ள கடற்கரைக்கு முதலில் சென்றுவிட்டு பிறகு அங்கிருந்து ஒவ்வொன்றாகப் பார்த்தபடி திரும்பி இறுதியாக கன்னியாகுமரியை அடைவது என்று திட்டமிட்டுக்கொண்டோம்.

    குளிக்கும்போதும் மனத்துக்குள் அந்தச் சூரிய உதயக்காட்சியே மீண்டும் மீண்டும் எழுந்து கிளர்ச்சியூட்டியபடி இருந்தது. சிற்றுண்டி சாப்பிட விடுதியை அடைந்தோம். விடுதியில் எங்களோடு தங்கியிருந்த இன்னொரு குடும்ப உறுப்பினர்கள் எங்கள் மேசைக்கு எதிர்ப்புறம் அமர வந்தார்கள். வயதான தம்பதியினர் இருவர். அவருடைய மகள். இரண்டு பேரக் குழந்தைகள். அங்கே வந்தபின்னர் நண்பரான புகைப்படக் கலைஞர் ஒருவர். முதல் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்ததால் தயக்கமின்றி உரையாடத் தொடங்கிவிட்டேன். அவர்களிடமும் அந்த சொத்தைவிளை கடற்கரையைப்பற்றி சொன்னேன். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊர் வங்கிக்கிளையிலேயே வேலை செய்ததாகவும் அந்த சூரிய உதயத்தை தினம் தினமும் பார்த்திருப்பதாகவும் சொன்னார். கொல்லன் தெருவிலேயே ஊசிவிற்பதா என்று அமைதியானேன். அவர்களும் கன்னியாகுமரியைப் பார்க்க வாடகைக்கு வண்டி அமர்த்தியிருந்தார்கள். சிற்றுண்டி முடிந்ததும் நாங்கள் எங்களுடைய வண்டியில் அமர்ந்து பயணத்தைத் தொடங்கினோம். எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் வேறொரு திசையில் கிளம்பினார்கள்.

    திட்டப்படி வெகுதொலைவிலிருந்த முட்டம் கடற்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது வாகனம். அதன் பெயரை நினைத்ததுமே அதன் எழிலைப் பலவிதமாக படம்பிடித்துக் காட்டிய பாரதிராஜாவின் திரைப்படங்கள் நினைவில் மோதின. அந்தக் காட்சிகளை உள்ளூர அசைபோட்டுக்கொண்டிருந்த நேரத்தில் எங்கள் வாகனம் கப்பற்படைக் காவலர் ஒருவரால் தடுக்கப்பட்டது. வாகனத்திலிருந்து வெளியே இறங்கினேன்.

    "எங்க போறீங்க?"

    "சும்மா, கடற்கரைய பாக்கத்தான்."

    "போங்க. ஆனா கரைக்கு பக்கமா போவாதீங்க. தொலைவாவே நின்னு பாத்துட்டு திரும்பிடுங்க."

    "என்ன விஷயம்?"

    "தெரியலைங்க சார். அலைவேகம் அதிகமா இருக்கறதா செய்தி வந்திருக்குது."

    அவருக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. அவருக்குக் கிடைத்த செய்தி அவ்வளவுதான் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். நான் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தேன். கிட்டத்தட்ட கடலை நாங்கள் நெருங்கிவிட்டோம். தொலைவில் மிக உயரமாக கடலலைகள் எழுவதை அங்கிருந்தே பார்த்தேன். இவ்வளவு அருகில் வந்தபிறகு பார்க்காமல் திரும்பும் ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயத்தில் ஒருவர் செல்லவேண்டாம் என்று எச்சரித்து தடுக்கும் நிலையில் பயணத்தைத் தொடரவும் விருப்பமில்லை.

    "இந்த கடற்கரை மட்டும்தான் இப்படியா? எல்லா இடங்களும் இப்படித்தானா?"

    "எல்லா இடங்கள்ளயும் எச்சரிக்கை கொடுத்திருக்காங்க சார். எங்கேயும் போவ முடியாதுன்னுதான் நெனைக்கறேன். போறதுன்னா போங்க சார். ஆனா ஜாக்கிரதையா இருங்க. தண்ணிகிட்டமட்டும் போயிடாதீங்க."

    ஒரு பெருமூச்சுதான் என் பதிலாக இருந்தது. "கடல் பக்கமே வேண்டாம், திற்பரப்புக்குச் செல்லலாம்" என்று நண்பர் ஆலோசனை சொன்னார். நான் ஏற்றுக்கொண்டேன். வாகனம் திரும்பி தக்கலை வழியாக திற்பரப்புக்கு ஓடியது.

    அங்கங்கே பலர் கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்கும் உண்மை தெரியவில்லை. கடல் பொங்கிவிட்டது என்றார்கள். பனைமரம் உயரத்துக்கு அலை வந்து கரையில் நின்றவர்களை இழுத்துச் சென்றுவிட்டது என்றார்கள். நாகப்பட்டணத்திலும் வேளாங்கண்ணியிலும் கடுமையான சேதம் என்றார்கள். எதையும் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    மாலைதான் நாங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பினோம். அழிவின் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கின. நாங்கள் காலையில் சூரியோதயம் பார்த்த சொத்தைவிளையில் இருநுநூற்றுக்கும் மேற்பட்டவர்களையும் வாகனங்களையும் கடல் கொண்டு சென்றுவிட்டது என்றார்கள். என் கால்கள் நடுங்கத் தொடங்கின. நாங்கள் புறப்பட்டபோது யாருமே இல்லாத அக்கடற்கரையில் அரைமணிநேர அவகாசத்தில் இருநுநூறு பேர்கள் கூடிவிட்டிருக்கிறார்களா? என் மனம் படபடக்கத் தொடங்கியது. அமைதியிழந்து ஒருவித தவிப்பிலும் குற்ற உணர்விலும் குன்றினேன். சாலையில் நடக்கவே முடியவில்லை. தொடர்ந்து பற்பல பிணவண்டிகள். கன்னியாகுமரியில் கரையோரம் நின்றிருந்த ஆயிரம் பேர்களையும் கடல் விழுங்கிவிட்டது. பெரும்பாலும் பெண்கள். குழந்தைகள்.

    அன்று பக்கத்தில் சுசீந்திரம் திருவிழா. சுசீந்திரம் தேர் காணச் செல்பவர்கள் கன்னியாகுமரி பகவதியைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பவேண்டும் என்பது ஐதிகம். அந்தப் பழக்கத்தில் கடற்கரைக்குச் சென்றவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்க்காரர்கள். முக்கால்பங்குக்கும் மேல் பிணமாகிப் போய்விட்டார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களிலும் சின்னச் சின்ன டெம்போக்களிலும் அந்தப் பிணங்களை வைத்துக்கொண்டு குமுறிக்குமுறி அழுதபடி ஓடிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்கவே முடியவில்லை. அரைமணிநேர நடையில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பிணவண்டிகளைப் பார்த்தேன். எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை. அறைக்குத் திரும்பிவந்துவிட்டேன். ஒரே ஒரு கணம் தொலைக்காட்சியை ஒளிரவிட்டேன்.

    நாகை தொடங்கி கன்னியாகுமரிவரை மீட்டெடுக்கப்பட்ட பிணங்களின் வரிசையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீசியெறியப்பட்ட பொம்மைகள்போல தாறுமாறாகக் கிடந்த குழந்தைகளின் பிணங்கள் மனத்தைப் பிசைந்தன. பதற்றம் பெருகியபடி இருந்தது. அறையில் தனியாக இருக்க அச்சமாக இருந்தது. அறையை வேகமாக காலிசெய்துவிட்டு நண்பருடன் சேர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட அவரும் என் மனநிலையிலேயே இருந்தார். ஊரைவிட்டுக் கிளம்பவேண்டிய நேரமும் நெருங்கியபடி இருந்தது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாகனத்துக்குத் திரும்பினோம். காலையில் ஒரே மேசையில் எங்களோடு உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட புகைப்படக் கலைஞரைப் பார்த்தோம். அவர் கையில் கட்டு. கண்களில் மிரட்சி. கட்டுப்பாட்டைமீறி அவர் அழுதபடியிருந்தார்.

    அருகில் நெருங்கி என்னவென்று விசாரித்தோம். அவர் சொன்ன விஷயம் எங்களை நடுநடுங்கவைத்தது. சொத்தைவிளைக் கடற்கரையில் படமெடுப்பதற்காக எல்லாரும் நின்றிருக்கிறார்கள். அந்தக் கணத்தில்தான் அந்த ராட்சச அலை எழுந்திருக்கிறது. ஓடுஓடு என்று குரல் கொடுத்தபடி எல்லாரும் கரையை நோக்கி ஓடிவந்திருக்கிறார்கள். அவர்களைவிட வேகமாக வந்த அலை எல்லாரையும் சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு புரட்டிப் புரட்டித் தள்ளிய அலை எங்கோ ஒரு மரத்தடியில் அவரை ஒதுக்கிவிட்டுத் திரும்பிவிட்டது. விழித்துப் பார்த்தபோது கரையில் யாருமே இல்லை. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்த கரை ஒரே கணத்தில் கழுவிவிட்டதைப்போல மாறிவிட்டது. நண்பரால் நிமிர்ந்துகூட பார்க்க இயலவில்லை.

    நண்பர் குடும்பம்? நான் அவசரமாகக் கேட்டேன்.

    "அந்த பெரியம்மா கிடைத்துவிட்டார்கள். பேரனும் கிடைத்துவிட்டான். பெரியவர், அவர் மகள், பேத்தி பற்றி தகவல் தெரியவில்லை."

    "அப்படியென்றால்?"

    "பெரும்பாலும் மூழ்கித்தான் போயிருக்கவேண்டும்."

    என் பலமெல்லாம் குன்றி சக்கையாக மாறியதைப்போல இருந்தது. அழுகை உள்ளூரப் பொங்கிவந்தது. சூரியோதயம் காட்டி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய சொத்தைவிளைக் கடற்கரைக்கு இப்படி மக்களைக் காவு வாங்கும் வேசமும் வரும் என்பதை நம்பவே முடியவில்லை. பேசத் தோன்றாமல் பித்துப்பிடித்தபடி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

    "நீங்கள் போன வண்டி, டிரைவர்?"

    "எல்லாமே அலையில போச்சிங்க."

    மனபாரம் தாங்க இயலவில்லை. அவருக்கு தைரியம் சொல்லும் வார்த்தைகூட நெஞ்சிலிருந்து எழவில்லை. தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வண்டிக்குத் திரும்பினோம். அவர் எங்களைப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். வாடகைத்தொகையைக் கணக்குப் பார்த்து கொடுத்தார் நண்பர்.

    கூடஞு ண்ஞிஞுணஞு டிண ஓச்ணதூச்டுதட்ச்ணூடி

    "சார், முட்டத்தல நம்ம தடுத்தப்போ கடல்பக்கமே வேணாம், வேற பக்கமா போவலாம்ன்னு நீங்க எடுத்த முடிவாலதான் நாம பொழைச்சோம். இல்லைன்னா எல்லாருக்குமே ஜலசமாதிதான். "

    வாகனஓட்டி கையெடுத்து கும்பிட்டார். பெங்களூர் வண்டியைப்பற்றி விசாரித்தேன். சாலைகள் எதுவும் சரியில்லை என்றும் தாமதமாகவாவது வந்துவிடும் என்றும் சொல்லப்பட்டது. சோர்வோடு ஒரு கட்டையில் உட்கார்ந்தோம். மனம் அன்று காலை பார்த்த சூரியோதயத்தை மறுபடியும் நினைத்துக்கொண்டது. பளீரென முகம் காட்டிய சூரியனைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்ததைப்போல வேகவேகமாக எழுந்த சொற்குவியலை மறுபடியும் அசைபோட்டேன். வேதனையாக இருந்தது. காலையில் நினைவில் எழாமல்போன ஒரு சொல் அப்போது திடுமென நினைவில் உதித்தது. அது விஷக்கோப்பை.

    பாவண்ணன்

    கடலில் ஒரு துளி

    பாவண்ணன்

    1. அறியமுடியாத விஷயம்

    "காத்தப்போல மரணம் நம்ம சுத்திசுத்தி விளையாட்டு காட்டிகிட்டே இருக்கும். என்னைக்காவது ஒருநாளு நாம ஏமாந்த சமயம் பாத்து கீழ தள்ளிவிட்டுடும்" என்று ஒருமுறை சொன்னார் பெரியப்பா. அன்று காற்றின் தழுவலை உணர்ந்த ஒவ்வொரு தருணத்திலும் மனம் உக்கிரமாக மரணத்தை நினைத்துக்கொண்டது. அந்த வாக்கியம் மிதந்து மிதந்து மனத்தின் ஆழத்தில் சென்று படிந்தபிறகே என் பதற்றம் குறையத்தொடங்கியது. ஆனாலும் எங்கள் தெருவிலோ, பயணம் செய்யும் வீதிகளிலோ, செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளிலோ, நாடகங்களிலோ, தொலைக்காட்சிச் சித்திரங்களிலோ எதிர்பாராமல் காண நேர்ந்துவிடும் மரணக்காட்சிகள் ஒருகணமேனும் உறையவைத்துவிடும். அடுத்து என்ன செய்வது என்று எந்தவிதமான யோசனையும் மனத்தில் தோன்றிவிடாதபடி செயலிழக்கச்செய்து, ஒருவித இயலாமையின் துக்கத்துடன் நிற்கவைத்துவிடும். அந்த அதிர்ச்சியை ஒருபோதும் என்னால் தவிர்க்கமுடிந்ததில்லை.

    எந்த மரணக்காட்சியும் கண்முன்னால் இல்லாவிட்டாலும் அந்த அதிர்ச்சியை என்னை உணரவைத்துவிடுபவனாக திடீரென மாறிப்போனார் ராஜா. அவர் நெருங்கிவருவதைப் பார்த்தாலே என் இதயத்துடிப்பு அதிகரித்துவிடும். பேசிக்கொண்டே இருக்கும்போது "சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க" என்று சர்வசாதாரணமாக சொல்வார் அவர். அடுத்த ஒரு மணிநேரத்தில் அவருடைய தற்கொலைச் செய்தி என்னை வந்தடைந்துவிடும் என்பதைப்போல தீர்மானமான குரலில் அதைத் திருப்பித்திருப்பிச் சொல்வார். அவருடைய முகமும் பேச்சும் பயன்படுத்தக்கூடிய உவமைகளும் வாக்கியங்களும் நகைச்சுவைகளும் மரணத்தை ஒட்டியதாகவே இருக்கும். இருபத்திநாலுமணிநேரமும் மரணத்தைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பவரைப்போல அமைந்திருக்கும் அவர் பேச்சு. அவர் சுபாவம் முழுக்கமுழுக்க அப்படி மாறிவிட்டது.

    பத்தாண்டுகளுக்கு முன்னால் எனக்கு அறிமுகமாகும்போது அவர் அப்படிப் பழகியதில்லை. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மாலைக்கல்லூரியில் அப்போதுதான் தமிழ்விரிவுரையாளராக வேலையில் சேர்ந்திருந்தார். சொந்த ஊர் சிதம்பரம் பக்கம். தாய், தந்தை, சகோதர சகோதரிகள் அனைவரும் ஊரில் இருந்தார்கள். லால்பாக் பக்கம் ஒரு அறையெடுத்துத் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார். ஒரு ஞாயிறு மாலையில் முகவரியைத் தேடிவந்து அறிமுகம் செய்துகொண்டார். அந்த முதல் சந்திப்பிலேயே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பழகிய ஒருவரைப்போல நெருக்கமானார். சிறுகதைகள் அவருக்குப் பிடித்தமான துறை. இலக்கியப் பத்திரிகைகளில் வரும் எல்லாச் சிறுகதைகளைப்பற்றியும் விவாதித்தபடியே இருப்பார். பேச்சு, சிரிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் உருவமாக இருந்தார் ராஜா.

    அவர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது அவர் திருமணம். அவரிடம் பயின்ற கல்லூரி மாணவியையே விரும்பித் திருமணம் செய்துகொண்டார். தொடக்கம் நன்றாகவே இருந்தது. பிறகுதான் என்னென்னமோ பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. திடீரென ஒருநாள் மாலை என் அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தார் அவர் மனைவி.

    "நான் ராஜா மனைவி பேசறேன். இப்ப வீட்டுல நான் இல்ல. ஒரு ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். ஒங்க நண்பர்கிட்ட சொல்லிடுங்க."

    ஹாஸ்டல் முகவரியைக் குறித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மேற்கொண்டு விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி. மறுபக்கம் அச்சம். மணியைப் பார்த்தேன். மாலைவகுப்புகள் தொடங்கும் நேரம்தான். அலுவலகம் முடிந்ததும் வண்டிபிடித்து அவர் கல்லூரிக்குச் சென்றேன். அவர் வகுப்பில் இருந்தார். ஒருமணிநேரத்துக்குப் பிறகுதான் வந்தார்.

    "என்ன எழுத்தாளரே, காலேஜ் வரைக்கும் வந்துட்டீங்க? "

    நம்பமுடியாமல் என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் சிறுநகை தெரிந்தது. மனைவியின் செய்கை பற்றி எதையும் அவர் முகத்தில் காணக்கிடைக்கவில்லை. ஒருகணம் என்னுடன் பேசியது இவர் மனைவியே இல்லையோ என்று தோன்றியது. எச்சிலைக்கூட்டி விழுங்கியபடி அவரைத் தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றேன். தேநீர் பருகியபடி தொலைபேசி அழைப்பின் விவரத்தைச் சொன்னேன். அவர் முகம் மெல்ல மெல்ல இருளடையத் தொடங்கியது. தம்ளரில் இருந்த தண்ணீரில் விரல் நனைத்து மேசையில் அவர் பெயரை எழுதி எழுதி அழித்தபடி சில கணங்களைப் போக்கினார். நிமிர்ந்து பார்த்தபோது அவர் கண்களில் கண்ணீர் தளும்பியபடி இருந்தது.

    "என்னங்க நடந்தது ராஜா?" நான் மெதுவாகக் கேட்டேன். உடனே அவர் உடைந்து அஷீத் தொடங்கிவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக சொல்லத் தொடங்கினார். ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டார்களே தவிர இருவருக்கும் மனம் ஒத்துப்போகவில்லை. எதைப் பேசினாலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டனர். எல்லா உரையாடல்களும் கோபத்தில் முடிவடையத் தொடங்கின. எந்தக் கட்டத்திலும் இருவருடைய ரசனையும் ஒத்துப் போகவில்லை. அப்போதுதான் அவர் முதன்முதலாக "சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க" என்று சொன்னார்.

    ஒருகணம் நான் ஆடிப்போனேன். "இதுக்கெல்லாம் ஒரொருத்தங்களும் சாகணும்னு முடிவெடுத்தா உலகத்தில எல்லாருமே செத்துத்தான் போவணும் ராஜா. பிரச்சனை நமக்கு மட்டுமில்ல ராஜா. பொறந்தவங்க எல்லாருக்குமே ஏதோ ஒரு விதத்தில ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் தற்கொலை அது இதுன்னு பேசலாமா? மொதல்ல போயி வீட்டுக்காரம்மாவ கூப்பிட்டுவாங்க."

    "அதெல்லாம் வேணாங்க. அவ அங்கயே இருக்கட்டும். அதுதான் அவளுக்கும் நிம்மதி. எனக்கும் நிம்மதி."

    "அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆத்திரத்துல கிழிச்சிக்கிற காதை அப்பறமா எதக்கொண்டும் ஒட்டமுடியாது. ஆம்பள பொம்பள உறவும் அப்படித்தான். "

    "என் கஷ்டம் ஒங்களுக்குப் புரியாதுஙக. வேற ஒரு ஆளா இருந்தா இந்நேரம் அவன் செத்து பொதைச்ச எடத்துல புல்லு மொளச்சிருக்கும். நானா இருப்பதால ஏதோ காலத்த கடத்திட்டேன். இருந்தாலும் சாகறதத் தவிற வேற ஒருவழியும் தோணல."

    அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னேன். தைரியப்படுத்தி அவர் மனைவி தங்கியிருக்கும் ஹாஸ்டல் முகவரியைக் கொடுத்து உடனே சென்று அழைத்துவரும்படி அனுப்பிவைத்தேன்.

    Mச்ண நாளடைவில், அவர் எண்ணங்கள் மாறவும் அவர் சக்தியை ஒருமுகப்படுத்திக்கொள்ளவும் பாதியிலேயே நிறுத்திவிட்ட ஆய்வுப்பணியை முடிக்குமாறு வலியுறுத்திச் சொன்னேன். அவர் கல்வித் தகுதி கூடுதலாகும்போது வேறு நல்ல வாய்ப்புகள் கண்டிப்பாகக் கிட்டும் என்று நம்பிக்கை ஊட்டினேன். இப்படிச் சொன்னதும் வேகவேகமாக இதைமுடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல நாலுநாள் கஷ்டப்பட்டு வேலை செய்வார். அதற்கிடையே என்ன நேருமோ தெரியாது, மீண்டும் உள்சுருங்கிவிடுவார். மறுபடியும் சாகும் எண்ணங்கள் வந்து அவரை அலைக்கழிக்கத் தொடங்கிவிடும்.

    ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தன. ஒரு குழந்தை பிறந்தது. நிலைமை சீராவதற்கு மாறாக மேலும் மேலும் மோசமானது. ராஜா மதுவுக்கு அடிமையானார். மதுவின் போதையில் மட்டுமே நிம்மதியாக உறங்கமுடிவதாகச் சொன்னார். இதனால் அவர் தன் மனைவியாலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இவருக்குத் தெரியாமலேயே பலமுறை வீடுகள் மாறினார்கள். எப்படியோ கண்டறிந்து அவர் வீட்டுக்குள் நுழைந்தார். வாய்ச்சண்டை கைச்சண்டையானது. மனைவியின் சகோதரர்கள் துணைக்கு வந்தார்கள். போதையில் இருப்பவரை சக்கையாக அடித்து பாதையோரமாகத் தள்ளிவிட்டுச் சென்றார்கள். பழையபடி வாடகைக்கு தனியறை பார்த்துத் தங்கி வேலைக்குப் போனார் ராஜா. மதுவுக்காக வாங்கிய கடன்கள் மலைபோல இருந்தன.

    கடன்காரர்கள் கல்லூரிக்கே வந்து சம்பளப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். வாடகை தராததால் வீட்டுக்குச் சொந்தக்காரன் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டான். பலவந்தமாக பூட்டை உடைத்து உள்ளே நுழையப்போனபோது காவல்துறை வந்து அழைத்துச்சென்று விசாரிக்கவேண்டியதாயிற்று.

    ஒருநாள் இரவில் படுக்கப்போகிற நேரத்தில் திடீரென அழுக்கு உடையுடன் வந்தார். அவர் தோற்றம் அச்சமும் துக்கமும் தருவதாக இருந்தது. எதையும் விசாரிக்காமல் "உள்ள வாங்க" என்றேன். விளக்கைப் போட்டேன். உள்ளே வந்தவர் நாற்காலியில் அமர்ந்து தலைகுனிந்து குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார். என்ன நடந்திருக்கக்கூடும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. குழப்பமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவரே தெளிந்து "ரொம்ப பசிக்குது" என்றார். என் மனைவி அமுதா உடனடியாக சமையலறைக்குச் சென்று இருப்பதைப் போட்டுவந்து கொடுத்தார். வேகவேகமாக அவர் அள்ளி அள்ளிச் சாப்பிடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

    கைகழுவிக்கொண்டபிறகு மேசையில் கிடந்த சிறுபத்திரிகை ஒன்றைப் புரட்டினார். புதிய புத்தகங்களின் பெயர்களையெல்லாம் படித்தார். "நெறயா புதுசுபுதுசா புத்தகங்க வந்திருக்குதுபோல. வாங்கிப் படிக்கணும்" என்று சொன்னார். சட்டென ஒருகணத்தில் நிறுத்தி குடும்ப நிலைகளைத் துக்கம் தோய்ந்த குரலில் சொல்லத் தொடங்கினார். இறுதியில் "நான் செத்தாதான் இந்த பிரச்சனை தீரும்போல" என்று கசப்புடன் சிரித்தார். ஏதோ தற்கொலை முடிவை மனத்துக்குள் சுமந்திருப்பவர்போலத் தோன்றவைத்தது அச்சிரிப்பு. நான் திகைப்பில் பேச்சே எழாமல் நின்றேன். மாணவ நண்பர் ஒருவருடைய வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

    "நீங்களே ஒருதரம் அந்த அம்மாவ பாத்துப் பேசிப்பாருங்களேன்." அமுதா என்னைத் தூண்டினாள். அந்த முயற்சியையும் செய்துபார்த்துவிடுவது என்று நானும் விரும்பினேன். என்னால் அவர்கள் தங்கி இருக்கக்கூடிய முகவரியைக் கண்டுபிடிக்க இயலாததால் என் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.

    எதிர்பாராத தருணங்களில் அப்படி திடீர் திடீரென வாசலருகே வந்து நிற்பார். கொடுப்பதைச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார். ஒருமுறை இரவுநடைக்குச் சென்று திரும்பும் தருணத்தில் அவர் எங்கள் வீட்டருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபொழுது வீட்டுக்குத்தான் வர நினைத்ததாகவும் ஏதோ கூச்சம் காரணமாக தயக்கத்தில் நின்றுவிட்டதாகவும் சொன்னார். பிறகு, அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று சாப்பிடவைத்து அனுப்பினேன்.

    ஒருமுறை மணவிலக்குப் பத்திரத்தைத் தயார் செய்து வந்து சரிபார்த்துத் தருமாறு சொன்னார். மிகவும் கொதிப்பேறிய மனநிலையில் பேசினார். அவர் உதடுகள் கிழிந்திருந்தன. தையல் போட்டிருந்தார்கள். அவரை எதுவும் கேட்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. எல்லாமே புரிந்தது. கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவருடன் பேசி அமைதிப்படுத்தினேன். அவரை அம்முயற்சியிலிருந்து பின்வாங்குமாறு செய்ய படாதபாடு படவேண்டியிருந்தது.

    "சட்டப்படி டைவர்ஸ் பண்ணிட்டுத்தான் பிரிஞ்சி வாழணுமா? தனியா இருந்துட்டுப்போங்க. அதுல என்ன பிரச்சனை?"

    "சட்டப்படி அவளுக்குப் புருஷனா நான் வாழக்கூடாதுங்க. அதவிட நான் செத்துப்போகலாம்."

    மீண்டும் அதே பேச்சு. அது ஒரு விடுமுறைக் காலம். இடம்மாறி இருந்தால் ஒருவேளை அவர் ஆறுதலாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

    "ஒரு காரியம் செய்யுங்க. நான் கொஞ்சம் பணம் தரேன். பேசாம சிதம்பரம் போங்க. ரெண்டு முணுவாரம் ஊருல இருங்க. மனசு மாறும். அப்பறமா அம்மாவயாவது யாரயாவது தொணைக்கு கூப்பிட்டுக்கிட்டு வாங்க. சின்னதா இங்கயே ஒரு வீடு வாடகைக்குப் பாத்து இருங்க. சாவறேன் சாவறேன்னு சொல்லறதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்ல பாத்துக்குங்க."

    சிறிதுநேர யோசனைக்குப் பிறகு அப்படியே செய்வதாகச் சொன்னார். பணம் கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டேன். அதற்கப்புறம் அவரைச் சந்தித்தது ஒருமாதம் கழித்தபிறகுதான். கல்லூரிக்கு அருகிலேயே கட்டண விருந்தாளியாக ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும் ஊரில் அறுவடை முடிந்தபிறகு அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு வர இருப்பதாகவும் சொன்னார். எங்கள் குடியிருப்பிலேயே குறைந்த வாடகையில் ஒரு வீட்டைப் பார்த்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். பேச்சில் தெளிவும் நிதானமும் இருந்தன. முகத்திலும் சற்றே தெளிவு கூடிவந்திருப்பதைக் காண ஆறுதலாக இருந்தது.

    பத்து நாட்கள் கழிந்தபிறகு ஒரு ஞாயிறு காலையில் அவர் வீட்டுக்கு வந்தார். இன்னொரு நண்பரைக் காண்பதற்காக நான் தயாராகிக்கொண்டிருந்தேன். பத்திலிருந்து பத்தரைக்குள் பார்க்க வருவதாக வாக்களித்திருந்தேன். அப்போதே ஒன்பதரையைத் தொட்டுக்கொண்டிருந்தது நேரம்.

    "போன வாரம் வந்தன். வீடு பூட்டியிருந்திச்சி" வாசலுக்கு அந்தப்பக்கம் நின்றபடியே பேசினார். செருப்பைக்கூட கழற்றவில்லை.

    "ஆமாம். நாலு நாள் ஊருக்குப் போவறமாதிரி ஆயிடுச்சி. எங்க பெரியப்பா செத்துப்போயிட்டாரு. போன் வந்ததும் ஒடனே கௌம்பிப் போயிட்டம்."

    "பாவம், வயசானவரா?"

    "எண்பது, எண்பத்திரண்டு இருக்கும்."

    "உலகத்துல எல்லாருக்கும் சாவு வருது. எனக்குத்தான் வரமாட்டுது."

    "மறுபடியும் ஒங்க பழைய பல்லவிய ஆரம்பிச்சிட்டிங்களா? இருக்கறவரிக்கும் ஒழுங்கா வாழற வழிய பாருங்க ராஜா."

    அவர் சிரித்தார்.

    "சரி, உள்ள வாங்க, சாப்படறிங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.

    "இல்லங்க. வேணாம். ஓட்டல்ல இப்ப சாப்புட்டுத்தான் வரேன்."

    "எதாவது பணம் வேணுமா? "

    "அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க கௌம்புங்க. எங்கயோ போக தயாரானமாதிரி இருக்கறிங்க."

    "ஆமா. பத்துமணிக்கு வரேன்னு சொல்லியிருக்கேன். அதான் அவசரமா கௌம்பறேன்."

    "கௌம்புங்க. கௌம்புங்க. நான் சும்மா பாத்துட்டு போகலாம்ன்னுதான் வந்தேன்."

    "சொல்லுங்க ராஜா? எந்த விஷயமாவது சொல்லணுமா?"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. சும்மா பாக்கணும்ன்னு தோணிச்சி. அதான் கௌம்பிவந்தேன்."

    "ஏதாவது பிரச்சனையா?"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. நீங்க கௌம்புங்க."

    "ராத்திரிக்கு ஓய்வா இருக்கும்போது வேணும்னா வாங்க. பேசலாம்."

    இருவருமாக வீட்டைவிட்டு கிளம்பினோம். அவர் வழியில் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நின்றுவிட்டார். அவருடன் தேநீராவது அருந்தினால் நல்லது என்று தோன்றியது.

    "ஒரு டீயாவது குடிக்கறீங்களா ராஜா?"

    "எல்லாம் ஆச்சிங்க. நான் சும்மா பாக்கத்தான் வந்தன். நீங்க கௌம்புங்க. ராத்திரி ஒங்களுக்கு போன் பண்றேன்."

    நான் ஆட்டோ பிடித்துப் பயணத்தைத் தொடர்ந்தேன். அன்று இரவு அவர் திரும்பவும் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அல்லது தொலைபேசியிலாவது அழைப்பு வருமென நினைத்திருந்தேன். எதைச் சொல்ல வந்தாரோ, தெரியவில்லையே என்று அமுதாவிடம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக என் மனத்தில் ஒருவித அமைதியின்மை படர்ந்தது. பாதித்தூக்கத்தில் பலமுறை அவரை நினைத்து நினைத்து விழித்துக்கொண்டேன்.

    அடுத்த வாரம். மனஅடுக்குகளிடையே அச்சம்பவம் பின்னகர்ந்து தேய்ந்தது. காலை நேரம். அதிகாலை நடையை முடித்துக்கொண்டு திரும்பிய சமயம். தேநீரை அருந்தியபடி செய்தித்தாளைப் புரட்டினேன். இரண்டாவது பக்கத்தில் வந்திருந்த செய்தியைப் படித்ததும் நம்ப முடியாமல் அலறிவிட்டேன். அமுதா ஓடிவந்தாள். செய்தியை இருவருமாக மீண்டும் படித்தோம். நகரில் மாலைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த ராஜா நெஞ்சுவலியால் மரணமடைந்ததாகவும் ஆசிரியர்கள் சங்கம் கூடி அஞ்சலி செலுத்தியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஒருசில கணங்களுக்கு மீளமுடியாத திகைப்பில் ஆழ்ந்துபோனேன். மறுகணமே துக்கத்தில் மூழ்கியது மனம். "சாகறத தவிர எனக்கு வேற வழியே இல்லிங்க" என்று அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வாக்கியம் நினைவில் மிதந்து வந்தது. பார்க்கவந்து எதையுமே சொல்லாமல் போன கடந்தவாரச் சம்பவம் நெஞ்சில் முட்டியது. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அம்மரணச்செய்தி அவரைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்த இன்னொரு கல்லூரிப் பேராசிரியருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். சுருக்கமாக அவர் அம்மரணச்செய்தியை உறுதிப்படுத்தினார். அறைக்குள் இருந்த சமயத்தில் திடீரென நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்பட்டதாகவும் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்வதற்குள் மரணம் நேர்ந்துவிட்டதாகவும் சொன்னார்.

    "என்னைக்கு நடந்தது? எனக்கு விஷயமே தெரியாம போச்சே."

    "போன ஞாயித்துக்கெழமை சாய்ங்காலமாம். எனக்கும் அடுத்த நாள்தான் தெரிஞ்சுது. நானும் போவலை. பாவம், குடும்பத்தில ஏதோ பிரச்சனை போலிருக்கு. "

    அக்கணத்தில் என் துக்கம் பலமடங்கானது. கடந்த வாரம் எதையோ சொல்லவோ, பகிர்ந்துகொள்ளவோ வந்ததைப்போல வந்து சொல்லாமல் என் அவசரப் புறப்பாட்டைக் கண்டு உடனடியாகக் கிளம்பிப்போன அன்றுதான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இனி ஒருபோதும் அறியமுடியாத அந்த விஷயத்துக்கான ஏக்கம் என் மனத்தைக் கனக்கவைத்தது. அவருடைய தொலைபேசி அழைப்பு ஒருநாளும் இனி வரப்போவதில்லை என்னும் உண்மை என் தொண்டையை அடைத்தது. பல கணங்கள் உறைந்தநிலையில் உட்கார்ந்திருந்தேன். நிதான நிலைக்குத் திரும்பியபோது அவர் அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருந்த தற்கொலை முயற்சியில் இறங்காததையும் இயற்கைமரணத்தாலேயே உயிர் துறந்ததையும் நினைத்தபோது சற்றே ஆறுதலாக இருந்தது.

    பாவண்ணன்

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு