சனி, அக்டோபர் 22, 2005

காலச்சுவடு

பெண் படைப்பாளிகளுக்கான இலக்கியப் போட்டி:: 2006 புதுமைப்பித்தன் நூற்றாண்டு. இதை முன்னிட்டுப் புதுமைப்பித்தன் நூற்றாண்டு இலக்கியப் போட்டி ஒன்றைக் காலச்சுவடு அறக்கட்டளை அறிவிக்கிறது. இளைய தலைமுறைப் பெண் படைப்பாளிகளுக்கான கவிதை மற்றும் சிறுகதைப் போட்டி இது. ஒருவரே இரண்டு பிரிவுகளிலும் கலந்துகொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.

போட்டியில் பங்கேற்பவர்கள் 1970ஆம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். படைப்புகளை மின்னஞ்சல் வழி kalachuvadu@sancharnet.in, kalachuvadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

படைப்புகளை அக். 31, 2005க்குள் கிடைக்கும்படி காலச்சுவடு அறக்கட்டளைக்கு அனுப்புக.



பெருமாள்முருகன் :: எல்லாத் தரப்பு விமர்சகர்களாலும் வாசகர்களாலும் பரவலாகப் பேசப்பட்ட ஆர். சண்முகசுந்தரமின் நாவல் 'நாகம்மாள்', இரண்டாம் பதிப்பைக் காண ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று.

சண்முகசுந்தரம், இருபத்தொரு நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதை நூல் ஒன்றும் நாடகம் ஒன்றும் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட நூற்றிருபது நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டால் சில நூல்கள் அமையும். மொத்தமாக நூற்றைம்பது நூல்கள் அவருடையவை என்று கணக்கிடலாம். நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கியவர் அவர்.

அவர் மொழிபெயர்த்த நாவல்களுள் 'பதேர் பாஞ்சாலி' முக்கியமானது. 2001இல் சந்தியா பதிப்பகம் மூலம் 'பதேர் பாஞ்சாலி' வெளிவந்தது.

அதேபோல, சண்முகசுந்தரத்தின் படைப்புகளுள் நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது, தனிவழி ஆகிய நான்கு நாவல்கள் மிக முக்கியமானவை என்பது என் கருத்து. அவை இன்றைய வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் அவா, மருதா பதிப்பக உரிமையாளர் நண்பர் பாலகுருசாமி மூலம் நிறை வேறியது. நாகம்மாள், அறுவடை ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டிசுட்டது, தனிவழி இரண்டும் தயாரிப்பில் உள்ளன.

வங்காள நாவல்களை வங்க மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை உடையவர்கள் த.நா. குமாரசாமி, த.நா.ஸேனாபதி ஆகியோர்.



காங்கிரஸில் ஒரு தலித் :: ரவிக்குமார்
அஞ்சலி: எல். இளையபெருமாள் (1924-2005)



காலமும் கவிஞர்களும் :: உல. பாலசுப்பிரமணியன்
பதிவுகள்: கூடல் - கவிஞர்கள் சங்கமம்

கடந்த செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மதுரை கடவு இலக்கிய அமைப்பும் புதிய காற்று மாத இதழும் இணைந்து 'கூடல் - கவிஞர்கள் சங்கமம்' என்ற பெயரில், மதுரை அழகர் கோவில் ஒயாசிஸ் உணவகத்தின் அரங்கு மற்றும் திறந்தவெளிகளில் நவீனக் கவிஞர்கள் பங்கேற்ற இருநாள் அமர்வை நடத்தின.

துவக்க விழாவிற்குக் கவிஞர் பா. தேவேந்திர பூபதி தலைமை தாங்க, புதிய காற்று ஆசிரியர் ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி முன்னிலை வகிக்க, திருமதி கீதா தேவேந்திர பூபதி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் கோணங்கி, முருகேச பாண்டியன், ரமேஷ்-பிரேம், கலாப்ரியா, தேவதேவன், தி.சு. நடராசன், டாக்டர் சிவக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

'60களுக்குப் பிறகான நவீன கவிதை' அமர்வினைக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் நெறிப்படுத்த, உரையாடலில் பா. வெங்கடேசன், மோகன ரங்கன், லஷ்மி மணிவண்ணன், நட. சிவக்குமார், கெüதம சித்தார்த்தன், முத்து மகரந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். சி. மணி, பசுவய்யா தொட்டு, சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஞானக்கூத்தன் என நீண்ட விவாதம், புதுக்கவிதை தனி வலிமை பெற்றது, மேற்கத்திய தாக்கம், ஜே.கே. மற்றும் இந்திய ஆன்மீக வெளிகள் இடம்பெற்றது வரை விரிந்து, 90களுக்குப் பிறகுதான் நவீன கவிதை தொடங்குகிறது என்ற முருகேச பாண்டியனின் முத்தாய்ப்புடன் அமர்வு முடிவுற்றது.

மதிய உணவிற்குப்பின், கவிதை வாசிப்பும் விவாதமும் நடைபெற்றன. மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, மு. சத்யா, மஞ்சுளா ஆகியோருடன் புதியவர்களும் கவிதை வாசித்தார்கள். பிரமிளின் ஆளுமை பற்றி மோகனரங்கனும் நகுலன் பற்றித் தபசியும் பிரம்மராஜன் பற்றிக் கரிகாலனும் கட்டுரை வாசித்தார்கள்.

இரவு விருந்துடன் முதல் நாள் அமர்வு முடிய, மறுநாள் காலை 8.30 மணியளவில் நவீனம் தாண்டிய கவிதைப் போக்குகள் பற்றிய அமர்வை நெறியாளர் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் தொடங்கிவைக்க, உரையாடலில் மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, சிவக்குமார், வெங்கடேசன், பழனிவேள், ராணிதிலக், லஷ்மி மணிவண்ணன், ரமேஷ், யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்சன் மற்றும் பல படைப்பாளிகளும் பங்கேற்றனர்.

தேவதச்சன் பற்றி ராணிதிலக், கலாப்ரியா பற்றி யவனிகா ஸ்ரீராம், ஆத்மாநாம் பற்றி குவளைக் கண்ணன், தேவதேவன் பற்றி நட. சிவக்குமார், இன்குலாப் பற்றி முஜிபுர் ரஹ்மான், அபி பற்றி ஆறுமுகப்பிள்ளை கட்டுரை வாசித்தார்கள்.



0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு