வியாழன், டிசம்பர் 15, 2005

சூறையாடல்

Lee Raymond :: Exxon - Greenpeaceசுற்றுப்புறத்துக்கு மதிப்பு கொடுப்பதில் அமெரிக்கா ஓரளவு விதிகளைப் பின்பற்றியே வருகிறது. தன்னார்வ நிறுவனங்களின் லாபிகளுக்கு பயந்தோ, சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கொள்கைகளுக்காகவோ, உலகத்திலேயே மிக அதிகமாக குப்பைகளையும் கழிவுகளையும் போடுகிறோம் என்பதாலோ, 'எரின் ப்ராகொவிச்' போன்ற ப்ரெட்டி வுமன் திரைப்படங்களாலோ...

கத்ரீனா வந்து நியு ஆர்லியன்ஸை சின்னாபின்னம் ஆக்குவதற்கு முன்பு வரை சிரமம் பாராமல், பங்குச்சந்தை நலன் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், பணத்தை விரயமாக எண்ணாமல், சட்டத்துக்கு பயந்து, கழிவுகளை சுத்தம் செய்தே வெளியேற்றினார்கள்.

லூஸியானா சுத்தம் செய்வதற்காகவும் புயல் கடந்த அவசரநிலை காலகட்டத்திலும் சுற்றுப்புற சூழல் விதிகளை தள்ளுபடி செய்துவிட்டார்கள். போன்சர்ட்ரன் ஏரியில் (Lake Pontchartrain) அதிகப்படியான அசுத்தமான வெள்ள நீரை கலந்து விடுவதற்காகவும், இறந்து போன கால்நடைகளையும் செல்லப்பிராணிகளை எரிக்கவும், மட்டுமே பெரும்பாலும் உபயோகப்படும் என்று காரணம் காட்டி துயரநிலை நிவாரணமாக விதி விலக்கு கொடுக்கப்பட்டது.

கூடவே எரிவாயு நிறுவனங்களின் மாசுக்கட்டுப்பாட்டுக்கும் தாற்காலிக விலக்கு கிடைத்தது. (இதன் தொடர்ச்சியாக லூஸியானா செனேட்டர்கள் நிரந்தர விலக்குகளை முன்வைத்திருக்கிறார்கள்.)

கேன் பர்தூ-வின் (Cain Burdeau) சமீபத்திய கட்டுரையில் எக்ஸானின் வரலாறு காணாத பத்து பில்லியன் டாலருக்கான லாபம், இந்த தளர்த்தல்களால்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

அயல்நாட்டு நிறுவனங்களின் வருகையால் மென்பொருள் எழுத்தாளரின் சம்பளம் நாளொரு ஆயிரமும் பொழுதொரு லகரமுமாக கூடி வருவது போல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருந்த காலத்தில்தான் கத்ரீனா புயல் வீசியது. எரி பொருள் உற்பத்தியைக் கூட்ட வேண்டுமானால், நச்சுகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்று பல எண்ணெய் நிறுவனங்களும் U.S. Environmental Protection Agency-ஐ மிரட்டி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டது.

எக்ஸான், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், செவ்ரான், கொனொகோ-பிலிப்ஸ், மாரதான் ஆகியோர் ஜூலை ஆரம்பித்து செப்டம்பர் முடிய மூன்று மாதத்தில் முப்பத்தி மூன்றரை பில்லியன் டாலர் லாபம் கண்டிருக்கிறார்கள்.

நிறுவனம் - லாபம் - கடந்த மூன்று மாதகால லாபத்தில் அதிகரித்த சதவிகிதம்

எக்ஸான் - 9.9 பில்லியன் டாலர் - 75 % அதிகரிப்பு
ராயல் டட்ச் ஷெல் - 9 பில்லியன் டாலர் - 68 % அதிகரிப்பு
பிரிட்டிஷ் பெட்ரோலியம் - 6.5 பில்லியன் டால்ர் - 34 % அதிகரிப்பு
செவ்ரான் - 3.6 பில்லியன் டால்ர் - 12 % அதிகரிப்பு
கொனொகோ-பிலிப்ஸ் - 3.8 பில்லியன் டால்ர் - 90 % அதிகரிப்பு
மாரதான் - 770 மில்லியன் டால்ர் - 247 % அதிகரிப்பு


'எண்ணெய் கிடங்குகளில் வெளியாகும் நச்சுப்புகைகள் குறித்த தகவல்களை தாமதமாக தருவதன் மூலம்தான் உற்பத்தியை பெருக்க முடியும்' என்று மிரட்டியே எக்ஸான் போன்றவர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டதாக, EPA-வின் ஹ்யூக் கௌஃப்மன்-னும்(Hugh Kaufman) ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் சிரியானா மயம்.



0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு