வெள்ளி, ஜூன் 09, 2006

Thoughts in Tamil on 'Lessons on Tamil'

கட்டாயப் பாடம் - தொண்டைக்குழித் திணிப்பு?

சனி மதியம் கே டிவியில் 'பட்டணத்தில் பூதம்' திரையிடப் போவதாக, அறிவிப்பு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தது. சாப்பாடுக் கடையை மூடிவைத்துவிட்டு, திரைச்சீலையெல்லாம் இழுத்துவிட்டு, ஆசையாக உட்கார்ந்தால் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 'பொறுத்தது போதும் பொங்கியெழு' என்று மனோகராவிற்கு மாறிவிட்டார்கள்.

இதே மாதிரி பிறந்த நாளுக்காக 'கிளாசிக் மேட்டினி'யை 'நண்பகல் நல்விருந்து' என்று அடுக்குமொழியில் கொடுத்தால் இருவரும் சந்தோஷப்படுவார்கள். இங்கே இருவர் என்பது நானும் தர்மசங்கடத்தில் சன் டிவி குழுமத்தைத் தள்ளி வைத்து அழகு பார்க்கும் கலைஞரும்.

ஆங்கிலக் கேள்விகளுக்கு தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பதிலளிக்கும் தங்க வேட்டை; நாடக மொழியில் அடைமொழி அதிர்ச்சிகளுடன் சன் செய்திகள்; சன் டிவி யில் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசுகிறார்களே, விகடன் சஞ்சிகைகள் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுகிறதே என்று புலம்புவது பழங்கதை.

தமிழ் பாடமாக பயிற்றுவிப்பதை வரவேற்பதே சென்ற வார in-thing.

பத்ரி: 'தமிழே என் உயிர்' என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.

அனேகமாக, ஆங்கிலம் கூட நான் இப்படித்தான் எழுதுவேன். மைக்ரோசாஃப்ட் வோர்ட் என்னும் நிரலி இல்லாவிட்டால்... தட்டச்சுப் பிழை செய்தால் சிவப்பு மசி; இலக்கணப் பிழை என்றால் பச்சை மசி கோடு என்று தவறுகளை இலகுவாக சுட்டிக் காட்டுகிறது. அந்த மாதிரி MS-Word-க்கு ஒரு plugin கொடுத்து விட்டால் வலைஞர்கள் எல்லாரும் தூய தமிழில் தட்டச்சி கலைஞரை மேலும் பாராட்டலாம்.

ஒருமை/பன்மை கலத்தல், ஒற்று விதிகள், கால மயக்கம், று/ரு போன்ற பொருட்குற்றம், ஈறு கெட்டவற்றை சரியாகக் கெடுத்தல் என்று அனைத்து விதிகளையும் நினைவில் நிறுத்த முடியாதவர்களுக்கு, கணினியின் நினைவில் நிற்குமாறு செயலி எழுதினால், 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது நிரலிப்பழக்கமாக கைகூடும்.

கவனக்குறைவினாலோ நினைவின்மையாலோ நிகழும் வழுக்களை சுட்டிக் காட்டுவதற்கு மென்கலன் எழுதுவதற்கு தமிழறிஞர்களும் பரி நிரலாளர்களும் இந்தக் கட்டாயப் பாடத்தினால் வருவார்கள்.

கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும் :: சின்னக்கருப்பன்: "பாமக உறுப்பினர் ஜி.கே மணி கூறியதை இங்கு ஆதரிக்கிறேன். இது முதல் வகுப்புக்கு மட்டுமே கட்டாயம், ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்துக்கு கட்டாயம் என்று இருப்பதை நீக்க வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் இந்த வருடமே கட்டாயமாக்கப்பட வேண்டும்."

ராஜன்: if a person gets transfer to TN and if his kid is studying in, say 9 Std. That student would have been studying say Oriya as his/her first language in his/her previous place. Now how come suddently that student is expected to learn and pass 9th standard level Tamil? So forcing non Tamil speaking pupils to learn Tamil as the first language amounts to linguistic fanaticism.
இன்னும் பத்து வருடம் கழித்து இந்தியா சென்றால் அமெரிக்காவில் இருப்பது போன்ற English immersion law எதுவும் கிடைக்காது. கண்டிப்பாக அனுசரிக்குமாறு சட்டதிட்டங்கள் இயற்றுவது 'மாரோ மாரோ' என்று கோபத்தை வரவைத்து மொழி மீதே வெறுப்பை உண்டாக்கும் அளவுக் கோபத்தை வரவைக்கும். 'ஆஹா... மெல்ல நட மெல்ல நட...' என்று பரிவோடு பிற மாநில/நாட்டு குடியேறிகளுக்கு மொழியைப் பயிற்றுவிப்பதில்தான் தமிழின் ருசியும் நலனும் நாவில் தனித்து நிற்கும்.

தீர அலசாமல் நெடுங்காலப் பிரச்சினைகளுக்குக் குறுகிய கால அவசரப் பிரகடனங்கள் இட்டு எம்.எல்.சி. தேர்தலில் வாக்குகளை அள்ளுவது கட்சிகளின் தொலைதூரப் பார்வை. சின்னக்கருப்பனின் 'எல்லோருக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. அதே போல், ராஜனின் 'சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொள்ள வெண்டும்' என்பதில் மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இரண்டையும் ஒருங்கே அமல்படுத்த 'விரைவுத் தமிழ் அமிழ்தல்' என்பது போன்ற முழுமையான திட்டங்கள் தேவை. விடுமுறைக் காலத்தில் தமிழ் கற்க சிறப்பு வகுப்புகள் வைக்கலாம்; வெண்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்காமல் கம்பராமயணத்தின் கவர்ச்சியையும் (நான் சீதையின் வருணனைகளைச் சொல்லவில்லை) திருக்குறளின் உள்குத்துகளையும் ரசமாக விளக்கினால், மயங்காதவர் எவரும் உண்டோ?

வேற்று நாடுகளில் இருந்து (மெக்ஸிகோ போன்ற ஸ்பானிஷ் மொழியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு) படிப்படியாக ஆங்கிலத்தை எவ்வாறு நுழைக்கிறார்கள் என்பதை மேலும் அறிய: Implementing Sheltered English Immersion (SEI) and Improving the Academic Performance of English Language Learners. இவ்வாறு பதவிசாக அறிமுகம் செய்வதற்கே கடும் எதிர்ப்பு இங்கு நிலவுகிறது என்பது விரிவாக விவரிக்கவேண்டிய வேறு விஷயம்.

பத்து ஆண்டுகள் கழித்து ஃபோர்ட் வேலையில் சேர உத்தர பிரதேசத்தில் இருப்பவருக்கு வேலை கிடைக்கிறது. ஏழாவது படிக்கும் மக்ள், ஒன்பதாவது படிக்கும் மகன் கொண்ட குடும்பம். கணவன் மட்டும் தனியாக உ.பி.யிலேயே தங்கிவிட, மனைவி மட்டும் சென்னையில் வேலை. வாரயிறுதிகளில் விமானத்திற்கு செலவழித்து சொந்த ஊருக்கு செல்வதா? அல்லது கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஓய்வை அமல்படுத்தி இளைப்பாறுவதா?

ஏழாவது தமிழை எப்படி அவர்களால் நேரடியாகப் படிக்க முடியாது. அதற்காக தமிழை சொல்லிக் கொடுக்காமலும் விடக் கூடாது. முப்பது நாளில் தமிழ் என்னும் ரேபிடெக்ஸ் வழியில் கொஞ்சம், முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடம் முழுக்க பயிற்றுவிக்க வேண்டும்.

மதங்களுக்கிடையே துவேஷம் வளர்வது போல் மொழிகளுக்கிடையேப் பிரிவினையும் தனிமைப்படுத்தலும் இந்த மாதிரி 'உடனடிக் கட்டாயத் தீர்வு'களினால் நிகழும். வேற்று மாநிலக் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தாய்மொழி போல் கற்கவியலாத கோபமும் கழிவிறக்கமும் வருத்தமும் உளவியலை பாதிக்கும். அதன் பின் கொஞ்ச நாள் கழித்து 'ரேகிங்' கொடுமை, பாலியல் வக்கிரங்கள், 'மத மாச்சரியங்கள்' என்று உளவியலைக் கொண்டு அலச எனக்கு புதுத் தலைப்பு கிடைப்பது மட்டுமே இந்தக் கட்டாய பாடத்தின் பக்கவிளைவாக இருக்க கூடாது.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் கட்டாயப் பாடமாக்கும் செய்கை சட்டமாகிறது. அனைத்து சாராரையும் கருத்தில் கொள்ளாமல், மொழிப் பயிற்சியை உலகத் தரத்தோடு மதிப்பிட்டு மாற்றாமல், தற்காலப் போக்குகளை சமச்சீராக நெறிப்படுத்தாமல், பள்ளியில் மட்டும் போதிப்பதினால் 'பயனில சொல்லாமை' அதிகாரத்துக்கு எடுத்துக்காட்டாக ஆகாமல் இருந்தால் தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

நன்றி: தமிழோவியம்


| |

2 கருத்துகள்:

வலைப்பதிவில் முதன்முதலில் இந்த விடயததை தொட்டு , தமிழ்கல்விச் சட்டோத்தோடு ஒப்பீடு எழுதியுள்ளதுக்கு நன்றி. நம்மவர்கள் பலர் இதைப்பற்றி பேசமாட்டார்கள் என்பது என் கருத்து. அமெரிக்காவில் வைத்தால் ஆப்பும் அணியாம் ;-)

//ராஜன்: if a person gets transfer to TN and if his kid is studying in, say 9 Std. That student would have been studying say Oriya as his/her first language in his/her previous place. Now how come suddently that student is expected to learn and pass 9th standard level Tamil? So forcing non Tamil speaking pupils to learn Tamil as the first language amounts to linguistic fanaticism.//

இதே நிலை வட இந்தியா செல்லும் தமிழர்களுக்கும் வருகிறதே?

மொத்தத்தில் இந்த மாதிரி 'திணிப்புக்கள்' எதுவானாலும் அது தவிர்க்கப்படவேண்டும் என நினைக்கிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு