செவ்வாய், நவம்பர் 21, 2006

Court Says Web Publisher Isn't Liable for Defamation

காப்புரிமை சட்டங்களுக்கும் மானநஷ்ட வழக்குகளுக்கும் அமெரிக்காவை முன்னோடியாகக் கருதலாம். ஃப்ரான்சு நாட்டில் இப்போதுதான் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக sue செய்ய சட்டம் இயற்றுகிறார்கள். இன்ன பிற மேற்கத்திய நாடுகளிலும், இசைத் திருட்டு, எம்பி3 பகிர்தல், விசிடி விற்றல், பிட் டாரண்ட் மூலம் வலையிறக்குதல் என்று எல்லா கிரிமினல் வேலைகளையும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இயற்ற, வகை செய்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில் கலிஃபோர்னியா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

வழக்கு என்ன?

ஒரு ஊரில் ஒரு டாக்டர் இருந்தார். அவரிடம் ஒருவர் வைத்தியம் (breast implants) செய்யப் போனார். சிகிச்சை திருப்தியாக இராததால், 'அந்த மருத்துவரிடம் போகாதீங்க... ஏமாற்றுப் பேர்வழி! உங்களுக்குப் பலன் கிடைக்காது.' என்று மின்னஞ்சல் எழுதி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இத்தகைய வாடிக்கையாளரின் வேதனைகளைத் தொகுக்கும் தொகுப்பாளரிடம் இந்த மின்மடல் சிக்கியது. எந்த மருத்துவர் எவ்வாறு ஏமாற்றுகிறார் என்பதை ஊர், தொகுதி, வட்டார வாரியாகத் தொகுப்பவர், இந்தப் பதிவையும் சேர்த்துக் கொண்டார்.

பொங்கியெழுந்த மருத்துவர், 'இந்த வலையகத்தில் இருப்பது பிழையான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. தயவு செய்து நீக்கிவிடவும். நிஜத்தை சரிபார்க்கவும்' என்று முறையிட்டும் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

வழக்குப் போட்டு பார்த்தார். உள்ளூர் நீதிமன்றத்தில் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், மேல் முறையீட்டில் மண்ணைக் கவ்வியுள்ளார்.


இதனால் நான் அறிவது யாதென்றால்...

  • 'இவர்தான் அவர்! அந்தப் பெயரில் எழுதுபவரின் நிஜமுகம் இதுதான்!!' என்று ப்ளாக்ஸ்பாட்.காமில் எழுதுபவரின் மேல் மட்டுமே வழக்குப் போட முடியும். குற்றப்பத்திரிகையைத் தாங்கிக் கொண்டிருக்கும் ப்ளாகர்.காம் அல்லது உங்கள் பெயரை இணையத்தில் தேடினால், அவதூறுப் பதிவை முன்னிறுத்தும் கூகிள்.காம் போன்ற பெரியவர்களை அசைக்க முடியாது.

  • இந்தியாவையோ இன்ன பிற தலைவர்களையோ இழிவாகத் திட்டினால், அந்தப் பதிவைத் தாங்கி வரும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் போன்றோருக்கு எவ்வித இன்னலும் கொடுக்க இயலாது.

  • தீர விசாரித்து தனி மனிதனின் உண்மை நிலையை எடுத்துரைப்பதை விட கருத்துச் சுதந்திரமே பெரிதினும் பெரிது.

  • பிறர் மீது சேற்றை வாரியிறைப்பதை தொடர்ச்சியாக செய்பவர்கள் அனைவருக்கும், நற்சான்றிதழ் வழங்கும் அபாயத்தை இந்தத் தீர்ப்பு அளித்தாலும், சுய-தணிக்கையை ஊக்குவிக்கவும் அச்சமற்ற எழுத்தை தொடர்ந்து உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது.

  • பத்திரிகை விற்பவர் குற்றவாளி அல்ல. பத்திரிகையை அச்சடிப்பவரும் 'ஐயோ... பாவம்'. பத்திரிகையில் பத்தி எழுதுபவர் மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவர்.

  • தன்மானம் << பேச்சுரிமை

    செய்தி: Ruling limits Internet liability - Los Angeles Times: "Granting immunity to all but the initial sources of defamatory statements protects freedom of expression, state high court says."





    | |

  • 5 கருத்துகள்:

    "இந்தியாவையோ இன்ன பிற தலைவர்களையோ இழிவாகத் திட்டினால், அந்தப் பதிவைத் தாங்கி தமிழ்ப்பதிவுகள் போன்றோருக்கு எவ்வித இன்னலும் கொடுக்க இயலாது"

    அப்படியா? பார்க்கலாம்...

    முதலில் இந்திய நீதிமன்றங்கள் இந்த தீர்ப்பினை பின்பற்ற வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் பின்பற்ற நேரிடலாம்...ஆனால் இங்கு இன்னல் என்பது வழக்கின் முடிவில் வரும் தீர்ப்பு அல்ல. வழக்குதான்.

    குஷ்பு விபரம் அறிந்திருப்பீர்கள். எந்த நீதிமன்றத்தாலும் அவர் குற்றவாளி என்று தீர்க்கப்படவில்லை. ஆயினும் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எடுத்த எடுப்பிலேயே நீக்க (quash) செய்ய வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள பல மனுக்கள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ளன...சில லட்சங்கள் செலவாகியிருக்கும், வழக்குரைஞர் கட்டணத்திற்கே, இல்லையா?

    ரொம்ப நல்லதுங்க..

    நம்மூரில் எவனும் கேஸ் போடமாட்டாங்குற தைரியத்துல எத வேணாலும் எழுதலாம்....
    ஆட்டோ வராமல் இருந்தால் சரி.

    உண்மைதான்.

    இங்குள்ள கணக்கின்படி ஒரு மணி நேர ஆலோசனைக்கு நூறு டாலர் செலவழியும். மூன்று மணி நேரத்தைக் குறைந்தபட்ச ஊதியமாக வைத்திருக்கிறார்கள்.

    சில சமயம், சொந்த ஊரில் வழக்குத் தொடுப்பது சௌகரியம். ஆனால், சட்டதிட்டங்கள் மற்றொரு மாநிலத்தில் வசதியாக இருந்தால், அந்த ஊர் வக்கீலைக் கண்டுபிடித்து வழக்குப் போடலாம். குறிப்பிட்ட வழக்குகளுக்கு, நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் மாகாணத்தில்தான் வழக்குப் போட வேண்டும்.

    நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணினால் கூட ஆயிரம் டாலர் செலவாகிவிடும் என்பது அமெரிக்க நிலைமை. இந்தியாவில் வாய்தா, ஒத்திவைப்பு, விடுமுறை, அலைச்சல், ஆகியவை பன்மடங்கு அதிகம்.

    இங்கு, வழக்குகள் சீக்கிரமே தீர்ப்பாகும் என்பது ஒரு புறம் இருக்கிறது. ஜூரி முறை அமலில் உள்ளதால், பொதுஜனத்திற்கு பரிதாபம் கிட்டி, அவருக்கு சார்பாக முடிவு வரும் வாய்ப்புகளும் உண்டு. எனவே, சட்டு புட்டென்று, வழக்கறிஞர்களின் உதவியை நாடாமல், பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்னும் எண்ணம் மேலோங்கிய நிலை.

    ஆயிரம் டாலரைத் தாண்டும் கேஸ்களில், வழக்குரைஞர்களே கமிஷன் அடிப்படையில் வாதாடுவதும் உண்டு. அமெரிக்காவில் நடக்கும் சின்ன (பெரும்பாலும் சிவில்) வழக்குகளுக்கு ஆயிரம் டாலர் செலவு ஆகும் என்று வைத்துக் கொண்டால், பெரிய lawsuitகளுக்கு (சிவில்), திர்ப்பாக கிடைக்கும் நிவாரணத் தொகையில் 30% என்னும் ஒப்பந்தத்தில் ஆர்வமுடன் வாதாட வருவார்கள்.

    இந்தியாவில் இருக்கும் இருப்பே வேறு என்று எண்ணுகிறேன். பத்து மில்லியன் என்று தீர்ப்புகளும் வர வாய்ப்பில்லை. தீர்ப்பு ஓரிரு மாதங்களுக்குள் கிடைக்கும் என்பதும் இல்லை. பாதி மாத சம்பளத்தைக் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று பட்ஜெட் போட்டும் வழக்குத் தொடுக்க முடியாது.

    விரிவான பதிலுக்கு நன்றி.

    @வஜ்ரா

    ---நம்மூரில் எவனும் கேஸ் போடமாட்டாங்குற தைரியத்துல---

    சமீபத்தில் என்னுடைய அம்மா எழுதிய புத்தகம், இன்னொருவரின் பெயரில் அச்சாகியுள்ளது. வழக்குப் போடலாம் என்று சொன்னால், 'போட்டு எதை சாதிக்கப் போகிறோம்!? பிழைச்சுப் போகட்டும்' என்னும் பற்றற்ற பதில் போன்ற மனப்பான்மையில்தான் பலரும் இருக்கிறோம்.

    B.B,

    தகவலுக்கு நன்றி.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு