வியாழன், ஆகஸ்ட் 19, 2004

(மீண்டும்) விகடன் - சுவடுகள்

விபத்தில் அடிபட்ட
எவனோ ஒருவனைக் காட்டிலும்
அதிகமாக நீ அலறிய அன்றுதான்
என் அன்னை என்றும் உணர்ந்தேன்
உன்னை!
- ஜெயபாஸ்கரன்



ரயில் சென்றுவிட்ட
கடைசி நொடியின் நிசப்தத்தில்
பேச ஆரம்பிக்கிறேன்...
ரயிலில் சென்றுவிட்ட
உன்னிடம்.
- வீரமணி


திருவிழாவில்
தேர் பார்க்கச் சென்று
தேவதை பார்ப்பவர்களைத்
தெய்வங்களே நினைத்தாலும்
காப்பாற்ற முடியாது.
- முருகன்


கைதொட்டு தூக்கும்வரை
கதறிக் கொண்டிருக்கும்
தொலைபேசியைப் போன்றது
என் காதல்
கைதொட்டுத் தூக்கியதும்
கதறத் தொடங்கும்
குழந்தையைப் போன்றது
உன் காதல்.
- யுகபாரதி


பூமி
சூரியனைச் சுற்றினால்
வருஷம்!
தேர்
ஊரைச் சுற்றினால்
திருவிழா!
தீ
திரியைச் சுற்றினால்
வெளிச்சம்!
காற்று
உடலுக்குள் சுற்றினால்
உயிர்!
உயிர்
உயிரைச் சுற்றினால்
காதல்!
நீ என்னையும்
நான் உன்னையும்
சுற்றுவதே வாழ்க்கை!
- தாஜ்


பார்த்தாலே போதும்
பள்ளிக்காதல்.
பேசாமல் தீராது
+2 வில்.
கடிதங்களால் துவங்கும் கல்லூரி
தொட்டுக் கொள்வதாக
கனவுகள் வரும் அப்போது.
முத்தங்களும் போதாது
பிறகு.
- செழியன்


மூவர் அமரும்
இருக்கையில்
உனக்கும் எனக்குமிடையே
சம்மணமிட்டமர்ந்த
உன் வெட்கத்திற்கு
எத்தனை டிக்கெட் எடுப்பது?
- சையத் அலி


சூரியன் இல்லாத
வானவில்லும்..
நிலவு இல்லாத
பௌர்ணமியும்..
இனிப்பு இல்லாத
சர்க்கரையும்..
மணல் இல்லாத
பாலைவனமும்...
ரசிக்கப்படும்,
என்னோடு
நீயிருக்கும் பட்சத்தில்!
- தாஜ்


எங்கோ ஒரு கடையில்
காதல் விற்பது தெரிந்து
திரண்டது கூட்டம்

கடையின் கதவில்
சாவியில்லாத பூட்டு
காத்திருப்பவர்கள் கையில்
செல்லாத நோட்டு
- கவிதா பாரதி


எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்,
இருவரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
-சுகிர்தராணி


ரயில்வே சர்வீஸ் கமிஷனோ...
பேங்க் எக்ஸாமோ...
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனோ...
எந்தப் பரீட்சைக்குப்
போனாலும்
பெஞ்சுகளில் பொறித்த
பெயர்கள்
பால்யத்தை நினைவுறுத்தி
பரீட்சையில்
ஃபெயிலாக்குகிறது..!
- சி.முருகேஷ்பாபு

1 கருத்துகள்:

hi
I am Jeyaram. I really loved all the thoughts in form of words which cant be compared with one another. Really I loved it. Specially by Veeramani,YugaBarathi, SYEDALI,Kavitha,Sukitharani, MukeshBabu are really great. fine fine fine

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு