புதன், பிப்ரவரி 23, 2005

தினமணி.காம்

சேவை: பணம் மட்டுமே போதாது! - விவேக் ஓபராய்:

படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா அல்லது இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடப் போகிறீர்களா?

"படங்களில் நடிப்பது எனது வேலை. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை அவசியம். அந்த வகையில் நடிப்புத் தொழிலை விட முடியாது. அதேசமயம் நேரம் கிடைக்கும்போது, சம்பாதித்த பணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ளதை மக்களுக்கு உதவுவேன். இந்தப் பணி எனது வாழ்நாள் முழுவதும் தொடரும்''

மற்ற தென்னிந்திய நடிகர்கள் வெறுமனே காசோலைகள் அளித்தபோது, நீங்கள் மட்டும் மக்களுடன் தங்கிச் சேவை செய்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் அவர்களுக்கு நேரமில்லாமலும் இருக்கலாம். நேரடியான அணுகுமுறை மற்றும் எனது ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களைப் பாதிப்பிலிருந்து ஓரளவு மீட்க உதவும் என்று நான் கருதினேன். அதனால் அங்கு சென்றேன்.

இதனால் உங்களது படப்பிடிப்பு பாதிக்கப்படாதா?

பாதிக்கப்படும். ஆனால் தயாரிப்பாளர்களும் எனது உணர்வைப் புரிந்துகொண்டு, நேரம் கிடைத்தபோது நான் அளித்த கால்ஷீட்டைப் பயன்படுத்திக் கொண்டு பட வேலைகளைத் தொடர்கின்றனர்.



எங்களை மயக்கிய பாடல்

உன்னி கிருஷ்ணன்: பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில், "ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி...'

ஸ்ரீலேகா பார்த்தசாரதி: "என்ன தந்திடுவேன்... என்ன தந்திடுவேன்; உள்ளம் தந்திடுவேன்... உயிரைத் தந்திடுவேன்' என்கிற பா. விஜய் எழுதிய பாடல் எனக்குப் பிடித்தது. மற்றவர்கள் குரலில் "புன்னகை மன்னன்' படத்தில் சித்ரா பாடிய. "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... உன் கையில் என்னைக் கொடுத்தேன்'

சித்ரா சிவராமன்: "கண்களால் கைது செய்' படத்தில், "அனார்க்கலி... அனார்க்கலி... ஆகாயம் நீ... பூலோகம் நீ...' இதுதான் இதுவரையில் நான் பாடியதில் எனக்குப் பிடித்தது. பிறர் பாடியதில் என்று கேட்டால் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய, "ஒன்றா... இரண்டா ஆசைகள்'

ஹரீஷ் ராகவேந்திரா: நான் பாடிய பாடல்களில், "மெல்லினமே... மெல்லினமே...' எனக்குப் பிடித்த பாடல். பிறர் பாடிய காதல் பாடல்களில் "நளதமயந்தி' படத்தில் ரமேஷ் விநாயகத்தின் "என்ன இது... என்ன இது...'

சுனிதா சாரதி: "காக்க காக்க' படத்தில் நான் பாடிய, "தூது வருமா தூது வருமா... காற்றில் வருமா கரைந்துவிடுமா...' பாடல் எனக்குப் பிடித்தது. காலம் தாண்டியும் காதல் சொட்டச் சொட்ட எஸ்.பி.பி. பாடிய, "சர்க்கரை இனிக்கிற சர்க்கரை... எறும்புக்கு என்ன அக்கறை'

மாதங்கி: நான் பாடியதில் பிடித்த பாடல் "இவன்' படத்தில் வரும், "இப்படிப் பார்க்கறதுனா வேணாம்'. எஸ். ஜானகியின் குரலில் "ஜானி' படத்தில் இடம்பெற்ற, "என் வானிலே ஒரு வெண்ணிலா...'


"அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்' -- அ.கி. வேங்கட சுப்ரமணியன்

"வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர்; அஞ்சாக் கொள்கையர்;
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்; செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி
ஊர்காப்பாளர்; ஊக்கருங் கணையினர்"

பாண்டியன் நெடுஞ்செழியனின் ஊர்க்காவலர்களின் கடமை உணர்ச்சியையும், அஞ்சா நெஞ்சத்தையும், அறிவுத் தேர்ச்சியையும், செயல் திறனையும் அதன் காரணமாக இரவில் மதுரை மக்கள் இனிதாக கண்ணுறங்க முடிந்ததையும் மதுரைக் காஞ்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


தமிழகம் வழிகாட்டுகிறது -- சுகதேவ்

சுகாதாரத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழகத்திலுள்ள 12 கிராம ஊராட்சிகளும் ஒரு ஊராட்சி ஒன்றியமும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12,619 கிராம ஊராட்சிகளும் 385 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.

கிராம ஊராட்சிகள் அனைத்திலும் "ஒருங்கிணைந்த துப்புரவு வளாகம்" என்ற பெயரில் ஒரே வளாகத்தில் மின்சாரம், தண்ணீர் வசதியோடு கூடிய கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கு உரிய வசதிகளை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் விளைவாக 10,000-த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை இப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய 15 கிராம ஊராட்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசைச் சுதந்திர தினத்தன்று முதல்வர் வழங்கியிருக்கிறார். இவ் விருதுக்காகத் தற்போது தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 39 கிராம ஊராட்சிகளில் மிக அதிகமாக 12 விருதுகளைத் தமிழகம் கைப்பற்றியிருக்கிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட இவ்விருதுகளைப் பெற்ற பிற மாநிலங்கள் மேற்குவங்கமும் மகாராஷ்டிரமும். கேரளம், குஜராத், திரிபுரா ஆகியவை தலா ஒரு விருதைப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் எதுவும் இந்த விருதையே பெறவில்லை.

கோவை (கணக்கம்பாளையம், பொட்டையாண்டிபுரம்), ஈரோடு (கதிரம்பட்டி, முத்துக்கவுண்டன்பாளையம்), ராமநாதபுரம் (அரும்பூர், பாண்டிக்கண்மாய், தாமரைக்குளம்), தூத்துக்குடி (பிச்சிவிளை), சேலம் (சின்னனூர்), வேலூர் (காட்டுபுதூர்) மாவட்டங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சிகள் தமிழகத்திற்குக் கிடைத்த விருதுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஊராட்சி ஒன்றியத்துக்குக் கிடைத்த ஒரே விருதைக் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் பெற்றிருக்கிறது. மேல்புரம் மற்றும் இந்தக் கெüரவத்தைப் பெற்ற ஊராட்சிகளின் தலைவர்களில் நால்வர் பெண்கள் என்பது உற்சாகம் தரும் கூடுதல் செய்தி.

வாழ்த்துவோம். வளம் பெறுவோம்.

நன்றி: Dinamani & Kathir

3 கருத்துகள்:

//
மாதங்கி: ...
எஸ். ஜானகியின் குரலில் "ஜானி' படத்தில் இடம்பெற்ற, "என் வானிலே ஒரு வெண்ணிலா...'
//

அந்தப் பாடலைப் பாடியது ஜென்ஸி.

//மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் அவர்களுக்கு நேரமில்லாமலும் இருக்கலாம். நேரடியான அணுகுமுறை மற்றும் எனது ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களைப் பாதிப்பிலிருந்து ஓரளவு மீட்க உதவும் என்று நான் கருதினேன். அதனால் அங்கு சென்றேன்//

நாசுக்காக தன்னைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்பது போல் உள்ளது.
விவேக் ஓபராய்க்கு ஒரு "ஓ" போடுங்க

ஏதோ 'ஜானி' பாடல்களையாவது கேஸட் கவரைப் பார்க்காமலேயே பாடியவர் பெயரை நினைவு கூற முடிகிறது. தற்போதைய பெண் பாடகிகளில் மாலதி, அனுராதா ஸ்ரீராமை விட்டால் வேறு யாரையும் சட்டென்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

கங்கா... வழி மொழிகிறேன் ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு