வெள்ளி, ஜூலை 22, 2005

திண்ணை (ஜூலை 22)

கருணைக் கடவுள் குஆன்யின் :: ஜெயந்தி சங்கர்

லதா ராமகிருஷ்ணன்:: கோபிகிருஷ்ணன்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் மறைந்து இரண்டு வருடங்களாகின்றன.

  • ஒவ்வாத உணர்வுகள்.
  • முடியாத சமன்.
  • உணர்வுகள் உறங்குவதில்லை.
  • மானுட வாழ்வு தரும் ஆனந்தம்.
  • தூயோன்.
  • இடாகினிப் பேய்களும் - நடைப்பிணங்களும்.
  • சில உதிரி இடைத்தரகர்களும் முதலான சிறுகதைத் தொகுதிகள் (இதில் உணர்வுகள் உறங்குவதில்லை - குறுநாவல் தொகுதி).
  • உள்ளேயிருந்து சில குரல்கள் - என்ற நாவல் மற்றும் பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும்

    எழுதியிருக்கும் கோபிகிருஷ்ணன் பல்வேறு சமூக நல நிறுவனங்களில் பணியாற்றியவர். அவற்றின் வழி எளிய மக்களுக்கு உதவிகள் கிடைப்பதில் எத்தனை இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதை அனுபவ ரிதியாகத் தெரிந்து கொண்டவர். அவர் படைப்புலகின் பிரதான இரண்டு கருப்பொருட்களாக சமூக நல நிறுவனங்களில் நிலவி வரும் பாசாங்குகளும், சீர்கேடுகளும், மற்றும் உளவியல் மருத்துவத் துறையில் நிலவி வரும் குறைபாடுகளும், மனித விரோத அணுகுமுறைகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

    இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் நடந்தேறிய கோபிகிருஷ்ணன் நினைவு நாள் கூட்டத்தில் ஏறத்தாழ 30 வருடங்களாக மூளைவளர்ச்சியற்ற குழந்தைகளின் நலனுக்குப் பணியாற்றி வரும் ஜலாலுதீன் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு எளிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    கடந்த பதினைந்து வருடங்களாக கூத்துப் பட்டறைக் கலைஞராகவும், வீதி நாடகக் கலைஞராகவும் இயங்கி வரும் ஜெயராவ் கோபிகிருஷ்ணனின் 'முடியாத சமன் என்ற சிறுகதையை மேடையில் உணர்ச்சிகரமாக நடித்தார். நாடகத்தை குறுகிய காலத்தில் திறம்பட இயக்கியிருந்தவர் வெளி ரங்கராஜன். எழுத்து வடிவிலான ஒரு படைப்பு நாடக வடிவம் ஏற்கும் போது அதன் வாசக வட்டம் பன்மடங்காக விரிவடைகிறது.

    கோபிகிருஷ்ணன் எழுதிய 'சமூகப் பணி, அ - சமூகப்பணி, எதிர் - சமூகப் பணி' என்ற சமூகப் பணியாளர்களின் கையேடாகக் கொள்ளத்தக்க - சிறு நூலின் ஆங்கில வடிவம் அன்று எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.


    பி.கே. சிவகுமார் :: சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

    பட்டுப்பட்ட பலாமரம் தழைக்கப் பாடி ஒரு படி திணையைக் கொடையாகப் பெற்ற அவ்வையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அவ்வை, நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழம்தர வேண்டுமென்று பனைமரம் துளிர்க்கப் பாடியப் பாடலும் தமிழில் உண்டு. தம் குலத்தின்மேல் நூலொன்றை ஒட்டக்கூத்தர் பாடவேண்டுமென்று தம் தலைகளைப் பரிசாகக் கொடுத்தோர் தலைகள் மீதமர்ந்து அவர்கள் உயிர்பெற ஒட்டக்கூத்தன் பாடிய பாடலும் உண்டு.

    உயிர்களை உயிர்ப்பிக்கின்றனவோ இல்லையோ, மனம் என்கிற பிரபஞ்சத்தின் பல்வேறு ஆழ அகலங்களைத் தொட்டுத் துழாவி அதனுள் துயில் கொண்டிருக்கும் பல்வேறு உணர்வுகளையும் சஞ்சலங்களையும் கனவுகளையும் பலவீனங்களையும் நிராசைகளையும் வெறுமையையும் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டுணர்தலையும் இன்ன உணர்வென்று நமக்கே தெரியாத இன்னபிற உணர்வுகளையும் உயிர்ப்பிக்கிற - அடையாளம் கண்டுகொள்ள உதவுகிற - காரியத்தை ஒரு நல்ல எழுத்தால் செய்ய முடியும் என்பதைச் சொல்கிற உருவகங்களாக (metaphor) இக்கதைகள் அமைந்துள்ளன.

    சில எழுத்தாளர்களைப் படிக்கும்போது உண்டாகிற ஆனந்தம், பரவசம் இவற்றுடனேயே நம்முடைய வாசிப்பு எவ்வளவு குறுகியது என்ற குறுகுறுப்பும் எழும். அந்தக் குறுகுறுப்பு இன்னும் தீவிரமாக வாசிக்கத் தூண்டுகிற ஆர்வமாகவும் உருவெடுக்கும். இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளை "எழுதப்பட்ட காலத்துடனும் சூழலுடனும் ஓர் ஆர்வலன் மேற்கொண்ட எதிர்வினைகள்" என்று சுகுமாரன் அடக்கமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார். எதிர்வினை என்ற சொல்லுக்குத் தமிழ் மனதில் ஓர் எதிர்மறையான பொருள் குடிகொண்டுவிட்டதோ என்ற கேள்வி எனக்கு உண்டு. விவாதம், சண்டை, உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அடுத்தவரைக் கேள்வி கேட்டல், கிண்டல் செய்தல் என்ற பொருள்களில் அல்லாமல், எதிர்வினை என்பது கிரியேடிவ்வாகவும் கவித்துவமாகவும் இருக்கமுடியுமென்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.

    தமிழ் இலக்கியம், பிற இந்தியமொழி இலக்கியங்கள், வெளிநாட்டு இலக்கியங்கள், சங்கீதம், ஓவியம், சினிமா, சமூகம் என்று ஏழுபிரிவுகளில் சுகுமாரன் எழுதிய 31 கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. நெஞ்சின் அடிப்பரப்பில் சுடர்விட்டு எரிந்தபடி, வாழ்வின் காண்கிற காட்சிகளை இதனுடன் முடிச்சிப் போட்டொ, முரண்பட்டுப் பொருத்தியோ பார்க்கச் சொல்கிற ஆழமான சலனங்கள். தூக்கத்தில் காண்கிற கனவில்கூட இச்சலனங்கள் எழுப்புகிற காட்சிகள் இடம்பெறுகிற அளவுக்கு அவை நம்மையுமறியாமல் நம்மை பாதித்திருக்கும். அத்தகைய ஆழமான சலனங்களை ஏற்படுத்தவல்லவை இதில் உள்ள பல கட்டுரைகள்.

    "நவீன கவிதை, வடிவ ரீதியான மாற்றம் மட்டுமல்ல. காலநிகழ்வுகளின் இயக்கத்தால் உணர்வில் நேர்ந்த மாறுதல்" என்று சுகுமாரன் எழுதும்போது அதுவே கவிதைமாதிரி தெரிகிறது. "பிச்சமூர்த்தியின் கவிதை மனத்தில் அடிப்படையாக நின்ற வாழ்க்கைப் பார்வை ஆன்மீகம் சார்ந்தது. வாழ்க்கை முதன்மையானது. கலை முதலிய யாவும் இரண்டாம் பட்சமானதே" என்று பிச்சமூர்த்தி கொண்டிருந்த நம்பிக்கை ஆகியவற்ற்றின்மீது வெளிச்சம் காட்டி, தமிழ்க் கவிதையின் கற்பனாவாத மரபுக்கும், புதிய போக்குக்கும் இணைப்புக் கண்ணியாக நின்றவர் பிச்சமூர்த்தி என்று அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர்.

    நவீன கவிதைக்கும் ("ஐரோப்பிய மைய வாதத்தைப் பின்புலமாகக் கொண்டது, அவை நமது மரபு சார்ந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டன" என்கிறார்), பின்நவீனத்துவக் கவிதைக்கும் ("விரிவடைந்த மொழிவட்டம், வாழ்வனுபவத்திலிருந்து நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமல்ல என்ற நிலைப்பாடு உடையது, அகம் புறம் என்ற வேறுபாடுகளைத் தவிர்த்தது" என்கிறார்) உள்ள வேறுபாட்டைச் சுகுமாரன் விவரிக்கிற இடம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல - யோசிக்கத்தக்கதாகவும், என்னளவிலே புதுமையானதாகவும் இருந்தது.

    கலாப்ரியாவின் கவிதைகளைச் "சாதாரணனின் கலகம்", "பார்வையாளனின் பதற்றம்" ஆகிய சூத்திரங்களின் அடிப்படையில் சுகுமாரன் விளக்குகிறார். கலாப்ரியாவின் எம்பாவாய் என்ற கவிதையை மரபின் மீறலுக்கும் மொழியின் மாற்றத்துக்கும் உதாரணம் என்று சுகுமாரன் சுட்டிக் காட்டுவதைப் படித்தபோது, நவீனக் கவிதையைப் புரிந்து கொள்ள மரபில் அறிவும் அனுபவமும் வேண்டும் என்கிற துணைப்பாடமும் வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

    இந்தியத்துவமும் சமகால அறிமுகமும் என்கிற கட்டுரையில் பாரதியின் இந்தியத்துவம் இரு பக்கம் கொண்ட நாணயம் என்கிறார். தமிழ்த்தன்மை ஒரு பக்கம், இந்தியத் தன்மை இன்னொரு பக்கம். இந்தியத்துவம் என்பதை ஓர் உணர்வாக - கருத்தாக அல்ல - என்று சுகுமாரன் வரையறுப்பது, இந்திய தேசியவாதிகளும் தமிழ் தேசியவாதிகளும் கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். மேலும் சுகுமாரன் சொல்கிறார்:
    "எந்த மொழியின் இலக்கியமும் அது பிறந்த மண்ணின் இயல்புகளையே பிரதானமாகக் கொண்டிருக்கும். அது சருமம். அதன்மீது படியும் வேறு இயல்போ மேலாடை. தமிழ்க் குணத்தின்மீது கவியும் இந்தியத்துவம் அல்லது பிறமொழி இயல்புகளின்மீது கவியும் இந்தியத்துவம் இது போன்றது என்று கருதுகிறேன்".
    இந்தியத்துவம் என்ற உணர்வை நவீனமானது என்றும், தற்காலத் தன்மை கொண்டது என்றும் சுகுமாரன் குறிப்பிடும்போது, அவருள்ளே இருக்கிற விசாலமான இலக்கிய மனமும் பிரபஞ்சம் தழுவிய கவிதை நெஞ்சும் இந்த முதிர்ச்சியான பார்வைக்கு வித்திட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

    பஷீருடனான சுகுமாரனின் அனுபவம் ரஸமாக இருக்கிறது. பஷீர் முன்னிலையில் "நான் பேச வந்தவன் அல்ல, பஷீர் பேசுவதைக் கேட்க வந்தவன்" என்று அவர் உணர்ந்தது மாதிரி இன்னோர் எழுத்தாளர் முன் நான் உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்கிற சமீபகால வாசகர்கள், தாங்கள் விரும்பிப் படிக்கிற எழுத்தாளரிடம் தங்கள் அறிவுஜீவிதத்தைக் காட்டுகிற ஆசையுடன் - பெற்றோர் முன் வித்தையைக் காட்டுகிற குழந்தை மாதிரி இது - கண்டதையும் பேசவும் கேட்கவும் செய்ய, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே இடைவெளி தேவை என்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி யாரேனும் சொல்லப் போனால், எப்படி அவர் இடைவெளி தேவை என்று சொல்லலாம் என்றும் வாசகர்கள் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். ஓர் எழுத்தாளர் வாசகரிடம் இடைவெளி எதிர்பார்ப்பதற்கான காரணிகள் என்ன என்பதை வாசகர் மனம் ஆழ்ந்து சிந்திப்பதில்லை. பஷீர், தகழி ஆகியோரைச் சந்தித்த அனுபவங்களை சுகுமாரன் எழுதியிருப்பதைப் படித்தபோது, ஓர் எழுத்தாளரின் சுதந்திரத்தையும், கருத்தையும் மதித்து எழுத்தாளரை அதிகம் பேசவிட்டுக் கேட்கிற வாசகராக எப்போதும் அவர் இருந்து வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த முதிர்ச்சி அவரும் ஓர் எழுத்தாளராக இருப்பதால் வந்திருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ஆனி ·ப்ராங்க்கின் டயரியைப் பற்றியும், வின்சென்ட் வான்கோவைப் பற்றியுமான விரிவான அறிமுகக் கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன.
    "நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை"
    என்று வான்கோவின் ஒரு கடித மேற்கோளில் இருந்து அட்டகாசமாகத் தொடங்குகிற அந்தக் கட்டுரை ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனைப் பார்க்கிற பார்வையாகும். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பிறமொழி அல்லது தனக்குப் பிடித்த கலைஞர்களைப் பார்க்கும்போதும் (எழுதும்போது) அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், கலகக்காரர்களாகவும் மட்டும் பார்ப்பதில்லை. மனிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் உரிய பலவீனமும் நெகிழ்ச்சியும் உடையவர்களாகவும், கருத்தியல் ரீதியான இறுக்கங்களைச் சுமக்காதவர்களாகவும் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றனர். இது சரியான வழிமுறைதான். ஆனால், இதே அளவுகோலை தமக்குப் பிடிக்காதவர்களுக்கோ அல்லது தமிழ்ச் சூழலுக்கோ அவர்கள் பொருத்திப் பார்ப்பதில்லை. ஆனால், சுகுமாரன் வான்கோவைப் பற்றி எழுதும்போதும், பசுவய்யாவைப் பற்றி எழுதும்போதும், பஷீரைப் பற்றி எழுதும்போதும், கே.எம். ஆதிமூலத்தைப் பற்றி எழுதும்போதும், ஜான் ஆப்ரஹாமைப் பற்றி எழுதும்போதும் அவர்களை நேர்மையுடனும் அதே அளவுகோல்களுடனும் அணுகுகிறார். அதற்குக் காரணம் சுகுமாரன் தன்னுடைய மதிப்பீடுகளை ரசனை, உள்ளுணர்வு, தன்னுள் தொடரும் தேடல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கிறார். .

    கொஞ்ச நாட்களுக்கு முன் ஓர் இணையக் குழுவில் "சிதம்பரம்" மலையாளத் திரைப்படம் பற்றிய ஒரு விவாதம் ஓடியது. அந்தப் படம் புரிந்தது என்று சிலரும், ஒன்றுமே புரியவில்லை, கலைப்படம் என்றால் இதுதானா என்று கிண்டலாக சிலரும் எழுதியிருந்தார்கள். இத்தொகுப்பில் அப்படத்தைப் பற்றிய ஓர் அருமையான கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரையைப் படித்தவுடன் சிதம்பரம் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகி இருக்கிறது. அந்தப் படம் என் சிற்றறிவுக்குப் புரியாமல் போகாது என்ற நம்பிக்கையை அந்தக் கட்டுரை எனக்குக் கொடுத்தது.

    சமூகம் என்ற பிரிவில் பெத்தாபுரத்தில் நடக்கிற விபசார சந்தை பற்றியும், கூவாகத்தில் நடக்கிற அலிகளின் திருவிழா பற்றியும், கேரளப் பழங்குடி மக்களின் போராளி ஜானு பற்றியுமான விவரமான கட்டுரைகள் இருக்கின்றன. சுகுமாரன் என்கிற கவிஞரின், ரசனையாளரின் உள்ளிருக்கும் சமூகப் பிரக்ஞை, சக மனிதர்கள் மேலான அக்கறை ஆகியவற்றை அக்கட்டுரைகள் சிறப்பாக வெளிக்கொணர்கின்றன. இத்தொகுப்பில் இருக்கிற சில கட்டுரைகள் சுகுமாரன் குங்குமம் வார இதழில் பணிபுரிந்தபோது அதிலே வெளிவந்தவையாம்.

    (திசைகளும் தடங்களும் - சுகுமாரன் - அன்னம்/அகரம்)

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு