வியாழன், ஜூலை 21, 2005

திண்ணை

பாவண்ணன் ::

மானுட வாழ்வின் ஆனந்தம் (வெளி ரெங்கராஜனின் "இடிபாடுகளுக்கிடையில்")

குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு கட்டுரை. தடைசெய்யப்பட்டுவிட்ட கர்பா நடனத்தின்மீது குஜராத் கிராமத்துப் பெண்களுக்கு இருந்த அளவுகடந்த ஈடுபாட்டை முன்வைக்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு பத்திரிகை நிரூபரின் தற்கொலைக்காகப் பரிவு காட்டாத உலகத்தின் அலட்சியம், தாய்மொழிக்கல்வியின் அவசியம், நகுலன், கோபிகிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோரின் இலக்கியப் படைப்புகள் தந்த வாசிப்பனுவபங்கள், அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற கூத்துகள், நாடகங்கள், ஆய்வரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஊட்டிய சிந்தனைகள் என விதம்விதமான தளம்சார்ந்தவையாக கட்டுரைகள் உள்ளன.

முடிவின் நிச்சயமின்மைதான் விளையாட்டுக்கு ஓர் ஆர்வத்தைத் தருகிறது. பலவிதமான கணக்குகள் ஒவ்வொருவர் மனத்திலும் சுழன்றபடியிருக்க, வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெயர்ந்தபடி இருக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை இந்த வெற்றி தோல்விகள் அதிகம் பாதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் தற்செயலானவை. அவ்வளவுதான். விளையாட்டில் உண்மையான திளைப்பே ஆட்டக்காரனுக்கு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

விளையாட்டு மட்டுமல்ல, இலக்கியம், நாடகம், கூத்து, இசை என கலைசார்ந்த துறைகளாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்தத் திளைப்பு முக்கியம். இத்திளைப்புதான் மானுட வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒரே ஆனந்தம். ஒன்று நம்மைக் கடந்துபோக அனுமதித்தபடி நாமே உடகமாக நின்றிருக்கும் ஆனந்தம். இக்கட்டுரைத் தொகுப்பில் எல்லா இடங்களிலும் ரெங்கராஜன் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.



ஏ.எம். றியாஸ் அஹமட்

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் - 01

பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.

காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபா¤ப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.

நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.



வடு - கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை ::

தழும்புகளின் பதிவுகள் - பாவண்ணன்

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் பெருமளவில் வாழும் ஊர் இளையான்குடி. அவ்வளவாக சாதி வேறுபாடு பார்க்காதவர்கள். தலித் மக்களுடன் சேர்ந்து பழகுவதில் அவர்களுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. மற்ற ஊர்கள் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள். மணமக்கள் ஊர்வலமாக இருந்தாலும் சரி, சவ ஊர்வலமாக இருந்தாலும் சரி, தம் ஊர்த் தெருக்கள் வழியாக செல்லக்கூடாது என்பதில் உறுதியைக் கடைப்பிடிப்பவர்கள்.

நேர்மையைவிட சாதியுணர்வை முக்கியமாக நினைக்கப்படுவதற்கு முதல் சம்பவம் எடுத்துக்காட்டு. நன்றியுணர்ச்சியைவிட சாதியுணர்வால் மனத்தை நிறைத்துவைக்கத் தலைப்பட்ட வாழ்க்கைக்கு இரண்டாவது சம்பவம் எடுத்துக்காட்டு. சகஜமாக வெளிப்படவேண்டிய / பின்பற்றப்படவேண்டிய நேர்மை, நன்றி ஆகிய குணங்களைக்காட்டிலும் கூடுதலான அளவில் மனிதர்கள் முக்கியத்துவம் வழங்குகிற சாதியின் குரூர முகங்களின் இறுக்கத்தை இவை சுட்டிக்காட்டுகின்றன. மனிதாபிமானத்துக்கு எதிரானதாக சாதி எப்படி காலம்காலமாக மனிதர்களை தகவமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம் சமூகத்தின் கட்டுமானத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

நாலணா கூலிக்குக் களையெடுப்பதற்கு தன்னோடு அழைத்துச்சென்றும் தான் விறகுவெட்டிக் குவிக்கும்வரை நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு தலைச்சுமையோடு வீட்டுக்குத் திரும்பும் சின்னம்மா பெரியம்மாக்களின் அன்பைக் குறிப்பிடும் விதமும் முக்கியமானவை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு