செவ்வாய், அக்டோபர் 04, 2005

(மீண்டும்) இயக்குநராகும் தோழன்

தெலுங்குப் படங்கள் தினுசானவை. வயதில் சிரஞ்சீவியாக இருந்தாலும், தோற்றத்தில் சித்தார்த்தாக இருந்தாலும் மூன்று நாயகிகளாவது வேண்டும். சிவகுமார் வெற்றி பெற வேண்டும்.

திரைப்படத்துறைக்குள் நுழைவதன் கஷ்டங்களை அஜீத் மூலமே தெரிந்து கொள்ளலாம். '(கண்டு கொண்டேன்)'2-இல் அப்பா மாத்ருபூதம் தலையில் அடித்துக் கொள்ள விளக்குப் பிடிக்கும் அஜீத்; 'முகவரி'யில் மாடியுச்சிக்கான கடைசிப்படியில் லிஃப்டைப் பிடித்து தரைக்கு இறங்கிவிடும் அஜீத். 'சர்வர் சுந்தரம்' முதல் 'அழகிய தீயே' வரை உதவி இயக்குநர் ஆகாமல் போவதற்கான காரணங்களைத் தேற்றிக் கொள்ளலாம்.

'கற்றதும் பெற்றதும்'-இல் சுஜாதா காந்தி கிருஷ்ணாவை சொல்லியிருந்தார். முன்பொரு சமயம் சிவகுமாரைக் குறிப்பிட்டிருந்தார். மணி ரத்னத்தின் சிஷ்யர். பிட்ஸ் பிலானி (BITS, Pilani) மாணவர். ஆஷா (Asha for Education), எயிட் (Association for India Development) போன்ற சேவை நிறுவனங்களுக்கு குறும்படம் எடுத்தவர்.

அரவிந்த் சாமி நடித்த என்ஜினீயர் நின்று போனது போலவே சிவகுமாருடைய அரவிந்த் சுவாமி - ஏ.ஆர்.ரெஹ்மான் - சிம்ரன் படமும் பூஜை முடிந்தாலும் பாதிப்படத்தில் காணாமல் போனது.

திரையுலகில் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் கலைந்த கனவுகளும் பல. கலையுணர்வும் திறமைகளும் படைத்த பலரைத் திரைத்துறையில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் சந்தர்ப்ப மணியோசை அழைக்கக் காத்திருக் கிறார்கள். சில சமயம் இரைச்சலின் நடுவே, அதன் மெல்லிய கிணுகிணு கேட்காது! - சுஜாதா


கல்லூரி நாடகங்களை ஆர்வமாக நடத்தியவர். 'தில்ஸே' முடித்துவிட்டு தற்செயலாக சென்னையில் சந்தித்தபோது, தன்னுடைய திட்டங்களையும் கனவுகளையும் லட்சியமாக விவரித்தார். திருப்திக்காக தொண்டு நிறுவன ஆவணப்படங்களும், குறிக்கோள் குறும்படங்களும்; வாழ்க்கை செலவுக்கு வணிகப்படங்கள்.

பிலானியில் தமிழர்கள் அதிகம். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் தெலுங்கர் என்றால், மீதம் தமிழ்நாடு. ஹிந்திகாரர்களுக்கும் 'தொங்கண கொடுகா'வும் 'இல்லடா மச்சி'யும் சொல்லிக் கொடுத்து திராவிடப் பாரம்பரியத்தை வளர்க்கும் உணர்வுடையோர் நிறைந்தது.

பேச்சு வளம் இருக்கும் அளவுக்கு, படிக்கும் சக்தி இல்லாதவர்கள். ஐநூறு பேரில் ஐம்பது என்ஜினீயர்களுக்குத்தான் தமிழ் எழுத்து கூட்ட வரும். விகடன் படிப்போர் எல்லாரும் சேர்த்தாலும், ஒரு கை ஓசை. சிவகுமாரில் இந்த ஒரு கையில் ஒருவர். இணையம் வந்தபிறகு நான் தெரிந்து கொண்ட சில எழுத்தாளர்களை அப்பொழுதே படித்து மகிழ்ந்தவர்.

தமிழ் படிக்கத் தெரியாமல், பேசிக் களைத்த மாணவ சமூகத்துக்கு இரு பொழுதுபோக்குகள்: சினிமா மற்றும் நாடகம். கூத்துப் பட்டறை, பாதல் சர்க்கார் ரேஞ்சுக்கு பிலானி தமிழ் சங்கத்தின் நாடகங்களைக் கொண்டு செல்லாவிட்டாலும், பல இயக்கங்களில் எங்களை 'அட' போட வைத்தவன் சிவகுமார். பார்வையாளர்களின் நடுவில் இருந்து கதாபாத்திரங்கள் தோன்றுவது, சுஜாதாவின் 'பதவிக்காக', இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' என பல வித்தியாசங்களை முயற்சித்தவன்.

'சுக்கல்லோ சந்துருடு' சிவகுமாரின் புதிய படம். சுறுசுறுப்பாக முடிந்து, பிரபுதேவாவைப் போல் சிவகுமாரையும் தெலுங்கு தேசம் ஸ்வீகரிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Chukkallo Chandrudu - பூஜை - Telugu Cinema - Siddardha, Charmme, Sada & Saloni

சிவகுமாரின் 'ஆஷா' படங்கள்: Asha for Education - Asha :: Gomathi | Asha :: ஜீவன் ஞானோதயா பள்ளி | Asha :: Silence

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு