புதன், நவம்பர் 16, 2005

அரசியல் ரத்னா

Image hosted by Photobucket.com'தி ஹிந்து'வின் ஆசிரியர் என் ராமிற்கு ஸ்ரீலங்கா ரத்னா விருது கிடைத்திருக்கிறது. பாரத ரத்னாவைப் போல் இலங்கையின் உச்சவிருது.

இந்தியாவில் பிறக்காதவர்களாக 1980-இல் மதர் தெரஸாவிற்கும், 1990-இல் நெல்சன் மண்டேலாவிற்கும் பாரத ரத்னா கிடைத்திருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், சிவி ராமனுக்கு 1954-இலேயே கௌரவித்திருக்கிறார்கள். அமர்த்யா சென், லதா மங்கேஷ்கர், எம்.எஸ் சுப்புலஷ்மி என்று பல துறைகள். எல்லை காந்தி பெற்றிருக்கிறார். சாகித்ய அகாதெமி பெற்ற பிவி கானேயும் உண்டு. மாநில முதல்வர் ம.கோ.ராவும் இருக்கிறார்.

ஆண்டுவாரியாக 'இலங்கை ரத்னா' பெற்றவர்கள் விவரம் கூகிளில் அகப்படவில்லை. லெக்ஸிஸ்-நெக்ஸிஸில் கிடைக்கலாம். சுவாரசியமான, அதே சமயம் சரளமான நடையில் உலகத்தை பதினாறு column, பதினாறு பக்கங்களில் அடக்கியவர். பத்மபூஷண் விருது பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரசுக்கு மட்டுமே உரித்தான் ஊழல் வெளிச்சங்களை, போஃபர்ஸ் அமபலம் மூலம் ஹிந்துவுக்கும் கொண்டு வந்தவர்.

வலைப்பதிவுகளை படிக்காத அந்தக்காலமாக இருந்திருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். தன் கொள்கைகளுக்கு மாற்றான கருத்துக்களை வெளியிட்டவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழக அரசால் ஒடுக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வந்திருக்கிறார். 1987-இல் பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது, ஆனந்த விகடனில் கருத்துப்படம் வெளிட்டதற்காக எஸ் பாலசுப்ரமணியன் கைதானபோது ஆதரவு திரட்டினார். 1992-இல் இல்லுஸ்டிரேடட் வீக்லியின் சுனில் உட்பட முரசொலி செல்வம், கோவை மாலை முரசு ஆகியோரை சேடப்பட்டி முத்தையாவின் சேஷ்டையான பிடிவாரண்ட் கொண்டு கைது செய்தபோது செயல்பட்டார். 'நக்கீரன்' கோபால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக 'வைகோ' போன்ற முரண்பட்ட எண்ணங்களை கொண்டவர்களின் கருத்து சுதந்திரத்துக்காகவும் தொடர்ச்சியாக எழுதி, பேசி, செயல்பட்டு வந்திருக்கிறார்.

இலங்கை சம்பந்தமான செய்திகளிலும், விடுதலைப்புலிகளை வில்லனாக்குவதிலும் என் ராம் முன்னிலை வகிக்கிறார் என்பது பரவலான குற்றச்சாட்டு. இருந்தாலும், ஹிந்து ராம் இது போன்ற விருதுகளுக்குத் தகுதியானவர்.

லோவல் சன், பாஸ்டன் ஹெரால்ட் என்று பாரம்பரிய சார்புநிலை. குடியரசு கட்சிக்கு சார்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற சில தினசரிகள். நியு யார்க் டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன் என்று ஊருக்கு ஒரு பத்திரிகை நடுநிலைமை, சுதந்திர கட்சி, ஆதரவாக எழுதுகிறார்கள். குருட்டாம்போக்கில் அமெரிக்காவில் நாளிதழ்களின் போக்கை, அணுகுமுறையை கணித்துவிடலாம்.

இந்தியாவில் இந்த முறை எவ்வாறு வேலை செய்கிறது என்று விளங்கவில்லை. அதிகாரத்துக்கும் பதவியில் இருப்போர்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எப்போதுமே எதிர்க்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேஜ் 3 போதுமானதாக இருக்கிறது. மந்தமான வானிலை கொண்ட பெங்களூர் போலவே மப்போடு டெக்கான் ஹெரால்ட் அமைதியாக காட்சியளிக்கிறது. குஷ்வந்த் சிங்கின் ஹிந்துஸ்தான் டைம்ஸ், சென்னையையும் ஆட்கொண்ட டெக்கான் க்ரானிகிள், அறிவுஜீவிகள் நாடும் டெலிகிராஃப்.

எல்லாருமே பாகிஸ்தானை கண்டிப்பார்கள். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளையை சுட்டுவார்கள். புள்ளிவிவரங்கள் நிறைத்து தலையங்கங்கள் எழுதுவார்கள். இலச்சினையை நீக்கிவிட்டால் எந்த பத்திரிகையின் ஒபீனியன் என்பது கண்டுபிடிப்பது எனக்கு பிரம்மப்பிரயத்தனமாக இருக்கும்.


தி இந்து | மதி | தங்கமணி | அலைஞனின் அலைகள்: குவியம | பிகே சிவகுமார் | ரவி ஸ்ரீனிவாஸ் | படிப்பகம்



| | | |

4 கருத்துகள்:

பாலா:

1. அவர் மார்க்சிஸ்ட் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்

2. இலங்கைக்கு ஆற்றிய சேவை என்ற விதத்தில், அரசு சுனாமி நிவாரணப்பணிகள் எதுவும் செய்யவே இல்லை என்பதை பல அரசு சாரா நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் சொன்னதையும் மீறி தமிழர்களுக்கு நிவாரணப்பணிகள் கிடைத்தவிதமாக செய்திவெளியிட்டதைச் சொல்லலாம்.

3. கொழும்பைத் தாண்டாமலேயே எழுதப்படும் கட்டுரைகளை பத்திரிக்கை துறை சாதனையாகக் குறிப்பிடலாம்.

4. மாற்றுக்கருத்துக்கு ஆதரவளிப்பவர் என்ற வகையில் உடனே கருணாவை தொடர்புகொண்டு பேட்டி எடுத்து வெளியிட்டதையும், எப்படியெல்லாம் புலிகள் கருணாவை எதிர்கொள்ளக்கூடும்; அவர் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற வகையில் எல்லா அரசியல்/ யுத்த தந்திரங்களை எடுத்துக்கூறி இந்துவிலும், பிரண்ட்லைனிலும் உழைத்ததைச் சொல்லலாம். இன்றுவரை கருணாவின் ஒரே அதிகாரப்பூர்வ செய்தியாளராகச் சொல்வது மேலும் சிறப்பு சேர்க்கும்.

5. தமிழர்களின் மீது அரசு ஏவிய வன்முறை, கொலைகள், இன அழிப்புகள், அமைதிப்படை நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஏறக்குறைய புலிகளைப் பற்றிய ஒவ்வொரு செய்தியிலும் இராஜீவ் கொலையை நினைவூகூர்வதை அவரது நினைவுத்திறனுக்குச் சான்றாகச் சொல்லலாம்.

6. நெல்சன் மண்டேலாவையும், அன்னை தெராசாவையும் இங்கு நினைவு கூர்ந்திருப்பது மட்டும்தான் எனக்கு புரியவில்லை.

மற்ற இந்திய பத்திரிகைகள், நாளிதழ்களுடன் ஹிந்துவை ஒப்பிட்டிருக்கிறேன். எந்த இந்திய வெளியீடுகள் ஹிந்துவில் இருந்து இலங்கை குறித்த செய்திகளிலும், தலையங்கங்களிலும் மாறுபடுகிறது என்பதையும் விரிவாக சொன்னால் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

---நெல்சன் மண்டேலாவையும், அன்னை தெராசாவையும் இங்கு நினைவு கூர்ந்திருப்பது ---

இந்தியாவில் யாருக்கெல்லாம் வெளிநாட்டவருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தபோது கிடைத்த தகவலை பகிர்ந்து கொண்டேன். பாரத ரத்னா சீரான நெறிகளை/வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, ஒழுங்குமுறையில் வழங்கப்படாமல் inconsistentஆக தரப்படுகிறது என்று தோன்றியது. அதற்காகவே இங்கு குறிப்பிட்டிருந்தேன்.

சுருக்கமான முழுமையான பார்வைகளுக்கு நன்றி.

//ஹிந்து ராம் இது போன்ற விருதுகளுக்குத் தகுதியானவர்//

தகுதியானவர் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருப்பதாக தெரியவில்லை. அந்த தகுதி எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் தான் வெவ்வேறு. இராமாபிமானிகள் நடுநிலையான சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதும், அதை நினைத்துப் பெருமைப்படுவதும் தான் உச்சகட்ட நகைச்சுவை :-).

இவ்விஷயத்தில் நடுநிலைமைக்கு ஒரு உதாரணம்.

நன்றி சுந்தரமூர்த்தி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு