புதன், ஜூன் 28, 2006

Mind Matters

மனம் போன போக்கில் எழுத வேண்டும். இலக்கு எதுவும் கூடாது. பாஸிவ் வாய்ஸை தவிர்க்க வேண்டும். அம்மாவிற்கு எழுதும் கடிதம் போல் இயல்பு கிடைத்தால் நல்லது. கஷ்டப்பட்டு உவமை போடக் கூடாது. எதிர்மறை வாக்கியங்களை விட்டு விடு.

ம்யூனிச் படத்தின் ஹீரோவைப் பார்த்தால் ஹல்க்தான் நிழலாடுகிறது. ஐ.எம்.டி.பி பக்கத்தின் சுட்டி கொடுக்கலாம். படிப்பவர்களுக்கே அங்கு போக வேண்டும் என்று தெரியாதா? கேள்விகளைக் கொண்டு கட்டுரையைத் தொடுப்பது அலுப்பாக இருக்கும்.

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு கிடையாது. யூதர்களுக்குக் கூட இல்லை. 'ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா' உபயம். சின்ன வயதில் இருந்தே குற்றவுணர்வை வைத்து மிரட்டுகிறார்கள். தப்பு செய்தோமோ; தோப்புக் கரணம் போட்டோமோ என்று விட முடிவதில்லை. ஜூரியை வைத்து தீர்ப்பு எழுதுவதற்கும் நீதிபதியை நடுவணாகக் கொண்டதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டும். கூகிள் தேடலில் மேட்டர் சிக்கும்.

திரைப்படமாக பட்டியலிட ஆசை. ஆனால், பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர படப் பட்டியலில் வேறு உபயோகம் ஏதும் இல்லை. இன்னொரு முறை டிவிடி-யை வாடகை எடுப்பது குறையலாம். புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் படப்பட்டியல் இடுவதற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. Been there... done that என்று உலகிற்கு ஓதுவது.

மிடில்-ஏஜ் க்ரைஸிஸ் என்றால் என்ன? கம்பி வளையத்தை எலி விடாமல் துரத்தி ஓடிக் கொண்டே இருக்கும். எலியாகத் தன்னையும், வளையமாக வேலையையும், கற்பிப்பது. நின்று விட்டால் ஆராய்ச்சியாளருக்கும் போரடிக்கும். மிகையுந்துரத்த வெம்பிணியுந்துரத்த அலுக்காமல் எதையாவது விரட்டும் மனம் இருக்கும் வரை நடு வயதுப் போராட்டங்களைத் தவிர்க்கலாம்.

அழகாக இருப்பவர்களையும் சொந்தக்காரர்களையும் தான் அமெரிக்கா விருப்பத்துடன் உற்றுப் பார்க்கிறது. கொசுவைக் கொன்றால் வருத்தமாக இல்லை. எலியை கார் மிதித்தால், காருக்கு சேதம் ஆகாதவரை லாபம். அணில் செத்துப் போனால் அன்று முழுக்க குற்ற உணர்ச்சி. Nicole Vaidisova-வைத்தான் விம்பிள்டனில் முன்னிறுத்துகிறார்கள். ஷரபோவா நேற்றைய மலர். மீடியாவுக்கு நாளொரு மாயை. எதுகை மோனை இல்லாவிட்டால் இயற்கையாக இருக்கும்.

லாப்ஸ்டரைக் கூட கனிவுடன் கொலை செய்ய வேண்டும் என்கிறார்கள். தனி வீட்டில் வாழாத ஈர்க்கிறாலை சாப்பிட மாட்டார்களாம். அகரமுதலி தேடாமல் ஈர்க்கிறால் என்றால் லாப்ஸ்டர் நண்டு என்று தெரிய வேண்டும்.

Takoyaki உண்ணுவதற்குக் கூட மஞ்சள் நீர் தெளித்து 'அட்டபாதரே! எண்காலி!! சாக்குக்கணவாய்!!! பேய்க்கணவாய!!!! வெட்டிக் கொள்ளலாமா?' என்று திருவிளையாடற் புராண விளிச்சொற்களுடன் வினவச் சொல்வார்கள்.

கவனம் சிதறக் கூடாது என்பதை விட சிந்தை மொய்ம்பு தேவை.

13 கருத்துகள்:

"ninaivodai" pathivu arumai !

I could have missed this easily in your myriad of blogs :-)

நிஜமாவே இதான் ப்ளாக்-கோட இலக்கணத்துக்கு ரொம்பவும் ஒத்துப்போகிற பதிவு - collection of thoughts.

Nicole Vaidisova
பற்றி எப்பவோ ஒரு ஆளு இவங்க பெரிய ஆளா வருவாங்கன்னு ஜோஸியம் சொன்னாராமே ?



If this is not spotting the talent early, what else..

விளையும் பயிர் ....

//கவனம் சிதறக் கூடாது என்பதை விட சிந்தை மொய்ம்பு தேவை.//
எதாவது பிட்ட போட்டு கலாய்கலாம் என்று வந்தால் 'மெசேஜ்' சொல்றாங்க. ஏமாற்றம் ஏமாற்றம் ! பெருத்த ஏமாற்றம் !!!

Post Modernism?
;)

.:dYNo:.

"Mind matters (v)"

It does indeed.

கண்ணை மூடி மனம் எங்கெங்கு குதிக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா. இரண்டு நிமிடங்களில் ஆரம்பித்த இடத்திலிருந்து பல தாவல்கள் போயிருக்கும். திரும்ப நூல் பிடித்து ஆரம்பத்துக்கு திரும்பி வர முயல்வது நல்ல விளையாட்டு.

செய்து பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

சிந்தனை செய். செய் என்றால்? செய்முறையில் சாத்தியமா? கேள்விகளே பின்னூட்டமா? கேள்விப்பட்டதில்லை.

நடக்கட்டும். அந்த வாலில்லா..

:) அப்பப்ப இப்படி புரியாத மாதிரி எழுதுறீங்களே என்ன சமாச்சாரம்னு சொன்னா நாங்களும் கத்துக்குவோம்ல

கார்த்திக்வேலு, நன்றி!

---இலக்கணத்துக்கு ரொம்பவும் ஒத்துப்போகிற பதிவு ---

உண்மை... தினசரி இப்படி எழுதினால் கோவி கண்ணன் மாதிரி லொள்ளு பார்ட்டிங்க எல்லாம் 'பெருசு' என்று பத்து வயசைக் கூட்டிடுவாங்க :P (தோற்றத்தில்தான் யூத் இல்லை; சுஜாதா மாதிரி எழுத்தில் இளமையாக இருக்கலாமே என்று ஒரு நப்பாசைதான் :-D)


சின்னவாஆஆஆஆ... எப்படிய்யா!? (சரிகமபதநீ பார்த்திபன் மாதிரி பாதி பாட்டில் சைலன்ஸ் கத்திரி இட்டு விட்டீர்களே ;-))

டைனோ... :-)

---கண்ணை மூடி மனம் எங்கெங்கு குதிக்கிறது ---

அநேகமாகத் தூங்கி விடுவதுதான் என் பழக்கம் :-) [தியானம் என்று உட்காரும் போது கூட :-(]

----புரியாத மாதிரி எழுதுறீங்களே என்ன சமாச்சாரம்னு ----

இன்று சன் டிவியில் சீரியல்கள் வரவில்லை. இந்திய நேரப்படியே அமெரிக்காவிலும் ஒளிபரப்புகிறார்களா... கோலங்கள் பார்க்காததால் வந்த வினை ;-P :-D

---'மெசேஜ்' சொல்றாங்க---

மெசேஜ் விடறவங்கதானே நம்ம டார்கெட்டு ;-) (அண்ணே... நீங்க எஸ்.எம்.எஸ்.ஸுக்கும் எதிரியா :-D அதுவும் மெஸேஜ்தானே :P)

//எஸ்.எம்.எஸ்.ஸுக்கும் எதிரியா :-D அதுவும் மெஸேஜ்தானே :P)//
படிக்கிறப்பவே நடுங்குச்சி ... மிஸ் ஸஸ் ஸுக்கு எதிரி என்பதுபோல் கவனக்குறைவாக படித்துவிட்டு ... 'யாரு அவன்' என்று குரல் வந்துவிடுமோ பயந்தே போய்விட்டேன், அப்பாடா பக்கதில் இல்லை. :)

//இலக்கு எதுவும் கூடாது.//
Agreed. பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் கதையில் வரும் கவிதை வரிகள்: "இலக்கிலார் பெரியோர்; உடையவர் அடையமாட்டார்"

//இந்து மதத்தில் பாவ மன்னிப்பு கிடையாது.....தப்பு செய்தோமோ; தோப்புக் கரணம் போட்டோமோ என்று விட முடிவதில்லை.//
மதங்கள் தரும் பாவ மன்னிப்பு - மன அரிப்பை சொரிந்து கொடுப்பது மாதிரித்தான். சின்ன வயதில் செய்த அல்ப தப்புக்களின் (நான்காவது வகுப்பில் பொய் சொல்லி சக மாணவனை வாத்தியாரிடம் அடி வாங்கச் செய்தது) வேதனை என்னுள் இன்னமும் இருக்கிறது; வயதும் அனுபவமும் முதிர்ச்சியும் அதிகம் ஆக ஆக இந்த மாதிரி தப்புகள் சம்பந்தமான குற்ற உணர்வு இன்னமும் அதிகமாகிறது; முக்கியமாக மன்னிப்பு கேட்க அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியாததால் ;-(

//மிடில்-ஏஜ் க்ரைஸிஸ் என்றால் என்ன?// க்ரைஸிஸ் எப்போதும் இருக்கிறது. மிடில்-ஏஜில் தான் க்ரைஸிஸின் தீவிரம் முதன் முதலாக உணருவதால் - சரி செய்ய வாழ்நாள் போறாதே - அது கொஞ்சம் பெரிசாகத் தெரிகிறது.

//அழகாக இருப்பவர்களையும் சொந்தக்காரர்களையும் தான் அமெரிக்கா விருப்பத்துடன் உற்றுப் பார்க்கிறது. // அமெரிக்கா மட்டுமல்ல எங்குமே இப்படித்தான். இங்கு கொஞ்சம் தூக்கலாய்த் தெரிகிறது. விருப்பத்துடனா என்று நிச்சயமாய் தெரியவில்லை; சமயத்தில் பொறாமையும் கோபமும் தெரிகிறது.

//கொசுவைக் கொன்றால் வருத்தமாக இல்லை. எலியை கார் மிதித்தால், காருக்கு சேதம் ஆகாதவரை லாபம். அணில் செத்துப் போனால் அன்று முழுக்க குற்ற உணர்ச்சி.// முழுக்க முழுக்க உண்மை - இன்னமும் ஏன் என்று தெரியவில்லை. ஸ்டேக்கை நன்றாய் சாப்பிட்டு விட்டு என் அலுவலக நண்பர்,
ஆசியாவில் நாய் கறியை சாப்பிடுகிறார்கள் என்று கோவித்தார் (அவர் வீட்டில் இரண்டு செல்ல நாய்கள் இருக்கின்றன). நீ மட்டும் பசுவை சாப்பிடலாமா என்று கோவிக்க வேன்டும் போல் இருந்தாலும் செய்யவில்லை.

//எதுகை மோனை இல்லாவிட்டால் இயற்கையாக இருக்கும்.// இருக்கலாம். பிறப்பு-இறப்பிலேயே எதுகை இருக்கும் போது, இயற்கையாக அமைந்த எதுகை மோனை நன்றாய்த்தான் இருக்கிறது.

ரங்கா.

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ரங்கா.

---மதங்கள் தரும் பாவ மன்னிப்பு - மன அரிப்பை சொரிந்து கொடுப்பது மாதிரித்தான்---

தனக்குள்ளேயேப் புழுங்கி தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் வராமல் இருக்க 'move on' மன்னிப்பு உதவுகிறது. பிறரை தண்டிக்கும் விதமாக தன்னை வருத்திக் கொள்வதைக் கூட 'குற்றவுணர்ச்சி'யைப் பயன்படுத்திக் கொள்ளும் பாவ மன்னிப்பின் கூறாகவே பார்க்கிறேன்.

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாப் பிழைகளையும் மன்னித்து, காத்து ரஷிக்க வேணும், அய்யன் ஐயப்ப சாமியே... சரணம் ஐயப்பா :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு