புதன், ஆகஸ்ட் 16, 2006

Thenkoodu - Tamiloviam : Contest Entries - Quick Thoughts

தேன்கூடு + தமிழோவியம் வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப் போட்டி இன்னும் ஒரு நாலைந்து நாளில், சுபயோகம் கூடிய வாரயிறுதியில் முடிவதில் உள்ள ஆதாயம்: 'சனி, ஞாயிறு... கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு! என்னால் எல்லா ஆக்கங்களையும் படிக்க இயலவில்லை' என்று சொல்லி, டீக்கட பெஞ்சில் உட்கார்ந்து 'ஆத்தி இது வாத்துக் கூட்டம்' என்று 'நாடோடித் தென்றல்' கார்த்திக் மாதிரி மதிப்பெண் போடுவதை நிப்பாட்டலாம்.

சிறுகதை என்றால் கட்டுரை அல்ல; கவிதை என்றால் சொற்கோர்வை அல்ல; கட்டுரை என்றால் நினைவலைகள் அல்ல
என்னும் முன்தீர்மானங்களுடன் படைப்புகளை அணுகும் விமர்சனங்களுக்கு இந்த விடுபடல் நலம் பயக்கும்.

சென்ற மாதம் (ஜூலை வலைப்பதிவுப் போட்டி) வரப்பெற்ற இடுகைகளை விட இந்த முறை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதே, தற்போதைய நிலவரப்படி சில புள்ளிவிவரங்களை இடுகிறேன்:

மொத்தம்: 70 இடுகைகள்
  1. என் சுரேஷ், சென்னை - 8
  2. ஏழிசை - 4
  3. அபுல் கலாம் ஆசாத் - 4
  4. அனிதா பவன்குமார் - 3
  5. ராசுக்குட்டி - 3
  6. சிறில் அலெக்ஸ் - 2
  7. குந்தவை வந்தியத்தேவன் - 2
  8. நிர்மல் - 2
  9. லக்கிலுக் - 2
  10. சிவமுருகன் - 2
  11. எஸ்.கே. - 2
  12. தமிழி - 2
  13. சிமுலேஷன் - 2
  14. தொட்டராயசுவாமி.A - 2


14 பேர்களிடம் இருந்து 40 தாக்கல்கள். அது தவிர 30 'பெயர்'கள் கலந்து கொள்ள மொத்தம் இது வரை 44 பதிவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் 44 (TK-TO Contest: #32 - #44 : Snap Reviews) பதிவுகளை என்னுடைய பார்வையில் சொன்னதைப் போலவே மேலும் பலரும் தங்களின் விருப்பங்களை 'பொதுத் தேர்தல்' போல் வெளிப்படையாய் பட்டியலிட்டால், முதலிடம் பெற்றவர் 'ஏன் வெற்றியடைந்தார்' என்பது புரிய வரும்.

ஜூரி முறை, நீதிபதிக் குழு, என்று அமைத்து தேர்ந்தெடுப்பதில் உள்ள நெளிவு சுளிவுகள் கூட இந்த மாதிரி விமர்சனங்களினால் தெரியவரும். (சுஜாதா-வா... அவருடைய வாசனையுடன், ஆனால் அவரை மாதிரியும் தெரியாம எழுதலாம்பா; ஜெயமோகனா... சுஜாதா நடையை ஒதுக்கி வச்சிரலாம்).

வலைப்பதிவர்கள் எந்த விதமான ஆக்கங்களை விரும்புகிறார்கள், அது எவ்வாறு வெளிப்படுவதை (கதை / கவிதை / கட்டுரை / நனவோடை / மரபு / நாடகம் / ஒலி / ஒளி / ஃப்ளாஷ் /...) 'பெரிதும்' ரசிக்கிறார்கள், வரிசைப்படுத்துவதை கட்டாயமாக்கினால் எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்பதை மேலும் சிலரும் பகிர்ந்து கொண்டால் என்னுடைய ரசனையின் shortcomings தெளிவாகும்.

அவ்வாறு நான் கண்ட சில தொகுப்புகள்:

  • ஒன்னுமில்லை: எனக்கு பிடித்த எழுத்துக்கள் தேன்கூடு போட்டி- (1)
  • ஒன்னுமில்லை: தேன்கூடு போட்டி - விமரிசனங்கள் - II

  • ராசுக்குட்டி!: கோகோ - அறிமுகம்

  • தேன்: தேன்கூடு போட்டி டாப் 10 - சீரியசா

    நான் எழுத நினைத்தது என்று பலவற்றையும் பட்டியலிட்டாவது திருப்திப்பட்டுக் கொள்ள ஆசையாக இருக்கிறது. 'உறவுகள்' என்ற தலைப்பில்

  • போலந்து சகோதரர்களில் ஆரம்பித்து மாறன் அண்ணா-தம்பிகளைத் தொட்டு காஸ்ட்ரோ ப்ரதர்ஸ் வரை முழுமையாக அலசி அரசியல் கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன்.

  • பாசமலராய் உருகித் தள்ளி, வெறுப்பேற்றிய - உறவுக்கு கை கொடுத்த படங்களை வைத்து சிதறு தேங்காய் உடைக்கலாம்;

  • ஊர்களுடன் ஆன தொடர்புகளை செதுக்கி, அந்தந்த நகரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகள்;

  • வலைப்பதிவருடன் பின்னூட்டத்தில் தொடங்கி, பாராட்டலில் வளர்ந்து, நக்கீரத்தனத்தில் முகம் சுண்டி, குற்றங்களை மட்டுமே மறுமொழியாக்கும்போது கோபம் தளிர்த்து, அவரின் மாற்றுக்கண்ணோட்டத்துக்கு கொடி பிடிப்பவரிடம் ஆதரவு பதிலாக இரண்டு வரி எழுதி - 'முதல் எதிரி' உறவு தோன்றுவது;

  • கோவிலுக்கு சென்றாலும் மீனாட்சி விக்கிரகத்திலும் வக்கிரப்பார்வை பார்த்து, சாலையிலும் திரையிலும் காண்போரைக் காமுறும் துகிலுரிப்பானையும், அமெரிக்க தர்காக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் திடீர் தடுப்புச்சுவர்கள் (NFB - Me and the Mosque) முளைப்பதை அனுபவிப்பவனையும், க்வார்ட்டருக்கு க்வார்ட்டர் வெளியாகும் அறிக்கையை ஓப்பேற்றி காசு கொள்ளையடிக்கும் லாபம் ஈட்டத் தெரியாத நிறுவனத்தில் வேலை பார்க்கும் அமெரிக்க கணக்கரையும், 'அவுத்துப் போட்டு ஆடுபவர்கள்' (படிக்க: சந்தோஷ்பக்கங்கள்: 108. பொண்ணு strip கிளப்பில் வேலை பாக்குறா) மூலம் நட்பு என்னும் உறவாக்குவது;
  • என்று ஏதாவது கதை எழுதிவிட்டு, 'உறவுகள்' என்னும் வார்த்தை வந்தால், போட்டிக்கு அனுப்பலாம் என்றும் யோசித்தேன்.

    பெர்ஃபக்சனிஸ்ட் கம் இண்டெர்நெட் அடிக்சன் டிஸ்ஆர்டர் இருப்பதால் 'ஆடத் தெரியாதவன் தெருக்கோணல்' சொலவடை போல் ஒன்றும் எழுதவில்லை என்பதுதான் நிதர்சனம். பங்குபெற்ற அனைவருக்கும் வெற்றிக்கனியை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் & பதிவிட்டு பகிர்ந்து கொண்டமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகள்.

    கடந்த முறை விமர்சனப்பதிவு போட்டதற்கும் இன்றைக்கும் நடுவில் 26 வந்துவிட, இனி தேர்ந்தெடுக்கப்பட்ட (அல்லது என்னால் படிக்க முடிந்தவைகளுக்கு மட்டுமே) விமர்சனங்கள்:


    • தம்பி: களத்து வீடு - தேன்கூடு சிறுகதை போட்டிக்காக... : உமா கதிர்

      (சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4

      ரொம்ப நல்லா வந்திருக்குங்க.... எழுத்துப் பிழைகளையும் மேற்கோள் குறிகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும். கடைசி வரிகள் சில குறைத்து (அல்லது) மாற்றியமைத்தால் கூர்மையா முடிஞ்சிருக்கும். இப்போ வாசகனே புரிஞ்சுக்க வேண்டியது வெளிப்படையா வந்திருக்கறது மட்டும்தான் (நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட) குறை.

      வெற்றியடையக் கூடிய படைப்பை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி!


    • செப்புப்பட்டயம் :: கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள் - மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்)

      (சிறுகதை) மதிப்பெண் - 1.5 / 4

      Saloni Ramachandiran: ஏன் இப்படி குரங்குக் குட்டி மாதிரி காட்சிக்கு காட்சி இடம் தாவுகிறீர்கள்? இந்தப் பதிவு உன்னைப்பற்றி என்பதை விட... உடன் வேலை பார்ப்பவரைப் பற்றி என்பதை விட... உன்னுடைய கல்லூரி நண்பர்களைப் பற்றி என்பதை விட... கடலை பற்றிய உன்னுடைய எண்ணங்கள் என்பதை விட... "ஒரு அழகான காதலின் சோகமான முடிவு" என்கிற தலைப்பிற்கு ஏற்ற கதை என்பதை விட... முற்றிலுமான ஒரு மனிதனின் எண்ண அலைகள்/ஓட்டங்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே... ஒரு பிணைப்பில்லாமல் உங்களுடைய எண்ணங்கள் இங்கே கொட்டப்படுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், எண்ணங்கள் அத்தனையும் சுவாரசியமாக இருக்கின்றன. எனவே அலுப்புத் தட்டவில்லை. நல்ல முயற்சி. நீங்கள் இதை விட நன்றாக செய்யலாம்.


    • சிதறல்கள்: உறவுகள் சுகம் - அனிதா பவன்குமார்

      (புதுக்கவிதை) மதிப்பெண் - 2 / 4

      எழுத்துப் பிழைகள் கண்ணில் உறுத்தினாலும் எளிமையாகப் பயணிக்கும் கவிதை


    • MAANIDAL - மானிடள்: உறவுச் சங்கிலி - Dr.M. பழனியப்பன்

      (பதிவு) மதிப்பெண் - 1.5 / 4

      வலைப்பதிவில் எழுதுவதை எவ்வளவு பேர் போட்டிக்கு அனுப்புகிறார்கள்? பெரும்பான்மையான இடுகைகள் புனைவாகவே அமைந்திருக்கிறது. அவற்றுக்கு நடுவே அத்தி பூத்தது போல் என்று சொல்வார்களே... அதற்காகவே +1. போட்டிக்கான நுழைவு என்று அலசினால் சாதாரணமான பதிவு.


    • "அவள்" - வினையூக்கி

      (சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

      தடதடவென்று விரைவுப் பேருந்தாக நிற்காமல் ஓடிக் கொண்டே, எண்ணியபடி முடியும் அவசரக்கோலம்.


    • இனிதமிழ்: உறவுகள் - தமிழி

      (சிறுகதை) மதிப்பெண் - 1.5 / 4

      எண்ணம் எனது: நல்லா இருக்கு. ஆனா சஸ்பென்ஸ் அக்கா அழுதுட்டு வரையிலியே முடிஞ்சுடுச்சு....


    • ஜெண்டில்மேன் - சோம்பேறி பையன்

      (சிறுகதை) மதிப்பெண் - 2.75 / 4
      வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து 'அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா...' என்று இழுத்தான்.

      துள்ளல் நடை +1; வேலையுடன் ஆன 'உறவுகள்' +1; நச் +1; ஆஸ்கார்களில் நகைச்சுவைக்கு மதிப்பு லேது என்பதற்கேற்ப -0.25


    • தேன்: கெடா - சிறுகதை - சிறில் அலெக்ஸ்

      (நாடகம்) மதிப்பெண் - 2.75 / 4

      நுனி பிசகினாலும் குழம்பக்கூடிய அமைப்பில், தெளிவான உரையாடல்களின் பளிச். கிராமத்து வழக்கைப் பேசுவது கடினம். அதனினும் கடினம் அதை எழுத்தில் கொண்டு வருவது. அதனினும் கடினம் அதில் மொத்த கதையையும் காரெக்டரைசேஷனையும் சொல்வது. செய்து காட்டியிருக்கிறார்.


    • கவிதைகள் !: இது கதையல்ல - மகேந்திரன்.பெ

      (சொந்தக்க்கதை) மதிப்பெண் - 1 / 4

      இது கதையல்ல என்னும் தலைப்பு உண்மைதான் என்பது போல் நிறைய ஃபேண்டஸி; கூடவே பேச்சுத்தமிழ் சுதந்திரத்தில் பிழைகள் மலிந்து காணப்படுகிறது.


    • நாம் - இந்திய மக்கள்: உறவுகள் பகைகளே!!! - ஜெயசங்கர் நா

      (சிறுகதை) மதிப்பெண் - 0.5 / 4

      பழங்கதை. தந்த விதத்திலும் புதுமை லேது. இணையம் வந்த பிறகு படித்த ஸ்டெல்லா ப்ரூஸின் 'அறைத் தோழரும்' மேலும் பல கதைகளும் நினைவிலாடி நல்ல புனைவுகளை மீளச் செய்வதற்காக +1. அவரவர் நியாயங்களின் உட்கூறுகளை அலசாமல், நொடி நேர தீர்ப்புகளை விதிப்பதால் -0.5



    • தேடித்..தேடி..: மருந்து - Senthil Kumar

      (சிறுகதை) மதிப்பெண் - 2.75 / 4

      சுண்டியிழுக்கும் லாவக ஆரம்பம். கொஞ்சம் எண்பதுகளின் நெடி கொண்ட நடை. அசத்தலாக உள்ளுணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்தும் உள்ளடக்கம். முடிவில் அவசரம் + பாரதிராஜா ஸ்டைல் தடுமாற்றம். தலை பத்தில் இடம்பெற எல்லா லட்சணங்களும் கொண்ட கதை.


    • குரல்வலை : வலைகுரல் : தொலைவு - MSV Muthu

      (சிறுகதை) மதிப்பெண் - 3.5 / 4

      இந்த மாதிரி (தேதிவாரியாக) தந்திருப்பது ருசிக்கிறது. வெளிநாட்டில் உட்கார்ந்திருக்கும் குற்றவுணர்வு ஒன்ற வைக்கிறது. நெகிழ வைக்கும் தாய்ப்பாசத்தை அதீதமில்லாமல் கிராமிய ஒலியில் கேட்கவிடுகிறார். மருந்து கதையைப் போலவே அசலூர் பிரச்சினையை வேறொரு கோணத்தில் முன்வைக்கிறது. தேதிகளை சிரத்தையாகக் கோர்ப்பது, உவமைகள், டக்கென்று கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து மனத்திலும் இருத்துதல் என்று பலவிதங்களில் முக்கியமான கதை. கதையை முடித்தபின் ஆசுவாசப்படுத்த ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தாலும், களம் அகலாமல், கதை என்னை உற்றுப் பார்க்கிறது.

      முடிவு +1; நடை +1; சொலவடை +1; அமைப்பு +1; ஆங்காங்கே (குறிப்பாக செல்லையாவின் தொடக்க பகுதிகள்) அவசரம் -0.5.


    • எண்ணம்: திரைச்சீலை - அபுல் கலாம் ஆசாத்

      (சிறுகதை) மதிப்பெண் - 2.75 / 4

      உப்பில்லாத பண்டத்தைப் பார்த்து சுட்டியில்லாத இணையமா என்கிறார்கள். வலைப்பதிவுக்கே உரிய சாத்தியக்கூறுகளை பயன்படுத்தும் கதை. கவிதையைப் போன்ற அமைப்புடன் நிற்காமல், வித்தியாசமான கற்பனை & விவரிப்பு. இயந்திரகதியாகாத அந்தக் காலத்தில் எல்லாப் பொருட்களையும் அதற்கான கலைநயத்துடன், நேரம் ஒதுக்கி ரசித்து மகிழ்ந்தோம். இன்றைய இணைய அவசர உலகில் பாசம் இற்றுப்போய் நூலுமில்லாமல் அருகிப் போனதை விவரிக்கும் அருமையான கதை.


    • நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் - ஹரன்பிரசன்னா

      (சிறுகதை) மதிப்பெண் - 3.5 / 4

      Introspective ஈ, வாசகப் பேரன், இயல்பான கிராமத்து மனிதர்கள், சுருக் விவரணைகள். சிறுகதைக்குத் தேவையான ஆற அமர நகரும் கதை, போகிற போக்கில் உறுத்தாமல், கதையுடன் ஒட்டிகொண்டு நிற்கும் அவதானிப்புகள். இன்னும் நிறைய சொல்லலாம். ஒரு கதை எப்படி மனதில் நெய்யவேண்டும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.


    • செப்புப்பட்டயம் :: தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்)

      (சிறுகதை) மதிப்பெண் - 2.75 / 4

      ஏற்கனவே வெற்றிபெற்றவர் என்னும் கண்ணாடி அணிந்து சீர்தூக்கி பார்க்க ஆரம்பிக்கிறேன். சுடுசொல் இருப்பதுதான் இலக்கியத்தரத்துக்கு அடையாளமோ என்னும் மதிப்பீட்டுக்கு அடிமையான சம்பந்தமேயில்லாத ஆரம்பம். பேச்சு நடையில் சொல்வதா, மூன்றாம் மனிதப் பார்வையில் கொண்டு செல்வதா என்னும் குழப்பம் அரிதாகவே தெரிந்தாலும், 'அணுகுண்டு' போன்ற உவமைகள், ஒவ்வாமல், தெய்வநாயகியும் அம்மாவும் போல் வாசகனை தூரத்தே தள்ளி அனுப்பிவிடுகிறார். அதே போல் 'வைச்சு' என்று கொச்சைத் தமிழும், 'இடது பக்கம்' என்று எழுத்து தமிழும் ஒரே வாக்கியத்தில் சிற்சில இடங்களில் வருவது மற்றொரு நெருடல்.

      நெடுங்கதையை சுருக்கி நிறைய சொல்ல நினைத்து கொஞ்சமே கொஞ்சம் லயிக்க விட்டு, நடையில் பிசிறு தட்டி, கட்டுரையின் கூறுகளைக் கொண்ட புனைவு.

      + க்கள்:
      கதை; களம்; கருத்து

      - க்கள்:
      நடை; விவரிப்பு குழப்பங்கள்; சம்பவக் கோர்வை/வாசக உள்ளிழுப்பு இல்லாமை.




    | |

  • 19 கருத்துகள்:

    பாலா எழுத்துப் பிழைகள் களையப் பட்டன. அது இஸ்லாம் கல்வியில் தட்டசு செய்தது , டெக்ஸ்ட் பாக்ஸின் ஓரத்தில் ந ' அடித்தால் 'ன' வரும் ற ர வும் அப்படியே சுட்டியமைக்கு நன்றி

    ////"அவள்" - வினையூக்கி

    (சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

    தடதடவென்று விரைவுப் பேருந்தாக நிற்காமல் ஓடிக் கொண்டே, எண்ணியபடி முடியும் அவசரக்கோலம்.

    ////

    நன்றி, உண்மையில் அவசரக் கோலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். நினைத்திருந்த முடிவு ஒன்று , எழுதிய முடிவு ஒன்று. எழுதிய முடிவு "இயல்பாக" இருக்கும் என்று தோன்றியதால் எண்ணியபடி முடிந்து இருக்கும். இது இரண்டாவது கதை தான். அடுத்த முறை பெட்டர் ஆக இருக்கும்.

    விமர்சனங்கள் நன்று.. படைப்புகளுக்கு ப்ரீவியூ கொடுப்பது நன்றிலும் நன்று..

    ***


    கவிதை
    ஒன்று,

    சிறுகதை
    ஒன்றும் எழுதி போட்டிக்கு அனுப்பி விட்டு நான்கைந்து நாட்களாக உங்க விமர்சனத்துக்கு காத்திருந்தேன்..

    ***

    கதைக்கு 2.75 மார்க் கிடைத்திருக்கிறது... பரவாயில்லை...இன்னம் கொஞ்சம் கூட கிடைத்திருக்கலாம் என்கிறது மனது.. மத்த படைப்புகளையும் பார்த்தால் இதுவே அதிகம்தான் என்கிறது புத்தி...நன்றி..

    ***

    உங்கள் விமர்சனங்களை தொடருங்கள்.. பாராட்டுக்கள் !!

    ****

    நானும் உங்கள மாதிரி விமர்சிக்கலாம்தான் பார்க்கிறேன்.. நம்ம ஏதாவது எழுதி பின்னி பெண்டெடுத்துருவாங்களோன்னு பயமாயிருக்கு :-))

    உங்களுக்கு இவ்வளவு பதிவுகளைப் படிக்க நேரம் கிடைத்து ... அதைப் பற்றியும் பதிவு எழுதிவிட்டு ... வழக்கமான ஒரு பஞ்ச் பதிவு(களை)யோ, போடுவதற்கு நேரம் கிடைக்குதோ !

    அலுவலில் விசாரிக்க வேண்டும் :))
    பா லா -- இருவரோ !!!
    :))

    நான்கு சிறுகதைக்கான கருத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது:
    * தேடித்..தேடி..: மருந்து - Senthil Kumar
    * எண்ணம்: திரைச்சீலை - அபுல் கலாம் ஆசாத்
    * குரல்வலை : வலைகுரல் : தொலைவு - MSV Muthu
    * நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் - ஹரன்பிரசன்னா

    kuralvalai: தேன்கூடு-போட்டி : தொலைவு:
    * மதனியிடம் ஒரு டம்பளர் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, கருமை நிறத்தில் சாந்தசொரூபியாய் அமர்ந்திருக்கும் டெலிபோனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

    * 'உடம்ப பார்த்துக்க ராசா! தொலவட்டுல இருக்குற பய! எங்களப்பத்தி கவலப்படாத'

    'நீ தான்யா செஞ்சுகாட்டியிருக்க'
    'ஒரெட்டு வந்திட்டுப் போயேன்'
    -------------------------

    தேடித்..தேடி..: மருந்து - தேன்கூடு போட்டி:

    * குரல் கேட்டு சிந்தனை, சில்லெறிந்த தண்ணீர் பரப்பாய் சிதறியது.

    * அது காதலா? பாசமா ?. இல்லை, உன் கிட்ட இருந்தது எதிர்பார்ப்பு. அது மனசோட இயல்பு. காலம் காலமாக சேர்த்து வைத்த பதிவுகள்.
    -------------------------

    எண்ணம்: திரைச்சீலை (சிறுகதை) - போட்டிக்காக

    * தலையை ஆட்டியாட்டி நின்று என் உம்ராவின் பாடலை நவாப் சுல்தான் கேட்டு முடிக்கும் வரையில் ஒரு அடி நகரவில்லை, ஹைவான் (மிருகம்).

    * பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா.

    * குறும்பு செய்யும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமன்று.
    -------------------------


    நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை

    * பெரு மழையில் கரைந்து போய் வெளுத்துவிட்ட, கரியில் வரையப்பட்டிருந்த ஸ்டம்ப் கோடுகளைப் பார்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சோகத்தில் அந்த வளைவின் சிறுவர்கள் கன்னத்தைக் கையால் தாங்கிக்கொண்டு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தார்கள். (உள்குத்து ;-)

    * தனது குரலின் எட்டுக் கட்டையை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண்.

    * அந்தாளு உசுரோட இருக்கிறப்பயே விளையாட விடமாட்டான். செத்தும் களுத்தறுக்கான் பாரு, மூதி' ... ரோட்ல போய் ஆடுங்கல, கிரவுண்டுல போயி ஆடுங்கல, உங்க வீட்டு அடுப்பாங்கறையில ஆடுங்கல

    * இவன் செத்தா இவனுக்கு யாரு பாலூத்துவா என்று யோசித்துக்கொண்டிருந்தது கிருதா.

    * சில பெரிசுகள், யாருடே போனது, சரியாச் சொல்லு என்று கேட்டுச் சேதியைத் தெரிந்துகொள்வார்கள்.

    * வளைவிலிருந்து வெளிப்பட்ட அவனைப் பார்த்துப் பதறினாள் பிரமு கிழவி. அப்பன் செத்துக் கெடக்கான், வெளிய போகக்கூடாதுடே என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

    * தொடர்ச்சியான பக்கத்தைக் காணவில்லை. இந்தத் தாளின் கிடைமட்டத்தில் 1991 என்று எழுதப்பட்டிருந்தது

    ஆகா பாபா சிறுகதைய நாடகமாக்கிட்டீங்க. வெறும் உரையாடலிலேயே எழுதினா நாடகமா? :)

    கதையிலுள்ள உரையாடல்களை மட்டுமே படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதனால வெறும் உரையாடல்லையே எழுதிட்டேன். .25 மதிப்பெண் அதிகமா வாங்கியிருக்கேன்.. ரெம்ப மகிழ்ச்சி.

    போட்டி அதிகமா இருக்கிறதால பாப்போம் எப்டீன்னு. பெருந்தலைகள் யாரும் இன்னும் காணோம்?

    நீங்க எழுத நினைத்திருப்பவையெல்லாமே நல்லத்தான் இருக்கு. நிச்சயம் எழுதுங்க.

    ஜெ + சசி
    ஸ்டாலின் + கலைஞர் போல அரசியல் உறவுகளப் பத்திகூட எழுதலாம்

    ரஜினி + மருமகன் சினிமா உறவுகளையும் போட்டு சதாய்க்கலாம்.

    :)

    தல நல்ல காலம் அரை மார்க் மட்டும் போட்டு விட்டுடீங்க. ஒரு அரை விடுருப்பீங்களோ என்று நினைத்து தான் இந்த பதிவை படிக்க ஆரம்பிச்சேன். எனக்கு கதை எழுத தெரியாது. ஒரு உண்மை கதை என்னை பாதித்த ஒரு மேட்டர் சொல்லனுன்னு தொனுச்சு அவ்ளோதான். :)))

    நன்றி என் உறவுகள் பகைகளேவுக்கும் மார்க் போட்டதுக்கு.

    பெ.மெ.,
    க்வார்ட்டர் கோவிந்தனுடன் உறவுகள் பதிவு எதுவும் வராதா மகேந்திரன் ;-) அவரை ஆவலுடன் எதிர்நோக்கும்...


    வி.ஊ.,
    எழுதியவுடன் பப்ளிஷ் செய்து அழகு பார்ப்பது பதிவருக்கு அழகு; என்றாலும், போட்டிக்கு இன்னும் கொஞ்சம் சீக்கிரமே எழுதி முடித்து; ஒரு வாரம் எட்டிப் பார்க்காமல் ஊறப் போட்டு; மறந்து போனதௌ எடுத்து, கொஞ்சம் அடித்து திருத்தி வழங்கினால், உங்களின் இடுகை மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.


    சோ.பை.,
    கவிதை என்றால் நான் கமல் எழுதினால் மட்டுமே படிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் ;-))


    கோ.க.,
    நீங்க சொன்ன பின்னூட்டத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே :-D)


    சி.அ.,
    சிறுகதையை நாடகமாக்கி, (பெரும்பாலும்) மூன்றே பிரிவுகளுக்குள் (அனுபவம்/கதை/கவிதை) சுழலும் குண்டுச்சட்டி குதிரையின் வெரைட்டியை பெருக்க நினைத்தேன். நீங்க மாட்டிகிட்டீங்க.


    வீ.தி.பி.,
    (வாசகன்) கதை படிக்கும் மூடுக்கு ஏற்ப, அதில் பொதிந்திருக்கும் அர்த்தமும், கதையின் வீச்சும் மாறிக் கொண்டேயிருக்கிறது. மேலாளர் மேல் காட்ட முடியாத கடுப்பை உங்களிடம் காட்டி தீர்த்துக் கொள்ளும் முகாந்திரம் எதுவும் இல்லை :-P)


    மகேந்திரன், வினையூக்கி, அலெக்ஸ், கோவி, ஜெயசங்கர்.... அனைவருக்கும் __/\__ & நன்றி!

    நன்றி பாலா. கோ.வி. கண்ணன் கேட்டதைப் போல நீங்கள் இருவரோ - பா லா- என்று எண்ணத்தோன்றுகிறது. ஹாஸ்யத்திற்காக என்றாலும், அதில் உண்மையும் இருக்கிறது. அனைத்து கதைகளையும் படித்ததற்காகவே உங்களைப் பாராட்டவேண்டும். அதற்கு மேலும் சிரத்தையெடுத்து அனைத்து படைப்புகளுக்கும் விமர்சனம் தந்து, மதிப்பெண்கள் கொடுத்து, ஏன் என்று விளக்கம் தந்திருக்கிறீர்கள். எப்படி பாலா உங்களால் முடிகிறது?

    படைப்பாளிகள் எழுதுவது பெரிய விசயம் அல்ல, அனைவரும் பேசுகிறோம், ஆதலால் சிறிது முயற்சி எடுத்தால் அனைவரும் எழுதலாம். ஆனால் ஒருவரது படைப்பு மற்றொருவரால் விமர்சிக்கப்படும் பொழுது தான் அந்த படைப்பு முழுமையடைகிறது என்று நான் நினைக்கிறேன். விமர்சனம் நல்லதாகவும் இருக்காலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம். அது முக்கியமன்று. குறைகள் சொல்லப்படும் பொழுது, அந்த குறைகளை - உண்மையான குறைகளாக இருக்கும் பட்சத்தில்- அடுத்த முறை திருத்திக்கொள்ள வாய்ப்புகிடைக்கிறது. இல்லையேல் மீண்டும் மீண்டும் குறைகளையே - நமக்கும் நிறைவாகத் தோன்றும் - எழுதிக் கொண்டிருப்போம். நிறைகளை கண்டு மனம் சந்தோஷம் அடைகிறது. அடுத்து என்ன எழுதலாம் என்று குதியாட்டம் போடுகிறது. தன் எழுத்து அங்கீகரிக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்கிறது.

    அதிலும் சரியான காரணங்களை முன் வைக்கும் பொழுது, விமர்சனமும் முழுமையடைகிறது, படைப்பை போலவே. இது ஒருவகையான உற்சாக பாணமே. பூஸ்ட். இனி படைப்பாளிகள் - அதுவும் என்னைப்போன்ற ஆரம்ப நிலை ப்ளாகர்ஸ் - உங்களை 'போஸட்ன்' பாலா என்று அழைப்பதிற்கு பதில் 'பூஸ்ட்டன்' பாலா என்று அழைக்கலாம்.

    ----நீங்கள் இருவரோ - பா லா- என்று எண்ணத்தோன்றுகிறது. ----

    பிளவாளுமை என்கிறீர்கள :-D)


    ---படைப்பாளிகள் எழுதுவது பெரிய விசயம் அல்ல,---

    எழுதுவது மகிழ்ச்சிக்குரிய, ஆனால் வலியெடுக்கக்கூடிய சுகப்பிரசவம் என்பது போல் என்றால் விமர்சிப்பதும் ஜாலியான விசயம்தான். (படிக்க: வழிப்போக்கன் கண்ட வானம் - பாவண்ணன் :: ஜெயஸ்ரீ : இத்தொகுப்பின் வழியாக ஒரு படைப்பு எப்படி அணுகப்படவேண்டும் என்ற பயிற்சியை வாசகன் பெறமுடிவதோடு ஒரு படைப்பு ஏன் தன்னைக் கவரவில்லை என்று சொல்வதற்கும்கூட ஒரு வாசகன் பயிற்சிபெறமுடியும்.)

    தங்களின் மகிழ்ச்சி+கனிவான பதிலுக்கு 'என்ன தவம் செய்தேனோ'. நன்றிகள்

    //படைப்பாளிகள் எழுதுவது பெரிய விசயம் அல்ல, அனைவரும் பேசுகிறோம், ஆதலால் சிறிது முயற்சி எடுத்தால் அனைவரும் எழுதலாம். ஆனால் ஒருவரது படைப்பு மற்றொருவரால் விமர்சிக்கப்படும் பொழுது தான் அந்த படைப்பு முழுமையடைகிறது என்று நான் நினைக்கிறேன். விமர்சனம் நல்லதாகவும் இருக்காலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம். அது முக்கியமன்று. குறைகள் சொல்லப்படும் பொழுது, அந்த குறைகளை - உண்மையான குறைகளாக இருக்கும் பட்சத்தில்- அடுத்த முறை திருத்திக்கொள்ள வாய்ப்புகிடைக்கிறது. இல்லையேல் மீண்டும் மீண்டும் குறைகளையே - நமக்கும் நிறைவாகத் தோன்றும் - எழுதிக் கொண்டிருப்போம். நிறைகளை கண்டு மனம் சந்தோஷம் அடைகிறது. அடுத்து என்ன எழுதலாம் என்று குதியாட்டம் போடுகிறது. தன் எழுத்து அங்கீகரிக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்கிறது.

    அதிலும் சரியான காரணங்களை முன் வைக்கும் பொழுது, விமர்சனமும் முழுமையடைகிறது, படைப்பை போலவே. இது ஒருவகையான உற்சாக பாணமே. பூஸ்ட். இனி படைப்பாளிகள் - அதுவும் என்னைப்போன்ற ஆரம்ப நிலை ப்ளாகர்ஸ் - உங்களை 'போஸட்ன்' பாலா என்று அழைப்பதிற்கு பதில் 'பூஸ்ட்டன்' பாலா என்று அழைக்கலாம்.
    //
    முத்து சரியாக சொன்னீர்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே நானும் என் கதையை அனுப்பியுள்ளேன்...

    பாபா,
    உங்க விமர்சனத்துக்காகத்தான் தமிழ்மணத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

    //க்வார்ட்டர் கோவிந்தனுடன் உறவுகள் பதிவு எதுவும் வராதா மகேந்திரன் ;-) அவரை ஆவலுடன் எதிர்நோக்கும்...
    //


    மகேந்திரன் அசந்த நேரத்தில் கோவிந்தனை விட்டே எழுதலாம் ஆனால் இந்த தலைப்புக்கு திரும்பவும் சொந்த கதைதான் எழுதுவாரு அதனால வேற எதுனா தலைப்புக்கு எழுத சொல்றேன் :))

    சேர்க்கப்பட்டது: செப்புப்பட்டயம் :: தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்)

    in waiting list for review.
    http://varappu.blogspot.com/2006/08/blog-post_19.html

    நன்றி. நண்பர் பாலா..தங்கள் மதிப்பீடு மேலும் எனது எழுத்தின் பால் நட்பைக் கொடுத்தது.இது என் போட்டிக்கான முதல் பதிவு ..எல்லார்யும் போல் நிறைய எழுதி..நினைத்து... சொல்லாமல் போனவை மற்றும் சொல்லத்தெரியாமல்,சொல்ல முடியாமல் போனவை என்னுள்ளும் உண்டு. உங்களைப் போன்ற நட்பு வட்டம் என் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் என்றே விழைகிறேன்.நன்றி.

    உங்களின் எதோ ஒரு பதிவு மனதைப் பிசைந்ததால், மின்னஞ்சல் கேட்டு எழுதினேன், மீண்டும் எழுத நேரம் கிட்டவில்லை. மன்னிக்கவும். நான் மிகவும் தாமதமாக போட்டியில் கலந்து கொண்டுள்ளேன், விமரிசனங்களை எதிர்பார்க்கிறேன், நன்றி.

    இளா, தமிழி, சந்திரசேகரன், வருகைக்கு நன்றி. தங்கள் எதிர்பார்ப்பை வாரயிறுதிக்குள் நிறைவேற்ற முயலுவேன். வெற்றியடைய வாழ்த்துக்கள்

    //(சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4

    ரொம்ப நல்லா வந்திருக்குங்க.... எழுத்துப் பிழைகளையும் மேற்கோள் குறிகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும். கடைசி வரிகள் சில குறைத்து (அல்லது) மாற்றியமைத்தால் கூர்மையா முடிஞ்சிருக்கும். இப்போ வாசகனே புரிஞ்சுக்க வேண்டியது வெளிப்படையா வந்திருக்கறது மட்டும்தான் (நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட) குறை.

    வெற்றியடையக் கூடிய படைப்பை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி//

    ரொம்ப நன்றிங்க!


    போட்டிக்கு இத்தனை படைப்புகளா! இதனை படிக்கவே னேரம் கிடைக்க மாட்டேங்குதேன்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.

    நீங்க எல்லாத்தையும் படிச்சு, அழகா விமர்சனமும் போட்டு, எப்படிங்க உங்களுக்கு நாலு கண்ணா?

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு