புதன், மே 05, 2004

கவிதைத் தொகுதி அறிமுகம் - காளான் பூக்கும் காலம் : எஸ்.பாபு

எனக்கும் ரயிலுக்குமான உறவு பெற்றோர்-பிள்ளை உறவு போன்றது. பல சமயம் ரொம்ப அன்னியோன்மாய் இருப்போம். சில சமயம் கடனே என்று கடமையை முடிப்போம். ஆனால், எப்பொழுதும் ஆவலாய் ஒருவரையருவர் கவனித்துக் கொண்டேதான் இருப்போம்.

முதன் முதலில் தண்டவாளத்தில் கால் வைத்தது திருப்பதி பாலாஜிக்காக. ரேணிகுண்டா வரை முன்னேறும் ட்ரெயின், அதன் பின் தன் பயணத்தை பின்னோக்கி செல்வது போல் தோன்றும். நம் வாழ்க்கை எதற்காக நம்மை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து விட்டு கீழே தள்ளிவிடுகிறது என்று எனக்கு தெரியாது. ரயில் வண்டியும் ரேணிகுண்டா போனபின், வந்த வழியே மீண்டும் பயணித்தது ஏன் என்பதும், ஏன் நேரடியாக திருப்பதியை அடையக்கூடாது என்பதும்தான்.

அடுத்ததாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை புது தில்லியில் இருந்து சென்னை. பதினைந்து நாட்களோ, கோடை விடுமுறையோ அனுபவித்து உறவினர் சலித்த பின் தனிமையான ஹாஸ்டலை நோக்கி மீண்டும் புது தில்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரசில் முப்பத்தாறு மணி நேர தவம். ஆரம்ப காலங்களில் நட்புப் பிடிபடாத நாட்களில் கூட ரயில் பயணம் போரடித்ததில்லை.

சென்னை வாசமும் கல்லூரி ஹாஸ்டல் இருப்பும் கூட அவ்வப்போது தனிமையை உணரச்செய்திருக்கிறது. ஆனால், ட்ரெயின் எப்பவுமே கலகல. சில நேரத்தில் பிரிந்து விடப் போகும் நட்பின் ஏக்கமாக இருக்கலாம். அல்லது நீண்ட நாள் பார்க்காதவர்களை மீண்டும் சந்தித்த சந்தோஷமாக இருக்கலாம். இரயில்வேயில் வேலை பார்க்கும் அப்பாவின் தயவால், ஏஸி ஸ்லீப்பரில் இருக்கும் சக மாணவனின் இருக்கையின் எதிரில், அந்தக்கால ஆயிஷா ஜூல்கா மாதிரி இருக்கும் சுடிதார் பெண்மணியாக இருக்கலாம். ரயில் பயணங்கள் சந்தோஷமானவை.

தெரியாத பாஷை பேசும் ஊர்களில் இறங்கி, ஸ்டேஷனை அளந்து, ஆராய்ந்து, ஒன்றும் வாங்காமல், கடைகளில் ஹிந்தியில் பேரம் பேசி, ட்ரெயின் ஓட்டம் எடுக்கும் வரை ப்ளாட்·பாரத்தில் அசால்ட்டாக நின்று கொண்டு, எஸ்-12 கோச்சில் ஏறி, என்னுடைய எஸ்-1 வரும் வரை, ஒவ்வொரு பெட்டியிலும், ஒவ்வொரு இருக்கையிலும் இருப்பவர்களை கண் மேய்ந்து, மனதின் நினைவுகளில் இருக்கிறார்களா என்று தேடி, கேள்வி கேட்கும் வயதானோர்க்கு கல்லூரி பெயர் சொல்லி, இருக்கைக்கு வருவதற்கு முன், அடுத்த நிறுத்தம் வந்துவிட, மீண்டும் முதலில் இருந்து செய்ய ஆரம்பிக்கலாம்.

'காளான் பூக்கும் காலம்' படித்தபோது எனக்கு என்னுடைய ரயில் சுகங்கள் நினைவில் வந்தது. என் மனதில் தங்கிய வழிகுறிப்புகளை யாரோ கவிதையாக்கினது போல் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு நிகழ்வுகளைக் கிளறியது. பேசின் ப்ரிட்ஜ் வருவதற்கு முன் வரும் குடிசைகளும், காலைக் கடனை முடித்துக் கொண்டிருக்கும் காண முடியாதவற்றையும், போபாலின் அருகே அடர்ந்த காடுகளில் சம்பல் கொள்ளைகாரர்கள் இருப்பார்களோ என்னும் பய உணர்வுகளுடன் உத்தர பிரதேசத்தின் பசுமை நிறைந்த புல் வெளியையும், ஆக்ராவும் இங்கேயிருந்து தெரிந்துவிடுமோ என்னும் கற்பனையையும் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஓரிருவரின் அணிந்துரை, பின் இலக்கியப் பெரியவர்களின் மதிப்புரை, படைப்பாளியின் முன்னுரை என்று பத்திருபது பக்கங்களை ஒதுக்கமால், முதல் பக்கத்திலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது. காலச்சுவடு, தாமரை, புதிய பார்வை, கணையாழி, கதை சொல்லி, அம்பலம்.காம், ஆனந்த விகடன், தாமரை, சொல் புதிது, தினமணிக் கதிர், தமிழ் அமிழ்தம், சுந்தர சுகன், செம்மலர் ஆகியவற்றில் ஆகஸ்ட் 89 முதல் நவம்பர் 2001 வரை பாபு எழுதியதில் இருந்து 65-ஐத் தொகுத்திருக்கிறார்கள்.

நாம் கடற்கரையில் உட்கார்ந்தால் கூட இயற்கையை முழுக்க ரசிக்க முடிவதில்லை. அங்கு வரும் மனிதர்களும், அவர்களின் செய்கைகளும் சில சமயம் சுவாரசியபடுத்தினாலும் நமக்கும் கடலுக்கும் இடைவெளி விடுவதற்குப் போதுமானதாக இருக்கிறது. காடுகளுக்குப் பயணம் செல்லும்போது கூட திரும்பி செல்லும் பாதை, வழி மற்றும் நேரம் தவறாமை என சிந்தனைத் தடங்கல்கள் வருகிறது. இங்கும் ரயில் பயணம் நமக்குக் கை கொடுக்கும். வெறுமனே வேடிக்கை பார்ப்பதை யாரும் தடை செய்யமாட்டார்கள். சுதந்திரம் வேண்டும் என் போன்றவர்கள் நுழைவாயிலின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் கம்பிகளின் இடையூறு கூட இல்லாமல் அவசரப்படும் ரயிலின் பார்வையில் இயற்கையை விழுங்கலாம். இந்தக் கவிதைகள் நமக்கு அவசரப்படாமல் அவற்றை காட்சிபடுத்துகின்றன.

கால வரிசைப்படி இல்லாமல், ஒரு தொடர்கைதையைப் போன்ற அமைப்போடு நம்மோடு ஒட்டி உறவாடும் அமைப்பு. எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் தவிர்க்கும் தொகுதி இது. ஜாதி மத பேத நல்லிணக்கத்தைத் தாண்டி உயர்திணை அ·றிணை ஒற்றுமையை வலியுறுத்தும் படைப்புகள் (அமீபாவின் அழுகை), விடைபெறும் விருந்தாளியாக/ஓர் உயிருள்ள பிணமாக/ஏறக்குறைய கடவுளாக என்னும் அச்சுறுத்தும் பார்வைகள், போன்ற எண்ணங்கள் மனதை விட்டு நீங்காது.

தனிமை என்னை அச்சுறுத்தியது உண்டு. திரைப்பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டாலும், நண்பர்களை அழைக்க எத்தனித்தாலும், கதவைத் திறந்து வைத்தாலும் தனிமை தொடர்வது போன்ற பிரமை. 'அறைக்குள் இருக்கும் எதிரி' அதைப் படம் பிடித்து காட்டுகிறது. அறைக்குள் நுழையக் காத்திருந்து/தாவியேறி கழுத்தைக்/கட்டிக்கொண்டது தனிமை/... உச்ச சப்தத்தை மீறிக் குரலெடுக்கிறது/தனிமையின் பெருத்த ஓலம்/... /தலைக்குப் பின்புறமிருந்து/தானும் எட்டி பார்க்கிறது இந்தக் கஷ்டத்தை தீர்க்க கொடூரத்தனிமைக்கு எதிரான/கொலை ஆயுதமாக/இக்கவிதையை என முடிக்கிறார்.

இன்றைய தேதியில் பலருக்கு மதிப்பில்லாதது நம் இணைய நண்பர்களின் மின்னஞ்சலும், பின்னூட்டங்களும்தான். 'நாளைக்கு' சொல்கிறது, அடிக்கடி வருவதால்/அலுத்துவிட்டது/நண்பனின் கடிதவரிகள்... இடைவெளிகள் அவசியம்/அன்பையும் ஆர்வத்தையும்/அதிகப்படுத்த... என்னும்போது நமக்குள் மின்னல் வெட்டலாம். பெரிய விஷயங்களுக்குக் கலங்காமல், சிறு சங்கதிகள் நம்மைப் புரட்டிப் போடுவதை அருகே இருந்த குளத்தின்/.../பூ உதிர்ந்ததில்/நடுநடுங்குகிறது அதன்/நீர் பிம்பம் என்று பெரிய கட்டிடத்தைப் பதியும்போது சின்னச் சின்ன நிகழ்வுகள் எவ்வாறு உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க அடிகோலியது என்னும் சிந்தனைகள் எழுகிறது.

தொலைந்த நட்புகளையும் நினைவுகளையும் அசைபோடும் 'அடையாளம்' பருத்த தொந்தியும் நரைத்த மீசையுமாய்/பாய்லர் முன் நின்றிருந்த/ பள்ளித்தோழன் கேட்கிறான்:/டீ தரட்டுமா சார்?, 'நிலை'யின் வட்டிக்குக் கொடுத்தவன்/கொட்டிவிட்டுப் போன/வசவுகள் சிதறி/வாசலெங்கும் கிடக்கிறது என்று கடன் பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம், 'கம்பிகளறுந்த கிதார்' குறித்து எப்போதாவது/அறையைச் சுத்தம் செய்ய/ நகர்த்தப்படும் வேளையில் மட்டும்/அறுபட்ட கம்பிகளில்/அபஸ்வரமாய் ஒலியதிர/தன்னிருப்பை உணர்த்திக் காட்டுகிறது என்று மறக்கப்பட்டவர்களின் நிலையை விவரிப்பது, 'மெழுகுவர்த்தி' குறித்து தீராத இருட்கடலில்/ மெல்லக்கரையத் துவங்கிற்று, 'பருந்துக்கு' வட்டமிட்டு வட்டமிட்டு/ வானளக்க வலுவிருந்தும்/தரையிறங்கத்தான் வேண்டியிருக்கிறது/இரை கொள்ள, 'நீளும் மாலைப்பொழுதை' அடிவானத்தில் அலைந்தபடியிருந்தன/ குழப்பங்களின் நிறமாற்றம் போன்ற கவனிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.

விசுவின் குழப்பல் வசனம் போன்ற 'விசாரிப்புகள்' (கணையாழி), லிஸ்ட் போடும் 'உரியவர்' (அம்பலம்), நவீன சாயலில் ஆங்கில வார்த்தை தெளித்த 'நிலா சானல்' (ஆனந்த விகடன்), என்னுடைய வாசிப்புக்கு எட்டாத 'கலைந்துவிட முற்படும் பெருங்கனவு', குணாதிசயங்களைக் கவர்ச்சியாக சொல்லும் 'நீர்ப்பிறவி' மட்டுமே எனக்கு ஏமாற்றம் கொடுத்தது.

தொகுதியின் பல கவிதைகள் நேரடியான அர்த்தம் தந்தாலும், அடிநாதமாக விளங்கும் குறியீட்டையும் சத்தமில்லாமல் விதைக்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையும், 'விலங்கு'ம் இதற்கு நல்ல உதாரணம். யானையை மையமாக வைத்து அடக்கப்படுபவர்களும், தாத்தாவோடு போன பாசத்தின் ருசியைக் காளானிலும் பார்க்கலாம்.

எந்த வருடத்தில் எழுதியது என்று எல்லாக் கவிதைகளுக்கும் தேதி கொடுத்திருக்கலாம். ஆசிரியரை குறித்து பின்னட்டையில் கூட சிறு குறிப்பில்லாதது தன்னடக்கத்தின் உச்சம் என்றாலும், தவிர்க்கலாம். ஆங்காங்கே சில கோட்டோவியங்கள், அனைத்து கவிதைக்கும் தலைப்பு (இந்த மாதிரி எங்காவது மேற்கோள் காட்டும்போது பயன்படும்!) போன்றவை அடுத்த பதிப்பில் கவனிக்கப் படவேண்டும்.

'கோடை விடுமுறை', 'வழிகாட்டிகள்', 'ஓட்டம்', 'மாற்றம்' போன்றவை காட்டப்படும் இடங்களில் வலம் வந்தும், அவை சொல்லியதை செய்தும் இருப்போம். கவிதைத் தொகுப்பின் முத்திரைக் கவிதைகள் என்று 'மறைந்து வாழும் முகம்', 'ஆற்றுப்பாலத்தில் போகும் ரயில்', 'கோடை மழை' மற்றும் 'புறக்கணிப்பு' ஆகியவற்றை சொல்வேன். பற்களைக் காயப்படுத்தாத எளிய வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே பல அர்த்தங்களை புலப்படுத்தி உள்ளத்தில் அழமாகப் பதிந்துவிடுகிறார்.

காளான் பூக்கும் காலம் - எஸ்.பாபு தமிழினி ரூ. 25/-





திண்ணையில் எஸ். பாபு எழுதும் 'கவிதை உருவான கதை'யில் இருந்து சில பகுதிகள். கவிதைகளும் மற்ற பத்திகளும் சுட்டிகளின் உள்ளே கிடைக்கும். வலி

நிறமாற்றம்:

கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே நாளில் எண்ணற்ற கவிதைகள் எழுதிக்குவிக்கலாம். எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது மட்டுமல்ல புற உலகின் நெருக்கடிகளும் சார்ந்தது.




சிதைவு:

காரணமே இல்லாமல் (அல்லது காரணம் தெரியாமல்) மனம் உற்சாகமடைவதும் பிறிதொரு சமயம் வறண்டு வடிந்து போவதும் எனக்கு அடிக்கடி நிகழ்வது. சிறுவயதில் சிலோன் ரேடியாவில் கேட்ட ஒரு நல்ல பாடல் போதும் என்னை உற்சாகப்படுத்த. மனம் லேசாகி அந்தரத்தில் மிதக்கும். மேகம் திரண்டு இருட்டிக்கொண்டுவரும் மாலை நேரம் போதும், மனம் பாரமாகிப் போக. இவற்றுக்கெல்லாம் இதுவரை காரணம் புரிந்ததில்லை.

அன்றைய தினம் வேறு நண்பர்களைக் காணமுடியாததால் நான் தனியாக தேநீர் அருந்தப் போனேன். தேநீர் அருந்துவது பத்து நிமிடம் தான் என்றாலும் அது தரும் தெம்பும் உத்வேகமும் அலாதியானது. தேநீர் அருந்தச் சென்ற போது, ஆர்டர் செய்த போது, அருந்திய போது மனம் லேசாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என்னுடைய கெட்ட பழக்கம், என்னைச் சுற்றிலும் நடப்பவற்றை அங்குலம் அங்குலமாக கவனிப்பது. தேநீர் குடித்து முடித்து கிளம்பும்போது மனம் வற்றிப் போயிருந்தது. காரணமே அறிய முடியாமல் உற்சாகம் வடிந்து போயிருந்தது. காத்திருக்கும் ஆராய்ச்சிக்கூடப் பணி காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆராய்ச்சிக்கூடத்திற்கு திருப்பியபோது யோசித்ததுதான் கிழ்க்காணும் கவிதை.


செவ்வாய், மே 04, 2004

வலை வலம்

குற்ற வரலாறு உள்ள வேட்பாளர்கள்
ஹரியின் புலம்பல்ஸ்: பொதுத் தேர்தல் 2004 - ல் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், யார் யாரின் பெயரில் வழக்கு (சிவில்/கிரிமினல்) நிலுவையில் இருக்கிறது (அல்லது ஏற்கனவே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது) என்று பார்த்து அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.



செருப்பு குறும்படம் பற்றி சில நிமிடம் - செல்வி தர்மினி பத்மநாதன்
ந. பரணீதரன் - துளி துளியாய்: "செருப்பு" குறும்படத்தில் ஆரம்பத்தில் உயிர் பெறுகின்ற களம் வன்னிநிலப்பரப்பு என்பதை உணர்த்துகின்றது. பாழடைந்த கட்டிடம். ஏழ்மை நிறைந்த குடும்பம். அவர்களை பிண்ணனியாக கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது பொருளாதார வசதியின்மையால் செருப்பு வாங்குவதற்கு சிறுமி உண்டியல் சேர்க்கிறாள். உண்டியல் சேர்த்த பணத்தில் செருப்பு வாங்கியும் அவள் ஆசைக்கு அதை அணியவில்லை என்பதே குழந்தை மனத்தின் சோகம். வெளிப்பார்வை என்பதைவிட அவள் அடிமனதின் ஆழத்தை அவளது ஏக்கத்தை ரசிகர்கள் மீது நேரடியாக உடைக்காமல் மெல்ல மெல்ல நுழைக்கிறார் தயாரிப்பாளர் கௌதம்.

வன்னி நிலத்தில் இன்று எம் உறவுகளை முடக்கி விடும் விதைகள் எத்தனை ? அந்த வகையில் “செருப்பு” யுத்தமேகம் சூழ்ந்த எமது தாயகத்தின் ஓரு துளியினை ஆவணமாகத்தந்துள்ளது. பிரதேச ஆக்கிரமிப்பும்; அவற்றின் விளைவுகளுமே எண்ணிலடங்காதன. அவற்றின் ஓரு துளியே கௌதமின் “செருப்பு”.


தெரியுமா சேதி?
தமிழோவியம் செய்திருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியைப் பார்த்துவிட்டீர்களா? மிகவும் உபயோகமான சொவ்வறை போல் தெரிகிறது. விடைகளை உடனடியாக சரி பார்க்கலாம். அச்சடித்தோ, பெயிண்ட் பிரஷ்ஷிலோ கஷ்டப்படாமல் நேரடியாக ஈ-கலப்பை கொண்டு விடைகளை அடிக்கலாம்; சேமிக்கலாம். நல்லா இருக்கு; ஆனால், குறுக்கும் நெடுக்கும் புதிர் என்னவோ இட்லி-வடை கொடுத்தது போன்ற குழப்ப முறை.


கோஷ்டி கானம்
நக்கல் நாகராஜன் பக்கங்கள்: மனிதர்களை மொத்தம் நான்கு வகையாக பிரிக்கலாம் - பாலகுமாரன் கோஷ்டி, சுஜாதா கோஷ்டி, சிவசங்கரி கோஷ்டி, பட்டுக்கோட்டை பிரபாகர் கோஷ்டி. அவர்களின் குணாதிசயங்களை பட்டியலிட்டு, அப்படியே நக்கல்சலைட்டுகள் என்று ஒரு கலாய்த்தல் செய்கிறார். தொடர்வாரா? தொடரணும்...


தனிமையிலே இனிமை எது?



நக்கீரன் லட்சுமிகாந்தன்
இதழ்களின் இணையம்: நவீனம், கனடா, நகைச்சுவை, அறிவியல், இலக்கியம், மதம், சமயம், தமிழ் தேசியம், பெண்ணியம், இளைஞர், ஈழம், விடுதலைப்புலிகள், கொள்கை, பரவலான வாசிப்பு, சினிமா, ஆங்கிலம், சந்தா என்று பட்டியலிட்டு வரப்போகின்ற இதழ்களின் இணைய முகவரியைக் கூட அழகாகத் தந்திருக்கிறார்.

அனைத்திற்கும் தமிழ் வடிவம் தேவையா ? - ஆனந்த் சங்கரன்


நேற்று : தமிழ் - லினக்ஸ்
தற்பொழுது : 7-ஜிப்

தற்பொழுதுள்ள கல்வியில் உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட ஒரே துறை கணிணி துறை. மற்ற துறைகள் எல்லாம் நாட்டிற்கு நாடு வேறுபடும். ஆனால் தற்பொழுது இந்த புதிய தமிழாக்கத்தால் அதற்கும் வேட்டு போல இருக்கிறது. சும்மா கிடைத்தால் அனைத்தையும் தமிழில் மாற்றிக் கொண்டிருப்பேன் என்று சிலர் ஆரம்பித்துள்ளார்கள். கேட்டால் தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல எண்ணம் என்று கூறுகிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் உலகெங்கும் தமிழர்கள் கொடி நாட்டுவது குறைந்து விடும்போல் இருக்கிறது.

தமிழ் எழுத்துருக்கள், தமிழில் வலைப்பக்கங்கள் என்று தமிழை நமது கருத்து பரிமாற்றங்களுக்கு கொண்டு வந்தது நல்ல விஷயம். ஆனால் அதையே மேலும் மேலும் செய்கிறேன் என்று அனைத்தையும் தமிழாக்கம் செய்வது பற்றி உன்னுடைய கருத்து என்ன ??

என்னுடைய நண்பன் அனுப்பின மடலை வைத்து உங்களிடம் அடுத்த கருத்து கணிப்பைக் கேட்கிறேன்.

தமிழா! உலாவியை சிறிது நாள் பயன்படுத்தியவன் என்ற முறையில் இது போன்ற கேள்வி ஒன்று என் மனதிலும் இருக்கிறது. அதன் Menu-வில் வரும் பல சொற்றொடர்கள் புரியாமல், விழி பிதுங்கி, மீண்டும் மொசில்லாவுக்கேத் திரும்பியவன். அதே போல் சுத்த தமிழில் Manual முழுதுவதும் எழுதுவது எனக்கு ஒவ்வாத கொள்கை. சிஃபி வலைமையத்தில் மேயும் ஒருவருக்கு இது போன்ற நிரலிகளின் பயன் என்ன? (கிட்டத்தட்ட இதே கேள்வியை முன்பொருமுறை கேட்டபோது காசியும் வெங்கட்டும் உரிய பதிலை அளித்திருந்தார்கள்). தற்போது உங்கள் எண்ணங்களையும் அறிய ஆவல்.

திங்கள், மே 03, 2004

வலைப்பூ குறுக்கெழுத்து (திருத்தப்பட்டது)



இடமிருந்து வலம்

1. அன்பே சிவமாய் அமர்ந்திருக்கிறார் - (5)
3. புத்தம் சரணம் கச்சாமி - (2,3)
5. இக்கு இல்லாத தமிழ் Think Tank - (3,2)
8. உறுமி - (3)
9. ஆர்க்டிக்காரரின் குறிப்பு - (5,3)
10. இவ்வார வலைப்பூ ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மீனாக்ஸின் ·பேவரிட் இலக்கிய வடிவங்கள், தலைகீழாக - (4,6)
13. இளைஞன் - (4)
14. குழம்பிப் போன தமிழ் சைவம் - (3)

மேலிருந்து - கீழ்

1. தை வருதா? பந்தல் கட்டி, கச்சேரி; இல்லாவிட்டால் வாய்ப்பந்தல்கள்! (4,4)
2. முதல் போன கார்த்திக் - (1, 4)
3. ஜெமினி பிக்சர்ஸ் படக்காரரின் பதிவு தன்னிலைபடுத்தினால் - (2,9)
4. கண்ணன் போட்ட கட்டுமானப் படம் - (3)
6. நாமக்கல் வலைப்பூ ஆசிரியர் - (2,3)
7. இருக்கிறதா? இல்லையா? - (4)
9. சபாநாயகம் சொல்லும் கருப்புக்கனி (3,3)
11. மாமே பிச்சு உதறிட்டீங்க - (4)
12. எட்டிப் பார்க்கலாம் - (3)

அ) குறுக்கெழுத்தைத் திருத்த உதவிய பவித்ராவுக்கு நன்றி. ஏழாம் எண்ணுக்கான க்ளு சேர்க்கப்பட்டுள்ளது.
ஆ) நான் விடைகளை அமைக்க எடுத்துக் கொண்டது எம்.எஸ்.-பெய்ண்ட். You can also try using the Text Frame for each box with E-Kalappai.
இ) அல்லது அச்சடித்து வீட்டில் தாச்சிக் கொண்டு நிரப்பலாம்.
ஈ) விடைகளை bsubra at india dot com என்னும் முகவரிக்கு படமாக அனுப்புங்கள்.
உ) தவறவிட்ட பிழைகளையும், இன்னி பிற ஆலோசனைகளையும் சொல்லுங்கள். நன்றி.

ஞானியைக் கேளுங்கள் - மரத்தடி

Yahoo! Groups : Maraththadi Messages : Message 14674: "படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் நமது சமூகத்துக்கு தேவைப்படுபவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். நல்லவர்கள் முட்டாளாக இருக்கலாம். பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். புத்திசாலிகளாக மட்டும் ஒருத்தர் இருப்பதை நான் கொண்டாட விரும்பவில்லை. ஏனென்றால் பல தருணங்களில் அந்த புத்திசாலிகள் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். முட்டாஅளாஅக இருக்கும் நல்ல மனிதர்களை புத்திசாலிகளாக மாற்ற முடியும். ஆனால் அயோக்கியர்களாக் இருக்கும் புத்திசாலிகளை நல்லவர்களாக மாற்றுவது மிகக் கடினம். எனவே அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள். எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.
.....
கமிட்மெண்ட் இருக்கும் ஒரு படைப்பாளி, ஒரு கட்டத்தில் தவறாக எழுதியிருந்தாலும் பார்வை மாற்றம் வந்து நல்ல படைப்புகளை எழுதத்தொடங்கிவிட்டால், மறுபடியும் பழைய பாணியில் எழுத மாட்டார். எடுத்துக்காட்டாக மறைந்த நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதன் அசட்டுத்தனமான சபா நாடகங்களை எழுதி வந்தவர்தான். னால் அது பற்றிய பார்வை மாற்றம் அவருக்கு வந்த பிறகு, வேறு விதமான நாடகங்களை முயற்சித்தாரே தவிர, பழைய குப்பைக்கு திரும்பச் செல்லவில்லை."

நன்றி: மரத்தடி மடலாடற் குழு

புறநானூறு : சுஜாதாவின் பிழைகள் - தொ. பரமசிவன்

கூடல்.காம்:
"'மள்' என்னும் சொல், சுஜாதாவின் உரையிலே மிகச் சாதாரணமாக 'மல்' லாகி விடுகின்றது. சுஜாதாவிற்குக் கல்லும் கள்ளும் ஒன்றாகலாம்; புள்ளும் புல்லும் ஒன்றாகலாம். மூலபாடத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் பிழைகள் படைப்பாளிக்குச் செய்யப்படும அப்பட்டமான துரோகம்.

அச்சுப் பிழைகள் என்று கவசம் தேடும் பிழைகளைப் பெரிய மனதோடு ஒதுக்கி விட்ட பிறகும் பொருளையே புரட்டிப் போடும் மூலபாடப் பிழைகளில் சில இதோ : கூடல்.காம்.

இந்த உரை நூலின் ஆபத்தான பகுதி சுஜாதா தந்திருக்கிற முன்னுரை. அதிலே வெளிப்படுகிற வன்முறை உணர்வு அலட்சிய மனோபாவமும் கிண்டலும் நிறைந்தது. புறநானூற்றை எளிய அறிமுகம் செய்ய வந்தவருக்கு அவர் உதிர்க்கின்ற ஆங்கிலப் பெயர்கள் அனாவசியமானவை. வாசகனை ஏமாற்றுபவை. புரியாத தமிழ், வருணனைத் தோரணங்கள், பொருத்தமில்லாத படி வருணனைகள் - இவையெல்லாம் புறநானூற்றில் மண்டிக் கிடப்பதாக சுஜாதா கண்டுபிடித்திருக்கிறார்.

புறப்பாட்டின் காலமும் சூழலும் உரையாசிரியரால் உள் வாங்கப்படவில்லை என்பதனால் தொகுப்பில் பிழைகள் மலிந்திருக்கின்றன ."

ஞாயிறு, மே 02, 2004

ஹேஷ்ய செய்திகள் - ரஜினி படக்கதை

ஜுனியர் விகடன்.காம்: தனது புதுப்படத்துக்கு ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் கதையில் அரசியல் வாடை ஒரு படி தூக்கலாகவே இருப்பது உறுதியாகிவிட்டது. கூடவே, தனது லட்சிய கோஷமான நதி நீர் இணைப்பை நினைவுபடுத்தும் ஒரு முடிச்சையும் இந்தக் கதைக்குள் அவர் நுழைத்திருக்கிறார் என்கிறது விஷயமறிந்த கோடம்பாக்க வட்டாரம்.

‘‘மே நான்காம் தேதி படம் பற்றிய அறிவிப்பு.. அதன்பிறகு, கேரளாவுக்குப் போய் இயற்கை மூலிகை வைத்தியசாலையில் உடம்புக்கு பொலிவும் தெம்பும் கொடுப்பது.. ஜூன் மாதம் பூஜை போட்டு ஷ¨ட்டிங்.. தீபாவளிக்கு ரிலீஸ். இதுதான் ரஜினியின் திட்டம்’’ என்கின்றன கோடம்பாக்கத்துப் பட்சிகள்.

இசைக்கு வித்யாசாகர் அல்லது ஹாரீஸ் ஜெயராஜ்.. கதாநாயகியாக ஜோதிகா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேசி வைத்திருக்கிறார்கள்.

சரி என்னதான் கதை?

ரஜினிக்கு இரட்டை வேடம். அப்பா ரஜினி, அந்த ஊரின் உச்சகட்ட மதிப்பைப் பெற்ற மனிதர். அவருக்கு ஒரு பங்காளி! இவர் எதைச் செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து கிண்டலடிப்பதே அந்தப் பங்காளியின் வேலை (‘பாபா’ யாரைச் சொல்ல வர்றார்னு புரியுதா?).

மகன் ரஜினி வெளிநாட்டில் படிக்கிறார். அங்கே காதல், மோதல் என்று அவர் ஜாலி பண்ணிக் கொண்டிருக்கும்போது.. இங்கே ஊருக்குள் தண்ணீர் பிரச்னை பெரும் பூதமாக வந்து வாட்டுகிறது. பக்கத்து ஊர் வழியே ஓடுகிற நதியிலிருந்து நீரை கால்வாய் மூலம் இந்த ஊருக்குக் கொண்டு வந்தால்தான் தாகம் தீரும்.. விவசாயம் பிழைக்கும் என்ற நிலை.

முழுக்கதையும் கதைக்க: திசை திருப்பவா.. திணறடிக்கவா? - புதுப்படத்துக்கு ரஜினி தயார்!

ஆச்சிமகனின் கேள்விகள்

கற்றலின் இனிமை:

கவிதைத் துறையில் மரபுக் கவிதை காணாமல் போனதை – இல்லையில்லை கொன்றழிக்கப் பட்டதை – நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களில் நானும் ஒருவன். புதுக் கவிதை என்ற பெயரால் தமிழை அழித்த இவர்கள் கூறுவது என்ன? எதுகையும் மோனையும் இன்புறக் கூடி அழகிய நடையில் கவிதை வடிப்பது குற்றமாம்.

மரபு சார் கவிதைக்கு முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டது. கண்டதைக் கிறுக்கி விட்டுக் கவிதை என்று பெயர் சூட்ட முடியவில்லை. இலக்கணம் படித்து எழுதுதல் கடினம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள். கல்லடுக்கி வீடு கட்டுதல் போல சொல்லடுக்கிக் கவிதை கூற முயன்றார்கள். அடுக்கும் பயிற்சியில் தோற்றுப் போய்க் கவிதை மரபையே உடைத்து நொறுக்கி விட்டார்கள்.

கற்பனை நயம் போதுமாம் – கருத்தாழம் போதுமாம் – அழகிய மொழிநடை மட்டும் வேண்டாமாம். வாலறுந்த நரி உங்கள் நினைவுக்கு வந்தால் அது என் குற்றம் அல்ல. அழகிய மொழிநடையிலான மரபுசார் கவிதைகள் மட்டும் தொடர்ந்திருந்தால் தமிழும் தமிழனும் மென்மேலும் வளர்ந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.

முழுவதும் படிக்க: எனக்குப் புரியவில்லை..

சனி, மே 01, 2004

கலைஞரைக் கேளுங்கள்

திமுக தலைவர் கலைஞர் நாளை சன் டிவியின் மூலம் வாக்காளர்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதில் கொடுக்கிறார். எனக்குத் தோன்றிய சில வினாக்கள்:

1. ஒரு அடையாளத்திற்காக, பச்சைத் துண்டு மட்டும் அணிந்து வருவீர்களா?

2. பிஜேபியுடன் மீண்டும் என்றாவது கூட்டு வைத்துக் கொள்வீர்களா? என்ன நிபந்தனைகள் முன் வைப்பீர்கள்?

3. கேகேஎஸ்எஸ்ஆர் போன்ற மற்ற அதிமுக அமைச்சர்கள் போல், ஜெயலலிதா திமுகவில் தொண்டராக இணைய வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?

4. தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது செய்த தவறு ஏதாவது உண்டா?

5. அரசியல்வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் தேவையா? எப்போது? ஏன்?

6. பிஜேபி அரசில் அங்கம் வகித்தும் திமுகவால் தடுக்கமுடியாத தீர்மானங்கள் என்ன?

7. அடுத்த அரசில் அங்கம் வகிப்பதால் இவற்றை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

8. கடந்த தேசிய அரசுகளில் பங்கு கொண்டும் தீர்க்க முடியாத பிரசினைகள் எவை? அவற்றை எவ்வாறு இம்முறை சமாளிப்பீர்கள்?

9. வாரிசுகளுக்குள் சண்டை வருவதை சரி செய்ய என்ன செய்யலாம்?

10. ஹிந்தி திணிப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற கொள்கையை கடைபிடித்ததற்காக வருந்தியதுண்டா? எந்த சிந்தனைகளுக்காக?

பிகு: இவைகளை கேட்டால் தொலைபேசியும் தொலைபேசி சார்ந்த நபர்களுக்கு விளையும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

'அருள்' விமர்சனம்

மீனா :

காமெடி: ஒரு கட்டத்தில் தன்னையும் ஜோவையும் இணைத்து அப்பா தவறாகப் பேசிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்த இடத்திலேயே ஜோவைத் திருமணம் செய்துகொள்கிறார் விக்ரம்.

மகிழ்ச்சி: வில்லன் துளசியை எதிர்த்து இவர் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் மக்கள் நேரடியாகவும், காவல்துறை மறைமுகமாகவும் ஒத்துழைப்புத் தருகிறார்கள்.

தெரிந்த விஷயம்: விக்ரமை நேரடியாகப் பழிவாங்க முடியாத (வில்லன்) துளசி அவரது தம்பியையும், மாமாவையும் கொன்றுவிடுகிறார்.

தெரியாத விஷயம்: (கொத்தாளத் தேவன்) பசுபதி விக்ரம் குடும்பத்தினரை மிரட்டி அசிங்கமாகப் பேசுகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் சண்டையில் பசுபதி இறந்துவிடுகிறார்.

ஆச்சரியம்: டாக்டர் சரத்பாபு, பசுபதி இறந்ததை வெளியே சொல்லாமல் ஆஸ்பத்தரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து, பசுபதி இறந்தது குடியினால் தான் என்றும் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறார்.

சோகம்: 'மன்மதா ராசா' சாயா ஒரே ஒரு பாட்டுக்கு விக்ரமுடன் சேர்ந்து ஆடிவிட்டுப் போகிறார்.

நன்றி: முழுவதும் படிக்க தமிழோவியம்.காம்

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு