வெள்ளி, ஆகஸ்ட் 19, 2005

சிறுகதை - மீகாரம்

முகமூடியின் சிறுகதைப் போட்டிக் கதை.

இந்தக் கதையை எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஒன்றில் ஆரம்பித்து வரிசையாக ஆரம்பித்தாலும் கிறுக்கல் போலத் தோன்றும். கடைசியில் ஆரம்பித்துப் படித்தாலும் அக்மார்க் அலக்கியம் என்று சிரிப்பு வரும். இணையத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சுட்டிகள், படங்கள், சுடச்சுட செய்திகள், சுழற்சி உரல்கள் என்று சிலவற்றை முயன்றேன்.

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள் என்னை மேம்படுத்தும். முன்கூட்டிய நன்றிகள்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

சுக்கல்கள்

1. கூகிளுக்கு செல்லுங்கள்
"failure" என்று தட்டச்சுங்கள் (படியெடுத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டாலும் சரி)
"I'm Feeling Lucky" பொத்தானை அழுத்துங்கள் :-))))

2. the Museum of online museums : அரும்பொருளகத்துக்கெல்லாம் ஒரு இணையத்து அருங்காட்சியகம்

3. மாயாஜால் வித்தைகள்


| |

ரஜினியும் கமலும்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::

ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.

இப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.

கமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ?

வம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

Rajinifans.com



பத்து வேடங்களில் கமல் ::

சினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ?

நன்றி: லேஸிகீக் | sify


| | | |

வியாழன், ஆகஸ்ட் 18, 2005

இது ஒரு வினாக் காலம்

1. விடுபெற்ற எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி


2. வேலையில் மூழ்கிய காதலனை விட்டுவிட்டு, சொரூபா தீவுகளுக்கு விடுமுறைக்கு வருகிறாள் நமது தோழி. பூர்வகுடிகள் இங்கு பொய்விளம்பிகளாகவும்; நமது தோழியைப் போல் சுற்றுலா வருபவர்கள் அரிச்சந்திரர்களாகவும் - பேசும் அபூர்வ இடம் 'சொரூபா தீவு'. விடுதிக்கு செல்லும் முன் மூவருக்கு முகமன் சொல்கிறாள்.

மஞ்சத்துண்டு போர்த்தியவர் 'நாங்கள் எல்லாரும் பூர்வகுடிகள்' என்கிறார்.
கதம்ப மாலை அணிந்தவர் 'ஒரேயொருவர் மட்டுமே சுற்றுலாப் பயணி' என்கிறார்.
பச்சை சட்டை போட்டவன் 'ஹேய்... நீ ரொம்ப அழகா இருக்கே' என்கிறான்.

அவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா?

|

புதன், ஆகஸ்ட் 17, 2005

ஏ. ஆர். ரெஹ்மான் - சமூகப் பார்வை

நன்றி: பத்ரி
உணர்வு: நா. மம்மது / புதிய காற்று
ஆக்கம் : பா. பாலாஜி

ஒரு சண்டைக் கோழி பொழுதில், சின்னச் சின்ன ஆசையில், அந்த அரபிக் கடலோரம், வெண்ணிலாவின் தேரில் ஏறி, திறக்காத காட்டுக்குள்ளே, சின்னச் சின்ன மழைத் துளிகளை நெஞ்சம் எல்லாம் தாழ் திறந்துவிட்டு, என்றென்றும் புன்னகைக்கும் இசையை வழங்கிய ஏ. ஆர். ரெஹ்மானின் வந்தே மாதரம்; ஓபரா வடிவம் தாங்கி நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிற பின்னணியில் இந்த கழுதை ரெஹ்மானின் இசையை, இசை குறித்த அவரது பதிவுகளை மெல்லுகிறது.

டுடூ: இங்கு ஃபாரம்ஹப், கர்னாடிக்ம்யூஸிக்.காம், ராஜாங்கம், தொல்காப்பியம், Tamil Literature Text Search, நடு நடுவே ஓபரா, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பாலிவுட் ட்ரீம்ஸ், இலக்கிய வார்த்தைகள் இட்டு நிரப்ப வேண்டும்.


இப்பொழுது இந்திக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக 'வந்தே மாதரம்'. ரோஜா, காதலன், மின்சாரக் கனவு, கருத்தம்மா என எத்தனையோ திரைப்படங்களின் பின்னணி இசையிலும் உச்சத்தை அடைந்த உங்களுக்கு வேறு யாரின் அங்கீகாரம் தேவை. எதற்கெடுத்தாலும் வெள்ளையின் அங்கீகாரம். விளையாட்டில் அங்கீகாரத்திற்கு ஒலிம்பிக்ஸ், கலைக்கு டோனி, அறிவுக்கு புலிட்சர் பரிசு, இப்பொழுது இசையில் கிராம்மி அங்கீகாரம். நாம் நாமாக எப்பொழுது இருக்கப் போகிறோம்.

உங்களுக்கு சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள்.

ஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். ப்ளூஸ், ராப், கிளாஸிகல், கண்ட்ரி, ஃபோக், ஜாஸ், ஆர் அண்ட் பி, ஹிப் ஹாப், ரெக்கே, ராக், பாப், பாங்ரா, ஹெவி மெடல், டிஸ்கோ, டாங்கோ, காஸ்பெல், டெக்னோ, சம்பா, சல்ஸா, ஜிப்ஸி, எலெக்ட்ரோ, நியு ஏஜ் என அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும். அதில் ரீ-மிக்ஸ் இசை மட்டும் உயர்ந்தது என்கிறீர்கள். எப்படி?

நாகசுரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தாவீதின் சங்கீதத்தை இந்திய இசையில் அமைக்கப் போகிறேன்; ஃப்யூஷன் செய்யப் போகிறேன் என்று மிருணாளின் சாராபாயிடமும் கலாஷேத்ராவுக்கும் எண்ணற்ற இன்ன பிற இடங்களுக்கும் வரும் எல்லா மேல்நாட்டானுக்கும் அடிமைபுத்தி இருக்கிறது.

100 கிடார், 100 வயலின் வைத்து இசை அமைத்து பாலிவுட் ட்ரீம்ஸ் பண்ணுவது போல் 100 ஆங்கிலப் பாடகர்களை வைத்து தமிழ்ப்பாட்டு பண்ணுங்கள். அல்லது உதித் நாராயணை 100 தரம் ஒரே தமிழ் பாட்டில் ஒலிக்கவிடுங்கள்.

பாலிவுட் ட்ரீம்ஸ் என்று ஹிந்திப் பட கதாநாயகனாக விழையும் கதையை ஆங்கிலத்தில் இசை அமைக்கிறீர்கள். அதற்கு பதிலாக ஹாலிவுட் பாண்ட் நடிகன் தமிழ்ப் பட கிராமத்து ராசாவாகும் நாடகத்தை ஹிந்தியில் எடுத்திருக்கலாம். ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு கூட்டி வந்த மாதிரியும் இருந்திருக்கும். உங்களின் ஹிந்திப் பற்றும் வெளிப்பட்டிருக்கும்.

'வந்தே மாதரம்' வெளிவந்தபோது கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அப்பொழுது என்னிடம் புதிய காற்று கிடையாது.

நீங்கள் முதன் முதலாக கிடாரையும் கீ போர்டையும் தொட்டவுடனேயே தடுத்தெறிய நீங்கள் புகழ் பெறவும் இல்லை.

'கண்ணீரே
கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
பேரன்பே
உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு'

பாடல்: சந்தோஷக் கண்ணீரே / படம்: உயிரே


'உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ
செவியில் விழாதா?
கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது'

பாடல்: உந்தன் தேசத்தின் / படம்: தேசம் (ஸ்வதேஸ்)

நானும் நண்பர்களும் தாங்கள் பாடிய மேற்கண்ட வரிகளைக் கேட்ட போது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள்.

| | |

உலகத் தமிழர் பேரமைப்பு

Ulaga Thamizhar Peramaippu - Pazha Nedumaran with Mu Mehtha, Abdul Rehman

மாநாட்டு உரைகள் | தொடக்கவிழா மாநாட்டு மலர்

திரு.பழ.நெடுமாறன் :: உலகத் தமிழர் பேரமைப்பு இருபது ஆண்டுகளாக எண்ணற்ற அறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் சிந்தனையிலே ஊறித் திளைத்து இன்றைக்கு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்ற முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இத்தகைய அமைப்பை நறுவுவதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியெல்லாம் சொன்னார். 1980 ஆம் ஆண்டில் நான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒன்றுசேர்க்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை வெளியிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். பத்து கோடி ரூபாயை ஒதுக்கினார். மதுரையிலே ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நயமிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்கள் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவருடைய மறைவோடு அது அப்படியே தூங்கிவிட்டது.

மலேசியாவிலுள்ள நம்முடைய நண்பர் டேவிட் அவர்கள் இதற்கான முயற்சி எடுத்தார். உலகத் தமிழ் மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை. அமெரிக்காவிலுள்ள டாக்டர் தணி.சேரன் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட பெருமை மறைந்த ஈழத்து தனிநாயக அடிகளைச் சார்ந்தது.

1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னையிலே மறைந்த இர.ந.வீரப்பனார் தலைமையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு நறுவனத்தின் வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று அவர் என்னை அழைத்த போது அந்த மாநாட்டில் நான் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டேன். உலகத் தமிழருக்கு ஒரு குடை அமைப்பு, உலகத் தமிழருக்கு ஒரு கொடி, உலகத் தமிழருக்கு ஒரு தேசியப் பண், உலகத் தமிழருக்கென்று ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு என்று ஒரு தேசிய உடை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தேசியப் பண்ணினை நம்முடைய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல இந்தக் கொடி உலகத் தமிழருக்கான கொடியை வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்கு உலகத் தமிழர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் பேரமைப்பு ஐந்து மீட்புகளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது: மொழி மீட்பு. பண்பாடு மீட்பு. வரலாறு மீட்பு. இன மீட்பு. மண் மீட்பு ஆகிய ஐந்து மீட்புகள் உடனடியாக நடைபெற்றாக வேண்டும்.


மாண்புமிகு பி.சந்திரசேகரன், இலங்கை அமைச்சர்
திரு.அ.விநாயகர்த்தி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. எம். எஸ். செல்லச்சாமி, இலங்கைப் பொது வசதிகள் சபைத் தலைவர்
பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம் எப்.ஆர்.சி.பி.
கவிஞர் கா.வேழவேந்தன்

முனைவர் அவ்வை நடராசன்
முனைவர் ப.கோமதிநாயகம்
முனைவர் க.நெடுஞ்செழியன்
முனைவர் மணவை முஸ்தபா
மருத்துவர் பொன்.சத்தியநாதன் (ஆசுதிரேலியா)

முனைவர் இரா.இளவரசு
முனைவர் க.ப.அறவாணன்


தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியும் பண்பாடும் :: முனைவர் வி. கோவிந்தசாமி
மியம்மாவில் (பர்மா) தமிழர் நிலை :: கோ. க. மணிமேகலை
திருக்குறளே இனமீட்சிக்கு வாழ்வியல் நெறியாகட்டும் :: மு. மணி வெள்ளையன் (மலேசியா)
இராவண காவியத்தில் தமிழ்த் தேசியச் சிந்தனை - ஒரு பார்வை :: கி. த. பச்சையப்பன்
மின் வெளியில் நிரந்தரமாகும் தமிழ்மொழி :: நா. கண்ணன் (செருமனி)
தமிழும் தமிழரும் :: பேராசிரியர் அரங்க. முருகையன் (இலண்டன்)
உலகநாடுகளில் தமிழர்
கனவு நனவாகிறது :: பழ. நெடுமாறன்



| |

சென்ற பத்து (7)

1. அமதியுஸ்
2. இசைப்புயல்
3. விக்கிபீடியா
4. வினாடி வினா
5. தெறும்
6. மாத்ருபூமி
7. தங்கமணி
8. அபுகா ஹூக்கும்
9. அரசியல்
10. இணையத்தால் ஆய பயன்


| | |

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2005

சிறுகதை - மீகாரம்

2000 வார்த்தைகளோ ஆகஸ்டு 21ம் தேதி பின்னிரவு 3 மணி EDT வரையிலோ எழுதிப் பதிந்து கொண்டேயிருக்கப் போவதாக எண்ணம். இந்தக் கதையை எப்பொழுது வேண்டுமானாலும் முடிக்கலாம்.

இந்த வலைப்பதிவுக்காரரும் முகமூடியின் சிறுகதைப் போட்டி கச்சேரிக்குப் போகப் போறார்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | (தொடரும்)

ரிசர்வ் செய்யப்படுகிறது

THE POWER OF DELIGHT :: A Lifetime in Literature: Essays 1962-2002. By John Bayley. Selected by Leo Carey. 677 pp

The Geography of Thought :: : How Asian and Westerners Think Differently... and Why By Richard E. Nisbett

Runaway :: By ALICE MUNRO

SEEING IN THE DARK :: How Backyard Stargazers Are Probing Deep Space and Guarding Earth From Interplanetary Peril By Timothy Ferris

THE CORRECTIONS :: By Jonathan Franzen

HATESHIP, FRIENDSHIP, COURTSHIP, LOVESHIP, MARRIAGE Stories. By Alice Munro

GENOME :: The Autobiography of a Species in 23 Chapters. By Matt Ridley

THE FEELING OF WHAT HAPPENS :: Body and Emotion in the Making of Consciousness By Antonio R. Damasio

BIRDS OF AMERICA Stories. By Lorrie Moore

THE SONG OF THE DODO :: Island Biogeography in an Age of Extinctions. By David Quammen

இந்த புத்தகங்களை படிப்பதற்கு (குறைந்தபட்சம் புரட்டுவதற்காகவாவது) நூலகத்தில் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டேன். அனைத்தும் சுவாரசியமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.


| | |

புது யுகத்தில் தமிழ் நாவல்கள்

Kalachuvadu :: May05 - பா. மதிவாணன்

ஷோபா சக்தி - ம்
யூமா வாசுகி - ரத்த உறவு
எம். யுவன் - பகடையாட்டம்
பி.ஏ. கிருஷ்ணன் - புலிநகக் கொன்றை
கோணங்கி - பிதிரா

எஸ். ராமகிருஷ்ணன் - நெடுங்குருதி
க.வை. பழனிச்சாமி - மீண்டும் ஆதியாகி
பெருமாள்முருகன் - கூளமாதாரி
ரமேஷ் - பிரேம் - சொல் என்றொரு சொல்
சிறீதர கணேசன் - சந்தி

உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை
ராஜ் கௌதமன் - 'சிலுவைராஜ் சரித்திரம்', 'காலச் சுமை'
கோபாலகிருஷ்ணன் - மணல் கடிகை
அழகிய பெரியவன் - தகப்பன் கொடி
சி.எம். முத்து - வேரடி மண்

கண்மணி குணசேகரன் - கோரை
பாலமுருகன் - சோளகர் தொட்டி
சல்மா - இரண்டாம் ஜாமங்களின் கதை
செந்தூரம் ஜெகதீஷ் - கிடங்குத் தெரு
எம்.ஜி. சுரேஷ் - 37




வேறெங்கோ கிடைத்ததில் சேமித்தது:

யூமா.வாசுகி - வேட்டை, ரத்த ஒளி
சூத்ரதாரி - தேர், வலியின் நிறம்

மனோஜ்குமார் - பால்
பா. வெங்கடேசன் - மழையின் நிறம் தனிமை

தளவாய் சுந்தரம் - ஹிம்சை
கோகுலக்கண்ணன் - பாம்பும் பிற கனவுகளும்

பவா செல்லத்துரை - வேட்டை
லட்சுமிமணிவண்ணன் - பூனை

குமாரசெல்வா - உக்கிலு
பாப்லோ அறிவுக்குயில் - இருள்தின்னி

க.சீ. சிவக்குமார் - நாற்று
சோ. தருமன் - வலைகள்



| | | |

மங்கள் பாண்டே - எழுச்சி

tamiloviam.com ::

காலச்சக்கரமாக சரித்திரம் மீண்டும் மீண்டும் பிரதிபலிப்புகளை நிகழ்த்துகிறது.

தெற்காசியாவில் விளைந்த போதைப் பொருட்களைத் திருட்டுத்தனமாக, அன்றைய அளவில் பணக்கார நாடான சீனாவுக்கு, கிழக்கிந்திய கம்பெனி கொடுத்து வந்தது. இன்று ஆ·ப்கானிஸ்தானின் அபினை அமெரிக்கா ஊழல்தனமாக ஏற்றுமதிக்கிறது.

பிரிட்டிஷார் அரசாளாமல் அவர்களின் கிழக்கிந்திய கம்பெனி உலகெங்கும் வர்த்தகம் மூலமாக அரசுகளை அமைத்தது. அமெரிக்காவின் கூகிளும் மைக்ரோசா·ப்டும் உலகின் போக்கை தங்களின் எதேச்சதிகாரங்களின் மூலம் நிர்ணயிக்கிறது.

1850-களில் லண்டன் லார்ட்ஸ் கோமகன்களைக் கைக்கூலியாக வைத்துக் கொண்டு இடைத்தரகர்கள் கோலோச்சுகிறார்கள். கட்சி நிதிக்காக ரிலையன்ஸ¤ம் ரேமண்டுஸ¤ம் வாரி வழங்கி, வரிகளைக் குறைத்துக் கொண்டு, சாதகங்களை சாத்தியமாக்கிக் கொள்கிறார்கள்.

மேட்டுக்குடி விருந்துகளுக்கு அழைக்கப்பட்டாலும், கேப்டனாக பணியாற்றினாலும், வசதியான குடும்பத்தில் பிறக்காவிட்டால் இளப்பமாக பார்த்து மெல்லிய அவமானங்களுக்கு உட்பட நேர்ந்தது - கிழக்கிந்தியா கம்பெனிக் காலம். சமநிலையை வெளிப்புறமாக காண்பித்துக் கொண்டு, இனம், நிறம், மொழி கொண்டு ஏளனப் பார்வையை அடிநாதமாக வைப்பது இன்றும் நடக்கிறது.




"Those who fail to learn the lessons of history are doomed to repeat them."
- George Santayana



கேத்தன் மேத்தா என்னும் பொருளாதார அறிவுஜீவியும் ஆமிர் கான் என்னும் மசாலாக் கலைஞனும் சரி பாதியாக கலந்த படம் 'மங்கள் பாண்டே'. (Mangal Pandey)

மங்கள் பாண்டே என்னும் இபிகிசே (இந்தியாவில் பிறந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம்) புரியும் குழப்பதாரியின் கதை. 'உடல் மண்ணுக்கு; உயிர் பரங்கியனுக்கு' என்று கொள்கைப் பிடிப்போடு வேதாகம முறைப்படி வாழும் பிராமணன். ஆ·ப்கானிஸ்தான் போரில் தன் தலைவனைக் காப்பாற்றுகிறான். உயிர் காத்த பாண்டேவுக்கு கேப்டன் வில்லியம் கார்டன் (William Gordon) நன்றிக் கடன் உடையவனாகிறான். இருவருக்குமிடையே ஆழ்ந்த நட்பு வளர்ந்தாலும், அமெரிக்கனுக்கும் இந்தியனுக்குமிடையே மறைந்திருக்கும் உரசல்கள் போல் சில கணங்குகள் தெரிகிறது.

கேப்டனுக்கு உடன்கட்டையேறுதல் அருவறுப்பைத் தருகிறது. கத்தி சண்டை போட்டு 'ஜ்வாலா' அமிஷா படேலைக் காப்பாற்றுகிறார். கொடுமையை மனதில் உருவேற்ற வேண்டிய காட்சி, ஆமீர் கான் என்னும் ஹிந்தி நாயகனின் வாள்போர் வீரத்தை வெளிப்படுத்தி, 'சதி' என்னும் கொடுமையின் வீரியத்தை விரயமாக்குகிறது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே உள்ளத்தில் பதிய வேண்டிய நிகழ்வுகள், இதுபோன்ற ஈயத்தனமான இந்திப்பட இளிப்புகளால் அசட்டு சிரிப்பை வரவைக்கிறது.

தீக்குளியலில் இருந்து காப்பாற்றிய கேப்டனுக்கு அடிமையாக சேவகம் செய்கிறாள் ஜ்வாலா. ஒரிஜினலாக ராணி முகர்ஜி நடிக்க வேண்டிய கதாபாத்திரம். இந்தியாவின் உருவகமாக 'ஜ்வாலா' காட்டப்படுகிறாள். கட்டப் பஞ்சாயத்து பண்ணையார் அரசர்களின் கொடுங்கோலில் இருந்து காப்பாற்றியதற்கும், வசதிகளை செய்து கொடுப்பதற்கும் என்றென்றும் நன்றிக்கு உரித்தவனாக பிரிட்டிஷ் கேப்டனை நினைக்கிறாள். படம் நெடுக பார்வையாளனை பிரதிபலித்து, கிளர்ச்சிக்கு வித்து எப்படி வந்தது என்று காட்டியிருக்கக் கூடிய கதாபாத்திரம். நம்பிக்கை துரோகமாக பணத்தின் பின் செல்ல நினைக்கும் கேப்டன் என்று கதை முன்னேற நினைத்தாலும், படத்தின் ஹீரோ 'மங்கள் ஆனதால் படம் இவர்களை அம்போவென்று நிறுத்திவிட்டு நம்மை ஏமாற்றுகிறது.

ஆரம்பத்திலேயே மறுப்புக் கூற்றுகள் போட்டுவிடுவதால், சரித்திர நம்பகத்தனமைகளையும் அதிகாரபூர்வ வரலாறு பிண்ணணிகளையும் ஒதுக்கி விடலாம்.

தம்மக்கள் எப்பொழுது அவமானப்படுத்தப்பட்டாலும் மங்கள் கொதிப்படைகிறான். காலையில் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு வரும்போது, தீட்டு பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். விபச்சார அழகி ராணி முகர்ஜியுடன் படுத்து எழுகிறான். சாராயம் குடிக்கிறான். ஆனால், மாமிசம் வாயில் பட்டுவிடக் கூடாது என்பதை நிச்சயமாக கடைபிடிக்கிறான்.

தூக்கிலிட சொன்னால் 'கொலை செய்யமாட்டான் பிராமணன்' என்று ஒதுங்குகிறான். போர்களத்தின் முண்ணணியில் எதிரிகளைக் கொல்வதை கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறான்.

இயக்குநர் முரண்களை பட்டியலிடுகிறார். தாக்கம் ஏற்படுத்தாத புதுக்கவிதை போல் பட்டியல் அளவிலேயே இவை நின்று விடுகிறது. 'எனக்கு எவ்வளவு விஷயம் தெரியும் பார்' என்னும் பிரமிப்புதான் வெளிப்படுகிறது. லகான் போல ஏதாவதொரு பிரச்சினையை தீவிரப்படுத்தி, மாறுபாடுகளையும் சுயமறுப்புகளையும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

·பரூக் தோண்டி (Farrukh Dhondy)யின் வசனங்கள் படத்தைக் காப்பாற்றுகிறது. தளையற்ற சந்தை (Free Market) தத்துவத்தை எளிதாக புரிய வைக்கிறார். நகைச்சுவையாக 'நீ நாய் என்று சொல்லிக்கொள்' என்று வில்லன் மிரட்டும்போது, 'நீ நாய்' என்று எகத்தாளமாய் பதிலிறுக்கிறார்.

நினைவில் நின்ற சில வசனங்கள்.

  • 'உனக்கு உட்பொருள் புரியாத எதிலும் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதே'

  • 'உப்பு எளிதாகக் கிடைப்பதுதான். அது இல்லாவிட்டால் சமையல் ருசிக்காது. ஆனால், உப்பை விட விசேஷேமானவைகள் நிறைந்த உலகம் இது.'

  • 'கிளர்ச்சிகளுக்கு தலைவர்கள் தேவையில்லை. ரத்தம் சிந்துவதால்தான் போராட்டங்கள் தொடங்கப்படுகிறது.'

    இவ்வளவு அருமையான உரையாடல்களுக்கு இடையூறாக ஓம் பூரி வந்து 'ஒரேயொரு ஊரிலே... முன்னுமொரு காலத்திலே' என்று லெக்சர் கொடுக்கிறார். படத்தில் எப்பொழுதெல்லாம் ஆங்கில வசனம் வருகிறதோ, அசரீரியாக ஓம் பூரியின் ஹிந்தி ஆஜராகிறது. சன் டிவி சீரியல் போடுகிறது; நாமும் போடுவோம் என்பதாக எல்லோரும் படுத்துவதைப் போல், அமிதாப் பச்சனை குரலொலிக்க விடாதது மட்டும்தான் நிம்மதி. மற்றபடி பரூக்கின் உயிரோட்டமுள்ள ஆங்கில வசனங்களையும் கேட்க விட்டிருந்தால் படத்திற்கு மெருகூட்டியிருக்கும்.

    வரலாற்று 'நாயகனி'ன் கதையை மூன்று மணி நேரத்தில் சுவாரசியமாக அடக்குவது கஷ்டமான காரியம். 'தென்பாண்டிச் சீமையிலே' மூன்று முறை இடம்பெற்றது போல் 'மங்கள்... மங்கள்... ஹோ'வும் மூன்று முறை வருகிறது. கதையை முன்னெடுத்துச் செல்வதற்கு பயன்படாமல் சீட்டில் நெளிய வைத்து, தம் போடாதவர்களைக் கூட சிகரெட் பிடிக்கப் போகவைக்கும் காட்சியாக்கம். கிறக்கமான 'ரஸியா' பாடலுக்கு நல்ல ஆட்டம் போடவைத்தாலும், தாதா படத்திலும் அயிட்டம் பாடலுக்கு மினுக்கிட்டு உழைக்கும் ராம்கோபால் வர்மாக்களின் காட்சியாக்கங்களில் பத்து சதவீத ஈடுபாடு மட்டுமே வெளிப்படுகிறது. ஜாவெத் ஜ·ப்ரியின் 'உலகமென்னும் சந்தையில் எல்லாமே விற்பனைகளில் வருகிறது' என்பது போன்ற வைரவரிகளுக்கு, எண்பதுகளில் வரும் 'சாமிகளே... சாமிகளே' விஜயகாந்த் போல படமாக்கியிருக்கிறார்கள்.

    கொளுத்தப்பட்ட கிராமத்தில் சடலங்களின் மேல் ஊர்ந்து சென்று தன்னுடைய பாம்பாட்டியைத் தேடும் பாம்பு போன்ற குறியீடுகள் பல அதிர்வுகளைக் கொடுக்கிறது. நிராயுதபாணியாக வந்து, மங்களைத் தனியே அறிவுறுத்த அழைக்கும் கேப்டனை எல்லோர் முன்னிலையிலுமே பேச அதட்டி விட்டு, இரண்டாவது பார்வையிலேயே, அமைதியாக பின்னே செல்வது போன்ற அமர்க்களமான காட்சியாக்கங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.

    விலைமாது 'ஹீரா'வாக ராணி முகர்ஜியும் வந்து போகிறார். ராணி லஷ்மி பாய் என்னும் icon-ஐ ஐந்து விநாடி காட்சிப்படுத்தலின் மூலம் நகைப்புக்குள்ளாக்குகிறார்கள். அதே போல், 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில்' திடீரென்று ராணி முகர்ஜியும் ஈடுபடுவதாக பதின்மூன்று விநாடிகள் க்ளைமாக்ஸில் காட்டும் இடத்தில், உணர்ச்சிவயப்படாமல், தியேட்டரே சிரிப்பலையில் மூழ்குகிறது. இது ஹீரோக்களின் கதை. அவர்களுக்கே உயிரூட்டம் இல்லாதபோது, ஏலத்தில் விற்கப்படும் பாரத மாதா படிமத்தைக் கொண்ட 'ஹீரா'க்களுக்கு இரண்டரை மணி நேரத்தில் இடமே இல்லை.

    அடக்கி வாசிக்கத் தெரிந்த நடிகர்கள், உறுத்தாத ஒளிப்பதிவு, சிந்தையைக் கிளறும் வசனங்கள், பெரிய பட்ஜெட் மிரட்டல் காட்டாத காட்சியமைப்புகள், உருக்கும் பிண்ணணி இசையமைப்பு, இயல்பு நவிற்சியான கலை, இயற்கைச் சூழல் கிராமப்பிடிப்பு எல்லாம் 'ஓ' போடவைக்கிறது.

    ஆனால், படம் பார்த்த பிறகு எமிலி என்ன ஆனார், எதற்கு வந்தார்; இங்கிலீஷ் மேம்சாபின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 'கமலா' (மோனா அம்பேகாவோன்கர்) ஏன் வீணடிக்கப்பட்டார் போன்ற குழப்பங்கள் எழுவதைத் தவிர்க்க இயலாது.

    காத்திரமான மன அதிர்வுகளை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு இது நாலைந்து சிப்பாய்களின் கலகம். நாலு பாட்டு, இரண்டு சண்டை, கொஞ்சம் பலான காட்சிகள், ஒரு அயிட்டம் பாட்டு, என்று நேரங்கழிக்க செல்பவர்களுக்கு இது சுதந்திர இந்தியாவின் எழுச்சி வித்து.

    - பாலாஜி


    | |

  • திங்கள், ஆகஸ்ட் 15, 2005

    இந்தியா டே 2005



    பாஸ்டன் :: 58-வது சுதந்திர தின விழா ::

    நெல்லுக்கிரைத்த நீர்வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை

    (மூதுரை)

    ஒருவர் இருந்தாலே மழை பொழியும் என்கிறார் ஔவை. ஆயிரம் இந்தியர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடினால் - இடி மழை மின்னலுடன் 'பொத்துகிட்டு ஊத்தியது வானம்'. நான்கு மணியளவில் ஆரம்பிக்க வேண்டிய 'சுதந்திர தின விழா' ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது.

    'பாஸ்டன் பெருநகர இந்திய கூட்டமைப்பு' (India Association of Greater Boston) சார்பாக இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 14) ஹாட்ச் ஷெல் அரங்கத்தில் நடைபெற்றது. '2005 இந்தியா தின'த்திற்காக நியு இங்கிலாந்து பகுதியில் இருக்கும் பல்வேறு இந்திய அமைப்புகள் நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.

    ஸஹேலி, AID, ஆஷா போன்ற தொண்டு நிறுவனங்களும், புகாரா, திவா போன்ற உணவகங்களும், நகை, துணிக்கடைகளும், வெஸ்டர்ன் யூனியன், ப்ருடென்ஷியல் போன்றவர்களும் ஸ்டால்கள் அமைத்திருந்தார்கள். விதவிதமான சுவையான உணவுவகைகள், இலவசப் பொருட்கள் என்று இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் தொடக்கம் அலுக்கவில்லை.

    அமெரிக்காவின் தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்பு இந்திய தேசிய கீதம் பாடினார்கள். கோவா, ஓடிஸி, கேரளாவின் மரபு நடனங்கள்; கிஸ்னா, ஸ்வதேஸ் பாலிவுட் பாடல்கள்; அஷ்டலஷ்மி, தசாவதார புராண இதிகாச நாடகங்கள் என்று பல்வேறு ரகங்களில் கண்ணுக்கு விருந்து தயார் செய்திருந்தார்கள்.

    'பக்த பிரஹலாதா'வில் 'எங்கே நாராயணன்' என்று மேடையில் இருந்த ஹிரண்யகசிபு இடிமுழக்கியவுடன், வானில் இருந்து இடி மின்னலுடன் மழையும், ஸ்டேஜ் தூணில் இருந்து நரசிம்மரும் வெளிவந்தார்கள். மக்கள் கிளம்பிவிட்டார்கள்.

    திருமூலர் ::
    இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
    பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
    கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
    எங்குநின் றான்மழை போல்இறை தானே.

    (திருமந்திரம் :: ஒன்பதாம் தந்திரம்)

    மழை கொட்டியிருக்காவிட்டால், இன்னும் சிறப்பாக எல்லா நிகழ்ச்சிகளையும் அனைவரும் கண்டு கொண்டாடியிருக்கலாம்!

    விழா புகைப்படங்கள்

    - பாலாஜி


    | |

    ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2005

    ஜன கன மன

    ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
    பாரத பாக்ய விதாதா
    பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
    திராவிட உத்கல பங்கா
    விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

    உச்சல ஜலதிதரங்கா
    தவ சுப நாமே ஜாகே
    தவ சுப ஆஷிஸ மாகே
    காஹே தவ ஜய காதா
    ஜன கன மங்கள தாயக ஜய ஹே
    பாரத பாக்ய விதாதா
    ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
    ஜய ஜய ஜய, ஜய ஹே!



    மறு பதிவு | Jana Gana Mana | Music India OnLine - National Anthem individual renditions | Patriotic Songs (tamil) - Dishant.com


    ஏ.ஆர்.:
    ஓ யுவா யுவா ஒ

    கோரஸ் 1:
    ஜன கன மன
    ஜனங்களை நினை
    கனவுகள் அல்ல (அல்லது வெல்ல)
    காரியம் துணை

    கோரஸ் 2:
    ஓளியே வழியாக
    மலையே படியாக
    பகையோ பொடியாக
    சக் சுக் சுக் சுக் கும்செய்

    M:
    இனியொரு இனியொரு விதி செய்வோம்

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா

    M:
    விதியினை மாற்றும் விதி செய்வோம்

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா

    M:
    கோரஸ் 1
    கோரஸ் 2

    ஏ.ஆர்.:
    ஓ யுவா யுவா ஒ ஒஹோ

    M:
    ஆயுதம் எடு ஆணவம் சுடு
    தீப்பந்தம் எடு தீமையைச் சுடு

    ஏ.ஆர்.:
    இருளை எரித்து விடு
    ஏழைக்கும் வாழ்வுக்கும்
    இருக்கின்ற இடைவெளி குறைத்து
    நிலை நிறுத்து
    ஆடி கொட்டத்தில் விட்டதை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

    M:
    காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும்
    காலணி எதுவும் அணிவதில்லை
    ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்
    ஆயுதம் எதுவும் தேவையில்லை

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா

    M:
    கோரஸ் 1

    ஏ.ஆர்.:
    அச்சத்தை விடு லட்சியம் தொடு
    வேற்றுமை விடு வெற்றியைத் தொடு
    தோழா போராடு
    மலைகளில் நுழைகின்ற நதியெனெ
    சுயவழி அமைத்து, படை நடத்து
    அட வெற்றிக்கு பக்கத்தில்
    முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து

    M:
    நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்
    நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
    வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்
    வலப்பக்கம் பூமி திரும்பி விடும்

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா

    M:
    கோரஸ் 1
    கோரஸ் 2
    கோரஸ் 1

    ஏ.ஆர்.:
    இனியொரு இனியொரு விதி செய்வோம்

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா

    ஏ.ஆர்.:
    விதியினை மாற்றும் விதி செய்வோம்

    G:
    ஓ யுவா யுவா ஒ யுவா


    | | |

    வெள்ளி, ஆகஸ்ட் 12, 2005

    மங்கள் பாண்டே - எழுச்சி

    அவசரத்திற்கு ஆங்கில விமர்சனம்தான் எழுத முடிந்தது.

    மங்கள் பாண்டேவை வெள்ளித் திரையில் பார்க்கலாமா என்று கேட்டால், முயற்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் அளவில் 'ஒரு முறை சென்று ரசியுங்கள்' என்று சொல்லலாம்.



    என்னுடைய ஆங்கில விமர்சனத்தை
    இங்கே சென்றால் படிக்கலாம்.

    வெள்ளி

    1. இந்தியன் எக்ஸ்பிரஸ் :: குப்பைகளற்ற நகரம் கோழிக்கோடு - இந்தியாவின் முன்னோடி

    2. என்.டி.டிவி :: தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை - உச்சநீதி மன்றம்

    3. இந்தியன் எக்ஸ்பிரஸ் :: நோயுற்ற பெண் யாத்திரிகருக்கு உதவ நேபாளம் மறுப்பு; சீனா ஒத்துழைப்பு - மானசரோவர்

    4. புகழ்பெற்ற ஆசியர்களின் வலைப்பதிவுகள் :: நந்திதா தாஸ், தீபக் சோப்ரா, சேகர் கபூர்,... (வழி: Sambhar Mafia)

    5. டைம்ஸ் ஆஃப் இந்தியா :: மேலும் மேலும் பலான வீடியோக்கள்


    சாம்பார் மாஃபியாவின் சுட்டித் தோட்டத்திற்கும் ஒரு நடை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்!


    | |

    வியாழன், ஆகஸ்ட் 11, 2005

    குவாண்டம் கணினி

    புத்தக விமர்சனம் ::

    Venkatramanan's Quantum Computer Book Review by Divakar Ranganathan in Tamil India Today

    குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

    நன்றி: இந்தியா டுடே (தமிழ்)


    | |

    ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்



    குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

  • New England Holocaust Memorial, Boston, Massachusetts

  • கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள :: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்

  • முகமூடிகளின் தேடுகை :: குழியும் அலையும் விரியும் குவியும்

  • அவர்களும் நானும் :: ஈழநாதன்


    |

  • AS-28 Priz பத்திரமாகத் திரும்பியது

    அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன மூணு நாளா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இல்ல.

    கடலோடிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், ருஷிய ராணுவத்துக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.

    செய்தி உதவி: நன்றி
    படம் உதவி: Viktor Korotayev/Reuters


    | | |

    தீராநதி

    ஆகஸ்ட் 2005

  • தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் :: ரமேஷ்-பிரேம்
  • பலிகடாப் பெண்களின் யதார்த்த உலகம் :: வாஸந்தி
  • சிறைவாச நாட்கள் :: கி.ரா. பக்கங்கள்
  • உயரம் தாண்டுபவர்கள் :: பாரதிபாலன் (சிறுகதை)
  • மகிழ்ச்சியான முடிவு :: லீதா பெரஸ் காசரெஸ் [Lita Pérez Cáceres] (சிறுகதை)
  • சினிமா - கலை அறம் சரித்திரம் :: காஞ்சனா தாமோதரன் (ஹோட்டல் ருவாண்டா)
  • கவிதைகள் :: உமா மகேஸ்வரி
  • கவிதைகள் :: பா தேவேந்திரபூபதி
  • நீரும் நெருப்பும் :: சி அண்ணாமலை (கடல் வீசிய வலை - ஆவணப்படம்)



    | | |

  • புதன், ஆகஸ்ட் 10, 2005

    சம்சாரிகளின் வட்டார வழக்கு மொழி

    கழனி யூரன் ::

    மரபாக சம்சாரிகள், நெல் மகசூல் செய்யும்போது தன் வட்டார வழக்கு மொழியை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

    முதன்முதலாகச் சம்சாரிகள், கதிர் அறுத்து அடிக்கும் தானியத்தைத் 'தலையடித்தானியம்' என்று கூறுவார்கள். அதில் முதல் மரக்கால் நெல்லை கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு என்று அளந்துவிட்டு அடுத்த மரக்கால் நெல்லை, விதைக்கு என்று அளப்பார்கள். இது விதை நெல்லாகும். தலையடித் தானியம் சாமிக்கு அடுத்தது விதைக்கு என்ற களத்தில் வைத்துச் சம்சாரி கூறுகிறான். இந்த விதை நெல்லை 'விதை முதல்' என்று கூறுகிறார்கள்.

    நெல் நாற்றுப் பாவ வேண்டிய நிலை வந்ததும், நெல் விதையைச் சாக்கில் போட்டுக் கட்டித் தண்ணீரில் வைக்கிறார்கள். முதல் நாள் முழுவதும் விதை சாக்கோடு நீரில் மூழ்கி இருக்கும். மறுநாள் தண்ணீரைவிட்டு எடுத்து, மேடான இடத்தில் வைத்து விடுவார்கள். மூன்றாம் நாள் விதை முளைக்கூறி வெள்ளையாக விதையாகத்தளிர் வேர் வெளியே தெரியும். அதைச் சம்சாரிகள் 'மூன்றாங் கொம்பு' என்று கூறுகிறார்கள்.

    நாற்றுப் பாவ நாற்றாங்காலை உழுது பக்குவப்படுத்துகிறார்கள். முறைக்கட்டிய விதையை, நாற்றாங்காலில் பாவுகிறார்கள். அளவான நீரில் நாற்றங்காலின் தொழிலில் உள்ள சகதியின் மேல் விழுந்த விதையின் வேர் மண்ணில் பற்றிக் கொள்வதைச் சம்சாரிகள் 'விதைத் தருவுதல்' என்று கூறுகின்றார்கள்.

    நாற்றாங்கால் விதை பாவிய பிறகு சற்றே நீர் நிற்கவேண்டும். இதை நாற்றங்காலில் விதை முளைக்கும் வரை 'சில்லுதண்ணியா' நிக்கனும் என்று கூறுகிறார்கள். இல்லை என்றால், "திடீரென மழை பெய்து நாற்றங்காலில் உள்ள விதைகளைக் கட்டிக் குமித்து குவித்துவிடும்" என்று கூறுகிறார்கள்.

    மறுநாள், ''விதைகால் பாவிட்டு'' என்று கூறுகிறார்கள். நாலு நாள் கழித்ததும், ''நாத்து கூடிட்டு'' என்று சொல்கிறார்கள். நாற்று நன்றாக வளர்ந்துவிட்டால், ''நாற்றுச் செல்லப்பிள்ளை கணக்கா வளர்ந்திருக்கு'' என்று கூறுகிறார்கள். பூரணமாக வளராத நாற்றை 'கைக்கு எட்டாத நாற்று' என்றும் சொல்கிறார்கள்.

    நாற்றைப் பிடுங்கி முடியாகக் கட்டுகிறார்கள். இதை, ஒரு முடி நாற்று என்று கூறுகிறார்கள். நாற்றுப் பிடுங்கும் பெண்களின் இரண்டு கைகளுக்கும் இடையே உள்ள ஒருவித உத்தேச அளவைக் கொண்டு இந்த நாற்று முடி அமைகிறது.

    நாற்று நடும்போது, 'முதலைக் குறைத்து வைத்து நெருக்க நடு' என்று கூறுகிறார்கள். இங்கு முதல் என்பது நெல் நாற்றைக் குறிக்கிறது.

    'நாள் நடுகை' என்றொரு சொல்லாட்சியை சம்சாரிகள் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்கள். முதன்முதலில் ஒரு சம்சாரிக்கான கழனியில் நடுகிற நடுகையை, 'நாள் நடுகை' என்று கூறுகின்றார்கள். அதேபோல, அந்தச் சம்சாரிக்குச் சொந்தமான கழனிகளில் கடைசியாக நடுகிற நடுகையையும் 'நாள் நடுகை' என்றே குறிப்பிடுகின்றார்கள்.

    நாற்று நட்டு நான்கு நாட்கள் ஆன நெல்பயிரைப் பார்த்து 'கூன்' நிமிர்ந்து விட்டது என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு நான்கு நாட்கள் கழித்த பயிரைத்தான் 'நடுகை தழுத்துட்டு' என்று கூறுகிறார்கள். அதன்பிறகு ஒரு வாரம் கழித்ததும், 'பயிர் பச்சை வீசிட்டு' என்று கூறுகின்றார்கள். அதன்பின் ஒரு வாரம் கழித்து 'கருநடுகை' யாயிட்டு என்று கூறுகிறார்கள். அதன்பிறகு 1 வாரம் கழித்து பயிர் மூடு கட்டிட்டு என்றும், அதன்பின் 1 வாரம் கழித்து பயிர் நிலம் அடைத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

    அதன்பிறகு நன்கு வளர்ந்து வயிற்றில் பொதி உள்ள பயிரை 'பொதிப்பயிர்' என்றும், பொதி வயிற்றில் உள்ள பயிரை, 'ஒத்த இலக்குப் பயிர்' என்றும் கூறுகிறார்கள். பொதி வெளிவந்தும் வராமலும் இருப்பதை 'பயிர் விக்சலும் சச்சலுமா இருக்கு' என்று கூறுகின்றார்கள்.

    பொதி எல்லாம் வெளிவந்த பயிரைப் பார்த்து, 'கதிர் நிரந்துட்டு' என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு 'கதிர் அன்னம் கோதுகிறது' என்று கூறுகின்றார்கள். பிறகு, நாலுநாள் கழித்து, 'பால் கோதிட்டு' என்று கூறுகின்றார்கள்.

    விளையும் பயிரைப் பார்த்து பயிர் தலை கவிழ்ந்துவிட்டது என்று கூறுகின்றார்கள். நெல் விளைந்ததும் 'கதிர் மணி பிடிச்சிட்டு' என்று கூறுகின்றார்கள். ஆரோக்கியமாக விளைந்த நெல் கதிரை, 'கொலைத் தாக்கு உள்ள கதிர்' என்று கூறுகின்றார்கள்.

    இது நெற்பயிர் குறித்த விவசாயத்தில் பயிர் குறித்த சொற்கள் மட்டுமே, இதுபோல நெல் பயிரிடுவது குறித்து, சம்சாரிகள் பயன்படுத்தும் சொற்களை எல்லாம் தனியாகத் தொகுக்கலாம். இதேபோல் மற்றப் பயிர்களைப் பயிரிடும்போது சம்சாரிகள் கூறும் வட்டார வழக்குச் சொற்களைத் தனியே சேகரிக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக, அல்லது வட்டாரம் வாரியாக உள்ள சம்சாரிகள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களை எல்லாம் சேகரித்தால், தமிழுக்குப் புதிய புதிய அழகிய சொற்கள் கிடைக்கும்.

    ஒரு குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையை, பச்சப்பிள்ளை, ஏந்துபிள்ளை, கைக்குழந்தை, பால் குடி மாறாத பாலகன், தவழும் குழந்தை, நடைபயிலும் பிள்ளை, சிறுவன், பாலகன் என்று பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு பெயர்களைச் சொல்லி தாய் அக்குழந்தையை அழைப்பது போல் சம்சாரியும், தான் நட்டு வளர்க்கும் நெல் பயிரை அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்பப் பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறான்.

    பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் பெருமக்கள், குழந்தையின் வளர்ச்சி நிலைகளைத் தாலாட்டு, அம்புலி, செங்கீரை என்று பல பருவங்களாகப் பார்த்து ரசித்தது போல், சம்சாரிகளும், தான் பயிரிடும் நெற்பயிரை வளர்ச்சி நிலைக்கு ஏற்ப பல்வேறு சொற்களால் அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.


    | | |

    சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

    58-வது சுதந்திர நாள் விழா:




    மேலும் விவரங்களுக்கு: ஐ.ஏ.ஜி.பி.

    | |

    சென்ற பத்து (6)

    1. தீர்த்து கட்டு
    2. கடைசியிலிருந்து தொடங்குங்கள்
    3. ஜமீலா
    4. Born into brothels
    5. புத்திரை வண்ணார்
    6. ராகோல்ஸவம்
    7. கற்றதும் பெற்றதும்
    8. நிமிர வைக்கும் நெல்லை
    9. உ.வே.சாமிநதய்யர்
    10. மும்பை மழை


    | | |

    செவ்வாய், ஆகஸ்ட் 09, 2005

    உலாக்கு உலா

    மூளை இருக்கிறதா
    Comparing Brains





    Shopping Rage: செய்யவேண்டுமே என்று சிலர் செய்வார்கள். சிலர் முகர்ந்து, நுகர்ந்து, தேய்த்து, உரசி, தட்டி, கொட்டி, நிறுத்து, அனுபவித்து வாங்குவோம். சமைப்பதற்கு நேரம் ஒதுக்காவிட்டாலும் நுண்ணலை அடுப்புக்கு தீனி போடுவதற்காகவாவது செய்தே ஆகவேண்டிய வாரந்தர கடமை. அலுவலகத்தில் காட்ட முடியாத கோபம், வீட்டில் மனவுளைச்சல், சாலை கயக்கம் எல்லாம் சேர்ந்து கடைக்கு செல்லும்போது ப்ரேகிங் பாயிண்ட்டை அடைந்து வெடித்து விடுவீர்களா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.




    Origami Ships

    பெய்யாத வடகிழக்கு மழைக்காக, குறிப்பெடுக்கும் தாள்களைக் கொண்டு, ஸஹாரா பாலைவன சென்னையில், கப்பல், கத்திக் கப்பல் என்றெல்லாம் செய்து பார்ப்போம். மறந்து போனதை 'பச்சைக் கிளிகள் தோளோடு' மாதிரி நினைவூட்டுகிறார்.





    சுந்தர காண்டம் :: ஊர் தேடு படலம்
    அனுமன் கும்பகருணனைக் காணுதல்

    இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
    முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
    மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
    கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். (119)


    | |

    திங்கள், ஆகஸ்ட் 08, 2005

    பட்டு வண்ண ஜோதிகாவாம்




    1. அடுத்த வருடத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய்க்கு மேல், பட்டுப்புடவை வாங்கினால், பட்டுவாடா வரி என்று ப.சிதம்பரம் விதிக்கப் போகிறார்... பாருங்கள்

    2. கொஞ்ச நாள் பொறுங்கள். இதனுடைய நகல்கள் ரெங்கநாதன் தெருவில் கிடைக்க ஆரம்பித்துவிடும். பூதக் கண்ணாடி வைத்து 54,600 வண்ணங்களும், தராசைக் கொண்டு 1.30 கிலோ கிராமும் இருக்கிறதா என்று ஆராயவா முடியும்!

    3. இதை ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் என்னுடையா சங்கு மார்க் லுங்கி மாதிரியே இருக்கிறது.

    4. நல்ல வேளை... இந்தப் புடைவை இரண்டு மாதம் தாமதித்து வந்திருக்கிறது. இல்லையென்றால் 54,600 எக்ஸ்ட்ராக்களுடன் 'ஆரெம்கேவி பொடவ நோக்கியாகாரி' என்று ஷங்கர் ஆட விட்டிருப்பார்.

    5. 25 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சேலையை ஐம்பத்தாறாயிரம் ரூபாய்க்கு வாங்கினால், வங்கி காப்பகத்தில் வைத்துதான் பாதுகாக்க வேண்டும்.

    6. வாங்க இயலாவிட்டால் இப்படித்தான் காரணங்கள் தோன்றும்


    தொடர்புள்ள பதிவுகள் : காரணங்கள் அடுக்கியவர் | வலைப்பதிவு | The hindu | ஆரெம்கேவீ



    | | | படம்

    வெள்ளி, ஆகஸ்ட் 05, 2005

    பாவண்ணன்

    Thanks AnyIndian.comமுந்தாநாள் 'வணக்கம் தமிழக'த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார்.

    எழுத்தாளர்களை சந்திக்க செல்லுதல் விபரீதமான நிகழ்வு. வேலைக்கு சேர்ந்திருந்த இளவயதுகளில் மாதாமாதம் மிச்சம் பிடித்து, டிக்கெட் எடுத்து, சிவராம் கரந்த்தை நேரில் பார்க்க செல்கிறார்.

    'மாக்கோலம் போடுவதற்கு அவள் வரவில்லையே...
    அவள் கோலம் காண்பதற்கு வழியில்லையே'
    என்று ஏமாற்றம் அடையாமல், சாய்வு நாற்காலியில் நாளிதழ் படிப்பதை தூரக்க நின்று தரிசித்துவிட்டுத் திரும்பி விடுகிறார். ஏற்கனவே எங்கோ படித்த நினைவிருந்தாலும், அவர் வாயால் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி காலத்தில் பாவண்ணன் 'மண்ணும் மனிதரும்' படித்துவிட்டு பல காலத்துக்கு அதன் தாக்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.

    வாசிப்பனுபவத்திற்கு மரம், கனி, சுவைக்கு நிகர் என்றார். மரம் போன்ற புத்தகத்தின் நிழலை அணுக வேண்டும். கிட்டப் போனால்தான் கனி என்னும் அனுபவம் கிடைக்கும். நாவில் நிற்கும் தனிச்சுவையாக வாசகனின் மனத்தை அது சென்றடைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாவண்ணன் விவரிக்கும்போது சுவையாக இருந்தது.

    படிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தவர், விபத்தாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத்தின் வற்புறுத்தலின் பேரில் கன்னட நாடகத்தை முதன்முதலில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து அவருடைய ஆதர்ச சிவராம் கரந்த், கன்னட நாடகங்கள் என்று சாகித்ய அகாடெமி கிடைத்திருக்கிறது.

    ராஜாஜியின் வியாசர் விருந்தில் மஹாபாபாரதப் போர் மிகவும் நேர்த்தியாக சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் வியூகங்களையும் குயுக்திகளையும் விவரிக்கும். பாவண்ணனுக்கு விருதைக் கொடுத்துள்ள 'பர்வா'வும் குருஷேத்திரப் போரை குறித்த படைப்பு. பெண் கதாபாத்திரங்களின் பார்வை மூலமே கதை சொல்லப் படுகிறது.

    போர் தொடுக்கும்போது காரணங்கள் தேவையில்லை. சண்டை மூண்டபின்பே 'ஏன்... எதற்கு' என்பதெல்லாம் சமைக்கப் படுகிறது என்பது தற்காலத்துக்கும் (ஈராக்) பொருந்தும்வகையில் என்பதை நாவல் விவரிக்கிறது.


    பாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.


    சிறுகதை தொகுப்பு
    வேர்கள் தொலைவில் இருக்கின்றன
    வெளிச்சம்
    தொலைந்து போனவர்கள்


    நாவல்
    பாய்மரக் கப்பல்
    வாழ்க்கை ஒரு விசாரணை


    கவிதை தொகுப்பு
    குழந்தையைப் பின் தொடரும் காலம்

    1986ஆம் ஆண்டில் மிகச்சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றது இவரது "முள்" சிறுகதை. 1981-இல் புதுவை அரசு நடத்திய குறுங்காவியப் போட்டியில் பரிசு பெற்றார். இலக்கிய வீதியின் சிறுகதைப்பரிசு, கணையாழி இதழ் நடத்தும் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு என்பவற்றைப் பெற்றுள்ளார். இவருடைய நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது.

    anyindian.com::

  • அக்னியும் மழையும்(க்ரீஷ்கர்னாட்)
  • அடுக்கு மாளிகை
  • ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் தொகுப்பு: பாவண்ணன்
  • ஆழத்தை அறியும் பயணம்
  • எட்டுத் திசையெங்கும் தேடி
  • எனக்குப் பிடித்த கதைகள்
  • எழுத்தென்னும் நிழலடியில்
  • ஏழு லட்சம் வரிகள்
  • ஏவாளின் இரண்டாவது முடிவு
  • ஒரு மனிதரும் சில வருஷங்களும்
  • கடலோர வீடு
  • தீராத பசி கொண்ட விலங்கு
  • நூறுசுற்றுக் கோட்டை
  • நேற்று வாழ்ந்தவர்கள்
  • பொம்மைக்கு இடம் வேண்டும் (குழந்தைக் கவிதைகள்)
  • வலை




    பாவண்ணனின் கதைகள் பற்றி ஜெயமோகன்
    [நன்றி: சதங்கை ஏப்-ஜுன் '97]

    பாவண்ணனின் படைப்புலகின் முதல் சிறப்பு அதன் நேர்மையும் பாசாங்கின்மையும் ஆகும். வாழ்க்கையை முன்வைத்து படைத்தல் என்ற கடமையிலிருந்து இந்த பதினைந்து வருடக் காலத்தில் அவர் ஒரு முறைக்கூடப் பிறழ்ந்ததில்லை.

    தமிழிலக்கிய சூழலில் சீரிய படைப்பாளிகளிடம் கூட வணிக எழுத்தின் ஜாலங்களின் சாயம் ஒட்டியிருக்கும். குறிப்பாகக் கடைசித் தலைமுறைப் படைப்பாளிகளிடம். பாவண்ணனின் உண்மையுணர்வு கவசம் போல அவரைச் சூழ்ந்து அவர் படைப்புலகின் தனித்தன்மையைப் பாதுகாக்கிறது.

    பாவண்ணனுக்கு நன்றி கலந்த வணக்கம்


    | | | |

  • வியாழன், ஆகஸ்ட் 04, 2005

    கல்கியில் தமிழோவியம்



    | |

    அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    மெலியார் முன் தன்னை நினைக்க ::

    மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் ஒரு முக்கியமான உறுதி மொழி - 'எல்லா மானியங்களும் நகர்ப்புற ஏழை மக்கள், விவசாயக் கூலிகள், சிறு, குறு விவசாயிகள் போன்ற உண்மையிலேயே தேவையுள்ள ஏழை மக்களைத் துல்லியமாக குறி வைக்கும்' (Targeted Sharply at the Poor and the Truly Needy) என்பதாகும். இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் (National Institute of Public Finance and Policy) ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஓர் அறிக்கையையும் தயாரித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகமும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. பொதுமக்களும் தங்கள் கருத்தை ஜூன் 28-ம் தேதிக்குள் தெரிவிக்கக் கோரியது. ஆனால் இதைப் பற்றி அதிக விளம்பரம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

    அரசு மானியங்கள் என்பது வளர்ந்த நாடுகளிலும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள முக்கியப் பிரச்சினை மானியங்கள் எதற்கு, எவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், நோய் தடுப்பு, சத்துணவு, நீர் மேலாண்மை போன்ற அனைத்து மக்களுக்குத் தேவையான இனங்களில் மானியம் அளிப்பது தேவைப்படலாம். இவை அனைத்துமே, மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டவை. மைய அரசு அளிக்கும் மானியங்களில் முக்கியமானவை, உணவு, உரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவையாகும்.

    உணவு மானியம் அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

    1990-1991ல் உணவு மானியம் - ரூ. 2,450 கோடி.
    2003-2004ல் உணவு மானியம் - ரூ. 25,800 கோடி.

    உணவு மானியத்தின் இரு முக்கிய அம்சங்கள் -

  • பொது விநியோகத் திட்டத்திற்காகக் கோதுமை, நெல் கொள்முதல் செய்யும்பொழுது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலை;

  • பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு தானியத்தின் விலை ஆகியவையாகும்.

    கொள்முதலைப் பொறுத்தவரை அரசு ஒவ்வோர் ஆண்டும் விவசாயச் செலவு மற்றும் விலைகள் ஆணையம் (Commission on Agricultural Costs and Prices) நிர்ணயிக்கும் விலைக்கு மேலேயே கொள்முதல் விலையை அறிவிக்கிறது. கொள்முதலும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலேயே நடக்கிறது. நாட்டிலேயே அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் மேற்கு வங்காளம், மையத் தொகுப்பிற்கு அளிக்கும் அரிசி மிக மிகக் குறைவு. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் மேற்கு வங்கத்திற்கு பஞ்சாபிலிருந்து 6 - 7 லட்சம் டன் அரிசி அனுப்பப்படுகிறது.

    கொள்முதல் செய்யும் மாநிலங்கள் பல்வேறு வரிகளையும் விதிக்கின்றன. அனைத்து மாநில மக்கள் மீதும் இந்த வரிப்பளு விழுகின்றது. இந்த மாநிலங்களில் உபரியாக நெல், கோதுமை வைத்திருக்கும் விவசாயிகளே கொள்முதலில் அதிகப் பயனடைகிறார்கள்.

    கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகத்திற்கு, விவசாயிகள் அளிக்கின்ற அனைத்து தானியங்களையும் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தேவைக்கு மேலாகத் தானியங்களைக் கையிருப்பில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்காக உணவுக் கழகத்திற்கு ஆகும் செலவும் உணவு மானியத்தில் வரும்.

    கொள்முதல் விலை ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே போனாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலை ஆண்டுக்காண்டு உயர்த்தப்படுவதில்லை. இதனால் உணவு மானியம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. குறைந்த விலையில் உணவு தானியம் வழங்கப்பட்டாலும் பல வட மாநிலங்களில் அதை வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை. இதனால் உணவுக் கழகத்தின் கையிருப்பு பெருத்த அளவில் கூடி அதைக் குறைக்க, உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட விலையிலே உணவு தானியத்தை அரசு வழங்கியுள்ளது. எனவே மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளிலே மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்', 'கீழ் உள்ளவர்கள்' என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் மைய அரசு நிச்சயித்த விலையை விட குறைவாக, கிலோவிற்கு ரூ. 3.50 என்று அரிசி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தை விலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கணிசமான அளவுக்குப் பொது விநியோக அரிசி வெளிச்சந்தைக்குக் கடத்தப்படுகிறது.

    1998 டிசம்பர் மாதம் ஒரு வாரப்பத்திரிகையில் ரேஷன் பொருள்களை வெளி மார்க்கெட்டில் விற்பதால் ரேஷன் கடைக்காரர்களுக்கு ஒரு மாத 'லாபம்' ரூ. 21,800 என்றும் அதில் அரிசியில் மட்டும் லாபம் ரூ. 12,000 என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்கு மறு மொழியாக ரேஷன் ஊழியர்கள்
    'எல்லா அரசியல் கட்சிகளும், எந்த ஒரு கூட்டம் அல்லது அரசியல் தலைவர் வருகை என்றால் முதன்முதலில் வசூல் செய்வது ரேஷன் கடைகளில்தான். இதை எந்த அரசியல் கட்சியாவது மாற்ற முடியுமா?'
    என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் ரேஷன் அரிசியின் விலை கிலோ ரூ. 2 என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகத் தோன்றவில்லை. இதனால் ரேஷன் கடை 'லாபம்', கடத்தல், அதை ஒட்டிய இதர முறைகேடுகள் அதிகரிக்கும்.

    உர மானியத்தைப் பொறுத்தவரை
    1980 - 81ல் ரூ. 500 கோடியாக இருந்தது.
    2004 - 05ல் ரூ. 12,662 கோடியாக உயர்ந்துள்ளது.

    இந்த மானியத்தில் ஒரு பகுதி, உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும், ஒரு பகுதி விவசாயிகளுக்கும் போகிறது. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி 1980-81 முதல் 2003-2004 கால அளவில்

    விவசாயிகளுக்குக் கிடைத்தது 62 சதவிகிதமும்,
    ஆலைகளுக்குக் கிடைத்தது 38 சதவிகிதமும் ஆகும்.

    இந்த உரமானியம் ஒரு முற்போக்கான மானியம் அல்ல. அதிக நிலம் உள்ளவர்கள், அதிக உரம் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு அதிக மானியம் கிடைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 75% விவசாயப் பண்ணைகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவானவை. அவர்களிடம் இருக்கும் நிலம், மொத்த விளைநிலங்களில் 30 சதவிகிதம்தான். எஞ்சியுள்ள 25 சதவிகித பண்ணைகள் 70 சதவிகித நிலங்களைக் கொண்டுள்ளன. அவர்கள்தான் உரமானியத்தால் அதிகம் பயனடைவார்கள்.

    மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு இரண்டும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இதில் ஏற்படும் இழப்பை பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஈடு செய்கின்றது.

    மண்ணெண்ணெயில் மானியம்
    1993-1994ல் ரூ. 3,773 கோடி.
    1999-2000ல் ரூ. 8,151 கோடி.

    சமையல் எரிவாயுவின் மானியம்
    93-94ல் ரூ. 1,261 கோடி.
    00-01ல் ரூ. 6,724 கோடி.

    தற்போது இவை சற்றுக் குறைந்துள்ளன. சமையல் எரிவாயு, பெரும்பாலும் ஓரளவு வசதி படைத்தவர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. மண்ணெண்ணெயும் அதிக அளவில் நகர்ப்புறங்களிலேயே வினியோகிக்கப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால் வெளிச்சந்தையில் கலப்படத்திற்காகக் கடத்தவும்படுகிறது.

    இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மானியத்தைத் துல்லியமாக, ஏழை மக்களே பயனடையும் வகையில் வரையறுப்பது நடைமுறையில் மிகக் கடினமாகத் தோன்றுகிறது. தற்போது உள்ள நிலையின் மூலம் பல்வேறு பயன்களைப் பெறுவோர் அனைவரும் எந்தச் சீர்திருத்தத்தையும் ஏற்பதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் இதைப் பற்றி மக்களிடையே அதிகம் பேசுவதில்லை. சீர்திருத்தம் வரவேண்டும் என்றால் ஓரளவு வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்களுக்கு வழிவிட்டு மானியம் பெறுவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு அவர்களின் மனப்பாங்கு மாற வேண்டும்.

    'தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென்று அகமகிழ்க'

    என்கிறது நீதிநெறி விளக்கம். இவ்வாறு அகமகிழ்ந்து 'மெலியார் முன் தன்னை நினைக்க' ஒவ்வொருவரும் ஆரம்பித்துவிட்டால் மானியங்களை, உண்மையிலேயே அவை தேவைப்படும் ஏழை மக்களுக்கு அளிக்க முடியும்.

    | |

  • பாஸ்டன் கலை விழா

    boston thamil - New England Tamil Sangam :: Meet

    | |

    புதன், ஆகஸ்ட் 03, 2005

    நம்பிக்கை வரம் (போட்டி)

    MLK - Hope quoteநம்பிக்கை கவிதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் என்னுடைய தேர்வுகள் :

    1. நித்யா ::

    பசு ஒன்று வரைந்தாள், அதற்கு சிகப்பு நிறம் பூசினாள்
    அவள் கிறுக்கிய காக்கையின் நிறமோ பச்சை
    அச்சிறுமி மாம்பழம் வரைந்தாள் என்றால்
    அவள் சொல்லித்தான் தெரியும்
    அது என்னவென்று
    ஆனால் அவள் அம்மா பெருமையுடன் சிரித்தாள்
    ஓவியங்களைப் பார்த்து தனியே ரசித்தாள்
    தன் பெண்ணும் பிற்காலத்தில்...
    ஒரு ரவி வர்மா என்ற நம்பிக்கையுடன்...


    2. காரைக்குடி ராஜ் ::

    வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
    சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
    மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
    சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
    நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
    சிதறுகிறது நம்பிக்கைகளாக.
    பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..


    3. அருண் வைத்யநாதன் ::

    கஷ்டப்பட்டுப் படித்திருக்கிறேன்
    கண்டிப்பாய் பாஸாகிவிடுவேன்..
    அப்புறம் எதற்கு முச்சந்தி விநாயகனுக்குத்
    தோப்புக்கரணமும், குட்டும்?!
    ஜமாலும், ஜேம்சும் ஜம்மென்று
    பாஸாவதில்லையா என்ன?
    மனசுக்குள் முணுமுணுத்தபடி
    விநாயகர் சன்னதி திருநீறெடுத்தேன்.


    4. வெங்கி ::

    வார்த்தைகளைக் கோர்த்து
    எண்ணங்களைக் கிறுக்கி
    கவிதையெனப் பேரிட்டு
    வலைப்பதிவில் இட்டு
    கருத்துகளுக்கு காத்திருக்கையில்
    "அருமை!" என கருத்துவர
    நம்பிக்கைப் பிறக்கும்
    "இனி நானும் கவிஞன்!"


    இது நம்ம டாஸ்மாக் நம்பிக்கிக்கு

    | | |

    சென்ற பத்து (5)

    1. க்ளைமாக்ஸ்
    2. யமுனா நெருடா
    3. நகைச்சுவை
    4. ஆதியில்
    5. புதிய தரிசனம்
    6. மாணிக்
    7. ஆரெம்கேவீ
    8. உள்ளம் கேட்குமே
    9. கருத்துக் காதல்
    10. நூறு


    | |

    வாயாடல்

    வீ.விஷ்ணுகுமார் - கிருஷ்ணகிரி ::

    வங்கி ஒன்றில் கிளார்க்கும் கிராமத்து ஆசாமி ஒருவரும்...

    "என்னய்யா... 'செக்' இது. தமிழ்ல கையெழுத்துப் போட்டிருக்கே..?"

    "ஹி...ஹி... எல்லாம் தமிழ் பற்றுதான் சார்..."

    "தமிழ் பற்றை அக்கவுன்ட் ஆரம்பிக்கும்போதே காட்டியிருக் கணும். அப்போ இங்கிலீஷில் கையெழுத்துப் போட்டுட்டு இப்போ தமிழுக்கு மாறினா எப்படி கையெழுத்தை சரிபாக்குறது... இதை நான் பாஸ் பண்ணினா என்னை பீஸ் பண்ணிடுவாங்க... போய் வேற 'செக்'ல பழைய மாதிரி கையெழுத்துப் போட்டுக் கொண்டு வா."

    விமரிசனத்தின் எல்லைகள்

    நன்றி: விமரிசனக்கலை (நர்மதா பதிப்பகம்) & மதி கந்தசாமி

    க.நா. சுப்ரமண்யம் ::

    இலக்கிய விமரிசனத்தைப் பற்றிச் சில சில்லரைச் சந்தேகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் (எனக்கும்தான்) விளக்கிக் கொள்வதற்காகவே நான் இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன். ஒரு கலையின் ஆரம்ப தசையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எல்லாமே முடிவானவையல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். என்னைப் பற்றிய வரையில் நான் இதுபற்றியெல்லாம் "உரக்கச் சிந்திக்கிறேன்" என்று சொல்லலாமே தவிர வேறு சொல்வதற்கில்லை.

    இன்னும் ஒரு விஷயம் தெளிவாகவே சொல்லுகிறேன். சிறுகதையோ, நாவலோ, கவிதையோ எழுதும் போது வாசகர்களைப் பற்றிய நினைவைப் படைப்பாளன் அறவே ஒழித்துவிடவேண்டும் என்கிற நினைப்புள்ளவன் நான். ஆனால் இலக்கிய விமரிசனம் செய்யும்போது வாசகனுடைய நினைவும் கூடவே வரத்தான் செய்யும். என் இலக்கிய அனுபவத்தைத்தான் நான் எடுத்துச் சொல்ல முயலுகிறேன் என்றாலும் வாசகனுக்காகச் சொல்லுகிறேன் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என் இலக்கிய அனுபவத்தை எடுத்துச் சொல்லி, கூடியவரையில் ஒரு இலக்கிய சிருஷ்டி வரையில் அந்த அனுபவத்தை அலசியும் பார்க்க முயலுவதுதான் என் இலக்கிய விமரிசனத்தின் அடிப்படைக் காரியம். இதிலே பிறருக்கு உகந்ததாகச் சொன்னோமா என்பதோ, முன்கூட்டியே முடிவான ஒரு தீர்மானத்துக்கு வந்தோமா என்பதோ என் கவலையில்லை. என் அனுபவ உண்மையைப் பூரணமாகச் சொல்லியாகி விட்டதா என்பதுதான் எனக்குக் கவலை. பூரணமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறபோது உட்கார்ந்து மறுபடி முயன்று எழுதிப் பார்க்க வேண்டியதுதான்.

    விமரிசனத்தில் அனுபவத்தை அலசிப் பார்க்கிற காரியம் இருக்கிறதே - அது எப்போதுமே சரியாக வராது. அதுவும் ஆரம்ப தசையில் விமரிசனம் எழுதப்படும் தோரணையில் (ஆமாம், எழுதப் பழகும் தோரணைதான் இன்னமும், இருபது வருஷ இலக்கிய விமரிசன அனுபவத்துக்குப் பிறகும் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.) அலசிப் பார்க்கிற காரியத்தைத் தற்காலிகமாகத் (tentative)தான், பூனைக்குட்டி தனது காலை நீட்டி எதிரில் உள்ளது என்ன என்று பார்க்கிற தோரணையில்தான் செய்ய முடியும் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

    இலக்கியத்தில் உள்ள மற்ற துறைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்தையும் ஒரு அளவுக்குக் கலையாகவும், ஒரு அளவுக்கு சாஸ்திரமாகவும் எண்ணுகிறேன் நான். இலக்கிய விமரிசனத்தை விஞ்ஞானமாக, ஒரு சாஸ்திரமாகப் பயிலுவது சுலபமாகவே எல்லோருக்கும் கை வந்துவிடும். ஆனால் இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுவது சுலபத்தில் கைகூடி வந்து விடுகிற காரியம் அல்ல. இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுகிற காரியத்தை இப்போதுதான் தமிழ் ஆசிரியர்களில் சிலர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படுவது என்பது இந்த இலக்கிய விமரிசனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது.

    இலக்கியத்தில் இன்னும் சோதனைகளும் முயற்சிகளும் "மேலே மேலே" என்று செய்துகொண்டே போவதற்கு இலக்கிய விமரிசனம்தான் சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பிட்ட ஓரிரண்டு துறைகளில் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் வளம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வளம் உரம் பெறவும், மேலும் வளர்ச்சி சாத்தியமாகவும், இலக்கிய விமரிசனம் உடனடியாகத் தேவை. 1948-க்குப் பிறகு இலக்கியம் (தமிழைப் பற்றிய வரையில்) தேங்கிப் போனதற்குக் காரணம், வளத்தை அளவிடக்கூடிய தெம்பு படைத்த இலக்கிய விமரிசனம் தோன்றாமைதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

    இலக்கிய விமரிசனம் தோன்றிவிட்டால் தானே இலக்கிய வளர்ச்சி தோன்றிவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிற சந்தேகப்பட்டவர்களுக்கு ஒரு பதில் சொல்லலாம். இலக்கிய விமரிசனம் தோன்றினால், இலக்கிய வளத்துக்கான சூழ்நிலையையும், இலக்கிய சோதனைகள் நடத்துவதற்கான தெம்பையும் சிருஷ்டித்துத் தந்துவிடும். அந்தத் தெம்பும் சூழ்நிலையும் காரணமாகச் சிலர் புது இலக்கியம் சிருஷ்டிக்கலாம். பலர் எழுதியும் உயர் இலக்கியம் சிருஷ்டியாகாமல் போனால், அதுபற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இலக்கியம் என்கிற அளவில் ஒவ்வொரு ஆசிரியனும் தன்னில் உள்ளதில் சிறந்ததைப் பூரணமாகத் தருகிறான். சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது. அந்தப் பூரணமும் இலக்கிய சிருஷ்டிக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன பண்ணுவது? எதுவும் செய்வதற்கில்லை - காத்திருப்பதைத் தவிர என்றுதான் சொல்லவேண்டும்.

  • இலக்கியத்திலுள்ள பல துறைகளில், சிறுகதைபோல, நாவல் போல, கவிதைபோல, இலக்கிய விமரிசனமும் ஒன்று என்பதனால், இலக்கிய விமரிசனத் துறை வளருவதால் இலக்கியமும் வளருகிறது என்பது ஏற்படுகிறது. இது இலக்கிய விமரிசனத்தின் தேவை அடிப்படையை வற்புறுத்துகிறது.

  • இரண்டாவதாக, இலக்கிய விமரிசனம் நல்லது என்று தோன்றுவதை அழுத்தமாக எடுத்துச் சொல்லி, நல்லதல்லாததைக் கண்டித்து இலக்கிய உழு நிலத்தில் களை பிடுங்கி நிலம் திருத்தித் தருகிறது.

  • மூன்றாவதாக, இலக்கிய சிருஷ்டிகளிலே ஒரு கோணத்தை, ஒரு நோக்கத்தை மட்டும் கண்டு திருப்தி யடைந்துவிடுவதுடன் நின்றுவிடாமல், வாசகன் பல கோணங்களையும், பல நோக்கங்களையும் இனங்கண்டு அனுபவிக்க இலக்கிய விமரிசனம்தான் வழி வகுத்துத் தரவேண்டும்.

  • நாலாவதாக, சோதனை அம்சங்களுக்கு இலக்கியத்தில் அழுத்தம் தந்து சோதனைகளை மேலே மேலே செய்துகொண்டு போவதையும் இலக்கிய விமரிசனம் தான் சாத்தியமாக்க முடியும். ஐந்தாவதாக, ஆறாவதாக, என்றும் சொல்லிக்கொண்டு போகலாம். அவசியம் இல்லை என்றே நம்புகிறேன்.

    புதுசாக எழுதத் தொடங்குகிறவர்களை அநுதாபத்துடன் அணுகிப் பரிவுடன் விமரிசனம் செய்யவேண்டும் என்று நமக்குள்ளே ஒரு சித்தாந்தம் தோன்றி உள்ளது. இது அசட்டுச் சித்தாந்தம். எந்த இலக்கியாசிரியனுக்கும், இலக்கிய சிருஷ்டி சம்பந்தமாகப் பரிவோ, யாருடைய அநுதாபமோ தேவையில்லை. பரிவும் அநுதாபமும் தேவையாகி, "ஐயோ பாவம்!" என்று எண்ணவேண்டிய எழுத்து எழுத்தாகவே பலமுள்ளதாக இராது என்பது ஒரு அடிப்படைக் கருத்து. அது இலக்கியம் ஆகவே முடியாது. நான் எழுதியது இலக்கியமானால் ஆயிரம் பேர் பரிவு காட்டாவிட்டாலும் இலக்கியந்தான்; இலக்கியமல்லவானால் ஆயிரம் பேர் வோட்டு எடுத்துச் சொன்னாலும், பரிவு காட்டி புகழ்ந்தாலும் இலக்கியமாகிவிடாது. காலதேவனைப் போல பரிவு இல்லாத ஒரு புருஷனைக் காண இயலாது. காலதேவனின் பரிவில்லாமை இலக்கிய விமரிசகனுக்கும் தேவை. இன்றைய இலக்கியத்தை மதிப்பிடுகிற இலக்கிய விமரிசகன் ஓரளவுக்குக் காலதேவனின் காரியத்தைத்தான் செய்ய முற்படுகிறான். அதைப் பரிவு என்பதே காட்டாமல் செய்துதான் தீரவேண்டும்.

    எழுதப்படுவதெல்லாமே எழுத்து என்றும், பத்திரிகைகளில் வந்துவிட்டதெல்லாம் இலக்கியம் என்றும் ஒரு எண்ணம் தமிழிலே இரண்டு தலைமுறைகளாக நமக்குள் நமக்கே வளர்த்துவிட்ட ஒரு சித்தாந்தம். இந்த நிலை மாற இலக்கிய விமரிசனம்தான் உதவ முடியும். சர்க்கார் சார்பு பெற்ற ஸ்தாபனங்களும், சர்க்கார் சார்பு அவ்வளவு இல்லாத ஸ்தாபனங்களும் இலக்கிய ஸ்தாபனங்கள் என்று எண்ணி நாம் ஏமாறுகிறோம். அவை வேறு என்னவோ, எப்படியோ-நமக்கு மட்டும் என்ன, வேறு யாருக்குமே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவற்றிற்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப் பிராப்திகூடக் கிடையாது என்பதை உணர இலக்கிய விமரிசகன்தான் இன்று வழி செய்து தரவேண்டியதாக இருக்கிறது. அவற்றின் காரியங்கள் இன்று நம் எழுத்தைப் பெரிதும் பாதிக்கின்றன--அப்படிப் பாதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொல்லியே தீரவேண்டும். இன்றைய இலக்கியத்தில் பத்திரிகை ஆதிக்கம், பண்டிதர் ஆதிக்கம், இரண்டுக்கும் இலக்கிய ரீதியில் ஒருவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க நம்மிடையே இலக்கியத்தின் தனித் தன்மையின் காவலாளனாக இலக்கிய விமரிசகன் பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது

    இத்தனையும் சொன்ன பிறகு, வாசகர்களுக்கும் நல்ல எழுத்துக்கும் உள்ள உறவுமுறைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் இலக்கிய விமரிசனம் ஆராயப் பயன்படவேண்டும். உண்மையான இலக்கிய சிருஷ்டி காரியத்தில் இலக்கியம் சுய அனுபவமாக, ஆத்ம திருப்தி ஒன்றையே தான் லட்சியமாகக் கொண்டு தோன்றுகிறது என்பதையும், அதிர்ஷ்டவசத்தால் வாசகன் என்று சொல்லப்பட்டவன் அந்த இலக்கியத்தை ஒட்டுக் கேட்டு ஆனந்திக்கும் பேற்றைப் பெறுகிறான் என்பதையும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இன்று இலக்கிய விமரிசகனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இலக்கிய கர்த்தாக்களான, வால்மீகியும், வியாசரும், ஹோமரும், டாண்டேயும் அதிர்ஷ்டசாலிகள்.

    மறைவில், தனிமையில், ரகசியத்தில், ஒதுங்கி நின்று இலக்கிய சிருஷ்டி செய்வது, யார் கண்ணிலும் படாது நூல் இயற்றுவது அவர்களுக்குச் சாத்தியமாக இருந்தது. இன்று தான் எனும் தனிமை நிலைகூட இல்லாமல், பத்திரிகை எழுத்தாக, முற்போக்கு எழுத்தாகத்தான் இலக்கிய சிருஷ்டி நடைபெறுகிறது. இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல -- அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப் பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமரிசனம் உபயோகப்படவேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ ஒரு லட்சிய வாசகனையோ எண்ணிக்கொண்டு எழுதுவதில்லை.

    வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில் 'நமக்குகந்த ஆசிரியன் இவன்' என்று தேடிக்கொண்டு இடைவிடாமல் ஓடவேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமரிசனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்லவேண்டும்.
    ஷேக்ஸ்பியரைப் படித்தனுபவிக்க முடியாதவன் துரதிர்ஷ்டசாலி. கிரேக்க சோக நாடகாசிரியர்களை அனுபவிக்க முடியாதவர்களும் துரதிர்ஷ்டசாலிகள்தான். கம்பனைப் படித்தனுபவிக்க அறியாதவன் துரதிர்ஷ்டசாலிதான். வேறு என்ன? ஆனால் இதை இன்றைய இலக்கியக் கர்த்தாக்கள் வரையில் கொணர்ந்து புதுமைப்பித்தனையும், மௌனியையும் லா.ச.ராமாமிருதத்தையும், கு.அழகிரிசாமியையும் (சிறுகதைகளில் மட்டும் சொல்லுகிறேன்)
    அனுபவிக்கத் தெரியாதவர்களைத் துரதிர்ஷ்டசாலிகள் என்று கூற இன்றைய இலக்கிய விமரிசகன் தயங்கக்கூடாது.

    காலதேவனின் நிர்த்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாகவேண்டும். இன்று எண்ணாயிரம் பேர்வழிகள் சிறுகதைகள் என்று எழுதுகிறார்கள் என்றால், எண்ணாயிரம் பேர்வழிகளும் இலக்கியக் கர்த்தாக்கள்தான் என்கிற எண்ணம் நம்மிடையே பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணாயிரம் பேர்வழிகளில் அதிகம் சொல்லப்போனால் ஒரு எண்பது பேர்வழிகள் நன்றாகவே எழுதலாம். மொழிவளத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்கக்கூடிய கதைகள் எழுதலாம். ஆனால் காலம் என்கிற சல்லடை இதில் ஒரு எட்டுப் பேரையாவது சலித்தெடுத்து அடுத்த தலைமுறைக்குத் தருமா என்பது சந்தேகமே! எட்டு என்று நான் இலக்கிய விமரிசகனாக எண்ணிச் சொல்கிற கருத்து காலதேவனின் பரிவு - அல்லது பரிவில்லாமை என்பதனால், மூன்று, இரண்டு, ஒன்று என்றுகூடத் தேய்ந்துவிடலாம்தான். இந்த எட்டுப் பேரிடம் இலக்கியத் தரம் இருக்கிறது என்று சொல்லுகிற மூச்சிலேயே எனக்கு எட்டுகிற வரையில் என்றும் சேர்த்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த எட்டுப் பேரைப் பற்றியும் காலம்தான் முடிவாகச் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும்.

    அப்படியானால் வாசகனை அடியோடு மறந்துவிட்டு எழுதுகிறவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்களா என்று ஆணித்தரமாக கேட்டு, அதற்குப் பிறகு வெற்றிகரமாகவே, அப்படியானால் எழுதியதைப் பிரசுரிப்பானேன்? ஆத்ம திருப்தியுடன் முடிந்துவிட்டது என்று கிழித்துப் போட்டு விடக்கூடாதா? என்று பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்பார்கள் சிலர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மை இதுதான். இலக்கியம் சிருஷ்டியாகிற சமயத்தில் ஆசிரியனுக்கு மட்டுமே அது சொந்தமான விஷயம்.

  • சமூகம்,
  • தனி மனிதனின் வளர்ப்பு,
  • பயிற்சி,
  • சூழ்நிலை,
  • குடும்பம்,
  • அவன் மதம்,
  • கொள்கைகள்,
  • அவன் இனத்தவரின் ரத்த அருவியோட்டம்,
  • வாசனை
    எல்லாமாகச் சேர்ந்துதான் அவனுடைய சிருஷ்டியை ஓரளவுக்கு உருவாக்குகின்றன என்பது உண்மையே. ஆனால் இதெல்லாம் சேர்ந்துவிட்டதனால் மட்டும் இலக்கியம் உற்பத்தியாகிவிடுவதில்லை. இந்த விஷயங்களையெல்லாம் வைத்து எத்தனைதான் அலசிப் பார்த்தாலும், இதெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று எல்லா இலக்கிய சிருஷ்டியிலேயும் காணக் கிடக்கிறது. அந்த ஒன்றைத்தான் இலக்கியாசிரியனுக்கே சொந்தமான தனி விஷயம் என்று நான் சொல்வேன். இந்த தனித்வம் என்கிற தத்துவம் இருக்கிறதே, அது, பரம்பொருள் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களே அதைப் போன்றது. வார்த்தைகளில் அகப்படாதது. பக்திமான்கள் வார்த்தைகளுக்கு அகப்படாத அக்கடவுளைத் தேவாரமாகவும், நாலாயிரமாகவும் பாடிக் காண முயன்றார்கள்.

    அதையேதான் இலக்கிய அளவில் இலக்கிய விமரிசனம் செய்து பார்க்க முயலுகிறது. முடியாது என்று தெரிந்திருந்தும் செய்து பார்க்கிற அளவில் கைநீட்டி வானைத் தொடச் செய்யப்படும் முயற்சி சிறப்பானது, உற்சாகம் தருவதுமாகும். எப்படித் தனிமையில், தனித்வத்தின் வார்த்தை உறவாக இலக்கிய நூல் உண்டாகிறது என்பதை இலக்கிய விமரிசனம் எடுத்துச் சொல்வதுடன், அடுத்த படியில் அது இலக்கியமாக ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அம்சமாகக் காட்சி தருவது எப்படி என்பதையும் இலக்கிய விமரிசகன் எடுத்துச் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் வருஷ விமரிசன வளத்தில் மேலைநாடுகளில்கூட இம்முயற்சி அதிகமாக நடைபெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதற்கு அவசியம் இன்று இல்லை என்று சொல்ல முடியாது.

    ஒரு நூல் சிருஷ்டியாகிற விதத்தை நாம் அறிந்து கொள்வதால் அதைப் பற்றிய அளவில் அதை அதிகமாக அனுபவிப்பது சாத்தியப்படுமா என்பது அடுத்த கேள்வி. ரசத்தையும், கடிகாரத்தையும் உதாரணம் சொல்லிப் பயனில்லை. இலக்கியத்தைப் பற்றிய வரையில் நம் அறிவு பூராவுமே எந்த நல்ல சிருஷ்டியையுமே அனுபவிக்க நமக்கு உதவும் என்றுதான் சொல்லவேண்டும். வார்த்தைகள், வாக்கியங்கள், கருத்துக்கள், உருவங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்வத்தையும் கணிக்க இலக்கிய விமரிசனமும் வார்த்தைகளின் உதவியைத்தான் நாடுகிறது. அந்த வார்த்தைகளுக்கான பலமும் பலவீனமும் இலக்கியத்தைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டு. இலக்கிய விமரிசனத்தின் அளவைகளும் எல்லைகளும் வார்த்தை அளவைகளையும் எல்லைகளையும் பொறுத்தவை. முடிவில்லாத ஒரு முயற்சி இது என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை சொன்னாலும், சொல்லவேண்டியது பாக்கியிருப்பது புலனாகிக் கொண்டே தான் இருக்கும். மேலே மேலே என்கிற ஏக்கம், மற்ற கலைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டுதான். அதன் கலைநயமே அதில்தான் அடங்கியுள்ளது.

    நல்ல நாவல் என்றால் என்ன? நல்ல சிறுகதை என்றால் என்ன? நல்ல கவிதை, காவியம் என்றால் என்ன? என்று சொல்லி இலக்கணம் வகுக்கச் செய்யப்படுகிற முயற்சிகள் எல்லாமே இலக்கிய அளவில் தோல்விகள் தான். ஏனென்றால் இலக்கணம் சொல்லி முடித்தவுடனேயே அவ்விலக்கணத்தை மீறி நாவலோ, சிறுகதையோ, கவிதையோ எழுதுகிற ஒரு இலக்கிய மேதைத் தோன்றிப் புது இலக்கணத்துக்கு அவசியம் ஏற்படுத்தி விடுகிறான். இந்த நிலையை இலக்கிய விமரிசகன் (பண்டிதர், புலவருக்கு எதிர்மாறாக) ஏற்றுக்கொண்டே தொடர்ந்து விடாப்பிடியாக இலக்கிய விமரிசனம் செய்கிறான்.

    பூரணத்வம், லட்சியம் என்பதை இலக்கியத்தில் தொடர்பு அளவிலே இருக்கிறது என்று reliative உறவு சம்பந்தமாகத் தான் கூறமுடியும். டாஸ்டாவ்ஸ்கியைப் போன்ற நாவலாசிரியன் வேறு கிடையாது உலகிலே என்று சொல்கிற அதே மூச்சிலே, இலக்கிய விமரிசகன் டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களிலும் ஷொட்டுக்கள் குறைபாடுகள் காணாமல் இல்லை என்று சொல்லவேண்டும். அதற்காக டாஸ்டாவ்ஸ்கிக்குப் பின்னர், இன்று டாஸ்டாவ்ஸ்கியைப் போலவே எழுதியவனைப் பெரிய நாவலாசிரியனாகவும் நாம் கருதுவதில்லை. அவனைப் படிக்க வேண்டிய அவசியமேயில்லை என்று முடிவு கூறினாலும் கூறிவிட முடியும். இத்தனைக்கும் அப்பால் டாஸ்டாவ்ஸ்கி உயர்ந்து நிற்கிற விஷயத்தை ஆணித்தரமாகவே இலக்கிய விமரிசகன் எடுத்துக் காட்டிவிடுகிறான். எப்படிச் செய்கிறான் என்பது விமரிசகனின் தனித்தன்மை, சாமர்த்தியம்.

    குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமரிசனம் மூலம் எடுத்துச் சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால்தான் ஷேக்ஸ்பியரையும், டாண்டேயையும் பற்றி இத்தனை விமரிசன நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையோ கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடை போட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால் இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படி இப்படியாக ஏற்பட்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்ட முடியும்.

  • இலக்கிய உருவத்தையும்,
  • அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளையும்,
  • ஆசிரியரின் கருத்துக்களையும்,
  • சூழ்நிலையையும்,
  • அதனால் எழுந்த கோயிலையும்,
  • குச்சையும்,
    இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே, வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது. இதிலே பல கோணங்களும் திருப்பங்களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர் நுகரலாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் எண்ணுகிறேன். இலக்கியப் பாதையிலே வழிநெடுக நடப்பது விமரிசகனின் கடமையல்ல.

    கதாகாலஅக்ஷபக்கார்கள் ஒரு வரிக்கவிதைக்கு எட்டுப் பக்கம் பிரசங்கம் செய்பவர்கள் செய்கிற காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்ய வேண்டிய காரியம். நல்ல கவிதையை (சிறுகதையையோ, நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக்கூடாது இலக்கிய விமரிசகன் என்பது வெளிப்படை.

    கம்பனுடைய காவியத்தைப் பற்றிய விமரிசனம் செய்ய முன்வருபவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர, என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லிக் கதாகாலஅக்ஷபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத்தில் நிற்கிறான் என்பதல்ல, அவன் அறிவெல்லாம், அவன் திறனெல்லாம், அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்கு அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாக்ஷண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமரிசனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்.

    இலக்கிய விமரிசகன் இலக்கியம் என்கிற அளவில் பேராசைக்காரனாக இருந்துதான் ஆகவேண்டும். காவலில் ஜாக்கிரதையுள்ளவனாக போலி எதையும் இலக்கியச் சோலைக்குள்ளே அனுமதிக்காதவனாகவும் இருக்கவேண்டும்.

    இத்தனையும் பொதுவாகக் கூறிய பிறகு தமிழைப் பற்றிய வரையில் இன்னொன்றும் சிறப்பாகக் கூற வேண்டும். தமிழில் இன்று இலக்கிய விமரிசனம் செய்ய முன்வருபவன் மற்ற உலக மொழி இலக்கிய இயக்கங்களிலும் ஆழ்ந்த அறிவுள்ளவனாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. மற்ற மொழி இலக்கியங்களில் இன்று நிர்மாணமாகியுள்ளது போலத் தமிழிலும் நல்ல நூல்கள் வரிசை, classics, ஒன்றைத் தமிழுக்கும் ஏற்படுத்தித் தருவதில் அவன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். பழசு புதுசு இரண்டிலும் நல்ல நூல் வரிசை நிர்த்தாரணம் செய்யும் சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும். இன்றைய மொழி இலக்கியம் எதுவும் தனித்தியங்காது. உலகமொழி இலக்கியத்துக்கெல்லாம் வாரிசுதான் இன்றையத் தமிழ் இலக்கியமும் என்கிற உண்மையை எப்போதும் மறக்காதவனாக இருக்கவேண்டும்.

    தமிழில் இலக்கிய விமரிசனம் வளரட்டும். ஏனென்றால் தமிழ் இலக்கியம் வளம் பெற அதுவே இன்றும் சிறந்த வழி.

    | | |

    நன்றி: விமரிசனக்கலை :: நர்மதா பதிப்பகம் & மதி கந்தசாமி

  • செவ்வாய், ஆகஸ்ட் 02, 2005

    tamilcinema.com

    Priya Sakhi - Maadhavan and Sadha Thx IndiaGrlitz.comவிநியோகஸ்தர்கள் சங்கம் போட்ட புதிய லிஸ்ட் :: பூஜை போடும்போதே தனியார் தொலைக்காட்சிக்கும் ஒரு ரேட் பேசிவிடுகிற தயாரிப்பாளர்களுக்கு இனி சிரமம்தான். மூன்று வருடங்களுக்கு சில நடிகர்களின் படங்களை தொலைக்காட்சிக்கு விற்க கூடாது என்று லிஸ்ட் போட்டுவிட்டது விநியோகஸ்தர்கள் சங்கம். இந்த லிஸ்ட்படி ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, படங்களை மூன்று வருடங்கள் கழித்துதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியும்.

    ஒரு வருடம் கழித்து வேண்டுமானால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் அனுமதித்திருக்கிற இன்னொரு லிஸ்டில் மாதவன், சிம்பு, சத்யராஜ் மூவரும் இருக்கிறார்கள். மற்ற நடிகர்களின் படங்களை விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஒளிபரப்பி கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.



    மனதைத் திறந்தால் தவறா? :: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் மாதவனை பற்றி பேசிய ப்ரியசகி பட தயாரிப்பாளர் தேனப்பன், இந்த படத்திற்காக நான் பேசிய 75 லட்சம் சம்பளத்தில் இரண்டு லட்சம் தவிர மற்றதெல்லாம் கொடுத்துவிட்டேன். ஆனால் டப்பிங் சமயத்தில் அந்த இரண்டு லட்சத்தை கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லிவிட்டார் என்று மாதவன் மேல் ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாக வைத்திருந்தார்.

    மாதவன் ::
    "அட போங்க சார்... ஒரு நல்ல தயாரிப்பாளர் யார் சொல்லுங்கள் பார்ப்போம். இங்கே பல தயாரிப்பாளர்களிடம் நேர்மை கிடையாது. நான் ஐம்பதாயிரத்திற்கும் மேல் அட்வான்சே வாங்கியது கிடையாது. எனது சம்பளத்தை யாரும் விமர்சிக்க முடியாதபடி குறைவான நேர்மையான சம்பளமே வாங்குகிறேன்"
    என்றார்!

    மாதவனுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. அவரை புதுப்படங்கள் எதற்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது.

    தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன் ::
    "நான் மாதவனை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் நான் பேட்டியில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான கருத்து எதுவும் குறிப்பிடவில்லை என்றதுடன், இது குறித்து வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் கொடுப்பதாக சொன்னார். ஆனால் நேற்றுவரை அவரது கடிதம் கிடைக்கவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை எந்த தயாரிப்பாளரும் அவரை ஒப்பந்தம் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் தம்பி என்ற படத்திற்கு மட்டும் தடையில்லை"
    என்றார்.

    | |

    தமிழ் தாதா

    கல்கி ::

    தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது.

    பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது ஔவையாருக்கு எப்படி 'தமிழ்ப்பாட்டி' என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

    இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால், தாங்கள் "தமிழ் தாதா" ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?

    மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல, தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா! தா!' என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)

    தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும் எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள் நினைக்கவில்லையா?

    போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?

    கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து விடுங்கள்.

    ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!

    வானதி பதிப்பகம் :: 'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'

    | | |

    திங்கள், ஆகஸ்ட் 01, 2005

    மனிதாபிமானம் செத்துப்போச்சா

    ரேவதிராஜா

    செவ்வாய்பேட்டை அப்புசெட்டித் தெரு
    சேலம்.


    நடந்து சென்று கொண்டிருந்த ஏழை கர்ப்பிணிப் பெண் நடு ரோட்டிலேயே விழுந்து பிரசவ வலியால் துடித்திருக்கிறாள். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த யாரும் அருகில் சென்று உதவவில்லை. வீட்டிலிருந்து கதவைத் திறந்து பார்த்த ஒரு சில பெண்களும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கியிருக்கிறாள். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. அப்போதும் யாரும் அருகில் வரவில்லை. அந்தப் பெண்ணே கண்விழித்து, குழந்தையை எடுத்து தொப்புள் கொடியைக் கைகளினாலேயே கிள்ளியிருக்கிறாள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

    அன்னியன் தேவை :: (1) | (2)

    கருத்தோடை : | | |

    தீரன் சின்னமலை

    செ. இராசு ::

    ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை - பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

    இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவருக்கும் 'சர்க்கரை' என்பது பொதுப்பெயர். 'புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்' இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

    இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.

    மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

    ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்' என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் 'சின்னமலை' என்ற பெயர் வழங்கலாயிற்று.

    கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

    7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து 'வெள்ளைத்தொப்பியரை' எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் 'கொங்குப்படை' சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

    நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

    ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

    தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

    போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

    இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

    சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

    சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

    எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

    போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

    சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.

    சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

    இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

    (நாளை (31.7.2005) தீரன் சின்னமலையின் 200 ஆம் ஆண்டு நினைவு நாள்)

    | |

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு